பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 25, 2022

முதற்பார்வையில் 'செந்தோழன் செங்கதிர்வாணன்'


'செந்தோழன் செங்கதிர்வாணன்' நம் நாட்டு புத்தம் புது திரைப்படம். நாடறிந்த கலைஞர் கோவின் சிங் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். இளைஞர்களின் மனம் கவர்ந்த இசைக்கலைஞர் டாக்டர். கேஷ் வில்லன் நடிக்கும் மூன்றாவது திரைப்படம். வில்லனும் அவர்தான் ஹீரோவும் அவர்தான்.

வழக்கமான கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் மூன்நிலா. வழக்கத்திற்கு மாறான கதைப்போக்கில் தனது நடிப்பாற்றலைக் காட்டி மிளிரவும் செய்கிறார். 

டாக்டர். கேஷ் வில்லன் தனக்கே உரிய இசை பாணியில் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். காதல், தனிமை, இழப்பு, நம்பிக்கை என ஒவ்வொரு பாடல்களுமே கதையின் ஊடாக நமக்கு மேலும் சில கதைகளைச் சொல்லவும் செய்கின்றன.

குரலால் அறியப்பட்ட டாக்டர். கேஷ்வில்லனை யாரும் பேசவே விடவில்லை. பார்வையாலேயே பதில் சொல்ல முயல்கிறார். அதுதான் நாயகன் மீது மர்ம மனிதன் என்ற அடையாளத்தைக் கொடுக்கிறது.

ஷாமினி ரூபாவாக சந்தேகிக்கும் கணவனிடம் மாட்டி நன்றாகவே அவதிப்படுகிறார். கணவராக வரும் 'சேம்' சிரிக்க வைப்பதோடு நம்மையும் அவர் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறார். ரூபா (ஷாமினி) மீது நமக்கும் சந்தேகம் வருகிறது. ஆனாலும் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடுத்தர குடும்ப சிக்கலில் சிக்குண்டவராக கணவனின் பொறுப்பற்றத் தன்மையில் மாட்டிக்கொண்டு பாவப்படுகிறார். என்னதான் அடித்து துவைக்கும் குடிகார கணவன் என்றாலும் ஒரு நாள் வீட்டிற்கு வராத கணவனை தேடுவது, வழக்கமான மனைவியின் மனநிலைதான்.

நாயகிக்கும் சேமுக்கும் ஒரே நேரத்தில் உண்மை தெரிய வருகிறது. நம்மையும் இருக்கை நுணிக்கு அழைக்கிறார்கள். ஆனால் இரண்டும் இரண்டு வித உண்மைகள் என தெரிய வரும் போது மனம் சமாதானம் ஆனாலும், நாயகிக்கு தெரிந்த உண்மையில்தான் முழு கதையுமே தன்னை வெளி காட்டுகிறது.

கனிமொழியாக நடித்திருக்கும் மூன்நிலாவின் பெற்றோர் ரொம்பவும் இயல்பாகவே வருகிறார்கள். சிரிக்கவும் வைக்கிறார்கள் சில்மிஷம் செய்யவும் முயல்கிறார்கள். ரசிக்க வைத்து கைத்தட்டல் வாங்குகிறார்கள்.

நாயகனின் கடந்த காலம் நம்மையும் கலங்கடிக்கிறது. இளைமைக்கால நாயகனாக வருபவர்கள் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

பெற்றோர் சரியாக அமையாவிட்டால், ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வும் எப்படி சிதைந்து சின்னாபின்னமாக மாறுகிறது என காட்ட நினைத்த இயக்குனர் வெற்றியை நெருங்கியுள்ளார். 
பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு யாரால் இயல்பு வாழ்க்கை கிடைக்கும் என்கிற பதிலையும் கொடுத்து கைத்தட்டல் பெறுகிறார்.

ஜூலை 28, திரைக்கு வரவிருக்கும் 'செந்தோழன் செங்கதிர்வாணன்' திரைப்படத்தையொட்டிய சிறப்பு காட்சிக்கு நேற்று (24/7) அழைக்கப்பட்டிருந்தேன். அதையொட்டிய முதல் பார்வையாக இதனைப் பகிர்ந்து கொள்கிறேன். 

கண்டிப்பாக குடும்பத்துடன் திரையில் பார்க்க வேண்டிய நம் நாட்டு திரைப்படம். திரைக்கு வந்த பின் எனது முழுமையான பார்வையை மீண்டும் எழுதுகிறேன்.

படக்குழுவினர்க்கும் கதாப்பாத்திரங்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் தமிழ்ப்பெயர்களுக்கும் அன்பும் வாழ்த்துகளும்..

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்