பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஏப்ரல் 01, 2024

நான்ஃபிக்‌ஷன் எழுத்துப் பயிற்சி வகுப்பு



 எழுத்தே என் வாழ்க்கையாக அமையவேண்டும் என்பது என் விருப்பம். நான் எழுதுவது ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும் என்றால், யாரோ ஒருவரின் தோளைத் தட்டி ஆறுதல் கூறுமென்றால், மற்றொருவரை சிரிக்க வைத்துப் பார்க்குமென்றால் நான் எழுதவே விரும்புகிறேன். அதற்காக உழைக்கவும் என்னை எப்போதும் தயாராய் வைத்திருக்கிறேன்.

 ஒவ்வொருமுறையும் எழுத்திற்காக ஏதோ ஒன்றைத் தொடர்ந்து செய்துவருகிறேன் சில முன்னெடுப்புகளையும் எடுத்து வைக்கிறேன்.

 வழிகாட்டியாக என்னை நிறுவ நான் எப்போதும் நினைப்பதில்லை. ஒரு சக பயணியாகவே நான் பயணிக்கிறேன். என் இலக்கை அடைந்தால்; அடைந்த திருப்தியிலும் இல்லையென்றால் முயன்ற திருப்தியிலும் எனக்கான பயணத்தை நான் முடித்துக்கொள்வேன்.

 எழுத்திற்கும் எனக்குமான நெருக்கத்தை எப்போதும் ஏற்படுத்திக்கொண்டிருப்பது என் மனதை ஏதோ ஒரு வகையில் ஆசுவாசப்படுத்துகிறது. அதற்கான வாசிப்பிலும் பயற்சியிலும் தொடர்ந்து ஈடுபடுகின்றேன். அதுதான் நம்மை போலி அடையாளங்களின் இருந்து தனித்து வெளிக்கொணரும்.

 மார்ச்30,31(2024) ஆகிய நாட்களில் என்.சொக்கன் வழிநடத்திய ‘நான்ஃபிக்ஷன் எழுத்துப் பயிற்சி வகுப்பில்’ கலந்து கொண்டேன். ஐந்து மணிநேர வகுப்பாக அதனை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 கடந்த வகுப்பில் கலந்து கொள்ள முயன்றேன், பொருளாதார காரணங்களால் அதில் பங்கெடுக்க முடியவில்லை. அந்த வருத்தத்தை வீட்டில் இல்லாளிடம் பேசியிருந்தேன். இம்முறை மீண்டும் அந்த வகுப்பு குறித்த விளம்பரத்தை முகநூலில் இருந்து இல்லாள் எனக்கு அனுப்பிவைத்து ‘இம்முறை தவறவிடாதிங்க..’ என்றார். அதற்கு ஏற்றார் போலவே அவர்கள் கொடுத்திருந்த எண்ணுக்கு கூடுதல் விபரங்களுக்காக தொடர்பு கொண்டேன்.

 கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை கேட்டுக்கொண்டு, அதற்கான செயலில் இறங்கினேன்.

 கட்டணம் செலுத்தி நானும் ஒரு மாணவனாக இணைந்தேன். தொடர்ந்து என்.சொக்கனின் பின் தொடர்பவன் என்கிற முறையிலும் அவரது புனைவல்லாத புத்தகங்களை வாசித்துள்ளேன் என்பதாலும் வகுப்பில் கூடுதல் நம்பிக்கையோடு இணைந்தேன். எதிர்ப்பார்ப்புகளை அவர் சிறப்பாகவே பூர்த்தி செய்தார்.

 குறிப்புகள் எடுக்கும் பழக்கம் எனக்குண்டு. இரண்டு நாள்கள் வகுப்பில் முப்பது பக்கங்களுக்கு குறிப்புகளை எழுதினேன். ஆசிரியர் சிலவற்றை நாங்கள் இணைந்திருக்கும் புலனக்குழுவில் பின்னர் பகிர்வதாகச் சொன்னார். ஆனாலும் என் பழத்தை நான் தொடர்ந்தேன். இணைய வகுப்பு என்பதால் ஆசிரியர் பேச்சை கேட்டுக்கொண்டே குறிப்புகள் எழுதுவது எனக்கு மேலும் நன்றாக புரிய உதவியது.

 புனைவல்லாத எழுத்து என்றால் என்ன என்பதில் தொடங்கி, எப்படி அதனை புத்தகமாக்கி சந்தைப்படுத்தலாம் என்பதுவரையில் நீண்ட பயணத்தை வகுப்பில் அழகாகவும் ஆழமாகவும் விளக்கினார்.

 நடந்ததை நடந்தபடி சொல்வதுதான் புனைவில்லாத எழுத்து என்று அதன் அடிப்படையை நாம் புரிந்து கொண்டாலும் ஓர் எழுத்தாளராக இருந்து நான்ஃபிஷன் எழுதும் போது நாம் கவனிக்க வேண்டியதைப்பற்றி ஆசிரியர் விரிவாகப் பேசினார்.

 புனைவல்லாத எழுத்தைப் புரிந்து கொள்ள, அது எப்படி புனைவெழுத்தில் இருந்து  மாறுபடுகின்றது என்பதையும் கூறினார்.

 முழு வகுப்பையும் எட்டு படிகளில் வரிசையாய் அடுக்கி வழிநடத்தினார்.



1.   எதை எழுதலாம்?

2.   எத்தனை நாட்களில் எழுதலாம்?

3.   எதையெல்லாம் இணைக்கலாம்?

4.   எப்படி எழுதலாம்?

5.   என்ன எழுதலாம்?

6.   எப்படி செழுமையாக்கலாம்?

7.   எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்?

8.   எப்படி மேம்படுத்தலாம்?

 என்ற எட்டு தலைப்புகளில் வரிசையாக ஒன்றிலிருந்து மற்றொன்று எவ்வாறு தொடர்பு கொள்கிறது எனவும் பேசினார்.

     முதல் நாள் வகுப்பில் இடுபணியைக் கொடுத்து மறுநாள் வகுப்பில் சிலரின் பயிற்சிகளை வாசித்து அதனை எப்படியெல்லாம் செம்மைப்படுத்தலாம் என்பதைக் கூறியதோடு அப்படியான பயிற்சிக்கான காரணத்தையும் அது பிற்காலத்தில் கொடுக்கும் பலன்களையும் சுட்டிக்காட்டினார்.

     புனைவல்லாத எழுத்திற்கான களப்பணியை எப்படி மெற்கொள்வது என அவர் கூறியது பலருக்கும் உதவியாக அமைந்தது.

     ‘எழுத்து ஒழுக்கம்’ குறித்து எழுத்தாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியற்றை பேசினார். நான் பலமுறை என் நண்பர்களுடன் இதுபற்றி உரையாடியுள்ளேன். இனி அதிகமான தகவல்களுடன் உரையாடுவேன்.

     சில நாட்களாகவே என்னிடம் ஒரு குழப்பம் இருந்தது. அதற்கான பதில்கள் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. இன்று என்.சொக்கன் வழிநடத்திய நான்ஃபிக்‌ஷன் எழுதுவோம் வகுப்பில் அக்கேள்விக்கு அவரிடம் இருந்து ஒரு பதில் வந்தது. அது எனக்கு நம்பிக்கையையும் கொடுத்தது. அது என்ன குழப்பம் என்ன பதில் என்பது எனக்கு அந்தரங்கமானது; இப்போது வேண்டாம்.

     நிறைவான வகுப்பாக இரு நாள் வகுப்பை வழிநடத்தினார் ஆசிரியர். இனி வரும் காலங்களிலும் வாய்ப்பு இருப்பின் நான் அடுத்தடுத்த வகுப்புகளில் கலந்து கொள்வேன். உங்களுக்கும் புனைவல்லாத எழுத்தை எழுத விருப்பம் இருப்பின் தாராளமாக இந்த வகுப்பில் கலந்து கொள்ளலாம். நிச்சயம் உங்கள் நேர்மையான எழுத்திற்கு அது பயனாய் அமையும்.

- தயாஜி

மார்ச் 19, 2024

குரலற்ற கடலலை




உன்னோடு பேசுவதற்கு

என்

எல்லா வார்த்தைகளும்

ஏங்குகின்றன

எம்பி குதிக்கின்றன


நீ சொன்ன

ஒற்றைச் சொல்லின்

போதாமையால்

அவை

தினம் தினம் 

மௌனத்தற்கொலை

செய்கின்றன


நான் ஒருவனே

அந்த மரணங்களுக்கு

ஓசையற்ற ஓலம்


உன் பேரிரைச்சல்

என்றாவது ஒரு நாள்

என் நிசப்தத்தின்

வெறுமைக்கு முன்

மண்டியிடும்

தலைவணங்கும்....

பிப்ரவரி 22, 2024

உனக்கென்னதான் வேண்டும்?

 

உனக்கு என்ன வேண்டும்
உனக்கு என்னதான் வேண்டும்
என என்னை
எண்ண வைக்கிறாயே
சொல்லேன் உனக்கு
எது வேண்டும்
என்னதான் வேண்டும்

என்னிடமிருந்து உறவா
என்றைக்கும் சேரா பிரிவா

என்னதான் முடிவுடன்
நீ என்னுடன் நெருங்குகின்றாய்
என்னதான் எதிர்ப்பார்க்கிறாய்

நாள் முழுக்கப் பேசுகிறாய்
நாள் முழுக்க மௌனத்தில் நிலைக்கிறாய்

திடீரென ஒருநாள்
நம்மால் இனியெப்போதும்
சேர முடியாது என்கிறாய்
அடுத்த நாளே
நானின்றி வாழ முடியாதெனவும்
அழுகிறாய்

புலனச்செய்திகளில் வெறும் புள்ளிகளாகவே பதிலிடுகிறாய்
ஒரு முறையே பார்க்கும்படி
உன் புன்னகையை அனுப்பி மறைக்கிறாய்

என்னிடம் சேமிக்க எதையுமே கொடுக்காமல்
என்னிடமிருந்து எதைத்தான் நீ கேட்கிறாய்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்


பிப்ரவரி 16, 2024

வசிகராக்கள்

 

அழகாய்த் தெரிகிறது
ஆனால் அத்தனையும்
பொய்யாக இருக்கிறதே

அதனால் என்ன
அழகாய்த் தெரிகிறது

உன் உண்மைகளை
நீயே வைத்துக்கொள்
அதனால் இங்கு
யாருக்கு என்ன லாபம்

அதோ
அழகாய்த் தெரிகிறது...


பிப்ரவரி 14, 2024

- சேராவரம்போல் -

 - சேராவரம்போல்


இங்கு எல்லார்க்குள்ளுமே

ஒரு காதல் கதை உண்டு

இங்கு எல்லோருக்குமே

ஒரு காதல் தோல்வி உண்டு


இங்கு யாரோ ஒருவர்தான்

காதலில் வெற்றியடைகிறார் 


ஆனால் ஏனோ

எல்லா தேசத்திலும்

தோல்வியடைந்த காதல் கதைகள்

மட்டுமே 

காலத்திற்கும் உயிர்ப்போடு இருக்கின்றன


சாகாவரம்போல் சோகமும் இருப்பதில்லை

சேராவரம்போல தீரா காதலும் மரிப்பதில்லை


அது சிரஞ்சீவிய காமம்.....


#தயாஜி 

பிப்ரவரி 12, 2024

முகங்களை சேமிப்பவர்கள்

 


என்னிடம்

பழைய முகம் ஒன்று

கொஞ்ச காலமாக 

இருக்கிறது


என்றாவது ஒரு நாள் 

தேவையிருப்பின் 

கொஞ்சமாய்

எடுத்துப் பார்த்துக்கொள்வேன்


பின் மீண்டும் பத்திரப்படுத்திக்

கொள்வேன்


மனம் கொஞ்சம் ஆசுவாசமாகும்


குறிப்பாக 

எப்போதெல்லாம் கண்களை மீறி

கண்ணீர் வருகிறதோ

அப்போதெல்லாம்

அந்த முகம்தான் ஒரே ஆறுதல்


எத்தனையோ முறை

காயப்பட்டவனின் 

முகம் அது


ஆனாலும் மீண்டும் மீண்டும்

வலி தாங்கவே விரும்புகிறது


என்ன செய்ய

அன்பென்பது அன்பாகவே அமைவதுமில்லை

நட்பெண்பது நட்பாகவே

அமைவதுமில்லை


ஒருவேளை உங்களுக்கு 

அப்படியொன்று அமைந்துவிட்டால்

உண்மையில் நீங்கள் 

கொடுத்து வைத்தவர்கள்


உங்களுக்கு கூடுதல் முகங்கள்

தேவைப்படாது....


பிப்ரவரி 11, 2024

பிழைத்துக்கொள்




நான் 
உன்னைத் தேடுவதை
நிறுத்திவிட்டேன்
நான்
உன்னை நினைப்பதை
மறந்துவிட்டேன்

நீ என்
ஒவ்வொரு சொல்லிலும்
உன்னைப் பொருத்திப் பார்க்கிறாய்

நீ என்
ஒவ்வொரு செயலிலும்
உன்னைப் போட்டியாளராகக் கற்பிதம் கொள்கிறாய்

என் இலக்கு 
ஒருபோதும் நீயல்ல

உன் இலக்காய் என்னை நீ
கற்பனைச் செய்து
கற்பாறையில் மோதி நிற்கிறாய்

எழுதுவதைத் தவிர
எனக்கு 
வேறெதுவும் தெரியாது
எழுதுவதைத் தவிர 
உனக்கு
வேறெல்லாமே தெரிகிறது

பிழைத்துக்கொள்ளேன்..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்