பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 15, 2020

'அஸ்வமேதா’ எனும் அதிஸ்டம்…

       பெரியம்மா பார்ப்பதற்கு நல்ல லட்சணமாக இருந்தார். சிலரிடம் பல ஆண்டுகள் பழகினாலும் இல்லாத ஓர் ஒட்டுதல் சிலரிடம் பழகிய சில நாட்களில் ஏற்பட்டுவிடும். ஒருவரை நம்மை என்னவாக பார்க்கிறார் என்பதனை கண்டறிவது இப்பொழுதெல்லாம் எனக்கு சுலபமாகிவிட்டது. வாங்கிக்கட்டிக் கொண்ட அனுபவங்கள் அப்படி. 

      வார்த்தைகள். ஆம் வார்த்தைகள். ஒருவர் நம்முடன் உரையாட பயன்படுத்தும் வார்த்தைகளில் நாம் அவருக்கு என்னவாக இருக்கிறோம் என்பதை நாம் தெரிந்துக் கொள்ளலாம். நீங்களும் இதனை முயன்று பாருங்கள் தெரியும்.

      பெரியம்மா எனக்கு தூரத்து சொந்தம். இப்போதுதான் பழக்கம். ஆனாலும்  அத்தனை நெருக்கம். பேசினால் பேசிக்கொண்டே இருப்பார். நாம் பேசுவதைக் கேட்டால் கேட்டுக்கொண்டே இருப்பார். குறிப்பிட்ட வயதை கடந்தவர்களிடம் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் நாம் பேசலாம். நம் அறிவாளித்தனத்தை காட்டாமல், அவர்களின் அனுபவத்தையொட்டிய தலைப்பாக இருக்கும் பொழுது, சுவாரஷ்யமான பலவற்றை நாம் அறிந்துக் கொள்ளலாம். அப்படித்தான் அவரும் நானும் பலவற்றை பேசிக்கொண்டிருப்பேம். ஒரு சமயம், அவரின் இளமைகால நினைவுகளைப் பேசலானார். சிறுவயதில் பின்னல் வேலைப்பாடுகளுக்காக அவர் முதல் பரிசு வாங்கியதைப் பகிர்ந்துக்கொண்டார். 

      அப்போது அவருக்கு வயது பதினைந்து இருக்கலாம் என்றார். இப்போது எல்லாவற்றையும் புகைப்படமாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துக் கொண்டு நமது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை நாம் சேமிக்கின்றோம். அப்போதுள்ளவர்களுக்கு எல்லாமே நினைவுகள்தானே.  இன்று கூட என்னால் என் பிறந்த மணிநேர கணக்கையும் கிழமையையும் சரியாக நினைவுப்படுத்த முடியவதில்லை. ஆனால் என் அம்மாவிடம் கேட்டால் சில நொடிகளில் கூடுதல் தகவல்களோடு விபரங்கள் கிடைத்துவிடும். 

         பெரியம்மா தான் பொற்ற வெற்றியை மிகவும் மகிழ்ந்த கண்களின் வழி பகிர்ந்தார். இன்றுதான் அப்பரிசு கிடைத்தது போல பூரிப்புடன் பேசலானார்.

       அப்போது எதார்த்தமாக கைவினைப்பொருட்கள் குறித்து பேச்சு வந்தது. துணி தைப்பது, கோலம் போடுவது, பின்னல் பின்னுவது என கைவசம் பல கைவினை திறமையை வைத்திருக்கிறார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சுவரில் இருந்த ஒரு குதிரை பின்னல் ஓவியத்தைக் காட்டினார்.

        அதனை தனது இளைய மகள் பின்னினார் என்றார். பார்க்க அழகாக இருந்தது. புகைப்படங்களில் பார்த்து பழகிவிட்ட குதிரையை பின்னல் ஓவியமாகப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அதனிடம் ஏதோ இருப்பதாகவே மனதில் தோன்றியது. 

      பெரியம்மா முதன் முதலாக பின்னிய பின்னல் இன்று அவரிடம் இல்லாமல் போன கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

       ‘அஸ்வமேதா.. அஸ்வமேதா….’ என மெல்லிய குரலில் எதையோ ஏங்கிக் கூப்பிட்டார். இந்த பெயரை சிறிய வயதில் ஏதோ புராணத்தில் படித்ததாய் நினைவு என கூறினேன். வெண்குதிரையைத் தான் அப்படி அழைப்பார்கள் என்றார். 

       திருமணம்  ஆகியிருந்த சமயம். கற்றுக்கொண்ட கலைகள் ஒவ்வொன்றாக ஒரு வடிவம் எடுத்து வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்த சமயம். இடுப்பு உயர ப்ரேமில் வெண்ணிற குதிரை ஒன்றை அவர் பின்னியிருக்கிறார். பார்ப்பதற்கே அத்தனை அழகாய் அது வந்திருந்ததை அவர் சொல்லும் போது அவரின் குண்டு குண்டு கண்களும் சொல்லி பிரகாசித்தன. முதல் பின்னல் ஓவியமே இப்படி அற்புதமாக வந்துவிட்டதை அனைவரும் பாராட்டியதாகவும் சொன்னார். வீட்டில் அதனை மாட்டுவதற்கான சரியான இடத்தை தேர்ந்தெடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அந்நேரம் வீட்டிற்கு விருந்தினராக நண்பரை அழைத்து வைத்திருக்கிறார் கணவர். 

         வந்திருந்த நண்பருக்கு அந்த பின்னல் ஓவியத்தின் மீது கண் விழுந்திருக்கிறது. எங்கே வாங்கினார்கள் என்ற விபரங்களை விசாரிக்க, வாங்கவில்லை வீட்டிலேயே மனைவி செய்திருக்கிறார் என கணவரும் தன் காலர் இல்லாத சட்டையை தூக்கிக் காட்டியிருக்கிறார். அதனை தன்னிடம் விற்கும்படி நண்பர் கேட்ட, பெரியம்மா அதை விற்க விரும்பவில்லை. திருமண ஜோடிகள், தங்கள் வீட்டை அழகுபடுத்த எத்தனை சிரத்தை எடுப்பார்கள். அதிலும் கைவினை பொருட்கள் செய்யத் தெரிந்தவர்கள் ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து தானே செய்வார்கள். அப்படி பெரியம்மா மனைவியாக வந்து முதன் முதலா செய்த வெண்குதிரை பின்னல் ஓவியம் அது. அதற்கு கீழ் அவரையே அறிந்திடாமல்தான் ஏதோ நினைவில் அஸ்வமேதா என்று பெயரையும் பின்னியிருக்கிறார்.

        விழுந்தது ஆசையில் மண். விருந்தாளிக்கு தேநீர் ஏற்பாடு செய்யச் சொல்லி பெரியம்மாவை சமையலறைக்குச் செல்ல சொல்லிவிட்டார். அவர் உள்ளேச் சென்ற சமயத்தில் கர்ணனாகத் தன்னை காட்டிக்கொள்ள நினைத்திருக்கிறார்  கணவர்.  இடுப்பு உயர அஸ்வமேதா பின்னல் ஓவிய ப்ரேமை தூக்கிக் கொடுத்துவிட்டார். வாங்கிக்கொண்ட நண்பர் பின்னல் ஓவியம் இருந்த இடத்தில் நூற்று ஐம்பது வெள்ளியை வைத்து போனவர் போனவர்தான்.

       இது வரை பேசிய பெரியம்மா, கண்கள் கலங்க மௌனமானார். ஆசையாசையாகப் பின்னிய ஓவியம் அது. அவ்வளவு அழகா இருந்தது. எப்படித்தான் தோன்றியதோ அதற்கு சரியான பெயரையே வைத்துவிட்டேன் என்றார். அந்த மௌனத்தை தொடர எனக்கு விருப்பம் இல்லை.

    எடுத்துச்சென்றவர் திரும்ப வந்தாரா என கேட்டேன்.

       “எப்படி வருவார்?” என என்னையே பெரியம்மா திரும்பக் கேட்டார். புரியவில்லை. 

        அஸ்வமேதாவை எடுத்துச்சென்ற தினத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் அவருக்கு நம்பர் அடித்துக்கொண்டு இருந்ததாச் சொன்னார். அத்தனை ராசியான ஓவியம் அது என்றார். அதுமட்டுமல்ல, பல அதிஸ்ட குழுக்களில் அவருக்கு பலவித பொருட்களும் பணமும் கிடைத்ததாக கூறினார். அதன் பின் அவரால் இன்னொரு குதிரை ஓவியத்தை பின்ன முடியாமல் போனதை சொல்லி வருந்தினார். அவரை சமாதானம் செய்ய நினைத்தேன்.

      கையில் கைபேசியை தடவ ஆரம்பித்தோம். கைவினை பொருளட்ளின் பாதியை மறந்தே போனோம். கைவினையா? அப்படியென்றால் என்னவென்று கேட்கும் காலத்தில் நிற்கின்றோம் இல்லை பயணிக்கின்றோம். ‘செய்வினை’  தெரிந்த அளவிற்கு ‘கைவினை’ பற்றி தெரியாமல் போனோம்.  ஆனாலும் கூட கைகளில் உள்ள ரேகையின் தத்தம் எதிர்காலத்தை தேடிக் கொண்டிருக்கறோம். 

       பெரும்பாலான கடைகளில் கழுதையின் புகைப்படம் வைத்திருப்பதை கவனித்திருப்போம். அழகான கழுதை தன் முதுகில் பொதியைச் சுமந்துக் கொண்டு நிற்கும் அந்த படத்திற்குக் கீழ் ‘என்னைப் பார் யோகம் வரும்’ என எழுதியிருக்கும். இதற்கும் யோகத்திற்கும் என்ன சம்பந்தம். தினமும் காலையும் மாலையும் அந்த கழுதையைப் பார்த்துவிட்டு அமர்ந்துக் கொண்டால் யோகம் வந்துவிடுமா என்ன?. 

       ஆனால் அதனை வைத்திருக்கும் பலர் வியாபாரத்தில் பண்மடங்கு லாபம் சம்பாதிதிருக்கிறார்கள்தான். நாமும்தான் தினமும் கழுதையை பார்க்கின்றோம் (இதில் குறிப்பிடும் கழுதை உண்மையில் கழுதைதான் என உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.) என்னத்தை பெரிதாக சாதித்துவிட்டோம்.

   கழுதையின் படத்தை பார்ப்பது அதிஷ்டம்தான். எப்படி? தொழிலில் கழுதை போல உழைக்கத்தொடங்கினால் அது சாத்தியம்.  அந்த ‘என்னைப் பார் யோகம் வரும்’ கழுதை சொல்லும் சங்கதி அதுதான். அதன்  உழைப்பைத்தான் நாம் பார்க்கவேண்டுமே தவிர அதன் புகைப்படத்தை அல்ல. புத்தன் காட்டிய கையை வணங்கியவர்கள் அங்கேயே நின்று விட்டார்கள். கைகாட்டிய இடத்திற்கு பயணித்தவர்கள் புத்தனை அடைந்தார்கள். நாம் கைகாட்டிய இடத்தை நின்று வணங்குகின்றோமா இல்லை, கைகாட்டிய இடத்தை நோக்கி பயணிக்கின்றோமா என்பதில் இருக்கிறது மீதி வாழ்க்கையின் சுவாரஷ்யம்.

        பேசி முடித்ததும் பெரியம்மா முகத்தில் கொஞ்சம் திருப்தி இருந்தது. ஏதோ எப்படியோ அந்த நண்பருக்கு அதிஷ்டம் அதன் இஷ்டப்படி வந்துவிட்டது என புரிந்துக் கொண்டார்.

      புறப்படும் சமயத்தில் மூளைக்குள் ஒரு மின்சாரம். இப்போது பெரியம்மாவின் மகள் பின்னி  வைத்திருக்கும் குதிரை பின்னல் ஓவியத்தை உற்றுப்பார்க்கலானேன். 

        “பெரியம்மா, பெரியப்பாவின் கூட்டாளி நூற்று ஐம்பது வெள்ளிதானே கொடுத்து அந்த குதிரையை எடுத்துட்டு போனாரு..?” என கேட்டுக்கொண்டே என் பணப்பையை எடுத்தேன்.

     “ஆமாம்” என்றார். 

      நல்லவேளையாக அவ்வளவுதான் என்னிடமும் இப்போது இருந்தது. அதனை எடுத்து முன் பாக்கேட்டில் வைத்துவிட்டு பின்னல் ஓவியத்திடம் கைகளைக் கொண்டுச்சென்றேன். 

       ஏதோ நினைவுக்கு வந்தவராய் பெரியம்மா, “அப்பறம் சொல்ல மறந்துட்டேன். அஸ்வமேதாவை எடுத்துட்டுப்போனவர் ரெண்டு மாசத்துல அடிபட்டு இறந்துட்டாரு…. என்ன நேரமோ தெரியல…” என்றார்.
“அங்க என்ன தயா செய்ற..?”

     “ஒன்னுமில்ல பெரியம்மா, இந்த அஸ்வமேதாவுல தூசு அதான் துடைச்சிவிடறேன்”. எனறேன். இருவரும் சிரித்தோம். 

    பெரும்பாலும்  தனியாய் இருக்கும் பொரியம்மாவுக்கு வீட்டில் இருக்கும் அவரே செய்த கைவினை பொருட்கள்தான் பல சமயங்களில் பேச்சுத்துணையாக இருப்பதை அறிவேன். யோசித்துப் பார்க்கையில் அந்த அஸ்வமேதாவை விட இப்படி ஒரு பெரியம்மா கிடைத்த நான் தான் உண்மையில் அதிஷ்டசாலி என நினைத்து அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டேன். 

   புரிந்துக் கொண்டால் இங்கு எல்லாருமே அஸ்வமேதாக்கள்தான்.

-தயாஜி



Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்