பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 18, 2014

எளிய கேள்விகளும் எளிய பதில்களும்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து கே.பாலமுருகன்)
 
 
புனைவுகள் குறித்த அபத்தமான கருத்துகள் பல்வேறு தரப்பிடம் இருந்து வருகின்ற சூழலில் வல்லினத்தின் சிறுகதை பொறுப்பாசிரியர் கே.பாலமுருகன் பொதுவாக எழும் கேள்விகளுக்கு பதில் கூறுகிறார்.
 
ஒரு இலக்கிய படைப்பில் கூறப்படும் கருத்தை ஒட்டியே அதை படைத்த படைப்பாளின் குணமும் இருக்கும் என்று கூறப்படுகிறதே, இது சரியா? உதாரணமாக போதை பழக்கத்துக்கு அடிமையானவனின் வாழ்க்கையை கூற முனையும் படைப்பாளியும் ஒரு போதைபித்தனாக இருப்பான் என்று கூற முடியுமா?
 
எப்பொழுதுமே கலை மீதான ஆதிக்கம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருந்து வந்துள்ளன. மேட்டுகுடி மக்கள் இதுதான் கலை என பொதுப்பரப்பில் அளவீடு செய்வதும் அதை விளிம்புநிலை மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வேண்டும் என்பதற்கான கலை என்பது உயரிய விசயங்களை மட்டும் பேசுவது எனத் தீர்மானிக்கிறார்கள். ஆகவே அதனை எதிர்த்து எழுதத் துவங்கும் படைப்பாளி அதுவரை இலக்கியம் கண்டிராத நிலப்பரப்பிற்குள் நுழைகிறான். சமூகம் கண்டுக்கொள்ளாமல் விட்ட மனிதர்களை அதாவது சொல்லப்படாத மனிதர்களை நோக்கி தன் படைப்புகளைக் கவனப்படுத்துகிறான். இதுவரை சென்றிறாத இடத்தைத் தேடிச்செல்லும் பயணியைப் போலத்தான் இலக்கியவாதியும். மேடையில் இராவணன் வேடத்தை அணிந்து நடிக்கும் நடிகரின் தீவிரமான கலை ஈடுபாடு இறுதியில் அவனுக்கு எதைக் கொடுக்கின்றது? பார்வையாளர்கள் அவனுடைய இராவணன் வேடத்தின் மீது அதிக வெறுப்பும் கோபமும் கொண்டு அவனை நோக்கி சப்பாத்துகளை எறிகிறார்கள். அவன் உண்மையில் இராவணன் கிடையாது, ஆனால் அவனுடைய ஈடுபாடான நடிப்பு மக்களை நம்ப வைக்கின்றது. அது மேடை என்பதன் இடைவேளியைத் தகர்க்கின்றது. ஆகவே, போதைப்பித்தர்கள் பற்றி எழுதும் ஒரு படைப்பாளியின் கூர்மையான எழுத்து அவனும் அப்படிப்பட்டவன்தான் என வாசகனை நம்ப வைத்து அவன் மீது கோபம் வர வைப்பது என்பது வெற்றியே. எம்.ஏ இளஞ்செல்வனின் கதைகளைப் படித்துவிட்டு அவரை அடிப்பதற்காக வீடுவரை சென்றவர்களும் இருக்கிறார்கள். இது வாசகனின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. எது போலி எது உண்மை என கலையில் பிரித்தறிய முடியாமல் போகிறது? இதுதான் இலக்கியம் எனத் தீர்மானிக்க முயலும் அனைவருமே கலையின் முதலாளிகளாகத் தங்களை நிறுவிக்கொள்ளவே நினைக்கிறார்கள்.
 
மேலும் போதைப்பித்தன் மெனக்கெட்டு தன் வாழ்வை இலக்கியமாகப் படைப்பான் என்றெல்லாம் எதிர்ப்பார்ப்பது வேடிக்கையானது. அதையும் தாண்டி ஒரு காலக்கட்டத்தில் அவன் தன் வாழ்வை எழுதினாலும் அது கண்டனத்திற்குரியதோ அல்லது தீண்டத்தகாத இலக்கியமும் அல்ல.
ஓர் இலக்கிய படைப்பு எளிய வாசகர்களாலும் புரிந்து கொள்ளப்படவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும் அப்படி அமைந்தாலே அது நல்ல இலக்கியம் என்று கூறுவதும் சரியா?
 
யார் அந்த எளிய வாசகர்கள் எனக் கூற முடியுமா? எந்தவகையில் அவர்கள் எளிய வாசகர்கள் என அடையாளப்படுத்தப்படுகிறார்கள்? எளிமை என்பதற்கு நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. இப்படி எடுத்துக்கொள்ளலாம், வாசிப்பை விரிவுப்படுத்தாமல் ஒரே இடத்திலேயே தேங்கிவிட்டவர்களை எளிய வாசகர்கள் எனச் சொல்லலாமா? அல்லது அம்புலிமாமா, பீர்பால் கதைகள் எனச் சிறுவர்களுக்கான எளிய கதைகளை மட்டுமே வாசித்து அங்கேயே தங்கிவிடும் பெரியவர்களா? இரண்டு தரப்பினரும் சமூகத்தில் ஆரோக்கியமானவர்களா? வாசிப்பு என்பது அடுத்தக்கட்ட தேடல்களை நோக்கி வளர வேண்டும் என்பதே ஆரோக்கியம். புதுமைப்பித்தனை நான் படிக்க மாட்டேன் காரணம் என்னால் நா.பார்த்தசாரதியை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என ஒரு வாசகன் தன்னைப் பூட்டிக்கொள்வது நியாயமானதா? இல்லையென்றால் அதுபோன்ற எளிய வாசகர்கள் பற்றி ஒரு படைப்பாளனும் சரி இலக்கியமும் சரி அக்கறைக்கொள்வதில்லை.
 
இன்னொன்று முக்கியமான விசயம், எல்லாம் மனிதர்களின் அறிவுநிலையும், புரிதலும், ஆர்வமும், கல்வியறிவும், ஈடுபாடும் மொழியறிவும் ஒரே மாதிரி இருக்கின்றனவா? அப்படி இல்லாதபோது எப்படி அவர்களை எல்லோரையும் ‘எளிய வாசகர்கள்’ எனும் ஒரே அடையாளத்திற்குள் வைத்துத் திணிக்க முடியும். அம்புலிமாமாவைத் தாண்டாதவர்கள் இருந்தால் அவர்களுக்கு அம்புலிமாமா இரகத்திலான இலக்கியத்தைத்தான் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் ஏதும் உண்டா? அவர்களை வளரவிடுவதில் யாருக்கு என்ன பிரச்சனை? அவர்களுக்காகக் கவலைப்படுகிறோம் என்கிற பெயரில் அவர்களைத் தத்துக்குட்டியாக்கி வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நாம் இன்னும் பகுத்தறிவை இழந்துவிடவில்லை. அல்லது ஒரு பக்க மூளையோடு பிறப்பதில்லை.
 
இன்னும் எளிமையாகச் சொல்வதானால், ஒரு தீவிர வாசகனுக்கு பல்கலைக்கழகத்தில் மட்டுமே இலக்கியம் படித்தவன் எளிய வாசகன்தான். பல்கலைக்கழகத்தில் படித்தவனுக்கு படிவம் ஐந்தில் தமிழ் இலக்கியம் படிப்பவன் எளிய வாசகன், படிவம் ஐந்தில் தமிழ் இலக்கியம் படித்தவனுக்கு நாளிதழில் மட்டுமே சிறுகதைகளையும் கவிதைகளையும் வாசிப்பவன் எளிய வாசகனாகத்தான் இருப்பான். இதில் எந்த நிலை எளிய வாசகர்களுக்கு ஓர் எழுத்தாளன் இயங்க வேண்டும். யாரை மனதில் கொண்டு எழுத வேண்டும். அப்படி ஒருவன் இந்த ரக மக்களுக்கு எழுதுகிறேன் என புனைவு செய்தால், அவன் நல்ல ஆசிரியராக இருக்கலாம்; எழுத்தாளனாக முடியாது.
 
ஓர் இலக்கிய படைப்பு குடும்பத்தில் அனைவராலும் ஒன்றாக வாசித்து மகிழத்தக்கதாக அமைவது அவசியம் என்றும் அதுவே தமிழ் இலக்கிய கோட்பாடு என்றும் கூறுவது சரியா?
 
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சினிமாவில் குழந்தைகள் சினிமா, ஆய்வு சினிமா, சிறுவர் சினிமா, அரசியல் சினிமா, கலை சினிமா, பிராந்திய சினிமா என இன்னும் பல வகைகள் இருப்பதைப் போல இலக்கியத்திலும் பலவகைகள் உள்ளன. சிறுவர் சிறுகதைகளைப் பெரியவர்கள் விரும்பி வாசிக்க இயலாது. அவர்களால் அதிக ஈடுபாட்டுடன் அதில் இலயிக்க முடியாது. அவர்களின் வயதிற்கும் அனுபவத்திற்குமேற்ற பெரியோர் கதைகளையே அவர்களால் மகிழ்ச்சியுடன் வாசிக்க முடியும். அதே போல ஒரு வண்ணதாசனின் சிறுகதையையோ அல்லது ஜெயகாந்தனின் நாவலையோ ஒரு 12 வயது சிறுவன் வாசித்தால் அவனால் அதற்குள் நுழையவே முடியாது. இந்த வேறுபாடுகூட தெரியாவிட்டால் என்ன தலைமைத்துவப்பண்பு நம்மிடம் இருக்கிறதாக நாம் நம்புகின்றோம்? இன்றைய நிலையில் ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்ட தமிழ்ச்சினிமாவை முதலில் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க முடிகிறதா? அதிலுள்ள இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் ஆபத்தானது இல்லை என்று யார் முடிவு செய்கிறார்கள்? அடுத்ததாக நடிகைகளின் தொப்புளையும் தொடையையும் காட்டும் ஞாயிறு தமிழ்ப்பத்திரிகைகள் இன்று பள்ளிகளில்கூட வாசிக்க வைக்கிறார்கள். இதை அவர்கள் பார்த்துப் பாதிப்படைய மாட்டார்கள் என எந்த மனநல மருத்துவர் உத்தரவு அளித்துள்ளார்? குடும்பத்துடன் அமர்ந்து செய்யக்கூடிய வேலையையும் இலக்கியத்தையும் ஒன்றாக்கி பார்க்க முனைவதே என்னைப் பொறுத்தவரையில் தவறுத்தான்.
 
ஒரு இலக்கிய விமர்சனம் எப்படி இருக்கவேண்டும் அல்லது இலக்கிய விமர்சனத்தின் நோக்கம் என்ன?
 
எந்தவொரு கலை விமர்சனமும் படைத்தவனின் சொந்த வாழ்வைப் புண்படுத்தாத வகையிலே அமைந்திருக்க வேண்டும். அவனுடைய வாழ்வாதாரத்தைப் பறிக்கும் அளவிற்கு அவன் ஆபத்தானவன் அல்ல. தன் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவன். அவனுடைய தர்க்கத்தில் குழப்பங்கள் இருப்பின் அதனை விவாதத்தின் மூலம் முன்வைப்பதே ஆரோக்கியமான விமர்சனம், அவனைத் தண்டித்து அவமானப்படுத்தி குற்றவாளியாகக் காட்ட வேண்டும் எனும் வகையில் முயன்றால் அது விமர்சனமல்ல, பழிவாங்கல் ஆகும்.
 
 தமிழ் இலக்கியத்திற்கு என்று எல்லைகளை வகுத்துக் கொண்டு எழுத முடியுமா?
 
அப்படி இதற்கு முன் நினைத்திருந்தால் தமிழ் இலக்கியம் இத்தனை தூரம் உலகம் கவனிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்காது. தமிழில் இத்தனை நாவல்கள் படைப்புகள் தோன்றியிருக்காது. கலைக்கு ஏது வரையறை, அளவீடு, கணம், நீளம், பரப்பளவு? அது என்ன திடப்பொருளா?
 
சமுதாய / பண்பாட்டு விழுமியங்களை தன் எழுத்தில் ஒரு படைப்பாளி விமர்சிக்கவோ மாற்று கருத்தை முன்வைக்கவோ கூடாதா?
 
அதை விழுமியங்கள் என யார் தீர்மானித்தது? பரதம் உயர்ந்த கலை என்றால் நரிகுறவர்களின் தெருக்கூத்து தாழ்ந்த கலையா? ஏன் மேட்டுகுடி மக்கள் ஆர்வம் கொண்டு ஈடுபடும் கலைகளை பண்பாட்டு நிறுவனங்கள் வளர்த்தெடுத்து அதனைக் கொண்டாடுவதற்கு முனைகிறப்போது, தெருக்கூத்தும், பாவைக்கூத்தும் அழிந்து வருகின்றன? அப்படியென்றால் ஒரு சமூகத்தில் எது விழுமியங்களாக இதற்கு முன் தீர்மானிக்கப்பட்டுள்ளது? அதனை மறுபரீசீலனை செய்வதும் அதனை மீள்மதிப்பீடு செய்வதும் எப்படிக் குற்றமாகும்?
 
-கே.பாலமுருகன்
 
நன்றி வல்லினம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்