பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 13, 2023

குறுங்கதை எழுதும் வகுப்பு (வகுப்பு 4)

 

வசுமதியின் சிறகுகள் - 1


 செப்டம்பரில் குறுங்கதை எழுதும் வகுப்பைத் தொடங்கினோம். இரு மாத வகுப்பாக அதனை கட்டமைத்தோம். இம்மாத இறுதியில் அவ்வகுப்பு நிறைவடைகிறது.

முதல் மாத வகுப்புகளில் குறுங்கதைகள் குறித்து விரிவாகவே பேசினேன். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வகுப்பில் நடந்தவற்றைக் குறித்து என் வலைப்பூவிலும் முகநூலிலும் பகிரவும் செய்தேன். வகுப்பு முடிந்த பின்னரும் கூட பங்கேற்பாளர்களுக்கு மீள்பார்வை செய்ய உதவும் வகையிலேயே அவற்றை எழுதியிருந்தேன். செப்டம்பர் மாத கடைசி குறுங்கதை வகுப்பை கேள்வி பதில்களாக அமைத்தோம். பலவிதமான கேள்விகள் வந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் பதில்களை சற்று விரிவாகவே அலசினோம்.

இவ்வகுப்பின் அடிப்படை நோக்கம் ‘வாசிக்கவும் எழுதவும் வைப்பது’ என்பதால் வாசிக்க வேண்டிய கதைகளைப் பகிரும் அதே சமயம்; முக்கியமான எழுத்தாளர்களின் குறுங்கதைகளை வாசித்து அதுபற்றிய பார்வையை ஒவ்வொருவரும் பகிர்ந்தார்கள். குறுங்கதைகளைப் பொறுத்தவரை எழுதுகின்றவர்களுக்கு இணையாகவே வாசிப்பவர்களும் கதைக்குள் நுழைய வேண்டியுள்ளது. எழுத்தாளர் சொன்ன இடத்திலிருந்து அவர் சொல்லாத இடத்தை வாசகன் தானே பயணித்து கண்டறிவது அவ்வளவு எளிதல்லவே.

முதல் மாத வகுப்பிலிருந்து இரண்டாம் மாத வகுப்பிற்கு அக்டோபரில் நுழைந்தோம். இம்மாதம் பங்கேற்பாளர்களை எழுத வைக்க வேண்டும். ஒரு குறிப்புச்சொல்லைக் கொடுத்து எழுதச் சொன்னோம்.

‘நான் கண்ட கனவு’ என்கிற குறிப்புச்சொல்தான் அது. ரொம்ப சாதாரணமாகத்தானே தெரிகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளைக் கொடுத்தோம். இச்சொல்லை தலைப்பிலோ , கதையின் நடுவிலோ அல்லது கதையின் முடிவிலோ ஏதாவது ஓரிடத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் தலைப்பில் பயன்படுத்தினால் ஐந்து புள்ளிகள் கூடுதலாகவும் , கதை நடுவில் பயன்படுத்தினால் பத்து புள்ளிகளும் கதை முடிவில் பயன்படுத்தினால் ஒரே ஒரு புள்ளிதான் கூடுதலாகக் கிடைக்கும் படி செய்திருந்தோம்.

மொத்தம் பதினொரு எழுத்தாளர்கள் குறுங்கதைகளை எழுதி அனுப்பியிருந்தார்கள். ஒவ்வொரு கதையும் வித்தியாசமாக அமைந்திருந்தது. ஒரு மாத கால வகுப்பு பயனாக அமைந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.

வழக்கமான கூகுள் வகுப்பில் கதைகளை எழுதிய எழுத்தாளர்களோடு கதைகளைக் குறித்து பேசினேன். அதிலிருந்து சில கதைகளைச் சொல்ல வேண்டும்.

ராஜலெட்சுமி; துணை என்கிற தலைப்பில் குறுங்கதை எழுதியிருந்தார். தான் கண்ட கனவு பலித்தே விடுகிறது என்பதுதான் இக்கதையின் ஆதாரம். அதனை திறன்பட சொல்லியிருந்தார். அதே போல தனக்கொரு சம்பவம் நடந்ததையும் பகிர்ந்து கொண்டார்.

மோஹனா; மயக்கம் என்னும் குறுங்கதையை எழுதியிருந்தார். உறவினர் ஒருவர் பொதுவில் மயங்கி விழுந்ததைப் பார்த்த நாயகி தன் வாழ்நாளில் இப்படி மயங்கி யார் முன்னும் விழக்கூடாது என்று முடிவெடுக்கின்றார். ஆனால் அது அவருக்கு சாத்தியமில்லாமல் போகிறது. எதிர்ப்பார்த்த கதை முடிவில் எதிர்ப்பாராத சம்பவம் ஒன்றை இணைத்திருந்தார்.

பிருத்விராஜு; ‘பிரபஞ்ச நாயகன்’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். நடிகனின்  மகன் இன்னொரு நடிகனுக்கு பரம விசிரியாக இருப்பதால் ஏற்படும் சிக்கலைச் சொல்லும் கதை. இதனை சிறுகதையாக கூட விரிவாக்கன் செய்து எழுதலாம்.

தேவி; ‘நான் கண்ட கனவு’ என்ற தலைப்பிலேயே குறுங்கதையை எழுதியிருந்தார். லாவகமாக  கதையின் நடுவில் குறிப்புச்சொல் சினிமா பாடலில் வருவதாக எழுதியிருந்தார். கணவன் தான் இல்லாத சூழலில் மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்கு வழியமைக்கிறார். அவர் நினைத்தபடியே அவர் இல்லாமலாகிறார். ஆனால் அவரின் எண்ணம் மனைவியை தனித்து வாழ பழக்கிவிட்டது என்ற கருவில் எழுதியிருந்தார்.

கிரேஸ்; ‘மனிதருக்கு புரியுமா’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். பூமி மாசு படுகிறது என கவலைப்படும் யாரும் விண்வெளி எப்படியெல்லாம் மாசு பட்டுக்கொண்டிருக்கிறது என யோசிப்பதில்லை என்ற அடிப்படையில் ராக்கெட்டை வைத்து அதுவே தன்னைக் குறித்து சொல்வதாக எழுதியிருந்தார்.

மு.பா.செல்வா; மனிதாபிமானம் என்ற தலைப்பில் எழுதியிருந்தார். பள்ளி மாணவனின் காதல் கதையாக தொடங்கி நகைச்சுவை கதையாக மாறி நம்மை சிந்திக்க வைக்கும் கதையாக அமைந்தது. அது நடந்த சம்பவம் எனவும் தெரியப்படுத்தினார்.

கிடைத்த கதைகளில் சிலவற்றை குறித்து எழுதியுள்ளேன். இதில் ஒருவரான வசுமதி எழுதிய கதை எனக்கு ரொம்பவும் பிடித்த கதையாக அமைந்தது. சிறகுகள் என்ற தலைப்பில் இல்லத்தரசிகள் எதிர்நோக்கும் மனச்சிக்களையும் மன அழுத்தத்தையும் எழுதியிருந்தார். குடும்பச் சூழலில் ஒரு பெண் ஏன் கனவு காண்கிறாள் எது அவளுக்கு கனவாக வருகிறது என்பதுதான் ஆதார கேள்விகள். இக்கேள்விகளுக்கு பதில் தேட முயன்றாலே நமக்கு பல கதைகள் கிடைத்துவிடும். ஒரு கனவில் விட்டதை மறுகனவில் பிடிப்பேன் என கதாநாயகி நினைக்கிறார். அந்த நினைப்பே இக்குறுங்கதையை அடுத்த நகர்வுக்கு கொண்டு செல்கிறது. அவள் சுதந்திரமாக அவள் விரும்பியதை செய்வது அவளுக்கு வாய்த்த கனவில்தான் என்று கதையை நாம் புரிந்து கொண்ட அடுத்த நொடி; தூக்கம்தான் இவளுக்கு நிம்மதியென்றால் அந்தத் தூக்கமே கிடைக்காத எத்தனையோ பெண்கள் இருக்கிறார்களே என்று யோசிக்க வைக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டுமெனின் கதையின் தலைப்பிற்கும் கதையின் நாயகி காணும் கனவிற்கும் கதையின் முடிவிற்கும் ஓர் ஒற்றுமை இருக்கவே செய்கிறது. சிறகுகள், ஆகாயத்தில் இருந்து குதித்து பறத்தல், உறக்கமே சுதந்திரமாக கனவு காண வழியமைக்கிறது, என்கிற மூன்றும் இக்குறுங்கதையின் ஒரு வரிசையில் வந்தமைகிறது.

 விரைவில் எங்கள் வெள்ளைரோஜா பதிப்பகம் வெளியிடவிருக்கும் குறுங்கதைத் தொகுப்பு நூலில் வசுமதியின் ‘சிறகுகள்’ குறுங்கதையும் இடம்பெறும் என்பது எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.

சிறகுகள் குறுங்கதையை அடுத்த பதிவில் பகிர்கிறேன். நீங்களும் வாசித்துப்பாருங்கள். நான் சொன்னதைவிடவும் அதிகம் பேசுவதற்கு ஏற்ற கதைதான் இக்குறுங்தை.

நிறைவாக; மீண்டும் அடுத்த மாதம் அடுத்த குறுங்கதை எழுதும் வகுப்பை தொடங்குகின்றோம். ஆர்வம் உள்ளவர்கள் எங்களை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.


செப்டம்பர் 28, 2023

குறுங்கதை எழுதும் வகுப்பு (வகுப்பு 3) பகுதி 2

 பகுதி 2 – தொடங்குகிறது

 

                               - சொல்லிச்சொல்லி எழுதச் சொல்லுவோம் 2 –

 

மூன்றாம் வகுப்பையொட்டிய பதிவின் இரண்டாம் பகுதியில் சந்திக்கின்றோம். கதைகளை வாய்விட்டு வாசிக்கும் போது அக்கதை நமக்கு கூடுதல் புரிதலைக் கொடுப்பதாகச் சொன்னேன். அதேபோல புதிய எழுத்தாளர்களும் கதைகளை எழுதும் போது வாய்விட்டு சொல்லிச்சொல்லி எழுதுவது அவர்களுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும் எனவும் பார்த்தோம்.

எங்களின் குறுங்கதை எழுதும் வகுப்பில் பலரும் அவர்களில் கருத்துகளை அதைனையொட்டி பகிர்ந்து கொண்டார்கள்.

இன்றைய வகுப்பில் பயன்படுத்திய இரண்டாவது குறுங்கதையைப் பார்ப்போம். இது ஜென் கதை. சிறுவயதில் இருந்து ஜென் கதைகள் மீதும் குறிப்பிட்ட வயது வந்ததும் ஜென் கவிதைகள் மீதும் எனக்கு ஆர்வம் எழுந்தது. இந்தக் குறுங்கதை வகுப்பிற்காக இரு துறவிகள் பேசிக்கொள்ளும் கதையை தேர்வு செய்தேன். இது குறுங்கதையா? ஜென் துறவிகள் குறுங்கதைகள் எழுதியிருக்கிறார்களா? என்ற கேள்விகள் எழுந்தன. 

இதற்கு முன்னமே கூட நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அப்படியான கேள்விகள் எழுந்தன. ஜென் கதைகளை நம்மால் சுலபமாக குறுங்கதை வடிவத்தில் கொண்டுவர முடியும். அதோடு; அங்கிருந்து ஓர் உரையாடலையும் நம்மால் தொடங்க முடியும். எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பில் இவற்றை குறித்து மேலும் விரிவேக பேசுவேன்.

இன்று நான் பகிர்ந்த ஜென் கதையில் ; மரணத்தருவாயில் இருக்கும் ஒரு துறவியிடம் இன்னொரு துறவி ஏதும் உதவி வேண்டுமா என கேட்கிறார். அதற்கு அவர்; நான் தனியாகத்தாமே வந்தேன் தனியாகத்தானே போகவேண்டும் என்கிறார். அதுவரை அது வழக்கமான ஒரு கதையாக இருக்கிறது. உண்மையில் நாமே பல முறை இப்படி பேசியிருப்போம் தானே. தனியாக வந்தோம் தனியாகத்தானே போகப்போகின்றோம் என.

அதற்கு அந்தத் துறவி கொடுக்கும் பதிலில்தான் இக்கதை குறுங்கதை வடிவத்திற்குள் வந்துவிடுவதாக உணர்கின்றேன். இவர் என்ன சொல்கிறார் என்றால் இங்கு யாரும் வரவும் இல்லை யாரும் போகவுமில்லை. அப்படி நினைப்பது பிரமை. வருவதும் போவதும் இல்லாத பாதை ஒன்று இருக்கிறது என்கிறார். இதை வாசித்ததும் நமக்கும் ஒரு சந்தேகம் வருகிறது. இதுவரை நாம் நம்பியிருந்த கற்பிதமான தனியாக் வந்தோம் தனியாக போவோம் என்பது தன்னை மறுத்து இன்னொரு இடத்துக்கு போகிறது; அவ்விடம் , இங்கு யாரும் வரவுமில்லை போகவுமில்லை என நம்மை சிந்திக்க வைக்கிறது.

இச்சிந்தனையை நாம் அப்படியே பல்வேறு கேள்விகளாக வார்த்து எடுக்கலாம். உடல் அழிகிறது ஆத்மா அழிவதில்லை; ஆத்மா ஓர் சுழல் வடிவில் முடிவில்லாத வட்டத்ததில் சுழல்கின்றது; மறுபிறவி என்பது என்ன; இப்படியாக பலவற்றை நம்மால் கேள்வியாக்கி அதற்கான பதிலை நோக்கி பயணிக்க இக்கதை உதவுகின்றது. அதிலும் இது குறுங்கதை வடிவத்தில் வைத்து யோசிக்கும் போது அது நமக்கு சாத்தியமாகிறது.

இக்கதையைக் குறித்து வகுப்பு பங்கேற்பாளர்களிடம் சில கேள்விகள் எழுந்தன. ஒவ்வொன்றுக்கும் வகுப்பிலேயே பதில் கொடுத்துவிட்டேன்.

மூன்றாவது குறுங்கதையாக; சந்தோஷ் நாராயணன் எழுதிய ‘பொம்மைகள்’ குறுங்கதையைக் குறித்து வகுப்பில் பேசினேன்.

நான்கு பத்திகளில் இக்கதை முடிந்துவிடுகிறது. முதல் பத்தி தன் அப்பாவின் மார்புக்கு நேராக பொம்மைத் துப்பாக்கியை காட்டி விளையாடுகிறது குழந்தை.

இரண்டாம் பத்தியில் அந்த அப்பா யார், என்ன வேலை செய்கிறார், இக்கதையில் திருப்பத்தை அமைக்கப்போகும் காரணம் என்ன என்று நமக்கு தெரிந்துவிடுகிறது. அதாவது சீனா விளையாட்டு துப்பாக்கிகள் என்கிற பெயரில் நிஜ துப்பாக்கிகளை இந்தியாவிற்குள் அனுப்பிவிட்டன. அவை இன்றோடு செயல்படப்போகின்றன என தனது இன்டெலிஜென்ஸ் துறையினர் மூலமாக அப்பா தெரிந்து கொள்கிறார்.

மூன்றாம் பத்தியில் தன் மகன் தன் மார்பு மீது குறி வைத்திருக்கும் விளையாட்டு துப்பாக்கியை அப்பா பார்க்கிறார்.

நான்காவது பத்தியில், அந்தத் துப்பாக்கியில் மேட் இன் சீனா என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

அவ்வளவுதான் குறுங்கதை முடிந்துவிட்டது. ஆனால் இக்கதையின் பின்னணியில் ஒரு துயர்மிகுந்த உண்மை ஒன்று இருக்கிறது.  

உங்களில் பலருக்கும் அது தெரிந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நாட்டில் பல குழந்தைகள் ஊனமாக இருக்கிறார்களாம். அது ஒரு சூழ்ச்சியினால் நடந்தது. மக்களில் யாரும் வருங்காலத்தில் தங்களுடன் யுத்தத்தில் ஈடுபடக்கூடாது போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அங்குள்ள சாலைகளில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை கொட்டுகிறார்கள். அதனை ஆசையாசையாய் விளையாட எடுத்து செல்கிறார்கள் சிறுவர்கள். கொஞ்ச நேரத்தில் அந்த விளையாட்டு பொருட்கள் வெடிக்கின்றன. அந்த வெடிவிபத்தால் (சூழ்ச்சியால்) பல சிறுவர்கள் கை கால்களை இழக்கின்றார்கள்.

கண்பார்வையைப் பறிகொடுக்கின்றார்கள். கேட்கும் திறனை இழக்கிறார்கள். நாம் வாழும் உலகத்தில் ஏதோ ஒரு நாட்டில் இப்படியாக ஒரு கொடுமை நடக்கிறது.

நானும் எனது குறுங்கதை புத்தகத்தில் இப்படியான போரில் பாதிப்புக்குள்ளாகும் மக்களின் குரலாகவும் போர்ச் சூழலை மையப்படுத்தியும் சில குறுங்கதைகளை எழுதினேன். அது பரவலான வாசிப்பிற்கு சென்றது. அந்த வரிசையில் ஆசிரியை உமாதேவி அவர்களும் போர்ச்சூழலை மையப்படுத்தி சில குறுங்கதைகளை எழுதியிருந்தார்.

ஒரு சம்பவத்தை குறுங்கதையாக்கி அதனை வாசிக்கையில் இவ்வுலகத்தில் அதிகார வர்க்கம் செய்யும் கொடுமைகளில் ஒன்றைக் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது பொம்மைகள் என்னும் இக்கதை.

வகுப்பில் இக்கதையைக் குறித்தும் அவ்வாறு நடந்த சில போர்க்குற்றங்களைக் குறித்தும் பேசும் போது பலர் பேச்சற்று இருந்தார்கள். ஓர் எழுத்தாளனாக நமது எழுத்து குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டிய அவசியத்தைக் குறித்து பேசினேன்.

    நான்காவது குறுங்கதையாக எனக்கு பிடித்த கவிஞர் பெருந்தேவியின் ‘பக்கத்து வீடு’ என்னும் குறுங்கதை.           

இரண்டே பத்திகளில் இக்கதையினை எழுதியிருக்கிறார். இப்படி குறிப்பிட்டுச் சொல்வதற்கு காரணம் என்னவெனில் இக்கதையை அவர் எழுதிய விதம்தான்.

    முதற்பத்தியில் வாசகர்களிடம் ஒன்றை சொல்லிக்கொண்டே தனது அடுத்த பத்தியில் அதுவல்ல என்று இறங்கி வந்து, கடைசி ஒரு வரியில்; ஒரு வரியில் என்று கூட சொல்ல வேண்டாம். ஒரு சொல்லில் முழு கதையும் இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்.

இக்கதையை மேலோட்டமாக வாசித்தால்; பக்கத்து வீடு சத்தமாக இருக்கிறது என புகார் கொடுத்தவரே தன் வீட்டை காலி செய்யும்படி ஆகிவிட்டது என இருக்கும். ஆனால் பெருந்தேவியின் கதைகள் அதன் மேல் போர்த்தியிருக்கும் எளிமையைக் கொஞ்சம் விலக்கிவிட்டு பார்த்தால் நமக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே கொடுக்கும்.

    ஒரு பேய்க்கதையின் தொடக்கமாகவே முதல் பத்தியை எழுத்தாளர் எழுதியிருக்கிறார். ஆனால் இது பேய்க்கதையா என்றால் இல்லை. ஆனால் கடைசி வரியில் ‘காவல்துறையிடம்’ என வரும் இடத்தில் ‘சாமியார்/போதகர்’ என எழுதியிருந்தால் இக்கதை அதன் சுவை குன்றாத பேய்க்கதையாக அமைந்திருக்கும்.

இப்போது இக்கதையில் இருக்கும் மூன்றாவது சாத்தியத்தைப் பார்ப்போம்; இதுவரை இன்னொரு வீடாக நம்மை வாசிக்க வைத்தவரேதான் பிரச்சனைக்கு காரணம். அவர்ன் வீட்டில்தான் அந்த சத்தகங்கள் எழுகின்றன. அவர்தான் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறார். அதனால்தான் கடைசியில் அவரே ‘நான் உடனடியாகக் காலி செய்யாவிட்டால்’ என்கிறார். 

இக்கதையில் இருக்கும் ‘நான்’ என்னும் சொல்லை கடைசியில் இல்லாமல் வேறு இடத்தில் அதாவது ‘நான் புகார் கொடுத்தேன்’ என வரும்படி எழுதியிருந்தால்; உண்மையில் இது பாதிக்கப்பட்டவரின் குரலாக மாறியிருக்கும்.

ரொம்பவும் கவனமாக இக்கதை எழுதப்பட்டிருப்பதை அதன் ஒவ்வொரு வரியிலும் நம்மால் உணர முடிகிறது. இப்படி இக்குறுங்கதையின் பல்வேறு சாத்தியப்பாடுகளை வகுப்பில் விளக்கினேன். நாம் எழுதும் கதைகளில் ஒவ்வொரு வரியும் எவ்வளவு முக்கியம் என; அதிலும் குறிப்பாக குறுங்கதைகளுக்கு ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு முக்கியம் என இக்கதையின் மூலம் வகுப்பினர்களுடன் பேசினேன்.

அதன் பின், வகுப்பில் நான் எழுதிய குறுங்கதைத் தொகுப்பு புத்தகத்திலிருந்து , ‘அங்கே ஓரிடம் வேண்டும்’ என்ற கதையையும் ‘கடவுள் VS சாத்தான்’ என்ற கதையையும் பேசும்படி கேட்டுக்கொண்டதால் பேசினேன். அதனைப்பற்றி இங்கு நான் எழுதப்போவதில்லை. எப்படி மற்ற எழுத்தாளர்களின் கதைகளைக் குறித்து நான் பேசி எழுதுகின்றேனோ, அப்படி மற்றவர்கள் யாரும் என் குறுங்கதைகளை வாசித்து பேச வேண்டும் என ஆசைப்படுகின்றேன்.      

 இதுவரையில் எங்கள் ‘குறுங்கதை எழுதும் வகுப்பின்’ மூன்றாம் வார வகுப்பில் நடந்தவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டேன். அடுத்தடுத்த வாரங்களுக்கு பின் வகுப்பின் பங்கேற்பாளர்களும் அவர்களின் கதைகளை அவர்களே எழுதுவார்கள். எழுத வேண்டும்.

 உங்கள் யாருக்கும் எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் தாராளமாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

 

நாம் சேர்ந்தே எழுதுவோம்.

எழுதுங்கள்..

அதுதான் ரகசியம்..

அதுவேதான் தியானம்…

அன்புடன் தயாஜி.

 

குறுங்கதை எழுதும் வகுப்பு (வகுப்பு 3) - 24/9/23

 

 


                                      - சொல்லிச்சொல்லி எழுதச் சொல்லுவோம் –

 

ஞாயிறு; மூன்றாம் ‘குறுங்கதை எழுதும் வகுப்பு’ சிறப்பாய் நடந்தது. வழக்கமாக சனிக்கிழமை நடைபெறும் வகுப்பு இம்முறை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

இன்றைய வகுப்பிற்கான பாடமாக வாரத்தின் தொடக்கத்திலேயே ஒரு இடுபணியைக் கொடுத்திருந்தேன். தங்களுக்கு பிடித்த திரைப்படமும் அதற்கான காரணமும் என்பதுதான் அது. இது கதை எழுதும் வகுப்புதானே? அதற்கு ஏன் பிடித்த திரைப்படங்களையும் அதற்கான காரணத்தையும் எழுத வேண்டும் என்கிற கேள்வி எழலாம்.

இன்றைய நம் வாழ்வில் குறிப்பாக தமிழர்களின் வாழ்வில் சினிமா ஒரு அங்கமாகவே ஆக்கிரமித்துவிட்டது. வாசிப்பவர்களின் நேரத்தையும் இன்னும் சொல்லப்போனால் எழுத வேண்டும் என ஆசைப்படுகின்றவர்களின் நேரத்தையும் அது தனக்காய் எடுத்துக் கொண்டது. அதிலிருந்து முழுமையாக யாரையும் விடுவிக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். ஆனாலும் அதன் மூலம் நக்கான சில நன்மைகளை நாம் செய்துக்கொள்ளலாம். அதனை நமக்காக வேலை செய்ய வைக்கலாம். நமது படைப்பாற்றலையும் கற்பனைத் திறனையும் அதன் வழியில் சென்று கூர்மைப்படுத்தலாம். கொஞ்சம் பிசகினாலும் இருக்கும் கூர்மையைக் கூட அது மொக்கையாக்கிவிடும் என்கிற எச்சரிக்கையுடன் தான் இதனை செய்கிறேன். 

ஒரு திரைப்படத்தை நாம் எப்படி அணுகுகின்றோம் என்பது ரொம்பவும் முக்கியம். அவர்கள் நமக்கு என்ன காட்டுகிறார்கள் என்பதைவிடவும் நம்மால் அதில் எதை கண்டறிய முடிகிறது என்பது அதைவிட முக்கியம்.

எங்கள் குறுங்கதை வகுப்பில் பங்கெடுத்தவர்கள் அவர்களுக்கு பிடித்த திரைப்படத்தையும் அது தங்களுக்கு பிடித்ததன் காரணம் குறித்தும் எழுதி அனுப்பியிருந்தார்கள். இன்றைய நிகழ்ச்சியில் அவற்றைப் பற்றிதான் பேச வேண்டியிருந்தது. ஆனால் பேசவில்லை. அதனை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துவிட்டோம். 

அதைவிட இப்போது அவசியமாக இருப்பது; கதைகளை வாசித்து நாம் எப்படி உள்வாங்குகின்றோம் என்பது என தோன்றியது. அதற்கு ஏற்றார்ப்போல நான்கு குறுங்கதைகளைத் தேர்வு செய்து கூகுள் வகுப்பில் பகிர்ந்தேன்.


1. ‘ஓஷோவின் குட்டிக்கதை’ தொகுப்பிலிருந்து; மாமியாரைக் கொல்ல முயன்ற குடிகார மருமகன் பற்றிய கதை.

2. ‘ஜென் கதை- உன்னையறிய உனக்கொரு திறவுகோல்லென்னும்’ புத்தகத்திலிருந்து, ‘உண்மையான பாதை’ என்னும் கதை. இக்கதை நாம் இறக்கவும் இல்லை பிறக்கவும் இல்லை என நிறுவும் இரண்டு ஜென் துறவிகள் பற்றியது.

3. கவிஞர் பெருந்தேவியின் ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தின் வாழும் பேய்’ என்னும் குறுங்கதை தொகுப்பில் இருந்து ‘பக்கத்து வீடு’ என்னும் குறுங்கதை – பக்கத்து வீட்டில் யார் யாருக்கு தொந்தரவாக இருக்கிறார் என சொல்லும் குறுங்கதை.

4. சந்தோஷ் நாராயணனின் ‘அஞ்ஞானச் சிறுகதைகள்’ தொகுப்பிலிருந்து பொம்மைகள் என்னும் குறுங்கதை.

 

நான்கு கதைகளையும் வாசிக்க அனுப்பிவிட்டு மீண்டும் ஒரு முறை நான் கதைகளை வாசித்து என்னை தயார் செய்து கொண்டேன். ஆனால் நிகழ்ச்சியின் போதே அதிஷ்டவசமாக எனது இரண்டு குறுங்கதைகளையும் நண்பரின் கேள்வியின் மூலம் இந்தப் பட்டியலில் இணைத்தேன்.

 

5. எனது ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ தொகுப்பிலிருந்து ‘அங்கே எனக்கோர் இடம் வேண்டும்’ என்னும் குறுங்கதை. இது அகத்தில் கவனம் செலுத்தாமல் புறத்தில் கவனம் வைக்கும் பக்திமான் பற்றிய கதை.

 

6. எனது ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ தொகுப்பிலிருந்து மேலும் ஒரு கதையா கடவுள் VS சாத்தான் என்னும் குறுங்கதை. இது மனிதனின் இயல்பை கிண்டல் செய்யும் கதை.

 

கதைகளை வாசித்தவர்கள் அவர்களின் பார்வையைப் பகிர்ந்துகொண்டார்கள். இப்படியாக ஓஷோவின் குட்டிக்கதையை வாசித்த நண்பர் அவரது புரிதலைச் சொன்னார். ஆனால் அவரால் அதையும் தாண்டி கதைக்குள் செல்ல முடியும் என யூகித்தேன். 

பின் நானே அக்கதையை வாசிக்கலானேன். நிறுத்தி நிதானமாக வாசித்தேன். சில இடங்களில் அழுத்தமும் சில இடங்களில் மெல்லிய தொணியிலும் கதையை வாசித்துக் காட்டினேன். இப்போது நண்பர் அக்கதையின் அடிநாதத்தைப் பிடித்துக்கொண்டார்.

    இது ஒரு சிக்காலாக இருக்கிறது. நாம் வாய் திறந்து வாசிக்காமல் மனதிலேயே வாசித்துக் கொள்கிறோம். வாய்த்திறந்து வாசிக்கும் போது கதை நமக்கு இன்னும் கூடுதலாப் புரிதலைக் கொடுக்கின்றது. அதே சமயம் நாம் எழுதும் போது வாய்த்திறந்து சொல்லிச்சொல்லி எழுதுவதில்லை.

தேர்ந்த எழுத்தாளர்களுக்கு அது அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்க கால எழுத்தாளர்களுக்கு அது அவசியம் என பரிந்துரைத்தேன். நாம் எழுதும் கதைகளை நாமே சொல்லிச் சொல்லி எழுதும் போது உரைநடையில் சிக்கல் வராமல் அது தடுக்கின்றது. குறிப்பாக வசனங்கள் எழுதும் போது அது பெரிதும் உதவுகின்றது.

ஒருவேளை சொல்லிச்சொல்லி எழுத முடியாதவர்கள்; எழுதி முடித்த பின் ஒரு முறைக்கு இரு முறையாவது வாய்விட்டு வாசிக்க வேண்டும். ஏனெனில் நாம் எழுதியவற்றை வாசகன் எப்படி வாசிக்கிறான். எங்கே அவனது தொணி மேலும் எங்கே அவனது தொணி கீழும் போய்வருகின்றன, எங்கே அவன் நிறுத்தி நிதானிக்கப்போகின்றான் என நாம் கண்டுக்கொள்ளலாம். நாம் எழுதும் கதைகளை வாசித்து திருத்தும் சிலாகிக்கும் முதல் வாசகன் நாம் தானே.!

 

                                           பகுதி 1 - நிறைவடைகிறது

 


குறுங்கதை எழுதும் வகுப்பு 2 (16/9/23)

 


எங்களின் 'குறுங்கதை வகுப்பின்' இரண்டாம் அமர்வு சிறப்பாக அமைந்தது. இவ்வகுப்பில் சம்பவங்களில் இருந்து கதைகளையும் கதைக்கருக்களையும் கண்டறிவது குறித்துப் பேசினேன்.

கவனித்தவரையில் புதிய எழுத்தாளர்கள் பெரும்பாலும் சம்பவங்களையே எழுதி அதனை சிறுகதையென நினைத்துக் கொள்கிறார்கள். அதற்கான விமர்சனத்தையோ பார்வையையோ நாம் முன்வைக்கும் போது அவர்கள் சொல்லும் காரணம், 'இது எனக்கு நடந்தது!', 'பக்கத்து வீட்டு கதை!' ‘தெரிந்தவர் சொன்ன அனுபவம்' இப்படி அடுக்குகிறார்கள்.

அனுபவங்களையும் சம்பவங்களையும் சிறுகதைகளாக எழுதக்கூடாதா என்றால் இல்லை, தாராளமாக எழுதலாம். அப்படி எழுதி கவனம் ஈர்த்த படைப்புகள் பல உள்ளன. ஆனால் அதில் மேலோங்கியிருக்கும் உணர்வுகளின் குறைபாடுதான் புதியவர்களுக்கு பலவீனமாக இருக்கிறது.

வெறுமனே என்ன நடந்தது? எப்படி நடந்தது? என சொல்லிச்செல்வது செய்தியாகவும் தகவல்களாகவும் நின்றுவிடுகின்றன. அதிலிருந்து கதைகளை கண்டறிவதற்கான பயிற்சி அவசியம் என நினைக்கிறேன். அதிலிருந்து ஓர் உரையாடலைத் தொடங்கவேண்டும் என விரும்புகிறேன்.

சம்பவங்களின் பின்னணி என்ன ? யாரின் அனுபவம்? அந்த அனுபவத்தின் நீட்சி என்ன? என்ன பாதிப்பு? யாருக்கு பாதிப்பு? அதில் நாம் கதாப்பாத்திரமா அல்லது கதைச்சொல்லியா? என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே சம்பவத்திலிருந்து கதையைக் கண்டறிய வேண்டும்.

அதற்கு ஏற்ற வகையில் இவ்வகுப்பினை வடிவமைத்தேன். பங்கேற்பாளர்களுக்கு முன்னமே, தங்களை பாதித்த ஏதாவது ஒரு சம்பவத்தை பேசுவதற்கு தயார் செய்ய சொல்லிவிட்டேன். தொடக்கமாக எது சம்பவம் எது கதை எது கதைக்கரு எது கதாப்பாத்திரம் என ஒன்றிலிருந்து இன்னொன்றையும் அந்த இன்னொன்றிலிருந்து வேறொன்றையும் பிரித்து பேசினேன்.

எனக்கு நடந்த சம்பவத்தையும் அதனை எப்படி குறுங்கதையாக மாற்றினேன் என்பதையும் அதிலிருந்து எப்படி சிறுகதைவரைச் செல்லலாம் என்பது பற்றியும் விளக்கினேன்.

அதன்பின் அவர்களுடனான உரையாடலை ஆரம்பித்தேன்.

பின் சிலர் அவர்களை பாதித்த சம்பவங்களைப் பகிர்ந்தார்கள். இதிலிருந்து எப்படி கதையைக் கண்டறியலாம் என்றும் எது அங்கு கதைக்கருவாக மறைந்திருக்கிறது என்றும் விளக்கினேன். அவர்களின் உரையாடலை மெல்ல மெல்ல அதற்கு ஏற்ற இடத்திற்கு இழுத்தேன்.

நடந்த சம்பவத்திலிருந்தும் அவ்வனுபவத்தில் இருந்தும் இன்னொரு சம்பவத்திற்கான கதைக்கருவை கண்டுபிடித்தோம். பலருக்கு ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் அது கொடுத்ததை உணர்ந்தேன்.

பொதுவில் பகிர முடியாத அனுபவங்களையும் கூட சிலர் தனிப்பட்ட முறையில் என்னிடம் பகிர்ந்தார்கள். அவற்றை கதையாக்கும் விதம் குறித்து விளக்கினேன். நிச்சயம் பல மாறுபட்ட கதைகளை இவர்களிடமிருந்து நாம் எதிர்ப்பார்க்கலாம்.

இந்தக் கட்டண வகுப்பில் கலந்து கொண்ட சிலரின் கருத்துகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நீங்கள் எங்கள் குறுங்கதை வகுப்பில் கலந்து கொள்ள விரும்பினால் தாராளமாக தொடர்பு கொள்ளுங்கள். இங்கு குறுங்கதை எழுதுவது குறித்து மட்டுமல்லாது நம்முள் இருக்கும் கதைகளை எப்படி நாமே எழுதுவது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

 

எழுதுங்கள்.

அதுதான் ரகசியம்.

அதுவேதான் தியனம்.

அன்புடன்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

 

குறுங்கதை எழுதும் வகுப்பு (முதல் வகுப்பு)

 


எங்களின் 'குறுங்கதை வகுப்பு' இனிதே இன்று தொடங்கியது. இரண்டு மாத வகுப்பாக திட்டமிட்டுள்ளோம்.

வாராந்திர கூகுள் சந்திப்பும் கூகுள் வகுப்பில் பயிற்சிகளும் இடம்பெறும்.
முதல் வகுப்பு என்பதால் ஒட்டுமொத்தமாக குறுங்கதைகள் குறித்தும் எங்கிருந்தெல்லாம் அந்த வடிவத்தை கண்டறியலாம் எனவும் பேசினேன்.
குறுங்கதைக்கும் ஒருபக்க கதைக்கும் என்ன வித்தியாசம்? அதனை எப்படி புரிந்துகொள்வது?
எது குறுங்கதை? அறிவுரைகள் சொல்லலாமா? போன்ற கேள்விகளும் வந்தன.
இவ்வகுப்பில் எழுத்தாளர்களும் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்களும் பங்கெடுத்துள்ளார்கள். குறிப்பாக வெவ்வெறு பணி செய்பவர்கள் இருக்கிறார்கள்.
தத்தம் துறை சார்ந்தே அவர்கள் இனி மாறுபட்ட சிந்தனையில் படைப்புகளைக் கொடுக்கலாம். அதற்கான அடிப்படை பயிற்சிகளையும் உரையாடல்களையும் இவ்வகுப்பில் நடத்துவோம்.
வகுப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளை இதனுடன் இணைத்துள்ளேன்.
உங்களுக்கும் எழுதும் ஆர்வம் இருந்தால், குறுங்கதை எழுதும் வகுப்பில் கலந்துகொள்ள தொடர்பு கொள்ளுங்கள். இங்கிருந்தும் நீங்கள் உங்கள் எழுத்து பயணத்தை தொடரலாம்....
எழுதுவோம்...
அதுதான் ரகசியம்...
அதுவே தியானம்...
அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்




செப்டம்பர் 17, 2023

மாணவ எழுத்தாளர்கள்


கோலாலும்பூர், மெத்தடிஷ் ஆண்கள் இடைநிலைப்பள்ளியில்  அழைத்திருந்தார்கள். மாணவர்களுக்கு  சிறுகதை பட்டறையை நடத்தவேண்டும். சென்றேன். பட்டறையை வழிநடத்தினேன்.



மாணவர்களுக்கு பரிட்சையில் ஒரு தேர்வாக சிறுகதை எழுதுவதும் இருப்பது பாராட்டத்தக்கது. நான் பரிட்சை எழுதிய  காலக்கட்டத்தில் இருந்து பெரும்பாலும் சிறுகதை அல்லது கற்பனை கட்டுரையையே தேர்வு செய்து எழுதியுள்ளேன். சிலமுறை ஆசிரியரால் பாராட்டும் வாங்கியுள்ளேன். சில முறை திட்டும் வாங்கியுள்ளேன். இதில்  ருசிகரமான நிகழ்வு என்னெவெனின் அப்போது எந்தக் கதை பாராட்டு வாங்கியதோ அக்கதையின் கருவைக் கொண்டு ஒரு கதையை பின்னர் எழுதினேன். அவ்வளவாக கண்டுக்கொள்ளப்படவில்லை. ஆனால் என்னை திட்டு வாங்க வைத்த கதைக்கருவை வைத்து ஒரு கதையை எழுதினேன். அது பரவலாக வாசிக்கப்பட்டு பலரின் கவனத்திற்கு சென்றது.


மாணவர்களிடம் பேச என்னை அழைக்கும் ஒவ்வொருமுறையும் எந்த வயது மாணவர்கள் என்ன பேச வேண்டும் என முன்னமே தெளிவாகப் பேசிக்கொள்வேன். ஏனெனில் பங்குபெறும் மாணவர்களுக்கு சில பரிசுகளைக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும். சிறுகதை பட்டறை என்றாலும்; மாணவர்களின் நோக்கமும் ஆசிரியர்களின் நோக்கம் பரிட்சைக்கு எடுக்கவிருக்கும் புள்ளிகள் மீது இருக்கும். அது நியாயமும் கூட.


என்னால் ஒரு ஆசிரியர் போல முழுமையாக பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுடன் பேச முடியாது. ஏனெனில் அதற்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களைவிடவா நான் சொல்லிக்கொடுத்துவிடப்போகிறேன்.


அதேசமயம்; ஏன் எழுத வேண்டும், சிறுகதையைத் தேர்ந்தெடுத்து எழுதுவதால் என்னென்ன நன்மைகளை மாணவர்கள் அடைகிறார்கள். சிறுகதையை எழுதும் மனநிலையில்  மாணவர்கள் இதர பாடங்களில் எப்படி கவனத்தைச் செலுத்தலாம் போன்றவற்றின் மூலமாக வெளியில் இருந்து பாடத்திட்டத்திற்குள் நுழைவேன். அது மாணவர்களை கவரவும் செய்யும். சம்பத்தப்பட்ட ஆசிரியர்களிடம் முன்னமே அதைப்பற்றி சிறு உரையாடலை நடத்துவதால் அவர்களிடமிருந்தும் பல வகைகளில் ஒத்துழைப்பு கிடைக்கும்.


இம்முறை, பட்டறைக்கு வரவிருக்கும் மாணவர்களிடம் அவர்கள் விரும்பும் தலைப்பில் ஒரு கதையை எழுதி வாங்க யோசித்தேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியை சுலோச்சனா மகாலிங்கம் எனக்கு உற்சாகத்தையும் ஒத்துழைப்பையும் கொடுத்தார். சிரத்தை எடுத்து மாணவர்களை கதைகளை எழுத வைத்த,. அதனை சேமித்து. என்னிடம் சேர்த்தார். பட்டறைக்கு முன்னமே மாணவர்களின் கணிசமான கதைகள் வாசிக்க கிடைத்தன. வாசித்தேன்.


முன்னமே நாம் கேள்விப்பட்ட கதைகளை நன்னெறிக்கதைகளை நகைச்சுவைக்கதைகளை சில மாணவர்கள் திரும்ப எழுதியிருந்தார்கள். கோவிட் காலக்கட்டத்தைப் பற்றியும் கதைகள் இருந்தன.  அதில் சில மாணவர்கள், கதைகளை உள்வாங்கி அவர்களின் பாணியில் அக்கதைகளைக் கொடுத்தார்கள். சில கதைகள் ரசிக்கத்தக்கவையாக இருந்தன. அனைத்திற்கும் குறிப்புகளை எடுத்துக்கொண்டேன். நானும் மாணவர்களைச் சந்திக்க தயாரானேன்.


சிறுகதை பட்டறை ஆரம்பமானது. வழக்கம் போல முதலில் மாணவர்களின் கவனம் என் மீது திரும்புவதற்கு சிலவற்றைப் பேசினேன். அதன் மூழம் அவர்கள் நெருங்கினார்கள். இனி நாம் பேசுவதை அவர்கள் கவனிப்பார்கள் என தெரிந்த பின் சிறுகதைக்குள் சென்றேன்.



மாணவர்களின் பங்கேற்பு சிறப்பாக இருந்தது. சில மாணவர்களிடம் இயல்பாகவே எதை எழுதலாம் என்ற புரிதல் இருந்தது. உதாரணமாக ஒரு மாணவனின் கதையில் இருந்ததைப் பகிர்கிறேன்;


‘எனக்கு சின்னவனாகத்தான் இருப்பான். முப்பத்தைந்து இருந்தால் அதிகம். ஆண் பிள்ளைக்கு கொஞ்சம் குட்டை. நல்ல நிறம். தடித்த உதடுகள். கறுப்பு மீசை. மைனஸ் இரண்டு என்று சொல்லும் கண்ணாடி’


மாணவனிடம் இப்படி ஒரு பத்தியை நான் எதிர்ப்பார்க்கவில்லை. கதைச்சொல்லியின் குரலில் கதை நகர்கிறது. ஒரு மனிதனின் அழகை நேர்த்தியைச் சொல்லிச்செல்கிறார் கதைச்சொல்லி. ஆனால் அம்மனிதன் கண்ணாடி போட்டிருப்பதை இதுவரையில் இருந்த அழகிலும் நேர்த்தியிலும் இரண்டு புள்ளிகள்ௐ மைனசாகப் பார்க்கிறார் கதைச்சொல்லி. அழகானப் பார்வையாக இதனைப் பார்க்கிறேன். இதுபோன்ற மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தினான் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் நிச்சயம் உருவாவார்கள்.


ஏறக்குறைய நான்கு மணிநேரம் இப்பட்டறையை வழிநடத்தினேன். ஒவ்வொரு மாணவரிடமும் பேசினேன். சிலருக்கு கதைகள் எழுதுவதிலும் கதைகளைச் சொல்வதிலும் ஆர்வம் இருந்தது. அப்போதே அவர்களை ஆசிரியர்களுக்கு அடையாளம் காட்டிவிட்டேன்.


நிகழ்ச்சி முடியும் தறுவாயில் பள்ளிக்கூடத்தின் சார்பாம எனக்கு நினைவுப்பரிசு கொடுத்தார்கள். பள்ளிக்கூட நூல்நிலையத்திற்கு நான் எழுதிய புத்தகங்களின் சில பிரதிகளை அன்பளிப்பாகத் தந்தேன். நல்லதொரு பொழுதாகஅ அன்றைய தினம் அமைந்தது.



நிறைவாக; அவ்வாசிரியர் மீண்டும் அழைத்திருந்தார். மாணவர்கள் எனது புத்தகங்களை நூல்நிலையத்தில் இருந்து எடுத்து வாசித்து முடித்துவிட்டதாகக் கூறினார். அவர்களும் அடுத்தடுத்த சில கதைகளை எழுதியுள்ளதாகக் கூறினார். பட்டறையில் கலந்து கொண்ட இரு மாணவர்கள் போட்டிக்கு சென்றுள்ளதாகவும் கூறினார். அம்மாணவர்களுக்கு இம்முறை வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ நமக்கு எழுத்தாளர்கள் கிடைக்கப்போகிறார்கள் என்பதில் எனக்கும் ஆசிரியருக்கும் ஏன் உங்களுக்கும்தான் மகிழ்ச்சிதானே.


எழுதுவோம்..💙

அதுதான் ரகசியம்…💙

அதுவேதான் தியானம்..💙


அன்புடன் #தயாஜி 

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

ஆகஸ்ட் 16, 2023

பொம்மியின் ஆசிர்வாதம்



பொம்மியின் ஆசீர்வாதம்

பொம்மி பிறந்து முதன் முறையாக கோவிலுக்குச் சென்றோம். ஒவ்வொருமுறையும் எங்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய குடும்ப வழக்கங்களில் இதுவும் ஒன்று. எங்கள் குலம் காக்கும் தெய்வத்தின் காலடியில் குழந்தையை வைத்து அந்த மூத்த மூதாதைக்கு நன்றி செலுத்த வேண்டும். குலம் வளர கிடைத்த பொம்மிகளை குல தெய்வத்திடம் காட்டி; ஆசீர்வாதம் வாங்குவதுதான் இதில் இருக்கும் வழிபாட்டு முறை. 

எனக்கு என் சகோதரன் மீதுள்ள அன்பைவிட என் சகோதரியின் மீதுள்ள அன்பின் சதவிதம் சற்றே அதிகம். எனக்கு விபரங்கள் கொஞ்சம் தெரியத்தொடங்கிய வயதில் அம்மா மூன்றாவது கருவை  வயிற்றில் சுமக்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம் வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என அறிந்து கொள்வது அத்துணை எளிதல்ல. அரசாங்க மருத்துவமனையில் சொல்லவும் மாட்டார்கள்.

குழந்தை பிறப்பதற்கு முன்பாக எங்கள் யு.பி தோட்ட அங்காலம்மன் ஆலயத்திற்கு சென்றோம்.  அங்குதான் குழந்தைகளைக் காக்கும் குல தெய்வம் இருக்கிறது.  நூற்றாண்டு கண்ட ஆலயம் அது; இப்போது அரசியல் காரணங்களால் வேறிடத்திற்கு மாற்றிவிட்டார்கள். கட்டிடம் இடம் மாறினால் கடவுளும் அதனுடன் மாறுமா என தெரியவில்லை. 

அந்த அங்காலம்மன் ஆலயத்தில் பெண் பூசாரி இருப்பார். பாட்டி வயது. தலை முழுக்க வெள்ளை மயிர். ஓரளவு கூன் விழுந்த முதுகு. சரியாகத் தெரியாதப் பார்வை. கணீர் குரல். இதுதான் அவரின் அடையாளம். கோவிலுக்கு வருகின்றவர்களிடம் ஏதேதோ பேசுவார். வாய்க்கு வந்ததை மந்திரமாகச் சொல்லுவார். என்ன சாப்பிடுகிறார். எங்கே குளிக்கிறார். எங்கிருந்து தண்ணீர் குடிக்கிறார் என யாருக்கு தெரியவில்லை. எப்படியே இந்த கோவிலில் சம்பளம் வாங்காத பூசாரியாக மாறிவிட்டதால் கோவில் நிர்வாகம் பெரிதாக அவரைக் கண்டுகொள்ளவில்லை. ஓரளவிற்கு அவரை கவனிக்கவும் செய்தனர். அதோடு அதிகமானவர் அந்தக் கோவிலுக்கு வரவும் மாட்டார்கள். நடக்கும் தூரத்தில் தாய்க்கோவில் இருப்பதால் அங்குதான் கூட்டமும் கோஷமும் அதிகம்.

இங்கு குழந்தைகளுக்காகவும் குழந்தைகளுடனும்தான் ஒரு சிலர் அவ்வப்போது வருவார்கள் போவார்கள். நாங்கள் அங்கு நல்லபடியாக அம்மாவிற்கு பிரசவம் ஆகவேண்டும் என்ற வேண்டுதலுக்காக சென்றோம். அந்தப் பாட்டி எங்களுக்காக குலதெய்வத்திடம் வேண்டிக்கொண்டார். அவர் வேண்டிக்கொள்வது எனக்கு சிரிப்பை வரவைத்தது. சிரித்தும் விட்டேன். அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அப்பா என்னை அதட்டினார்.

பாட்டி; எங்களுக்கான வேண்டுதலை வேண்டி முடித்த பின் என்னையும் அண்ணனையும் சிலையின் முன் வந்து அமரச்சொன்னார். அப்போதுதான் எனக்கு பயமே வந்தது. சிரித்ததற்கான தண்டனையாக இருக்குமோ என பயந்துகொண்டே முழங்காலிட்டு அமர்ந்தேன். அண்ணனும் என்னுடன் முழங்காலிட்டான். நான் சிரித்ததற்கு அவனும் மாட்டிக்கொண்டான். பாவம். பரவாயில்லை மாட்டட்டும்; மாட்டட்டும் பலமுறை அவன் செய்ததற்கெல்லாம் நான் தானே அடி வாங்கினேன். இன்றொரு நாள் எனக்காக அவனும் என்னுடன் சேர்ந்து அடி வாங்கட்டும். பாட்டி எங்கள் முன் மீண்டும் சூடத்தை ஏற்றினார். எங்கள் கண்களை மூடிக்கொண்டு தம்பி பாப்பா வேண்டுமா தங்கச்சி பாப்பா வேண்டுமா என கேட்டு; தெய்வத்திடம் வேண்ட சொன்னார்.

அண்ணன் அவனுக்கு தம்பி பாப்பா வேண்டுமென்று கேட்டான். நான் ஒருவன் அவனுக்கு தம்பியாக இருந்து படும்பாடு போதாதாம்!

நான் தங்கச்சி பாப்பா வேண்டும் என்றேன். சிலையில் இருந்து ஒரு பூ விழுந்தது. அந்த பாட்டியின் அரைகுறை பார்வையில் அது தெரிந்ததா இல்லையா என எனக்கு தெரியவில்லை. பாட்டி என் தலையில் கைவைத்து; “உனக்குத்தான் உங்காத்தா செவி கொடுத்திருக்கா…. நீதான் அவ செல்ல பிள்ளையாமே…?” என்றார். அந்த வார்த்தையின் அர்த்தம் அப்போது என பிடிபடவில்லை. ஆனால் என் வாழ்நாள் முழுக்க  நான் அதனை பல இடங்களில் அனுபவித்துவருகிறேன்.

வாக்கு கிடைத்தது போலவே எங்கள் குடும்பத்தின் மூன்றாம் வாரிசாக எங்களுக்கு தங்கை பிறந்தநாள். 

சில வாரங்களுக்கு பிறகு அதே கோவிலில் குழந்தை பிறந்ததற்கான படையல் போட சென்றோம். இப்போது பாட்டிக்கு கண்பார்வை முற்றாக இருளடைந்துவிட்டது. ஆனாலும் அவரின் செயல்களில் எந்த தடுமாற்றமும் இல்லை பழைய வேகம் இல்லையென்றாலும் பழைய நிதானம் அப்படியே இருந்தது.

அந்த நிலமையிலும் அங்குள்ள சிலைக்கு தினமும் புடவையை மாற்றிக்கொண்டே இருந்தார். பேச்சுவாக்கில் யாரோ அதுபற்றி கேள்வி கேட்டார்கள். அதற்கு அந்த பாட்டி சொன்ன பதில் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

“நானா செய்யறேன். அவளுக்கு என்ன புடவை வேணுமோ அதை அவதான் எடுத்து கொடுக்கறா. அதோ அந்த அலமாரிலதான் எல்லா புடவையையும் துவைச்சி வப்பேன். தினமும் அலமாரியைத் திறக்கும் போது அதிலிருந்து ஒரு புடவை தானாவே கீழ விழும். அதை எடுத்து அவளுக்கு கட்டிவிடுவேன். என்ன… புடவை கட்டும்போது அவளுக்கும் வெட்கம் வந்துடும்.. அப்படியும் இப்படியும் நெழிவா…. அதையெல்லாம் பார்த்தா புடவை கட்டிவிட முடியுமா…?”

அதைக் கேட்டுகொண்டிருந்தவர்கள் எல்லோரும் அந்த அம்மனை ஒருசேர பார்க்க, எங்கிருந்தோ வந்த காற்று அன்று அம்மன் கட்டியிருந்த புடவையை அசைத்துச் சென்றது.

இன்னும் அன்றைய தினங்களில் நடந்தவற்றைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தக் கொவிலும் அங்கில்லை. அந்தப் பாட்டியும் இறந்துவிட்டார்.

இளமையின் நினைவுகளை நிகழ்காலத்தில் ஏதோ  ஒன்று தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது. அப்படியான தூண்டுதல்தான் இன்று இந்தக் கோவிலில் நடந்தது.

பொம்மி, இல்லாள், நான், மாமனார் என நால்வரும் கோவிலுக்கு சென்றோம். பொம்மி பிறந்த பின் முதன் முறையாக கோவிலுக்கு செல்கிறோம். அங்குள்ள எங்கள் குல தெய்வத்திற்கு நன்றி சொல்லி சீர் தட்டு கொடுத்தோம்.

பூசாரி எங்களின் பெயர் ராசி நட்ச்சத்திரங்களை கேட்டு அவருக்குள்ளாகவே மந்திரத்துடன் சேர்த்து சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார். பொம்மியை தரையில் படுக்க வைத்தோம். மற்ற குழந்தைகள் போல அவள் அழாமல் சிரிக்கலானாள். பாட்டியின் அரவணைப்பில் பேத்திகள் சிரிக்கத்தானே செய்வார்கள். பூஜை முடிந்ததும் பொம்மி கழுத்தில் மாலையை அணித்து கையில் தாமரைப்பூவை கொடுத்தார்கள்.

அங்கிருந்து நடந்து கோவிலை சுற்றலானோம். திடீரென யாரோ பின்னால் நிற்பது போல் தோன்ற நாங்களும் நின்றோம். திரும்பினோம். யாரும் இல்லை. எங்கள் முன்னே அவர் இருந்தார். மஞ்சள் புடவை, நீண்ட முடி. மூக்கின் இரு பக்கத்திலும் மூக்குத்தி. கருத்த தேகம். வாயில் சில பற்களே இருந்தன. தாங்கி தாங்கி நடந்தார். எங்கள் முன் சில அடிகளில் நடந்து வந்தவர் எங்களிடம் “குழந்தையைக் காட்டுமா கொஞ்சிக்கறேன்..” என்றார் நானும் இல்லாளும் அப்படியே நின்றுவிட்டோம். உடல் சிலிர்த்துவிட்டது. அவர் இல்லாளின் கையிலிருந்த பொம்மியின் கன்னத்தைத் தொட்டு, கொஞ்சி, தலையில் கைவைத்து ஆசீர்வதித்து என்னைய்ம் ஒரு முறை பார்த்து சிரித்துவிட்டு புறப்பட்டார். எனக்கும் என் இல்லாளுக்கும் என்ன நடந்தது என்றே முழுமையாக தெரியவில்லை. 

கோவில் தூணின் அருகில் அமர்ந்துவிட்டோம். நடந்ததைப் பற்றி மீண்டும் பேசினோம். வந்தவரின் முகம் இருவருக்குமே பழக்கம் போலவும் புதிராகவும் இருந்தது. கொஞ்சம் தெளிவான பின் கோவில் முழுக்க அவரை தெடினேன். கிடைக்கவில்லை.

யாரோ ஒருவர் சட்டென தோன்றி பொம்மியை ஆசீர்வதித்தது எங்களுக்கும் மகிழ்ச்சிதான். நம் குலம் காக்கும் தெய்வங்களுக்கு வேறென்ன வேலை இருக்கிறது.

காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போதுதான் எனக்கு மின்னல் வெட்டாய் இன்னொன்று தோன்றியது. பல ஆண்டுகளுக்கு முன்பாக எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டும் என கேட்ட கோவிலில் இருந்த அந்தப் பாட்டியின் முகமும் இன்று என் மகளான பொம்மியை ஆசீர்வத்து என்னையும் பார்த்து சிரித்த அந்த முகமும் ஒரே முகம்தான்.

அது எங்கள் குலத்தின் மூத்த மூதாதைத்தாயின் முகம். 


#தயாஜி

#பொம்மி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்