பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 07, 2020

பாம்பின் கால்கள்...

காதலைச் சொல்லி இரண்டு நாட்கள் ஆகின்றன. ஆனால் எந்த மிச்சமும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. எல்லாவற்றையும் பேசித் தீர்த்துவிட்டார்கள்.

பல ஆண்டுகளாக தேடி கிடைத்த தேவதை என அவனும், யாருக்கும் கிடைக்காத வரம் என்று அவளும் ஆளுக்கு ஆள் நினைத்துக் கொண்டார்கள். அது உண்மையும் கூட.

முகநூலில் முதன் முதலாகப் பார்த்த போதே இருவருக்கும் ஏதோ ஈர்ப்பு தோன்றியது. அன்றே நண்பர்களாகி நட்பாகி காதலாகி கசிந்து உருகிவிட்டார்கள்.

மூன்றாம் நாள் சந்திப்பு. இரவு. மெழுகுவர்த்தி வெளிச்சம். சூடான மேற்கத்திய உணவு. திறந்து கொடுக்கப்பட்ட வைன் பாட்டில். நாற்காலியைச் சுற்றிலும் வண்ண பலூன்கள். மத்தியில் அவனும் அவளும். கண்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன.

"நா..."
"நா.."

இருவரும் ஒரு சேர பேச ஆரம்பித்து, நிறுத்தி சிரித்துக் கொண்டார்கள்.

"நீங்..."
"நீங்..."

இப்போதும் அப்படியே நடந்தது. இனி பேசக்கூடாது என்று நினைத்தார்கள். கைபேசியை எடுத்தார்கள். டைப் செய்தார்கள் அவன் அவளுக்கு அவள் அவனுக்கும் அனுப்புனார்கள். ஒரே சமயத்தில் இருவரின் கைபேசியிலும் மணி ஒலித்தது.

ஆர்வம் பொங்கிய காதலுடன் எடுத்துப் பார்த்தார்கள். இருவருக்கும் அது அதிர்ச்சியைக் கொடுத்தது. இருவர் முகமும் இறுகியது. இது ஒத்துவராது என்று முடிவெடுத்தார்கள்.

ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் அவன் ஒரு பக்கமும் அவள் ஒரு பக்கமும் நடக்கலானார்கள். நடந்துக் கொண்டே இருவரும் கைபேசியை எடுத்து மீண்டும் பரிமாறிக்கொண்ட விடயத்தை பார்த்தார்கள்.

'முகநூலை டிலேட் செய்துடு. நாம கல்யாணம் செய்துக்கலாம்...' என இரண்டிலுமே இருந்தது.


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்