பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 06, 2020

அவளின்னும் பிறக்கவில்லை


   அவளும் எதிர்ப்பாக்கவில்லை. சட்டென கடவுள் கண்முன் தோன்றுவார் என யார்தான் எதிர்ப்பார்ப்பார்கள். நம்பவில்லை. அவளுக்கு அதிலெல்லாம் நம்பிக்கையும் இல்லை.

   கண் கூசும் வெளிச்சத்தைக் கடவுள் குறைத்துக் கொண்டார். அவளால் இப்போது ஓரளவிற்கு கடவுளைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் அவளின் கண்கள் ரொம்பவும் சுருங்கியிருந்தன. 

   "யார் நீங்கள்... எதற்கு இங்கு வந்து விளக்கு பிடித்துக் கொண்டு நிற்கிறீர்கள்..?"

    கடவுள் அதைக் கேட்டு சிரித்தேவிட்டார். சிரித்தவாக்கிலேயே தன்னை அறிமுகம் செய்தார். அவள் நம்பவில்லை.

   நம்பியவர் கண்களுக்குத் தெரிந்தாலே நம்ப யோசிப்பார்கள். இப்படி நம்பிக்கையில்லாதவள் கண்களுக்கு கடவுள் தெரிகிறேன் என்றால் எப்படி நம்புவாள். இருந்தும் அவளுக்கான மீட்டிங்கிற்கு இன்னும் நேரம் இருப்பதால் கொஞ்ச நேரம் டைம் பாஸ் செய்ய நினைத்தாள்.

   கடவுள் அதனைக் கண்டு கொண்டார். அவரே உரையாடலைத் தொடங்கினார். அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது. அது அவளின் உரிமை எனவும் அதற்கான முடிவெடுக்க தன் கணவனுக்குக் கூட உரிமை இல்லை என்றாள்.

   "உயிர்களின் அத்தியாவசிய தேவைகளின் ஒன்றுதான் இனவிருத்தி. அதற்குத்தான் ஆண் பெண் இரு வெவ்வேறு தரப்புகளை உருவாக்கி ஒரு சாராருக்கு விந்தணுக்களையும் இன்னொரு சாராருக்கு கர்ப்பப்பையையும்  கொடுத்திருக்கிறேன். ஏன் கர்ப்பப்பை வேண்டாம் என்கிறாய். அந்த பொறுப்பை சுமக்க நீ மட்டும்தான் தகுதியானவள் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்..."

   "என் உடல் என் உரிமை.. கர்ப்பப்பை இருக்கிறதாலதான எங்களை கொழந்தை பெத்துக்கற மொஷின் மாதிரி பாக்கறீங்க.. அதான்..."

     "உன் தந்தை உன் தாயை அப்படித்தான் பார்த்தாரா...?"

   "அது எனக்கு தெரியல.. ஏன்னா.. எங்கம்மா ஒரு வெகுளி , போதிய அறிவு இல்ல.. அதனாலதான் அவங்களுக்கே அது தெரியல......"

    "அப்படியா... சரி... ஒருவேளை உன் சிந்தனையை உன் அம்மாவிடம் கொடுத்தால் அதற்கான பதில் கிடைக்கலாமோ..?

   "நீங்கள்தான் கடவுளாயிற்றே.... கொடுத்து தான் பாருங்களேன்.."

    சிரித்தவாறு கடவுள் கண்களை மூடி திறந்தார். அவளைக் காணவில்லை. கடவுளின் கண்களுக்கு மட்டுமல்ல, அவளின் கண்களுக்கும் அவள் தெரியவில்லை...!

   "ஐயோ எங்கே என்னைக் காணவில்லை.. என்ன சூழ்ச்சி இது கடவுளே....!??"

   "சூழ்ச்சியல்ல பெண்ணே.. உன் சிந்தனையை உன் அம்மாவிற்குக் கொடுத்திருந்தேன். அவரும் அவரின் கர்ப்பப்பையை நீக்கிவிட்டார். ஆதலால் நீ பிறக்கவில்லை. ஆக நீ இனி பிறக்கப்போவதும் இல்லை..."

கடவுள் மறைந்தார். 
அவள் பிறக்கவில்லை.

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்