பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 25, 2026

- கடவுளின் கரங்களில் ஒன்று -

- கடவுளின் கரங்களில் ஒன்று -

வல்லினம் ஏற்பாடு செய்திருந்த 'முதல் எழுத்து இலக்கிய விழாவிற்கு' சென்றிருந்தேன்.

சமீபத்தில் நடந்த குறுநாவல் போட்டியின் வெற்றியாளர்கள் நால்வருக்கு பரிசுகள் கிடைத்தன. கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தியின் 'அப்சரா' புத்தகம் வெளியீடு கண்டது. தேர்ந்தெடுத்த மலேசிய சிறுகதைகளை வாசிப்பதற்கான அகப்பக்கமும் இன்று வெளியீடு கண்டது. அதோடு காமன் ரதி விழாவின் ஆவணப்படத்தின் பதினைந்து நிமிட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரைகளை வல்லினம் இணைய பக்கத்தில் வாசித்திருக்கின்றேன். பிடித்திருந்தது. தனித்தனியாக வாசித்ததௌ  இன்று தொகுப்பாக பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.


தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் சு.வேணுகோபால் இன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளர்களில் ஒருவராக வந்திருந்தார்.

எனக்கு அவரது பேச்சும் எழுத்தும் பிடிக்கும். இரண்டாவது முறையாக அவரை இன்று சந்தித்தேன். முதன்முறையாக தமிழகத்தில் நடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் அவரை சந்தித்தேன். அன்றைய சந்திப்பில் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. அன்று அவர் சந்தித்த பல வாசகர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

ஆனால் இன்றைய இரண்டாவது சந்திப்பு அப்படியாக இருக்கவில்லை. நான் என் பெயரைச் சொன்னதுந் அவருக்கு தெரிந்திருந்தது.

2021-ஆம் ஆண்டு சு.வேணுகோபால் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' என்கிற விமர்சன கட்டுரைத் தொகுப்பைக் குறித்து கட்டுரைகள் எழுதியிருந்தேன்.

குறிப்பாக பதிமூன்று இலக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் அடங்கிய அந்தப் புத்தகத்தில் இருந்து ஒவ்வொரு கட்டுரையை வாசித்து முடிக்கும் போது என் வாசிப்பு அனுபவத்தை கட்டுரையாக எழுதினேன். நான் எழுதிய அந்தப் பதிமூன்று கட்டுரைகளும் எனது வலைப்பூவிலும் முகநூலிலும் பகிரப்பட்டது.

அதோடு பலரின் வாசிப்பிற்கும் சென்றது. பலர் அந்தக் கட்டுரையை வாசித்தப்பின் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்படி பேசிய பலருக்கும் அந்தப் புத்தகத்தை பரிந்துரை செய்தேன்.

அதோடு எங்களின் 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை' மூலம் குறைந்த விலையில் அந்தப் புத்தகத்தை விற்பனைக்கும் கொண்டு வந்தோம்.


இன்றளவும் நான் எழுதும் இரசனை விமர்சனக் கட்டுரைகளுக்கும் சு.வேணுகோபாலின் 'தமிழ்ச் சிறுகதையில் பெருவெளி' புத்தகமும் துணையாக இருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரையின் மூலம் எனக்கு பிடித்த எழுத்தாளருக்கு என் பெயர் பரிச்சயம் ஆகியிருக்கிறது என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.


என் வீட்டு நூலகத்தில் அவரின் பெரும்பாலான புத்தகங்கள் இருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த 'பனங்காய் மயிலை' என்னும் இரு குறுநாவல் தொகுப்பில் அவரிடம் கையொப்பம் வாங்கினேன். அதே போல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எனது இரு குறுங்கதைகள் தொகுப்பை அவரிடம் வாசிக்க கொடுத்தேன். என்றாவது ஒருநாள் அவரிடம் இருந்து ஏதாவதொரு சொல் என்னை நோக்கி வருமென்ற நம்பிக்கையோடு அவருக்கு கைகொடுதேன்.

இன்றைய உரையில் அவர், இலக்கியத்தில் இயங்கும்  எழுத்தாளர்களிடம் இருக்கும் 'கடவுளின் கையைக்' குறித்து பேசியிருந்தார். நானும் அந்த கடவுளின் கைகளில் ஒன்றைத் தொட்டு பார்த்த திருப்தியுடன்
திரும்பினேன்.

இலக்கியத்தில் ஆர்வம் உள்ள பல நண்பர்களை வழக்கம் போலவே இன்றும் சந்தித்தேன்.  சுவாமிஜி, டாக்டர் சண்முகசிவா போன்றோர் தவறாது எனது உடல்நிலையைக் குறித்து விசாரித்தார்கள்.
டாக்டர் சண்முகசிவா அவரது புதிய புத்தகமான  'அன்பேற்றுதல்' என்னும் கட்டுரைத் தொகுப்பை  எனக்கு கொடுத்தார்.


இந்தப் புத்தகத்தை அவர் எழுதிய சமயத்தில் என்னுடன் பேசும்போது "தயாஜி... அன்பை நம்மால இன்னொருத்தருக்கு கத்து கொடுக்க முடியுமா ?" என்று கேட்டார்
நான் அதிகம் யோசிக்காது "முடியாது!!!" என்றேன்.

அவர் சிரித்தபடி "ஆனா நம்மால ஒருத்தரை வெறுப்பேற்ற முடியும்தானே தயாஜி??" என்று கேட்கவும் எனக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை.

அதற்குத்தான் தான் ஒரு புத்தகத்தை எழுதுவதாக சொன்னார். இன்று அந்தப் புத்தகத்தை கையில் எடுத்ததும் அன்றைய உரையாடல் நினைவிற்கு வருகிறது.

டாக்டர் சண்முகசிவாவின் 'அன்பேற்றுதல்' புத்தகம் இனி நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையிலும் கிடைக்கும்.

நிகழ்ச்சி முடிந்து புறப்படும்போது மலேசிய எழுத்தாளர்களில் ஒருவரான ஸ்ரீகாந்தனும் நானும் சக எழுத்தாளரான அ.பாண்டியனோடு கொஞ்ச நேரம் செலவழித்தோம்.


இன்றைய நிகழ்ச்சியில் எனது பார்வையிலிருந்து ஒரு சிறு பகிர்வாக இதனை எழுதியிருக்கின்றேன். மற்றபடி இந்நிகழ்ச்சி குறித்தும் அதன் முன்னெடுப்புகள் குறித்தும் ஒவ்வொருவரும் எழுதுவார்கள் என நம்பலாம்.

வல்லினம் குழுவினர்க்கும் அவர்களின் இலக்கிய முன்னெடுப்புகளுக்கும் என் அன்பு.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்