பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 30, 2020

அது மட்டும் அல்ல...


     இயல்பாகவே உயரம் என்றால் பயம். ஏணியில் ஏறி நின்றாலும் கூட கொஞ்ச நேரத்தில் கால்கள் கதகளி ஆட ஆரம்பித்து விடும். நான் மட்டும் எப்படி சும்மா இருப்பது என்று இடுப்பும் அது பாட்டுக்கு ஒரு ஆட்டதை ஆடிக்காட்டும்.

   இன்னும் சொல்லப்போனால் தைரியமாக எறிவிடலாம். ஆனால் இறங்குவது என்பது , அதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. எதையாவது அல்லது யாரையாவது பிடித்துக் கொண்டுதான் இறங்க முடியும்.
உயரமாக இருப்பதால் மற்றவரை விட குறைவான ஏணிப்படியையே ஏறி சமாளித்து விடுவேன். ஆனால் உயரமான வேலை என்றால் துயரமான அதனைக் கடந்து ஏற வேண்டி வந்துவிடுகிறது.

   இந்த ஃபேபியா போதாதென்று தலையில் அடிபட்ட பின்பு, முதல் இரண்டு ஏணிப்படிகள் ஏறினாலே மயக்கம் வந்து கண்கள் இருட்டாகிவிடுகின்றன. கொஞ்சம் உயரம் என்றாலும் ஏதோ செய்கிறது.
ஆனாலும் அவ்வபோது அந்த இருண்டுவிடும் கண்களையும் மயக்கம் வரும் மண்டையையும் விளையாட்டாக அனுபவிக்கத் தோன்றும். வலித்த நினைவுகளை வழிந்து நினைத்து அழுவது போலதான். அதில் ஒரு சுவாரஷ்யம் இருக்கிறதே.

    இன்றும் அப்படி பத்தாவது மாடியில் இருந்து எட்டிப் பார்க்கத் தோன்றியது. வீட்டில் யாரும் கவனிக்கவில்லை. மெல்ல பால்கனி கதவை திறந்து வெளியேறினேன்.

    தலை வலிக்கத் தொடங்கியது. கால்கள் நடுங்கி கண்கள் இருண்டன. கையில் கம்பியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். கண்கள் முழுவதுமாக இருட்டாவதற்குள் வானத்தைப் பார்த்துவிட முயன்றேன்.

   
  கீழே இருந்த பல விளக்கொளிகளைவிட வானில் இருந்த ஒற்றை நிலவொளி அத்தனை நிம்மதியைக் கொடுத்தது. இன்னொரு கையில் படமெடுக்க முயன்றேன். மங்கலாக விழுந்த சில படங்களில் ஒன்று மட்டும் பார்ப்பது ஏற்றதாய் இருந்தது.

     ஆனால் நான் பார்த்தது அந்த நிலவின் ஒளியை மட்டுமல்ல என்பது என் ஒருவனுக்குத்தானே தெரியும்....

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்