பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 20, 2015

வாசனைபூசிய வாழ்வு



மொழிப்பெயர்ப்பாளர் எழுத்தாளர் ஸ்ரீதர் ரங்கராஜன்


   இந்தக் கட்டுரைத்தொகுப்பில் என்னை மட்டுமன்றி எவரையும் முதலில் ஈர்க்கக் கூடியது அதன் பாசாங்கற்ற குரல்தான். வலிந்து சொற்களைத் தேடி அலங்காரமாக எந்த விஷயத்தையும் சொல்வதில்லை. தனக்கு நடந்த சம்பவங்களை, தனக்குள் எழுந்த கேள்விகளை, நிகழ்ந்த புரிதல்களை அதிகம் மெனக்கெடாமல் செய்தபதிவு இக்கட்டுரைகள். குறிப்பாக, ‘ஊர்க்காரர்கள்’, ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’, ‘பொம்மைகளின் வன்முறை’ போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம். ‘பாட்டியில்லா வீடுகள்’ மலேசிய மண்ணுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் பொருந்தக்கூடியது. தயாஜியின் கேள்விகள் எளிமையானவை, இயல்பானவை, உள்ளார்ந்த அக்கறையிலிருந்து எழுபவை. ஆனாலும் சிலசமயங்களில் எளிமை, சொல்லவந்த விஷயத்துக்கு ஈடுகொடுக்கவில்லை என்பதும் உண்மை, உதாரணமாக சாதிமயிர், விவேகானந்தரும் விலைமாதர்களும் போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம். 

  சிலவிஷயங்களைப் பேசும்போது மொழியில் வேகமும் அழுத்தமும் தேவைப்படுகிறது என்பதை தயாஜி கவனிக்கவேண்டும்.
ஒரு சமூகத்தின் நம்பிக்கைகளை, அது நடித்துக் கொண்டிருக்கின்ற இடங்களை,
புத்தகத்தின் பின் அட்டை
வாசனைபூசி மறைத்து வைத்துள்ள விஷயங்களை கேள்விக்கு உட்படுத்துவதே இலக்கியத்தின் வேலை. தயாஜி அப்படிப்பட்ட கேள்விகளைத்தான் முன்வைக்கிறார். சமூகம் என்கிற இக்கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு அதைக் கேள்விக்குட்படுத்துவது மட்டுமல்லாது தன்னையும் சுயவிசாரணை செய்துகொள்கிற எழுத்துகளே உண்மையில் ‘படைப்பு’ எனப்படும். அதுதான் ஒரு எழுத்தாளனின் எழுத்து நேர்மைக்கான சாட்சியமும் கூட. எழுத்தாளன் என்பவன் பீடத்தில் அமர்ந்து பரிபாலன நோக்கோடு ஆசிர்வதிப்பவனாகவோ அல்லது சமூகம் ’இதுதான் ஒழுங்கு’ என்று சொல்வதை ஏற்று, மந்தையாடு போலப் பின்சென்று, யாருக்கும் வலிக்காமல் எழுதி, கால் கழுவியதற்காகக் கழுத்தில் இடப்படும் மாலையைப் பெருமையாகப் பல்லிளித்துத் தாங்கியபடி இருப்பவனாகவோ இருக்க முடியாது.
எனது பெற்றோர் நூலை வெளியிட ஸ்ரீதர் பெற்றுக்கொள்கிறார்
   ஒரு நல்ல எழுத்தாளன் உங்கள் மனசாட்சியைப் போல, நீங்கள் அவனிடமிருந்து தப்பிக்கவே விரும்புவீர்கள். நல்ல எழுத்தாளனின் படைப்பு (மேற்சொன்னது போன்ற)  ஒரு சமூகத்துக்கு எரிச்சலையும் கோபத்தையும் கொடுக்கும். ஆடைகழற்றிப் பொதுவில் நிற்கவைத்த பதைப்பை ஏற்படுத்தும். அவன் இருப்பும் கேள்விகளும் உங்களின் பண்பட்ட, நாகரீகமான, வேறுபாடுகளற்ற, இணக்கமான, பரிபூரணமான, தேவைகளற்ற சமூகம் என்ற ஆழ்ந்த, சுகமான நித்திரைக் கனவுகளை உங்களிடமிருந்து பிடுங்கிக்கொள்ளும். அது எவ்வளவு கொடூரமானது என்று எனக்குத் தெரியும். உங்களின் ஆழ்மனதிலிருந்து அவன்மீதான வெறுப்பு அவ்வளவு கசப்போடு வழியும், இன்னும் ஒருவீச்சு, பலமான, முடித்துவிடக் கூடியதான வீச்சு, நீங்கள் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி கைகளைப் பின்னுக்கு மறைத்து, முகத்தில் புன்னகையோடு விரும்பிக் காத்திருப்பீர்கள். 

நூல்

    அதையும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. சொல்லப்போனால் அது அவ்வளவு சரியானதும் கூட. அது கிடைத்தபின் நீங்கள் மீண்டும், அவன் கேள்விகளால் எழுந்த இப்போது உங்களை அரித்துக் கொண்டிருக்கும் இக்குற்றவுணர்வின்றி, பல்லிளித்தபடி மாலையணிந்து, வாசனைபூசி மறைத்துக்கொண்டு உங்கள் ஆழ்ந்த, நம்பிக்கையான கனவுகளைக் காணத் தொடங்கலாம். அப்போதுதான் உங்கள் உலகம் சமநிலையில் இயங்க ஆரம்பிக்கும்.

தயாஜி,
நூல் குறித்து பேசும் போது
இது நல்லதொரு ஆரம்பம், வாழ்த்துகள் உங்களுக்கு. இன்னுமின்னும் உங்களை மெருகேற்றிக் கொள்ளுங்கள், வாசியுங்கள், கேள்வி கேளுங்கள், எழுதுங்கள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல…
உங்களுக்கும் வல்லினத்திற்கும் என் அன்பு.

(1.11.2015-ல் வல்லினம் பதிப்பகம்  வெளியீடு செய்த ‘ஒளி புகா இடங்களின் ஒலி’ என்ற எனது முதல் நூலுக்கு நண்பர், மொழிப்பெயர்ப்பாளர், எழுத்தாளர் ஸ்ரீதர் ரங்கராஜன் கொடுத்த நூல் முன்னுரை)


வல்லினத்தில் வாசிக்க இங்கு சொடுக்கவும்
http://vallinam.com.my/version2/?p=2401

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்