பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 21, 2022

ஓட்டு போட்டது ஒரு குத்தமாய்யா ?


கதை எழுத ஆரம்பித்த சமயத்தில் அதிகம் எழுதி அடித்து திருத்தி திரும்ப எழுத நினைப்பேன். ஆனால் செய்ய மாட்டேன். அப்போது கணினியோ தட்டச்சோ கைவசம் இல்லை. கையெழுத்தே சாத்தியம். நான் ஒருமாதிரி எழுதினால் என் கையெழுத்து ஒருமாதிரி போகும்.  

அதனாலேயே கையெழுத்தை மீண்டும் திருத்தி எழுதவோ மாற்றி எழுதவோ சிரமப்படுவேன். ஓரிரு  எழுத்துப்பிழைகளை அழித்திடலாம். இப்பவும் அப்படித்தான். கையெழுத்து அதன் விருப்பத்திற்கு கோணல்மாணலாக இருக்கும். நல்ல வேளையாக கைவசம் கணினி இருப்பதால் தப்பிக்கிறேன்.

அப்படி எழுதியெழுதி திருத்தி, திரும்ப எழுத சோம்பல் பட்ட பல கதைகளை கணினியில் உதவியால் எழுதியிருக்கிறேன். ஆனாலும் சில கதைகள் அந்தந்தக் காலக்கட்டத்தைத் தாண்டிவிட்டால் அதற்கான மதிப்பு இருக்காது. அக்கதை எழுதியது வீண் என நினைத்திருந்தேன். அதனாலேயே குறிப்பு புத்தகத்திலேயே பல கதைகளும் கதைகளுக்கான குறிப்புகளும் உறங்கி கொண்டிருக்கின்றன.

எனது அந்த நினைப்பு தவறு என ரொம்பவும் தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். காலம் தொடர்ந்து புரிய வைத்துக்கொண்டே இருக்கிறது.

அவ்வகையில் நான் எழுதி, நீண்ட நாட்களுக்கு பிறகு (அது மாதக்கணக்காகி வருடக்கணக்காகி விட்டது) திருத்தி எழுதி அதனை இனி அதற்கு மதிப்பில்லை என்ற ஒரு கதை இன்று என் முன் பல்லிளித்து நிற்கிறது.

கதை அப்படியே இருக்கட்டும். அக்கதைக் கருவை சுருக்கமாக சொல்கிறேன்.

அண்ணன் அஜித் ரசிகன். தம்பி விஜய் ரசிகன். ஒருவருக்கும் ஓயாத சண்டை. (கதை நடப்பது 90கள் காலக்கட்டத்தில், சமூக வலைத்தளங்கள் அவ்வளவாக அறிமுகமாகியிருக்கவில்லை) அஜித்தா? விஜய்யா? அல்லது விஜய்யா? அஜித்தா? என்பதைத் தாண்டி அண்ணனுக்கும் தம்பிக்கும் வேறெதிலும் அக்கறையோ பொறுப்போ இல்லை. ஒருநாள் நோக்கு வர்மத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மூக்கு மண்டை என உடைத்துக் கொள்ளும்படி ஆனது. மருத்துவமனையில் அண்ணனும் தம்பியும் பக்கத்துப்பக்கத்தில் படுத்திருக்க அம்மா வருகிறார். கையில் நாளிதழ். பிள்ளைகள் முன் நாளிதழ் நடுப்பக்கத்தைத் திறக்கிறார். அதில், அண்ணனும் தம்பியும் யாருக்காக அடித்து மண்டையை ஒடித்துக்கொண்டார்களோ அந்த அஜித்தும் அந்த விஜய்யும் சேர்த்து படம் நடிக்கவுள்ளதாக விளம்பரம் வந்திருந்தது. இருவரும் கைகள் பிடித்தபடி தன் ரசிகர்களுக்கு கைகாட்டிக்கொண்டு நிற்கிறார்கள். அவ்வளவுதான் கதை.

இப்போது இந்தக் கதையை வாசிக்கையில், அஜித்தும் விஜய்யும் தங்களுக்குள் போட்டி இல்ல என்பதாக நிலமை மாறியிருக்கிறது.

ஆனால், இக்கதைக்கு இன்றுவரை மதிப்பிருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது;
நீங்கள் ஒரு கட்சிக்கும் நாங்கள் ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்கிறோம். உங்களையும் உங்கள் கட்சியையும் நாங்கள் கழுவி ஊத்துகிறோம். எங்களையும் எங்கள் கட்சியையும் நீங்கள் கழுவி ஊத்தறீங்க.
நீங்கதான் ஊழல்ன்னு நாங்களும், நாங்கதான் ஊழல்ன்னு நீங்களும் வீடு வீடா போய் நோட்டிஸ் கொடுக்கறோம்.
உங்க கட்சிக்கு நீங்களும், எங்க கட்சிக்கு நாங்களும் ஓட்டு போடறோம்.

கடைசில பார்த்தா நீங்க ஓட்டு போட்டவங்களும் நாங்க ஓட்டு போட்டவங்களும் ஒன்னா சிரிச்சிகிட்டு கைகொடுக்கும் போது நீங்களும் நாங்களும் இவங்களுக்காக அடி வாங்கி மிதி வாங்கி மண்டை வீங்கி கைகால் ஒடிஞ்சி படுத்து கிடக்கப்போறோமோ என்னமோ தெரியல.....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்