பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 06, 2020

ரிஸ்க்கும் ரஸ்க்கும்...


ரிஸ்க்கு என்றால் ரஸ்க்கு சாப்பிடுவது போலதான் குமாருக்கும். இன்றைய கூட்டணி தேவாவுடன் ஆரம்பமானது.
சவால் விட்டு சம்பாதிப்பதுதான் குமாரின் முழு நேர வேலை. மற்றபடி கைச்செலவிற்காக பகுதி நேரமாக ஏதேதோ வேலைகளை செய்து வருகிறான்.

சவால் தொகை பெரிது என்பதால் இன்றைய சவாலும் பெரிதாக இருந்தது பேயாகவும் இருந்தது. தூரத்தில் இருக்கும் பேய் வீட்டிற்குச் சென்று திரும்ப வேண்டும்.  வீட்டின் பின் வாசல் கதவில் கையில் கொண்டு போன சாயத்தைப் பூச வேண்டும்.

விடிந்ததும் அந்த சாயம் சரியாக பூசப்பட்டிருந்தால் குமாருக்கு இரு வாரத்திற்கான தொகை கிடைக்கும். தேவாவும் குமாரும் புறப்பட்டார்கள். எப்போதும் உடனிருக்கும் சில நண்பர்கள் சொல்லி வைத்தார் போல இன்று காணவில்லை. இரவு என்பதால் பயந்துவிட்டார்கள் போல.

இருவரும் தயாரானார்கள். தேவா மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டியதைச் சொன்னான். குமாருக்கு அவசரம் தாங்கவில்லை. கையில் புதிய சாமி கயிறும் கழுத்தில் பளபளக்கும் முருகன் டாலரும் இருந்தன. கையில் சாய டின்னை எடுத்துக் கொண்டு பேய் வீட்டிற்கு நுழைந்தான். 

உள்ளே சென்றவன் நேரமாகியும் வரவில்லை. தேவாவிற்கு பயம் வரத் தொடங்கியது. கூப்பிட்டுப் பார்த்தான் கத்திப் பார்த்தான் கல்லெடுத்து அடித்துப் பார்த்தான் எந்த பதிலுமே இல்லை.

அப்போது ஏதோ ஒன்று மரத்தின் பின்னால் இருந்து தேவாவை பார்க்கிறது. மெல்ல அவன் பின்னால் அது வந்த வண்ணம் இருக்கிறது. 

எதையோ உணர்ந்த தேவா திரும்பவும் அவன் முன்னே அந்த உருவம் நிற்கவும் சரியாக இருந்தது. தேவாவிற்கு உயிர் போய் வந்தது. இதுவெல்லாம் ஒரு விளையாட்டா என்று குமார் மீது கோவித்துக் கொண்டான்.

இத்தனை பயம் உள்ளவன் என்னிடம் மட்டும் எதற்கு இப்படி ஒரு சவாலை விடவேண்டும் என கேட்டு சிரிக்கலானான். அப்போது குமாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

"குமாரு எங்க இருக்க.. எவ்வளவு நேரம் கூப்டறது.. லைன் கிடைக்கவேயில்லை... தேவா அடிபட்டுட்டாண்டா.. பொழைக்க மாட்டான்னு சொல்லிட்டாங்க.. நாங்கலாம் ஆஸ்பிட்டல்லதான் இருக்கோம்.. நீயும் வந்துடுடா.........."

குமாரால் மேற்கொண்டு கேட்க முடியவில்லை. அவன் முன்னே நின்றுக்கொண்டிருந்த தேவா, உடல் முழுக்க சிவப்பு சாயத்தால் நனைந்திருந்தான்....


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்