பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 23, 2022

ஆஸ்பத்திரி (அனுபவ)கதைகள் - 1

     ஒரு மணி நேர காத்திருப்பு முடிந்தது. அடுத்ததாய் மருத்துவரைப் பார்க்க வேண்டும். வழக்கமான பரிசோதனைதான். அடுத்த மாதம் வரை சாப்பிட வேண்டிய மருந்துகளைக் கொடுத்து அனுப்பினார்கள்.

    மயக்கமாக இருந்ததால் உடனே கார் நிறுத்துமிடத்திற்கு செல்ல முடியவில்லை. இல்லாள்தான் காரை எடுக்க வேண்டும். மருத்துவமனை வாசலில் காத்திருந்தேன். கார் வரும்வரை அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்க்கலானேன். அப்போதுதான் அவரைச் சந்திந்தேன்.

    ஏறக்குறைய என்பது வயதை நெருங்கி கொண்டிருப்பவர். கை நிறைய மருந்துகள் கொண்ட துணிப்பை இருக்கிறது. அவர் முகத்தில் சோகம். நடையில் தயக்கம். தூரத்துலிருந்தே என்னால் அவரை கவனிக்கும்படி இருந்தது. அவரும் என்னை கவனித்திருக்க வேண்டும். மெல்ல என்னை நோக்கி வந்தார்.

    “அப்பறம் தம்பீ… உடம்புக்கு என்ன..?”என்று ஆரம்பித்தார். அருகில் அமர்ந்தார். ரொம்பவும் சுருக்கமாக என்னைப்பற்றியும் என் உடம்பைப் பற்றியும் சொன்னேன். மரியாதைக்காக அவரின் உடம்புக்கு என்னவென்று கேட்டேன். “வயசானாலே இப்படித்தான் தம்பீ ஆயிரம் வியாதி வரும்.. டாக்டருக்கே என்னென்ன வியாதின்னு சரியா சொல்லத் தெரியல..” என்று ரொம்பவும் மரியாதையாக பதில் சொல்லிவிட்டு சிரிக்கலானார்.

    சோகம் ததும்பிய முகத்தில் அவர் சிரிப்பது அழகாக இருந்தது. இளைமை காலத்து ஜெமினி கணேசனாக இருந்திருப்பார் போல.

    சிரித்த முகத்தில் சாட்டென தயக்கம் எட்டிப்பார்த்தது. தரையைப் பார்க்கலானார். அவர் எதையோ கேட்கவும் சொல்லவும் நினைப்பதாகப் பட்டது. நானே கேட்டேன். “என்ன ஆச்சி… மயக்கமா இருக்கா.. நர்ஸை கூப்டவா…?”

    “மயக்கம்தான் தம்பி.. ஆனா நர்ஸைக் கூப்பட வேண்டாம்… ஆமா நீங்க சாப்டிங்கலா…?”

    “காலையிலேயே சாப்டுதான் வருவேன். ஹாஸ்பிட்டல் வந்தா ரொம்ப லேட்டாகிடும்.. அதனால சாப்டுதான் வருவேன்.. ஆமா நீங்க சாப்டிங்களா..”

“ஓ… சாப்டுதான் வருவீங்களா……”

“ஏன் நீங்க சாப்ட மாட்டீங்களா….”

“மனைவி உயிரோட இருக்கற வரைக்கும் சாப்டுதான் வெளிய வருவேன்… பசிக்குது…”

    “பக்கத்துலதான் கடை இருக்கு… நேரா போய்ட்டு வலது பக்கம் திரும்பினா தெரியும்…” என்றேன்.

    அவருக்கு மருத்துவமனை சிற்றுண்டி எங்குள்ளது என தெரியவில்லை என்றுதான் நினைத்திருந்தேன்.

“அது தெரியும் தம்பி பல தடவை வந்திருக்கேன்.. பார்த்திருக்கேன்…”

“கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. காசு இல்லையா..”

“…..”

    எனக்கு புரிந்தது. நானாக அவரை சாப்பிட அழைப்பது போல அழைத்தேன் முதலில் தயங்கியவர் பின் என்னுடன் கிளம்பினார். நடந்து கொண்டே பேசலானார். ஒவ்வொரு மாதமும் மருத்துவ பரிசோதனைக்கு இப்படித்தான் வருகிறார். பெயர் பதிவு செய்ய ஐந்து ரிங்கிட் கொடுக்க வேண்டும். அதை மகன் கொடுத்தனுப்புவாராம். காலையில் கிரேப் வண்டியை புக் செய்து அனுப்பிவிடுவார். கையில் ஒரு பழைய கைப்பேசி இருக்கிறது. அதில் மகன் மட்டுமே அழைக்க முடியும். மூன்று மணிக்கு அழைத்து கிரேப் வண்டியை புக் செய்யவா என கேட்டு , புக் செய்து அனுப்புவாராம். ஒரு வேளை இவருக்கு சீக்கிரமே பரிசோதனை முடிந்தாலும் மூன்று மணிக்கு மகன் அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு கிரேப் வண்டிக்கு காத்திருந்து பிறகு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றார்.

    நன்றாக சாப்பிட்டார். முடிந்ததும் கலகலப்பாகப் பேசத் தொடங்கினார். மகனுக்கு அழைக்கவா என்றேன் வேண்டாம் என்றார். அழைத்துப்போகவா என்றேன் அதற்கும் வேண்டாம் என்றார்.
கொஞ்ச நேரம் பேசிவிட்டு விடை கொடுத்து கிளம்பினேன்.

    நம்மால் நம் வீட்டில் இருக்கும் வயதானவர்களுடன் எல்லா சமயத்திலும் மருத்துவமனைக்கு செல்ல முடியாதுதான். சென்றுதான் ஆக வேண்டும் என யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஒரே குடும்பத்தில் அந்தப் பொறுப்பை ஒருவர் தலையில் கட்டிவிட்டு மற்றவர் ஒதுங்கிக்கொள்வதும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

    நாமே அழைத்து செல்ல முடியாவிட்டாலும் கிரேப் வண்டியின் மூலம் அனுப்பி வைக்கும் வசதி இருக்கிறது. நல்லபடியாகச் சென்று நல்லபடியாக திரும்ப வருவதற்கான வசதியை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால்,

    வயதானவர்கள் வெளியில் குறிப்பாக மருத்துவ மனைக்கு செல்லும் போது குறைந்தது பத்து ரிங்கிட்டையாவது கொடுக்கக்கூடவா நம்மா முடியாது. வீட்டிலும் சாப்பிடி எதுவும் கொடுக்காமல் மருத்துவமனைக்கு அனுப்புவதும் பசியுடன் வீட்டிற்கு வந்தவருக்கு தாமதமாக உணவு கொடுப்பதும் பாவத்தில் சேராதா?

    பாவ புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டாமா. கையில் காசில்லாமல் மருத்தவமனை பரிசோதனை முடிந்து பசியுடன் காத்திருக்கும் முகங்களைப் பார்த்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்