பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 11, 2020

தங்கக் காலணி


    அந்த பெயரை அத்தனை சீக்கிரத்தில் மறந்திருக்கக் கூடாது. நான் அப்போது ஆரம்பப்பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். படிப்பு வந்ததோ இல்லையோ, பந்து விளையாட்டு நன்றாகவே வந்தது.

    நான் பந்தை உதைக்கும் லாவகத்தைப் பார்த்த கணித ஆசிரியர் பொறாமை பட்டார். அதற்காகவே ஒவ்வொரு முறையும் கணித தேர்வில் தோல்வி அடையும் போது நான் சதம் அடிக்கும் காலிலேயே ரோத்தானில் அவரும் சதம் அடிக்க ஆரம்பித்தார். அப்போது பந்து விளையாட்டு செய்திகளை குறிப்புகளை தகவல்களை வானொலியிலும் தொலைக் காட்சியிலும் மட்டுமே தெரிந்துக் கொண்டோம்.

    கால்பந்து வீரருக்கு முதன் முதலாக தங்கக் காலணி கிடைக்கவிருக்கும் செய்தியைக் கேட்டு நானும் நண்பர்களும் கொண்டாடினோம். எங்கள் வகுப்பு ஆசிரியர்தான் அந்த தகவலைச் சொன்னார். மேலும் தங்கக் காலணி பற்றி அவர் கொடுத்திருந்த வருணனை அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது.

    ஒரு விளையாட்டு வீரனுக்கு தன் துறை சார்ந்து இப்படி ஒரு அங்கிகாரம் கிடைக்கத் தொடங்கியிருப்பது  குறித்து ஆசிரியர் சொல்லும் போது எங்களுக்கு புல்லரித்தது. காவல் துறையினருக்கு தங்க துப்பாக்கி, மருத்துவர்களுக்கு தங்க ஸ்டெதஸ்கோப் இப்படி அவரவர் செய்யும் வேலைக்கு ஏற்றார் போல தங்கம் கொடுப்பார்கள் என நாங்கள் நம்பிக் கொண்டோம்.

    ஏனோ கணித ஆசிரியர்க்கு அதில் எந்த ஆவலும் சந்தோசமும் இல்லை. அதை பற்றி வகுப்பில் பேசி நண்பன் திட்டும் அடியும் வாங்கியிருந்தான். அவரைப் பொருத்தவரை படிப்பும் வேலையும்தான் ஒருவனுக்கு முக்கியம் அதுதான் எதிர்காலம் என்பார்.

    பல ஆண்டுகள் கழித்து, நேற்று அந்த நண்பஞ் ஆச்சர்யமாக என்னை அழைத்திருந்தான். செய்தி தெரியுமா என்றான். எனக்கு புரியவில்லை. அந்த கால்பந்து விளையாட்டு வீரர் பெயரைச் சொன்னான். எனக்கு ஞாபகத்துக்கு வந்து விட்டது. ஹப்பா..! எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டின் முதல் தங்கக் காலணியை பெற்ற வீரரை மறக்க முடியுமா என்றேன்.

    நண்பனின் குரல் மாறியது. எனக்கு பக்கென்றது. அன்று தங்கக் காலணியை பெற்ற அந்த வீரர் தற்போது அதனை ஏலத்தில் விற்று விட்டதாக சொன்னான். எனக்கு கோவம் வந்துவிட்டது. நண்பனையும் திட்டினேன். அந்த விளையாட்டு வீரரையும் திட்டினேன். என்ன இது முதல் தங்கக் காலணியை போய் விற்று விட்டாரே.. பணமா முக்கியம்... எத்தனை பெரிய கௌரவம் அது...

    திட்டி முடித்ததும். நண்பன் தொடர்ந்தான். "அவரோட மருத்துவ செலவுக்கு அவசர தேவையாம்.. அவருக்கு வேற வழி தெரியலன்னு சொல்லி அழுதாருடா...."

    "என்னடா சொல்ற... அவருக்கா இந்த நிலமை...?"

    "டேய் அன்னிக்கு கணக்கு டீச்சர் அறைஞ்சது எனக்கு இப்பதாண்டா வலிக்குது..."

#தயாஜி




1 comments:

வாணிஜெயம் சொன்னது…

யதார்த்தம் அதிர்ச்சியாகவே இருக்கும்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்