பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 16, 2022

- துரோகி -

"யாராவது என்னைக் கொல்லத்தான் போகிறார்கள்...."

"அதற்காக...."

"நீயே என்னைக் கொன்றுவிடு...."

"முட்டாளா நீ...... வாயை மூடு..."

"முட்டாள் அல்ல... வீரன்..."

"அதிகம் பேசாதே... சுட்டுவிடுவேன்..."

" அதற்குத்தான் பேசுகிறேன்.. சுடு.. சுடு... என்னைச் சுட்டு கொன்றுவிடு...."

"நீ என் நண்பன்..... "

"யார் இல்லையென்றது...  அதனால்தான் உன் கையால் சாக விரும்புகிறேன்..."

"அது என்னால் முடியாது.... இந்த யுத்தம் முடியும் வரை நான் உன்னைப் பாதுகாத்துக் கொள்கிறேன்..."

" இப்போது நீதான் முட்டாளாகிவிட்டாய். யுத்தம் எப்போதும் முடியாது..."

"யுத்தத்தில் உன் நாடோ.. என் நாடோ இரண்டில் ஒன்று வென்றுதானே ஆக வேண்டும்.. அப்போது கூடவா யுத்தம் முடியாது...."

" டேய் நண்பா... யுத்தத்தில் இருதரப்பும் வெற்றி பெறாது... மூன்றாம் தரப்பு அதையப்படி விட்டுவிடாது...."

" மூன்றாம் தரப்பா...?"

" அது நமக்கு பிடிபடாது.... என்னை கொன்றுவிடு தயவு செய்து...."

" நீ என் நண்பன்.... "

"ச்சீ... நீயெல்லாம் ஒரு நண்பனா... உன் இடத்தில் நானிருந்தால் இன்னேரம் உன்னை என் துப்பாக்கியால் சுட்டிருப்பேன். என் கத்தியால் குத்தி கிழித்திருப்பேன். பூட்ஸ் காலால் உன் இடுப்பை உடைத்திருப்பேன். உன் கைகளைப் பின் பக்கமாக மடைக்கியிருப்பேன். உன் காலில் நரம்புகளை அறுத்திருப்பேன்..... இன்னும் இன்னும் எத்தனையோ செய்திருப்பேன்... ஆனால் நீ....."

" வேண்டாம் அப்படி பேசாதே..."

" யாரோ முகம் தெரியாத ஒருத்தன் என்னைக் கொல்வதைத்தான் நீ விரும்புகிறாயா... துரோகி........"

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்