பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 02, 2023

- அவ என் ஆளு -


                    - அவ என் ஆளு - 


"நீங்களும் அம்மாவும் சம்மதிக்க மாட்டீங்கன்னு நினைச்சி பயந்துட்டேன் பா.." என்று கண்கலங்கி நின்றான் அன்பழகன்.

பெயருக்கு ஏற்றார் போலவே அழகன்தான். அதனால்தான் என்னவோ அவனை சுற்றி எப்போதும்  பல பெண்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அன்பழகனுக்கோ எந்தப் பெண்ணும் அவன் கண்களுக்கு அழகியாகத் தெரியவில்லை.

இன்னும் சொல்லப்போனால், அன்பழகனுக்கு அழகியாகத் தெரிந்த பெண்; பெண்ணே அல்ல. 

அவள் ஒரு திருநங்கை. பார்த்த மாத்திரத்தில் கொஞ்சமும் பழகிப்பார்த்ததில் நஞ்சமும் பிடித்துவிட்டது. அவள்தான் தயங்கினாள். அவள் தோழிகள், காதல் வலையில் சிக்கி ஏமாந்த கதைகள் அவள் போன்றவர்களுக்கு பாடம் அல்லவா.

எப்படியோ இருவரும் இணையராக இணைந்திட முடிவெடுத்துவிட்டனர்.  அவளுக்கு யாருமில்லை. அவள் தன்னை பெண்ணாக அடையாளம் கண்டதும் பெற்றோரும் மற்றோரும் இவளை அவமானம் என அடையாளம் கண்டு விலக்கிவிட்டார்கள்.

ஆனால் அன்பழகனுக்கு எல்லோரும் உண்டு. படித்த குடும்ப பின்னணி. பார்ப்பதற்கே கையெடுத்து கூம்பிடும் குடும்ப தோரணை. கோவிலுக்கு போனால் கூட எப்போதும் சிறப்பு தரிசனம்தான். சில சமயங்களில் இவர்கள் குடும்பம் கோவிலுக்கு வந்தால்தான் சாமிக்கே கலை கட்டும் அந்தப் பூசாரிக்கும் கல்லா கட்டும். 

தன் அப்பா இப்படி ஒரே பேச்சில் ஒப்புக்கொண்டது அன்பழகனுக்கு ஆச்சர்யம். அப்பா மட்டுமல்ல வீட்டில் அனைவருக்குமே சம்மதம்தான். "அவளும் மனுஷிதானே. அவளுக்கும் மனசு இருக்கிறதுதானே. அதுமில்லாம நாம எந்தக் காலத்துல இருக்கோம்.. இது சயிண்ஸ் யுகம்.....கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.. குழந்தைதானே பெத்துக்க முடியாது ... டெஸ்டியூப் பேபிக்கு போய்க்கலாம்....." என அன்பழகன் பேச வேண்டியதையெல்லாம் வீட்டில் பேசிவிட்டார்கள்.

அப்பாவும் சரி குடும்பத்தில் உள்ள அனைவரும் சரி. அன்பழகனிடம் கேட்ட ஒரே கேள்வி, "சரி சரி...... அந்தப் பொண்ணு என்ன ஜாதி".

அதற்கு அன்பழகன் சொன்ன பதில்தான் அல்டிமெட்;
"எல்லாம் நம்மாளுங்கதான். விசாரிச்சிட்டுதான் லவ் பண்ணவே ஆரம்பிச்சேன் பா...."


#தயாஜி

ஜூலை 01, 2023

- இரகசியம் -

                      - இரகசியம் - 

   இன்று லிங்கம் முதலாளி கடைக்கு வருவார். அவரிடம் இதனைக் கேட்டுவிட வேண்டும். பல நாட்களாக மனதில் வைத்து வைத்து, இனி முடியாது. சேகருக்கு இன்று ஒரு பதில் தெரிந்தாக வேண்டும்.

சில ஆண்டுகளாக இந்தச் சாப்பாட்டுக் கடையில் வேலை செய்கிறவர் சேகர். கடை திறப்பது முதல் கடை சாத்துவது வரை சேகர்தான். வடிவேலுக்கு 'நாய் சேகர்' என்றால் இந்தக் கடைக்கு இவர்தான் 'தாய் சேகர்'.

லிங்கம் முதலாளிக்கு சேகர் மீது அபார நம்பிக்கை. வாரம் ஒரு முறை மட்டுமே கடைக்கு வருவார். கல்லாப்பெட்டியில் அமர்வார். அந்த வார வருமானமாகச் சேகர் எவ்வளவு கொடுத்தாலும் குறை சொல்ல மாட்டார்.

இவ்வளவு நம்பிக்கை உள்ள முதலாளி, ஏன் கடையில் சிசிடிவியை வைத்திருக்கிறார் என சேகருக்கு ஒருநாள் சந்தேகம் வந்தது. அதுவும் அந்தச் சிசிடிவி பதிவைக் கடையில் எங்கும் பார்க்க முடியாது. ஒருவேளை லிங்கம் முதலாளி வீட்டிலிருந்தபடியே தன் கைப்பேசியில் பார்க்கலாம்.

லிங்கம் முதலாளி வந்தார். சேகரின் முகம் வாடியிருந்ததைக் கண்டவர், தானே அழைத்து விபரம் கேட்டார். சேகரும் மனதிலிருந்த சிசிடிவியைக் கேட்டுவிட்டார்.

முதலாளிக்குக் கோவம் வரவில்லை. மாறாகச் சிரிக்கலானார். சேகருக்கு ஏதும் புரியவில்லை.

அது சிசிடிவி அல்ல, சிசிடிவி மாதிரி என்பதை முதலாளி சொன்னார். தன் கடை பணியாளர்களின் மீது நம்பிக்கை கொண்ட முதலாளி, மற்ற வாடிக்கையாளர்களின் பார்வைக்கு இங்குச் சிசிடிவி இருப்பதாகக் காட்டினால் அவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வார்கள் என நம்பியிருந்தார். அதன்படியே இதுவரை வாடிக்கையாளர்களால் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. லிங்கம் முதலாளி சேகரின் தோளைத் தட்டி "உன்னை நம்பாமல் யாரை நம்புகிறேன்" எனச் சிரித்துவிட்டுப் புறப்பட்டார்.

சேகருக்கு மனசே சரியில்லை. இவ்வளவு நம்பிக்கை வைத்த முதலாளி மீது சந்தேகம் கொண்டோமே என மற்ற பணியாளர்களைக் கடிந்துகொண்டார்.

அன்றிரவு சேகருக்குத் தூக்கமே வரவில்லை. சிசிடிவியும் முதலாளியின் சிரிப்புமே வந்து வந்து போனது.

மறுநாள் சேகர் கடையைத் திறக்கவில்லை. வேலைக்கும் வரவில்லை. கல்லாப்பெட்டியும் சேகரும் காணாமல் போய்விட்டார்கள் எனத் தெரிந்தால் லிங்கம் முதலாளி என்ன செய்வார்.

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

ஜூன் 01, 2023

பகடை

-  பகடை -

வீட்டில் தேவை இருந்தது. அடகுக்கடைக்கு செல்ல வேண்டும். புது நகையை அடகு வைத்து அந்தப் பணத்தில்  ஏற்கனவே அடகு வைத்த நகைக்கு வட்டி கட்ட வேண்டும். மீதமுள்ள பணத்தை  வீட்டு தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.  இந்தக் கணக்கு எனக்கு பிடிபடாது. ஆகவே இல்லாள் சொல்வதை அப்படியே செய்துவிடுவேன்.

திருப்ப வேண்டிய நகைக்கான  1% வட்டி பணத்தைக் கணக்கிட்டு ஒரு துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்தார். இப்போது புதிதாக அடகு வைக்க வேண்டிய நகையையும் எவ்வளவுக்கு வேண்டுமென கூட்டிக்கழித்து எழுதியிருந்தார்.

அடகு ரசீதில் மே மாத முதல் ஞாயிறுதான் இறுதி என  தேதி குறிப்பிட்டிருந்தது. அதனை தவறவிட்டால் வட்டி 1.5% அல்லது 2% ஆக மாறிவிடும். ஆகவே சனிக்கிழமையே சென்றிட திட்டமிட்டேன். போதாக்குறைக்கு திங்கட்க்கிழமை பொதுவிடுமுறை.

காலை. அடகுக்கடையில் ஆட்கள் இல்லை. நேராக கவுண்டருக்குச் சென்று இல்லாள் கொடுத்த துண்டு காகிதத்தைக் காட்டி ஒரு நகையை வைக்கவும் இன்னொரு நகைக்கு மேலும் ஆறு மாதங்களுக்கான வட்டியைக் கட்டவும் செய்தேன்.

வேலை முடிந்து பணமும் கைக்கு வந்தது. நேராக காருக்கு வந்தேன். மனதில் ஏதோ சரியில்லாததாகத் தோன்றியது.  கைக்கு வந்த பணத்தைக் கணக்கிட்டேன். அவர்கள் கொடுத்த ரசீதையும் பார்த்தேன். கணக்கு சரியாகத்தான் இருந்தது.

இல்லாள் கொடுத்த துண்டு காகிதத்தைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்ட தொகையைவிடவும் கையில் குறைவாகவே இருந்தது.

காரில் இருந்தபடியே இல்லாளை அழைத்து பேசினேன். ரசிதுகளை புலனத்தில் அனுப்பச் சொன்னார். அனுப்பினேன். சில நிமிடங்களில் என்ன கோளாறு என கண்டுபிடித்து விட்டார்.

1% வட்டிக்கு பதிலாக 1.5% வட்டிப்பணத்தை கணக்கிட்டு வாங்கியுள்ளார்கள். இத்தனைக்கும் அவர்களின் ரசீதில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே நான் வந்திருக்கிறேன். மீண்டும் அடகுக்கடைக்கு சென்றேன்.

விபரத்தைச் சொல்லி மீண்டும் அவர்களை கணக்கிடச் சொன்னேன்.  அவர்களும் கணக்கிட்டார்கள். என் கண் முன்னமே அவர்கள் 1.5% வட்டிப்பணத்தைக் கணக்கிட்டார்கள். மீண்டும் திகதியைச் சரி பார்க்க சொன்னேன். அவர்கள் தவறாக கணக்கிடுவதாக சொன்னேன்.

இல்லை என்றார்கள். ஞாயிறு கடைக்கு விடுமுறையாம் அதனால் சனிக்கிழமையை அவர்கள் இப்படித்தான் கணக்கிடுவார்களாம். அதாவது அவர்கள்தான் ஞாயிறு திகதியை எழுதினார்கள். நான் சனிக்கிழமையே கடைக்கு சென்றாலும், ஞாயிறு கடை விடுமுறை என்பதால் நான் தாமதமாக வந்ததாக காரணம் காட்டி 1.5% வட்டிப்பணத்தை கணக்கிட்டு வாங்கியுள்ளார்கள்.

இதுநாள்வரை இப்படி எனக்கு நடந்ததில்லை. நான் சனிக்கிழமையே வந்துவிட்டதாக சொன்னேன் ஆனால் அவர்கள் கணக்குப்படி ஞாயிறு பொதுவிடுமுறை என்பதால் சனிக்கிழமை வந்தாலும் நான் தாமதமாகத்தான் வந்திருக்கிறேனாம்.

எனக்கு கோவம் வந்துவிட்டது. எத்தனைப் பேரிடம்தான் நான் ஏமாறுவது. சத்தம் போட்டதும் கடையில் வேலை செய்பவர்கள் எல்லாம் எழுந்து அருகில் வந்து நின்றுவிட்டார்கள்.

நானே நூறு கிலோ இருப்பேன். அவர்களில் ஒவ்வொருவரும் என்னைவிட இருமடங்காக இருந்தார்கள். அங்கு அதுதான் சட்டம் அதுதான் நடைமுறை, தேவையென்றால் போலீஸிடம் போ என்றார்கள்.

கோவத்தை அடக்கிக்கொண்டு காருக்கு வந்துவிட்டேன். இல்லாளிடம் புலம்பினேன். இந்த அடகுக்க்கடையில் இப்படியான ஏமாற்று வேலைகள் நடப்பதை அவரும் கேள்விபட்டதாகச் சொன்னார். அங்கு அடகு வைத்த நகைகளை எப்படியாவது சீக்கிரம் மீட்டுவிட வேண்டும் என்றார்.

இரவு, காலையில் நடந்த சம்பவம் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்தபடி இருந்தது.  இப்படி எத்தனைப்பேரை அவர்கள் இதுநாள் வரையில் ஏமாற்றியிருப்பார்கள். நான் ஏமாந்தும் என்னால் அவர்களுக்கு எதிராக ஒன்றுமே செய்ய முடியவில்லை.

வீட்டில் சமைக்க முடியவில்லை, இல்லாள் சாப்பாடு ஆடர் செய்திருந்தார். வரும் நேரம். வழக்கமாக இரண்டு மாடிகள் ஏறி வந்துதான் சாப்பாட்டைக் கொடுப்பார்கள். நாங்களும் கூடுதல் பணமோ அல்லது அவர்களுக்கு குளிர்பானமோ கொடுத்தனுப்புவோம். இம்முறை வந்தவர் படி ஏற முடியாது. எங்களை கீழே வந்து வாங்கிக்கொள்ள சொன்னார்.

காலையில் இருந்த கோவம். இப்போது இது. மேலும் என்னை கடுப்பாக்கியது. இன்னிக்கு ஒரு வழி செய்யலாம் என கீழே இறங்கினேன். அந்நபர் தாமதமாக வந்தார்.

வந்தவர், மோட்டரை நிறுத்திவிட்டு. சின்ன தடுமாற்றத்துடன் என்னருகில் வந்தார். அவருக்கு ஒரு கண் இல்லை. ஒரு கண்ணை வைத்துதான் மோட்டார் ஓட்டி சாப்பாடு டெலிவரி செய்கிறார். அவரைப்பார்த்ததும் மனம் கோவத்தில் இருந்து மாறியது.

வந்தவர் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டார். அதோடு பெரிய சைஸ் கொக்கோ கோலா பாட்டிலைக் கொடுத்தார். நாங்கள் அதனை ஆடர் செய்யவேயில்லை. நான் அதை சொன்னேன்.

எங்கள் ஆடரில் இருந்த ஒரு குவளை கொக்கோ கோலா வரும்போது தடுமாற்றத்தில் கவிழ்ந்துவிட்டதாம். அதற்கு பதிலாக பெரிய பாட்டிலை வாங்கிவருவதற்குதான் கொஞ்சம் தாமதமானதாக சொன்னார்.

நான் பரவாயில்லை என்று சொல்லி கொக்கோ கோலாவிற்கான் பணத்தைக் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்தார். ஏதேதோ பேசி, அவர் சட்டை பாக்கெட்டில் கூடுதல் பணம் வைத்துவிட்டு அவரை வழியனுப்பினேன்.

ஒரே நாளில் இரு வகை மனிதர்களைச் சந்தித்துள்ளேன். ஒருவர் நிறுவனத்தில் சட்டதிட்டங்களைப் பயன்படுத்தி தன்னிடம் வருபவர்களிடம் கொள்ளையடிக்கிறார். இன்னொருவர் உழைப்பை நம்புகிறார். தன்னால் இன்னொருவருக்கு இழப்பு இருக்கக்கூடாது என தன்னளவில் முயல்கிறார். இரண்டிலும் பணமே பகடைக்காயை உருட்டுகிறது.

நல்லதோ கெட்டதோ, அதற்கு இணையாக இன்னொன்று இருக்கவே செய்கிறதுதான் போல...

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்


ஏப்ரல் 23, 2023

உரையாடுவோம்


நண்பர்களும் தம்பிகளுமான ஆதித்தன் மகாமுனி, இளமாறன் ஆகிய இரண்டு இளம் படைப்பாளிகளுடன் நேற்றிரவு ஒரு அசத்தலான சந்திப்பு நடந்தது.

கவிதைகள் கதைகள் எழுத்தாளர்கள் என பலவற்றைப் பேசிப்பேசி நேரம் போனதே தெரியவில்லை.

இளம் கவிஞர் இளமாறன், அவர் எழுதிய கவிதைகளில் சிலவற்றை கொண்டு வந்திருந்தார். கவிதை வாசிப்பு கவிதையுள் வாசிப்பு என கிடைத்த நேரத்தைச் சரியாக பயன்படுத்திக் கொண்டோம். இளம் படைப்பாளியாக அவர்களிடமிருந்து வந்த கேள்விகள் முக்கியமானவை. என் பார்வையில் இருந்து சிலவற்றை பேசினேன். உண்மையில் பேசினோம். பயனாக இருக்கும் என நம்புகிறேன்.

மீண்டும் பேசுவோம். வாய்ப்புள்ளவர்கள் நீங்களும் கூட வரலாம். உங்கள் கவிதைகளையோ கதைகளையோ அல்லது நீங்கள் ரசித் படைப்புகளையோ கொண்டு வாருங்கள். நாம் உரையாடுவோம்......

இளமாறனின் கவிதைகளில் ஒன்றை மட்டும் அவர் அனுமதியின்றி இங்கு பகிர்கிறேன். எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று..

'ஊமைச்சொல்'

வேண்டாத பார்வையாக
இறுக்கமாய் வந்து
விழுகிறது
மனதை பெயர்த்தெறியும்
உன்
வார்த்தை

- கவிஞர் இளமாறன்.

ஏப்ரல் 13, 2023

தீண்டாமை


"என்னப்பா உங்க ஆளுங்களை கோவிலுக்குள்ளயே விட மாட்டறாங்க.. நீ என்னடான்னா சாமி.. சாமின்னு நம்பிகிட்டு இருக்க...?"

"என்ன செய்றது... உங்க யாராலயும் தலைவராக முடியாதுன்னு முடிவு பண்ணி.... நாலாவது தலைவராகவும் உங்க தலைவரின் வாரிசையே தலைவராக்க கோஷம் போட்டுக்கறாங்க.. ஆனாலும் நீங்க அதே கட்சிக்கு ஓட்டு போடறது இல்லையா..."

"நான் சொல்றது தீண்டாமை.."

"அங்கிருந்து பார்த்தா இது உங்களுக்கு தீண்டாமை... இங்கிருந்து பார்த்தா அது எங்களுக்கு அது தீண்டாமை...."

#தயாஜி
#குறுங்கதை
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

பெயர் தெரியாத பறவை


'பெயர் தெரியாத பறவை'

கொஞ்ச வருசத்துக்கு  முன்ன நடந்த சம்பவம். நம்ம குமாரு இருக்கானே குமாரு.. அவனுக்குத்தான் நடந்தது.  காட்டுக்கு போய்ருக்கான். அங்க நரி ஒரு பறவகிட்ட சண்டை பிடிச்சிகிட்டு இருந்ததாம். இவனைப் பார்த்ததும் அந்த நரி ஓடிப்போச்சாம். அந்த பறவயும் நரிகிட்ட அடியும் கடியும் வாங்கி பறக்க முடியாம கிடந்துச்சாம்.

பாவம் பார்த்து நம்ம குமாருதான் அந்தப் பறவயை எடுத்து வந்தான். வீட்டுல வச்சி கைவைத்தியம்லாம் செஞ்சான். அதும் கொஞ்ச நாள்ல குணமாச்சி.

எது என்ன நினைச்சதோ தெரியல அதோட குமாரு கூடவே இருந்துச்சி. அந்தப் பறவக்கு என்ன பேருன்னும் தெரியல என்னதா தீனின்னும் தெரியல. குமாரு எதை சாப்டறானோ அதையே அந்தப் பறவயும் சாப்டுக்கும்.

எங்ககூடயும் நல்லா விளையாடும். ஆனா யாராச்சும் குமாரு மேல கை வைச்சாங்கன்னு வைங்க பயங்கரமா கத்தி பயம்காட்டும். நல்ல பறவதான் எங்க யாரையும் கொத்தாது. அப்படியே நாலஞ்சி வருசமா குமாரு கூடவே ஒன்னுமன்னா இருந்தது.

போனவாரம் பாருங்க. திடீர்னு யார் என்ன சொன்னாங்கன்னு தெரியல. சில அதிகாரிங்க வந்தாங்க. இது ஆபத்தான பறவையாம். வீட்டுல வச்சிருக்க கூடாதாம். பெரிய குத்தமாம். கைது செய்து தண்டம் போடவும் முடியுமாம்.

குமாரும் நாங்களும் அந்தப் பறவயைப் பத்தி நல்லவிதமாத்தான் சொன்னோம். அதிகாரிங்க கேட்கவேயில்ல.

பாவம் குமாரும் அந்தப் பறவையும்தான். கடைசியா குமாரு அழறான், அந்தப் பறவயும் கத்திகிட்டே ஆளுக்கு ஒரு திசைல நிக்கறாங்க.

அந்த ஆபத்தானப் பறவயை அதிகாரிங்க அவங்க பாதுகாப்புல வைக்க போறாங்களாம். தேவைப்பட்டா குமாரும் நாங்களும் கடிதம் போட்டு அனுமதி வாங்கிட்டு எப்ப வேணும்னாலும் அந்தப் பறவயைப் பாக்கலாம்னு சொன்னாங்க.

குமாரு சரியா சாப்டு ரெண்டு நாளாச்சி. அவனால அந்தப் பறவ இல்லாம இருக்க முடியல. அந்தப் பறவைக்கும் அப்படித்தானே இருக்கும். எத்தினி வருஷம் ஒன்னா இருந்தாங்க.

எங்களால குமாரை அப்படி பாக்க முடியல. சரி அதிகாரிங்க சொன்னது போல கடிதம் போட்டு ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாம்னா, யாரைப் பாக்கனும் எப்படி எழுதனும் யார்கிட்ட கொடுக்கனும்னு எதுவுமே தெரியல.

நல்ல வேளையா ஒரே வாரத்துல அதிகாரிங்க எங்களைப் பாக்க வந்தாங்க. அந்த பறவ ரொம்ப ஏங்கியிருக்கும் போல.

வந்தவங்க நம்ம குமாரை கைது செய்துட்டாங்க. என்னடா இதுன்னு எங்களுக்கும் ஒன்னும் புரியல.  விசாரிச்சாதான் தெரியிது அந்தப் பறவ செத்துப்போச்சாம். குமாருதான் காரணமாம்.

ஏங்க இத்தினி வருசமா குமாருதான பார்த்துகிட்டான். இப்படி ஒரு வாரத்துல கூட்டிட்டு போய் சாகடிச்சிட்டு குமார் மேல குத்தம் சொன்னா நியாயமான்னு கேட்டா...

ஆபத்தான பறவையை வைச்சிருந்தது முதல் குத்தம்.
அதுக்கு சோறு போட்டது ரெண்டாவது குத்தம்.
அதை வீட்டுல வச்சது அடுத்த குத்தம்னு அடுக்கிட்டே போறாங்க.

இதையெல்லாம் பார்த்த குமாருக்கு மூளை கலங்கிடுச்சி போல. அதிகாரிங்கட்ட போய்ட்டு அந்தப் பறவக்கு என்ன பேருன்னு கேட்கறான்.

அதுக்கு ஒர் அதிகாரி சொல்றாரு, "அது ஆபத்தான பறவை...." 

ஏங்க நீங்களே சொல்லுங்க அந்தப் பறவயா ஆபத்தானது?

#தயாஜி
#குறுங்கதை
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

ஏப்ரல் 01, 2023

தீக்‌ஷா - புத்தக வெளியீடு

சமீபத்தில் திரு ஏ.கே.ரமேஷ் அவர்களின் தீக்ஷா புத்தக வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். (அவர் குறித்தும் அவரது புத்தகம் குறித்து முன்னமே எழுதியுள்ளேன்) வழக்கமான புத்தக வெளியீடு போல அல்லாமல், சமய நிகழ்ச்சியாகத் தொடங்கியது. கடவுள் வாழ்த்து, பெரிய புராணப்பாடல்கள் என ரம்மியமான சூழல் நிகழ்ச்சி முழுக்க நிறைந்திருந்தது.

திரு.சுப்பிரமணி சோணையா நூலாய்வை சிறப்பாக வழங்கினார். இன்னும் கூட அவர் பேசியிருக்கலாம் என தோன்றினாலும் தனக்கு கொடுத்த பணியைப் பலரும் கவரும் வண்ணம் செய்திருந்தார். ஒவ்வொரு கதைகளைக் குறித்து ஒரு தீர்க்கமானப் பார்வை அவரிடம் இருந்தது. குறிப்பாக பலருக்கு பிடித்த கதை அவருக்கு உவப்பாக இருக்கவில்லை. சிலரால் கவனிக்காத கதை மீது அவருக்கு நெருக்கமும் இருந்தது.

மலேசிய கல்வி அமைச்சிலிருந்து கவிஞர் சிவா வாழ்த்துரை வழங்கினார். மனதிலிருந்து பேசி பார்வையாளரைக் கவர்ந்தார் என்றே சொல்லலாம்.

இயல் பதிப்பக தோற்றுனர் திருமதி. பொன் கோகிலமும் பேசினார். ஒரு தேர்ந்த பேச்சாளர்க்குரிய பாணியில் பேசியவர், சமயம் சார்ந்தும் இன்றைய தலைமுறைகள் தொலைத்தும் தொலைந்தும் கொண்டிருப்பதைக் குறித்தும் பேசினார். 

நிறைவு உரையாக எழுத்தாளர் திரு. ஏ.கே.ரமேஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார். நன்றியென்னும் சொல்லைக் குறைவாகவும் நன்றிக்குரியவர்களின் பட்டியலை அதிகமாகவும் பேச்சில் சேர்த்திருந்தார்.

நிகழ்ச்சி முடிந்து புறப்படும் சமயம், திருமதி பிருந்தாவுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை நேரில் சந்திக்கின்றேன். என் கதைகளைத் தொடர்ந்து வாசிப்பதாகச் சொன்னார். மகிழ்ச்சி. எங்களது உரையாடலில் அவர் சமயம் சார்ந்து எடுக்கும் முன்னெடுப்புகளைப் பகிர்ந்தார். உண்மையில் பாராட்டத்தக்கவையாக அவை இருந்தன. குறிப்பாக ஏழு வயது மாணவர்கள் முதல் ஒவ்வொருவரை கதைகளை எழுதச் சொல்லியிருக்கிறார். அவர்களின் கதைகளையும் ஆவலோடு பகிர்ந்து கொண்டார். இளம் வயதிலேயே எழுத்தின் மீது மாணவர்களுக்கு ஆசை வரவைக்கும் யுக்தியல்லவா இது.

 இந்நிகழ்ச்சியில் அடிக்கடி ‘தமிழும் சமயமும் ஒன்றுதான்’ என்ற பேச்சு ஆங்காங்கே எழுந்த வண்ணம் இருந்தது. நாம் சொல்லிக்கொள்வது போல தமிழும் சமயமும் ஒன்றுதான் எனவும் ஒரு கோட்டுக்கு கீழ்தான் உள்ளன எனவும் இலகுவாக எடுத்துக்கொள்ளவோ அதனை எதிர்கொள்ளவோ முடியாது.

அதில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும். வெளியில் இருந்து வரும் சிக்கல்களைச் சொல்லவில்லை. உள்ளுக்குள்ளேயே ஏற்படும் சிக்கல்களை முதலில் நாம் கலைய வேண்டும். இதனையொட்டி அதிகமாக பேசலாம். ஆனால் இப்போது சின்ன உதாரணம் மட்டுமே கொடுக்கிறேன். ஒரு முருகா..! என்பார் இன்னொருவர் ஷண்முகா..! என்பார். இருவரும் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இரண்டையுமே வைத்துக் கொண்டு தமிழும் சமயமும் ஒன்றுதான் என சொல்ல முடியாது. பொங்கலா? புத்தாண்டா? என்ற குழப்பத்தை நான் சொல்லவேண்டுமா என்ன? 

நிறைவாக; நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலும் சமயப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் என தெரிந்து கொண்டேன். சமய நிகழ்ச்சிகளைத் தவிர்ந்து இவர்களை பிற இடங்களில் பார்ப்பது அரிது. இவர்களில் இருந்தும் எழுத்தாளர்கள் வெளிவர வேண்டும். இலக்கியத்தை வாசிக்கவும் எழுதவும் இவர்களும் தயாராகவேண்டும். மற்றவர்களையும் தயார்ப்படுத்த வேண்டும். ஏனெனில் அதுவும் அவர்களின் சமயம் சார்ந்த பங்களிப்பிற்கு அவசியம். 

தமிழுக்குச் சேர்ந்திருக்கும் சிறப்புகளில் ஒன்றுதான் நமக்கு கிடைக்கும் பல இலக்கியங்களில் அதிகம் இருப்பது கடவுவளை பாடியதும் கடவுளின் காதலுக்காக ஏங்கியதுமே. ஆனால் இன்று கடவுளை நோக்கிய புதிய குரல்கள் எழுவதில்லை. ஏனெனில் முன்னமே பாடிய பழைய குரல்களை யாரும் கண்டுக்கொள்வதில்லை. 

இது போன்ற நிகழ்ச்சிகள் வழி அக்குறை நீங்கும் என்ற அக்கறையில் இதனை எழுதுகிறேன்.

அன்புடன் தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்