பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 29, 2022

ஆஸ்பத்திரி (அனுபவ) கதைகள் 2



மூன்றாவது முறையாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் சரியாக 4.30க்கு அங்கிருப்பார். அவர்தான் முதல் ஆளாக நுழைவார். நாங்கள் எல்லோரும் அவர் பின்னால்தான்.

கையில் எப்போதும் சாப்பாட்டுப் பொருட்கள், தண்ணீர் பாட்டல் என இருக்கும். அன்று நான் பார்க்கவேண்டியவரின் பக்கத்துக் கட்டிலில் அவரது அம்மாவை மாற்றினார்கள். அவர் அம்மாவின் உடல் நிலை குறித்துத் தாதிகளிடம் விசாரித்தார். அம்மாவின் கட்டிலுக்கு அருகில் இருக்கும் குறிப்பேட்டை உன்னிப்பாக வாசித்து அது பற்றியும் யாரிடமோ கைப்பேசியில் அழைத்துப் பேசவும் செய்கிறார்.

இப்படியான மகன்களைப் பார்ப்பது இப்போது அரிதாகி விட்டது என அங்குள்ள சிலர் பேசவும் செய்தார்கள். நானும் என் பங்கிற்குப் பேச நினைத்தேன். அவரின் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தேன்.
ஏறக்குறைய ஒரு ஆண்டாக இப்படித்தான் மருத்துவமனையும் வீடும் என வந்து கொண்டிருக்கிறார். சில சமயங்களில் மருத்துவர் கொடுக்கும் மருந்துகள் கூட உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். என்னதான் அரசாங்க மருத்துவமனை என்றாலும் சில மருந்துகள் வாங்குவதற்கும் வந்து போவதற்குமான செலவுகள் கையைக் கடித்து விடுகிறதாம்.

நல்லவேளையாக இப்படிக் கவனமாகவும் பொறுப்பாகவும் பார்த்துக் கொள்ளும் மகனும் மருமகளும் இருப்பதைச் சொல்லி அவரை ஆறுதல் படுத்த முயன்றேன்.

பிறகு அவர் சொன்னதுதான் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. தினம் வந்து கவனித்துக் கொள்பவர் நாங்கள் நினைப்பது போல மகன் இல்லையாம். மருமகனாம். அதிர்ச்சியைக் காட்டாது, மகன் இல்லாதவருக்கும் மருமகனாக இப்படி ஒரு மனிதர் கிடைத்துள்ளதைச் சொன்னேன். அந்த அம்மா, அதற்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

அம்மாவிற்கு இரண்டு ஒரு மகனும் இரு மகள்களும் இருக்கிறார்களாம். ஆளுக்கு ஒரு வேலையாக இருக்கிறார்களாம். அம்மாவை வந்து கவனிக்கவோ பொறுப்பை ஏற்றுக்கொள்ளவோ அவர்கள் தயாரில்லை என்றார்.

பிள்ளைகளை நல்லபடியாகத்தான் வளர்க்கிறோம். கல்யாணம் செய்தும் கொடுக்கிறோம். கையில் கிடைக்கும் காசையெல்லாம் கொடுத்து நல்லா இருக்கட்டும் என்கிறோம். ஆனால், அம்மாவிற்கோ அப்பாவிற்கோ உடம்பு முடியவில்லை என்றால் யாரும் கண்டுகொள்வதில்லை. எந்தப் புண்ணியமோ தெரியல, இப்படியொரு மருமகன் கிடைத்ததைச் சொன்னார். அம்மாவின் மருமகன் மீது மரியாதைக் கூடியது.

தங்களின் கடமையைக் கூடக் கண்டுக்கொள்ளாமல் காரணம் சொல்லும் பிள்ளைகளுக்கு மத்தியில் சில பிள்ளைகளாவது இப்படி இருப்பதற்கு யார் மரியாதைக் கொடுக்கிறார்களோ இல்லையோ நாம் கொடுக்கலாம்தானே.
புதிதாக எதையும் செய்ய வேண்டாம். ஆனால் பெற்று வளர்த்ததற்குக் கொஞ்சமாவது நன்றி காட்ட வேண்டாமா எனக் கேட்டவர் கண் கலங்கினார். பார்வையாளருக்கான நேரம் முடிந்துவிட்டதா தாதிகள் அங்குள்ளவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். புறப்பட வேண்டும்.

மின் தூக்கி, கீழே எங்களைக் கொண்டு வந்தது. வாசலுக்கு அருகில் அம்மாவின் மருமகன் நின்றுக்கொண்டிருந்தார். மனதில் வைத்த மரியாதையை அவர் முகத்தின் முன் காட்ட நினைத்தேன்.

அம்மாவின் உடல் நலம் குறித்து விசாரித்து, நல்ல மருமகன் என்றேன். கேட்டது என்னை ஆழ்ந்து பார்த்தவர். “அம்மா.. சொன்னாங்களா..?” எனக் கேட்டார். ஆமாம் என்றேன். “அதற்குத்தான் நல்ல மருமகன்னு சொன்னீங்களா” என்றவரிடம் , தலையசைத்தேன்.

அவர் மேற்கொண்டு பேசலானார், “அம்மா.. என்கிட்டயும் சொல்லிருக்காங்க.. பெத்த பிள்ளைகளை விடப் பெறாத பிள்ளையா நான் இருந்து பார்த்துக்கறேன்னு… ஆனா…” நிறுத்தினார்.

எனக்குப் புருவம் சுருங்கியது. அவர் தொடர்ந்தார்.

“ஆனா… அம்மா என்கிட்ட ஒன்னுதான் கேட்டுகிட்டாங்க.. என்னதான் இருந்தாலும் அவங்களுக்கு ஏதும் ஆச்சுன்னா.. அவங்க மகன் தான் கொள்ளி வைக்கனுமாம்.. அப்பதான் கட்ட வேகுமாம்….” என்றவர் மணியாகிவிட்டதாக, பார்க்கலாம் என்றவாறு கிளம்பினார்.

என்னதான், தான் பெற்ற பிள்ளையால் எதையுமே ஒரு பிள்ளையாகச் செய்ய முடியாவிட்டாலும் தனது இறுதி கடனையாவது செய்யட்டுமே என ஓர் அம்மா நினைக்கிறார் என்பதா, அம்மாவுக்குக் கடைசியா கொள்ளி கூட வைக்கக் கொடுப்பினை இல்லாம தன் மகன் போய்டக்கூடாதுன்னு ஓர் அம்மா நினைப்பதாகப் பார்ப்பதா எனத் தெரியவில்லை.

மகன்களும் மகள்களும் இருக்க வேண்டிய இடத்தில் நின்று அவர்களின் கடமையையும் சேர்த்து செய்யும் மருமகன்களுக்கும் மருமகள்களுக்கும் கிடைக்கும் மரியாதையும் முக்கியத்துவமும் நம் சமூகத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. குடும்பத்தில் முதலில் இவர்களைத்தான் ஒதுக்கி வைப்பார்கள்.

அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் தெரியுமா எனப் பேசுவார்களே தவிரத் தாங்கள் என்னவெல்லாம் செய்யவில்லை என்பதைக் குறித்துப் பேசவே மாட்டார்கள்.
போதாக்குறைக்கு இவர்களுக்குச் சில இடங்களில் ‘இளிச்சவாய்’ என்கிற பட்டத்தை மட்டும் கொடுத்துவிடுகிறார்கள்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#ஆஸ்பத்திரி_அனுபவக்கதைகள்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்