பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 28, 2022

அதற்காகத்தான் சொல்கிறேன் நண்பர்களே...

 

நம் நிதானம் எப்போது தவறுகிறது?  நாம் விசுவாசிக்கும் ஏதாவதொன்றில் தவறு நிகழ்ந்து அது பேசு பொருளாகும் போது. நம்மை அறியாமலேயே நாம் அதற்காக குரலெழுப்பிடுவோம். இதுவும் ஒரு வகையில் போதைக்கு அடிமையாவது எனலாம். இலக்கியம் அரசியல் குடும்பம் வேலையிடம் விளையாட்டு என எல்லாவற்றிலிருந்தும் ஏதோ ஒரு போதை நமக்கு தேவைப்படுகிறது. அப்படியிருந்தும் சிலரால் மட்டுமே தெளிவாக அமைதி காக்கவும் ஒப்புக்கொள்ளவும் முடிகிறது. இன்னும் சிலரால் அது சாத்தியப்படுவதில்லை. நேற்று ஒரு கவிதை எழுதியிருந்தேன்.

 

என்னதான் திருடினாலும்

கொஞ்சமாவது கொடுத்தார்

என்கிறீர்களே

கொடுப்பதற்கே இனி

கொஞ்சமாகத் திருடலாம் என்று

அடுத்தவர் கிளம்பினால்

என்ன செய்வீர்கள்

 

சமீபத்தில் கைதான முன்னால் பிரதமரின் , கைது குறித்து முகநூலில் முழங்கிக்கொண்டிருப்பவர்கள் மீதான் ஓர் எளிய குரல்தான் இது. அவர் குற்றவாளிதான் அவர் செய்தது குற்றம்தான் என் உறுதியாகவோ மறைமுகமாகவோ கூட அது பேசவில்லை. அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? தமிழர்களுக்கு அவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் தெரியுமா என்பது மாதிரியான இன்பாக்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுவெல்லாம் எனக்கு தெரியாதா நண்பர்களே நானும் உங்களுடந்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நான் மட்டும் என்ன ஆப்பிரிக்காவிலா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அதோடு அக்கவிதைக்கு கீழுள்ள கமெண்டுகளிலும் பெரும்பாலும் ‘மாட்டிக்கொள்ளாதவரை எல்லோருமே திருடர்கள்தானே’ என்பதாகவும் ‘மனிதன் என்றாலே திருடன் தானே’ என்பதாகவும் கருத்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

இதற்குத்தான் புத்தகங்களை வாசியுங்கள், கவிதை கதைகளை வாசித்து உரையாடுங்கள், குறைந்தது ஏதாவது நாவலையாது நேரம் இருக்கும் போது புரட்டிப்பாருங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். நீங்கள் கோவப்படுவதற்கு முன்பாகவும் நான் மேற்கொண்டு எழுதவதற்கு முன்பாகவும்   சமீபத்தில் நான் வாசித்த கவிஞர் நரனின் கவிதையைக் குறித்து கொஞ்சம் பேசவேண்டும்.

 

இரவில் பிறந்து

ஒரு மழையை மட்டும் பார்த்துவிட்டு இறந்து போன குழந்தை

 

இதனை படித்ததும் என்ன தோன்றுகிறது. ஒரு குழந்தை இறந்துவிட்டது. அடுத்தது அந்தக் குழந்தையால் மழையை மட்டும் பார்க்க முடிந்தது, அல்லது அன்று மழையாக இருக்கலாம் என நினைத்துக்கொள்ளலாம்.

மேல்மட்ட வாசிப்பில் இருக்கும் பிம்பங்கள் வழி இதனை நாம் இப்படித்தான் காண்போம். ஆனால் அதை மட்டும்தான் இக்கவிதை பேசுகிறா என்றால் இல்லை. இக்கவிதையை வாசித்ததும் எனக்கு ஒரு மன நெருக்கடி ஏற்பட்டது. மழையை மட்டும் பார்த்து இறந்துவிட்டது அந்தக் குழந்தை என்கிறது கவிதை. ஆனால், அக்குழந்தை எதையெல்லாம் பார்க்கவில்லை என யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். தன் அம்மாவை அப்பாவை உறவுகளை அன்பை காதலை வாழ்வின் ருசியை என அக்குழந்தை தவறவிட்டதற்காக நான் அழுகிறேன். அடுத்த கணமே, மழையை மட்டும் பார்த்த அக்குழந்தை துரோகத்தை பழியுணர்ச்சியை ஏமாற்றத்தை வறுமையைப் பார்க்கவில்லை என என்னை ஆற்றுப்படுத்திக்கொள்கிறேன்.

ஒரு கவிதை ஒரு வரியில் அதற்காக அழ வைக்கிறது அதே கவிதை அதே வரியில் அதற்கான  சமாதானத்தையும் செய்கிறது. நேரடி பொருளில் இருந்து விலகும் போதுதான் கவிதை தன்னை முழுமையாக அடையாளம் காட்டுவதாக நம்புகிறேன். அதற்கு அந்தக் கவிதையின் நேரடி பொருளையும் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

இனி நான் சொல்ல வந்ததைத் தொடர்கிறேன்.

நான் எழுதிய கவிதையில் சமகால சிக்கலை முன்வைத்தும் தங்கள் விசுவாசம் சார்ந்த மனநிலையிலும் பலர் புரிந்துகொண்டார்கள். அதில் தவறேதும் இல்லை. ஆனால் அதன்வழியே அவர்கள் ஏதோ ஒன்றைத் தவறவிடுவதை அறியவில்லை. உண்மையில் அங்கிருந்து நான் என் எழுத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முயல்கிறேன். என் கேள்வி ‘எற்றுக்கொள்ளும், சமாளிக்கும் மனப்போக்கின் எதிரொளியைத்தான்’.

நீதிமன்றம் குற்றவாளி என சொல்லிவிட்டவரை நிரபராதி என சொல்லுவதால் வரக்கூடிய சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இவர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு கவசம்தான் இத்தகைய மனநிலை. அவர் திருடியிருந்தாலும் அதன் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபனம் கண்டு குற்றவாளியாக தண்டனை கொடுக்கப்பட்டாலும், அவர் திருடியதாகச் சொல்லப்படும் பணத்தில் இருந்து மக்களுக்கு கொடுத்தார் என்பதுதான். முகநூலில் முன்னால் ஆசிரியர் ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது ஒரு திருடன் நூறு வெள்ளியைத் திருடிவிட்டு அதிலிருந்து பத்து வெள்ளியை உங்களிடம் கொடுத்தால் அவர் செய்தது குற்றமா அல்லது தர்மமா?

இத்தனைக்கும், இதுவரை வந்த பிரதமர்களில் இவரின் மீதே எனக்கு மிகுந்த மரியாதை. நான் இவரின் அபிமானியும் கூட. என்னுடன் நெருக்கமானவர்களுக்கு இது தெரியும். ஆனால் அதுவல்ல இங்கு ஏற்பட்டுள்ள சிக்கல். நாம் எதை எதிர்ப்பாக்கிறோம் என்பதுதான் சிக்கல். இது மேலும் பல புதிய திருடர்களை உருவாக்கும். குற்றம் தண்டனைக்குரியது என்பது மாறி குற்ற லாபத்தில் ஒரு சிறு பகுதியை மக்களுக்கு கொடுக்கலாம் அது நம்மை காப்பாற்றும் என்பது உண்மையில் மோசம்தானே.

தாங்கள் அவர் சார்ந்த கட்சியில் இருப்பதாலும், அதன் வழி லாபம் வரலாம் என்கிற எதிர்ப்பார்ப்புகளினாலும், அகப்பாடாத வரை எல்லோருமே குற்றவாளிகள்தான், மனிதனாய் இருப்பதாலேயே நாம் குற்றவாளிகள்தான் என உளறுவது நமக்கே நியாயமாக இருக்கிறதா.

யாராக இருந்தாலும், எத்தனை தர்ம காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும் குற்றம் பழகிய கைகள் எப்படியும் கைதாகும் என்கிற அடிப்படை அறத்தை புரிந்து கொள்வது அவ்வளவு சிரமமானதா என்ன?

நாளையே இவரின் குற்றங்கள் எல்லாம் ஏதுமில்லாமலாகி,. நிரபராதி என வெளியேறலாம். அப்படி நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதை நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம். அப்படி வந்தாலும் கூட என் கூற்று ஒன்றுதான். அதனைத்தான் நான் திரும்பத்திரும்ப சொல்கிறேன். அதுதான் என் கவிதை. அது கேட்கும் கேள்வி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஒரு முறை சிறைச்சாலையில் ஒருவரை பேட்டி காண சென்றிருந்தேன். வன்முறையாலும் வழிப்பறியாலும் கைதானவர். அந்தப்பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்ட பல விடயங்கள் முக்கியமானது. அதையொட்டி நான் கதைகளும் எழுதியுள்ளேன். அவர் சொன்னதை அப்படியே சொல்வதென்றால்; “எங்கம்மாவை எனக்கு பிடிக்கல சார்… அன்னிக்கு கூட்டாளியோட பேனாவை நான் எடுத்துட்டு வந்துட்டேன்.. அதுக்கு எங்கம்மா என்னைய திட்டல.. பாராட்டனாங்க..  அன்னிக்கே என்னைய அடிச்சியிருந்தா நான் அதுக்கு அப்பறம் திருடியிருக்கவே மாட்டேன்”

அந்தக் கைதி சொன்னதற்கும் நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். ஏனெனில் ஒரு கவிதையை எழுதி அதற்கு ‘நான் என்ன சொல்ல வருகிறேன் தெரியுமா?’ என விளக்கம் கொடுக்கும்  துரதிஷ்டம் ஒரு முறைக்கு போதுமானது.

அதற்குத்தான் நினைவுப்படுத்துகிறேன் புத்தகங்களை வாசியுங்கள். அது குறித்து உரையாடுங்கள். எந்த சார்பின் பக்கமாக நின்றுகொண்டிருந்தாலும் தனிநபர் லால நஷ்டங்களை கணக்கில் எடுக்காமல், தர்மத்தைக் கையில் எடுங்கள்.

குற்றவாளிகள் மன்னிக்கப்படலாம், ஆனால் எதற்காகவும் குற்றவாளிகளை உருவாக்கிவிடாதீர்கள் நண்பர்களே.

 

{*ஆமாம், அதற்கு ஏன் புத்தகங்களை வாசியுங்கள் என்கிறேன். ஒரு வரியைப் புரிந்து கொள்ள குறைந்தது நூறு வரிகளையாவது வாசித்து உரையாட வேண்டிய அவசியம் இருக்கிறது.}

 

- தயாஜி

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்