பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 23, 2022

பூட்டப்படாதக் கதவுகள்

"இவருக்கு கொஞ்சம் கூட பயமே இல்ல.. காலம் எப்படி கெட்டுக்கிடக்கு வாசல் கதவை லாக் பண்ணாமலேயே வச்சிருக்காரு...." என புலம்பிக்கொண்டே நுழைந்தான். 

"அப்பா... அப்பா... எங்க இருக்கீங்க...?" என அதிகம் தேடாமல், வரவேற்பறை நாற்காலியில் அமர்கிறான். வாங்கி வந்திருந்த சமையல் பொருட்களை கீழே வைக்கிறான். 

எப்படியும் ஒரு மாதத்திற்கான சமையல் பொருட்கள் அதில் இருக்கும். அதற்குள் அவை முடிந்துவிட்டால் ஓரிரு நாட்கள் அப்பா எப்படியும் சமாளித்துக்கொள்வார். ஒத்தையாளுக்கு ஒரு டம்ளர் டீயும் ஒரு ரொட்டிபன்னும் போதாதா என தன்னைத் தானே கேட்டுக்கொள்வான். 

அதுவுமில்லாமல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை இப்படி வருவதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

"குளிச்சிகிட்டு இருக்கேன் பா.. தோ வந்துடறேன்...." குளியல் அறையில் இருந்து சத்தம் வந்தது. குளித்துவிட்டார்.

"வா.. மாதவா.. வா எப்படி இருக்க பொண்டாட்டி புள்ளைங்க எப்படி இருக்காங்க..."

"நாங்க இருக்கிறது இருக்கட்டும் நீங்க ஏன் பா இப்படி இருக்கீங்க..?" என கோவப்பட்டான்.

"எப்படி இருக்கேன். நானும் நல்லாத்தான மாதவா இருக்கேன்..."

"நான் அதைக் கேட்கல.. ஏன் எப்பவும் வாசல் கதவை உள்ள லாக் பண்ணாமலேயே இருக்கீங்க... எத்தனை தடவை சொல்லிருக்கேன்..."

"ஓ அதுவா... நான் குளிக்கும் போது கூடதான் பாத்ரூம் கதவை உள்பக்கம் லாக் பண்ண மாட்டேன்.." என்றவாறு சிரிக்கலானார். வாய்விட்டு சிரித்ததில் வாயில் பல்லில்லாதது அப்படியே தெரிந்தது.

"செய்யறது எல்லாம் கிறுக்குத்தனமான வேல... இதுல சிரிப்பு வேற..."

அப்பா நிதானமானார், "என்னப்பா செய்றது. நானோ ஒண்டிகட்ட, நீயோ மாசத்துக்கு ஒரு தடவைதான் வந்து பாக்கற..... ஒருவேளை நான் வீட்டுலயோ பாத்ரூம்பலயோ விழுந்து செத்துட்டா.... யார் உனக்கு கதவை திறந்துவிடுவா... அதும் இந்த வாசல் கதவை அவ்வளவு சீக்கிரத்தில் ஒடைக்க முடியாதுன்னு நீதான சொன்ன. என்னைய பார்த்துக்கவே நீ ரொம்ப கஷ்டப்படற அதுல நான் செத்தும் உனக்கு சிரமத்தைக் கொடுக்கனுமா சொல்லு...."

"இல்லப்பா அது வந்து...." அவன் மனம் ஏதோ செய்தது.

"அதான் வந்துட்டயே... இதோட அடுத்த மாசம்தான வருவ...." அப்பா இப்போதும் நிதானமாகவே இருக்கிறார்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்