பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஜூலை 05, 2025

- பக்தி பாழ் -


கடவுள் நம்பிக்கையில்
நாம்
மன்னிப்பு கேட்கவும்
நம்மை நாமே
மன்னிக்கவும்
பழகினோமோ இல்லையோ..

கடவுள் பெயரால்
எல்லோரையும் தண்டிக்க
பழகிவிட்டோம்

பக்தியையும் பாழாக்கிவிட்டோம்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை



ஜூலை 04, 2025

- சம்பளத்தின் பாவம் -

யாருடைய சாபமாக

இருந்தாலும்

பரவாயில்லை

அது தமக்கு

சம்பாத்தியமாக ஆகிவிட்டால் போதுமென்கிற

மனநிலையில் கொஞ்சமும்

குற்றவுணர்ச்சியின்றி

மனிதர்களாய்ப்

போலி செய்கிறார்கள்...


ஜூலை 02, 2025

- ஊஞ்சலாடும் உள்ளம் -


அவன் தற்கொலை

செய்துகொள்ளும் முன்

ஒருபோதும்

அவன் அதற்கு ஆசைப்படவேயில்லை


நமக்குத்தான்

அது தற்கொலை


அவனைப் பொருத்தவரை

இத்தனை நாட்களாக

நடமாடி

நாடகமாடிக்கொண்டிருந்த

தன் பிணத்தை

தானே

கழுத்தில் கயிறு கட்டி

ஊஞ்சலில் ஆட்டிவிட்டிருக்கிறான்..

ஜூலை 01, 2025

எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜுடன் சந்திப்பு


சமீபத்தில் சிங்கையில் இருந்து வேலை நிமித்தமாக மலேசிய வந்திருந்த எழுத்தாளரும் அண்ணனுமான சித்துராஜ் பொன்ராஜ் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பார்க்க வாய்ப்பு கிடைக்கும் எழுத்தாளர்களை முடிந்தவரை நான் தவறவிடுவதில்லை. பிரிக்பீல்ட்ஸில் சந்திக்க முடிவெடுத்தோம்.
எழுத்தாளரைச் சந்திக்க நம்மூர் எழுத்தாளர்களையும் அழைத்துச் சென்றேன். எழுத்தாளர் ஸ்ரீகாந்தனும் எழுத்தாளர் பிருத்விராஜூம் வந்திருந்தார்கள்.




இரவு வரை பேசினோம். எங்கள் உரையாடல் இலக்கியம் குறித்தே அமைந்திருந்தது. என்னிடம் இருந்த சித்துராஜ் புத்தகங்களை எடுத்துச் சென்றிருந்தேன். அவரிடம் கையொப்பம் வாங்கி கொண்டேன்.. நான் எழுதிய புத்தகங்களை அவருக்கு கொடுத்தேன். என் புத்தகங்களின் ஒன்றை இவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன்.



சில ஆண்டுகளுக்கு முன் குறுங்கதைகளை முகநூலில் எழுதி பகிர்ந்த சமயங்களின் குறிப்பிட்ட சிலரே அதனை கவனித்தார்கள் பின்னரே அது பெரிய வாசக பரப்பை அடைந்தது.

நான் குறுங்கதைகளை எழுதி பகிர்ந்த ஆரம்ப கட்டத்தில் தொடர்ந்து என் கதைகளை வாசித்து அவரின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவரது வலைப்பக்கத்திலும் என் கதைகளைக் குறித்து அறிமுக கட்டுரையை எழுதியிருந்தார்.

குறுங்கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கும் சமயத்தில் அவரிடமே முன்னுரையைக் கேட்டிருந்தேன். மீண்டும் ஒருமுறை என் குறுங்கதைகளை வாசித்து நல்லதொரு கட்டுரையாகவே எழுதி கொடுத்திருந்தார்.
இளம் படைப்பாளிக்கு அவர் கொடுத்த ஊக்கம், குறுங்கதைகள் மீதான என் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.


இப்போதுதான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகங்களை அவரிடம் கொடுத்தேன்.

எங்கள் உரையாடலும் , இலக்கியம் மீதான எங்கள் கருத்துகளும் எங்களின் அன்றைய பொழுதை பயனுள்ளதாக்கியது.

எழுத்தாளர் பிருத்விராஜு, எங்களை அழகாய்ப் படம் பிடித்திருந்தார்.



#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூன் 29, 2025

- மனமலர் -


- மனமலர் -

நீண்ட நாட்களுக்கு பிறகான மலர்தல்.
சிறுசிறு விதைகளாய் விழுந்ததில் இருந்து தான் மட்டும் தப்பிப் பிழைத்ததில்  ஒன்று இந்த நித்திய கல்யாணி. 

அதன் மலர் போல அவள் பெயரும் அழகானது. வசீகரமானது. முதலில் இவளை நித்திய கன்னி என்றே புரிந்து கொண்டிருந்தேன்.  வயதின் காரணமாகவும் அது கொடுக்கும் கிளர்ச்சியின் காரணமாகவும் இருக்கலாம். இனி இல்லை, ஏனெனில் நாங்கள் வளர்ந்துவிட்டோம். 

முதல் பூ என்பதால் மட்டுமே, அவள் மலர்த்தும்வரை காத்திருந்து அந்த மலரை பார்க்கிறேன். இந்த இரவில் மெல்லிய மழையில் நிலவற்ற குறையைத் தீர்க்கிறாள்.

ஏதாவது ஓர் உயிரை நம் வாழ்நாள் முழுக்க உடன் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். மனம் துவண்டழும் போதெல்லாம் ஆறுதலுக்கு அவை முன் வந்து நிற்கும்.

என்னைப் பார்க்காத போதெல்லாம் வாடி வதங்கும் செடிகளைவிட்டு, எனக்காக மலர்விடும் அரும்புகளைவிட்டு, என்னைப் பார்த்து தலையசைக்கும் அதன் குறும்புகளைவிட்டு, என்னால் எப்படி போக முடியும். நீங்கள் வெறும் செடிகளா என்ன?
என் சகாக்கள் அல்லவா...

ஏனோ எனக்கு நண்பர்கள் அதிகமில்லை. ஆனால் எந்த / எதன் நட்பில் இருந்தும் நான்  ஒருபோதும் தனித்துவிடப்படவில்லை.

மண்படும் எல்லாமும், காற்றணைக்கும் ஒவ்வொன்றும் என்னை அதனதன் சகாவாகவே பார்க்கின்றன...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

- பொய்யென பெய்யா மழை -

இதென்ன மழை !

மூத்திரம் போல

வந்ததும் தெரியல

போனதும் தெரியல


என

வீட்டில் அமர்ந்து

புலம்பிகொண்டிருக்கும்

அதே சமயத்தில்


ஏதோ ஒரு மூலையில்

பசியுடன்

பிச்சையெடுப்பவனின்

நெழிந்த டம்ளர்

நிறைந்து வழிந்த

தீர்த்தம்

அவன் தாகத்தைத் தீர்த்தது...

ஜூன் 23, 2025

- மரியாதைக் குறைப்போர் -


- மரியாதைக் குறைப்போர் -

நம்மை
மரியாதைக் குறைவாய்
நடத்துகின்றவர்களை 
இரண்டு வகையாய்ப்
பிரிக்கலாம்

முதலாவது
நம்மை 
முன் பின் தெரியாதவர்கள்

இரண்டாவது
நம்மை 
நன்றாய்த் தெரிந்தவர்கள்

மூன்றாவது வகையும் உண்டு
நாம் 
யாரென்று யாருக்கும்
தெரியக்கூடாது என 
சிரத்தையோடு இருப்பவர்கள்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்