பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 18, 2023

தீவிரவாதி

 

அவனைக் கொல்வதற்கு முன்பாக விசாரித்தார்கள். விசாரிக்காமல் யாரையும் அதிகாரிகள் ஒருபோதும் கொல்வதில்லை. இல்லை இது கொலையில்லை. தண்டனை.

 அதிகாரிகள் விசாரிக்காமல் இதுவரை எவருக்கும் தண்டனை வழங்கியதில்லை.

அவன் முதலில் அழத்தொடங்கினான். அழுகிறான் அழுதுக்கொண்டே இருக்கிறான். இது அவனது நாடகமாகக்கூட இருக்கலாம். உடலில் உள்ள காயங்களும் முகத்திலிருக்கும் வீக்கமும் தலையிலிருந்து வழியும் இரத்தமும் அப்படியொன்றும்  வலிக்காது என அதிகாரிகளுக்கு தெரியும்.

வாயில் காய்ந்த ரொட்டியைத் திணித்தார்கள். அது தொண்டையில் சிக்காமலிருக்க எதையோ வாயில் ஊற்றினார்கள். அவனால் எதையும் விழுங்க முடியவில்லை. எதையும் சொல்லவும் முடியவில்லை. வாந்தி எடுத்தான். திணித்ததிலிருந்து திணிக்காததும் அவன் தின்னாததும் வெளியில் தெரித்தன. 

அவனை  சிறிது நேரம் ஓய்வெடுக்க வைத்தார்கள்.

மீண்டும் ஒரு முறை விசாரித்தார்கள்.  இம்முறை அழுகை குறைந்திருந்தது. மூச்சு மட்டும் அதிகப்படியாக ஏறியேறி இறங்குகிறது.

அவனிடமிருந்து எந்த விபரங்களையும் வாங்க முடியவில்லை. அப்படியொரு பயிற்சியை அவன் பெற்றிருக்கக் கூடும். 

 தாங்கள்  தாக்குதல் நடத்திய இடத்தில் மயங்கிய நிலையில் இவனை கண்டுபிடித்திருந்தார்கள். தெளிவாக இருந்தால் இவனும் ஓடியிருப்பான்.

அவனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காது என உறுதியானது. உண்மையைச் சொல்லாத குற்றத்திற்காகவும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத குற்றத்திற்காகவும் அதிகாரி முன் வாந்தி எடுத்த குற்றத்திற்காகவும் தாக்குதல் நடந்த இடத்தில் பிடிபட்ட குற்றத்திற்காகவும் இன்னும் சில இதுவரை கண்டுபிடிக்காத குற்றத்திற்காகவும் தீவிரவாதி என உறுதி செய்து அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இது இங்கு நடந்துகொண்டிருக்கும் போது, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சிலர் தங்களில் உறவினர்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். 

அதில் ஓர் அம்மா தேடுவது; எப்போதும் அழுதுக்கொண்டிருக்கும் தனது ஐந்து வயதான வாய்ப்பேச வராத குழந்தையை..... குழந்தையை...... குழந்தைகளை.... குழந்தைகளையும்.....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்