பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 25, 2020

பேய்ச்சி' தடை! கொண்டாட வேண்டியதா? யோசிக்க வேண்டியதா?

 

அதற்கு முன் சிலவற்றை பேச நினைக்கிறேன். எனக்கும் நவீன் அவர்களுக்கும் இடையில் உள்ள சிக்கல் கொடுக்கல் வாங்கள் போன்ற வாய்க்கால் வரப்பு சிக்கல்தான். யோசித்துப் பார்த்தால் இதெற்கெல்லாமா வீராப்பு பிடித்து கொள்வோம் என நினைக்கத்தோன்றும். ஒரு வேளை நாளையே அவர் "வாடா தம்பி"  என்று அழைத்தால் நான் போனாலும் போய்விடுவேன். 


ஆனால் இப்பொழுது நான் பேச முற்படுவது இலக்கியத்திற்காக எதனையும் இழக்க தயாராய் இருக்கும் எழுத்தாளர் ம.நவீன் பற்றி...

எனது பதின்ப வயதில் இருந்து திரு.ம.நவீன் அவர்களின் வாசகனாக இருக்கிறேன். ஒரு சமயம் வல்லினம் குழுவில் இணைந்து செய்லாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. ஆத்மார்த்தமாகத்தான் அதில் பயணித்தேன். நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். அப்பயணத்தில் என்னால் பலவற்றை அறிந்துக்கொள்ள முடிந்தது. தனிப்பட்ட வாழ்வில் எனக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு வல்லினம் குழுவினரும் ம.நவீன் அவர்களும் ஆறுதலாகவும் ஆலோசகராகவும் இருந்தார்கள். 

தனிப்பட்ட முறையில் அவருடன் பலவற்றைப் பற்றி பேசியுள்ளேன். சண்டை போட்டுள்ளேன். முரண்டு பிடித்துள்ளேன். திரும்பி வராத அந்த காலத்தின் நினைவுகளை எப்போதும் மறப்பதற்கில்லை.

சரி,
மலேசிய நவீன இலக்கியம் என்று பேச்செடுத்தால் வல்லினம் மற்றும் ம.நவீன் அவர்களை மேற்கோள் காட்டாமல் பேச முடியாது. குறைந்த பட்சம் திட்டுவதற்காவது பேசுவார்கள். அதற்கான உழைப்பை கொடுத்தோம். கொடுத்தோம் என இச்சமயம் சொல்வது சரியா அல்லது கொடுத்தார்கள் என சொல்வது சரியா என பிடிபடவில்லை.
மற்ற இயக்கங்களும் அவர்கள் பங்கிற்கு செயலாற்றினாலும் முதன்மையாக இருப்பது தற்காலத்தில் வல்லினம் இணைய பக்கம்தான்


சில காரணங்களால் பேய்ச்சி நாவலை வாசிக்கவில்லை. ஒரு சமயத்தில் அவர் எழுதிய புத்தகங்களின் முதல் பிரதியை அவர் கையெழுத்துடன் முதல் நபராக வாங்கி வாசித்தவனால் பேச்சி நாவலை யாரோ ஒருவர் போல வாசிப்பதை மனம் ஏற்கவில்லை.

அந்நாவல் குறித்து பலவாறான விமர்சனங்கள் வந்ததை அறிந்திருந்தேன். ஒரு கட்டத்தில் நாவலைப் பற்றி பேசாமல் ம.நவீன் அவர்களை தூக்கிப் பேசவும் தாக்கி பேசவும் ஆரம்பித்துவிட்டார்கள். அங்கு பலருக்குள் சிக்கல் வந்திருக்கலாம்.

இன்று போய்ச்சி நாவலை தடை செய்துவிட்டோம். அடுத்த என்ன ஆகப்போகிறது. சும்மா இருந்தவர்களை சொறிந்துவிட்ட கதையாய் இனிதான் அந்த நாவலை ரகசியமாக வாசிப்பார்கள். அதனை எழுதியவர் மீது புதிய வெளிச்சமும் ஏற்படப்போகிறது. 

எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்ற ஒவ்வொன்றின் மீதும் ஒரு தடையை வைக்கப் போகிறார்கள். அது நாம் எல்லாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சமூக  அவலங்களை முழுமையாக எழுத முடியாது. ஊழல் அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்க முடியாது. 

சமீபத்தில் கூட 'குலதெய்வங்கள்' பற்றி ஒருவர் எழுதிய புத்தகத்தை இங்கு வெளியீடு செய்ய  தடை போட்டுவிட்டதாக முகநூலில் பார்க்க நேர்ந்தது. 


இலக்கிய படைப்பை விமர்சிப்பதும் விவாதிப்பதுமே அதற்கு நாம் செலுத்தும் நன்றி என நம்புகிறேன். அங்கிருந்துதான் அப்படைப்பு நிலைக்குமா இல்லையா என்கிற தெளிவு கிடைக்கும். மாறாக தடை போடுவதும் எழுதியவரை தாக்குவதும் ஏற்புடையதா என்பது நம்மை நோக்கி நாமே கேட்க வேண்டிய கேள்வி.

யோசித்துப்பாருங்கள் நாளையே ஒரு ஆளோ ஒரு இயக்கமோ சேர்ந்து, உலக பொதுமுறை என நாம் போற்றும் திருக்குறளில் 'காமத்துப்பால்' இருப்பதால் அது ஏற்புடையதல்ல என குருட்டுத்தனமாக தடைவிதிக்க வந்தால் என்ன செய்வோம்?

என்னால் இத்தடைக்கு கண்டனம் தெரிவிக்க முடியவில்லை. இதுவரை தெரிவித்த கண்டனங்களுக்கு பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. பின் விளைவுகளை நினைத்து, என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்