பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 18, 2009

படித்ததை பகிர்கின்றேன்,,,


படித்ததைப் பகிர்கின்றேன்.....



எப்படி எழுதணும்?



– சுஜாதா தமிழ் எழுத்துலகில் பலருக்கும் ஆதர்ஸ நாயகன் அமரர் சுஜாதா அவர்கள். அவரிடம் ஒரு மணிநேரம் பேசிய அனுபவத்தை மட்டுமே மூலதனமாக வைத்து எழுத்துலகில் ஜெயித்த பலரை அடையாளம் காட்ட முடியும். மிகச் சிறந்த உதாரணமாக பாலகுமாரனைச் சொல்லலாம். அவரும் இந்த உண்மையை எந்த மேடையிலும் தயக்கமின்றி ஒப்புக் கொள்வார். அப்படி என்னதான் சொன்னார் சுஜாதா…


புதிதாக எழுத வருபவர்கள்…


அல்லது ஏற்கெனவே எழுதியும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என துவண்டு போகிறவர்களுக்காக அவர் தந்த சில குறிப்புகள்.


இதை ப்ரேம் போட்டும் வைத்துக் கொள்ளலாம், தப்பில்லை!



1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். ‘துருவனும் குகனும்’ என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, ‘போலீஸ் செய்தி’க்கு அனுப்பாதீர்கள்.



2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். ‘பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்’ என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.



3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி…



4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.



5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.



6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். ‘அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.



7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதை மாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித் தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.



8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட ‘போனான்’ என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக ‘னான்’ என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.



9. இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டுப் பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதிகள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் உடனே மற்றப் பத்திரிக்கைக்கு அனுப்ப செளகரியம்.



10. பத்திரிக்கை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.



11. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.



-சுஜாதா எழுதிய ‘தோரணத்து மாவிலைகள்’ புத்தகத்திலிருந்து!



.......தயாஜி வெள்ளைரோஜா.......

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்