பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஏப்ரல் 01, 2026

2026-ம் ஆண்டின் நான்கில் ஒன்று. (1/4)

2026-ம் ஆண்டின் நான்கில் ஒன்று. (1/4)

இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை வாசித்த புத்தகங்களை அதற்குரிய அடுக்க வேண்டும்.

இந்த முதல் மூன்று மாதங்களில் வாசிக்க எடுத்து வைத்த புத்தகங்களில் வாசித்த புத்தகங்களைவிட வாசிக்காத புத்தகங்களே அதிகம். அது அப்படித்தான் இதை படித்துவிடலாம் அதை படித்துவிட வேண்டும் என்கிற பேராசை எல்லா வாசகருக்குமே இருக்கத்தானே செய்கிறது.

வாசிக்கா புத்தகங்களை அடுத்தடுத்து வாசிக்க, இதற்கு  முன் எடுத்து வைத்திருக்கும் புத்தகங்களையும் ஒன்றாக கலந்து அடுத்த மூன்று மாதங்களில் வாசிக்க வேண்டிய புத்தகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

சரி, முதல் மூன்று மாதங்களில் வாசித்த புத்தகங்களைப் பற்றி, மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

தயார்தானே....
மொத்தம் 16 புத்தகங்கள்

👉மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில்
வாசித்தவை;

1. உப பாண்டவம்
- எஸ்.ராமகிருஷ்ணனின் முதல் நாவல்.
- மகாபாரதத்தை இன்னொரு பார்வையில் இருந்து சொல்லியிருப்பார். இந்நாவல் பற்றி கட்டாயம் ஒரு பதிவு எழுதவேண்டும்.

2. ஆகம்
- சிங்கள நாவலின் தமிழாக்கம்
- எழுத்து மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
- தமிழாக்கம் எம்.ரிஷ்வான் ஷெரிப்
- வயதானவனின் பார்வையில் நகரும் நாவல், அவனது ஆழ்மனதின் குரலாகவே ஒழிவு மறைவு இன்று செல்கிறது.

3. தேவமலர்
- எழுத்து ஸெல்மா லாகர் லெவ்
- தமிழில் க.நா.சு
- குறுநாவல்
- இந்த நாவலை ஏன் இத்தனை நாட்கள் வாசிக்கவில்லை என்ற எண்ணமே மேலோங்கியது.
- அற்புதமான கதை
- வாசித்து முடித்ததும் பல்வேறு கோணங்களில் கதைக்கான காரணத்தைத் தேட வைத்தது.

4. பெர்னுய்லியின் பேய்கள்
- சித்துராஜ் பொன்ராஜ்
- நாவல்
- இந்த வாசிப்பு அனுபவத்தை மாதம் ஒரு சிங்கப்பூர் தொடரில் எழுதியுள்ளேன்.
- மீள்வாசிப்பு செய்த நாவல்


👉சிறுகதைகள்/கதைகள்

5. ஊமைக் காயங்கள்
- மலேசிய சிறுகதைகள்
- மாதம் ஒரு மலேசிய புத்தகன் தொடரில் இந்தப் புத்தகத்தின் வாசிப்பனுபவத்தை எழுதியுள்ளேன்.

6. சிண்டாய்
- மலேசிய எழுத்தாளர் ஜெ.அரவின் குமார் சிறுகதைகள்
- மாதம் மலேசிய புத்தகம் தொடரில் இந்தப் புத்தகத்தின் வாசிப்பனுபவத்தை எழுதியுள்ளேன்.

7. நிச்சயிக்கப்பட்டப் பெண்
- எழுத்து ஆண்டன் செகாவ்
- தமிழாக்கம் எம்.கோபாலகிருஷ்ணன்
- ஒரு பெண்ணுக்கு கல்வி ஏன் தேவை என சொல்லக்கூடிய கதை.

👉கவிதைகள்

8. மையல்
- மனுஷ்ய புத்திரனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்

9. பால் வீதி
- கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

10. மிளகு- பருத்தி- மற்றும் யானைகள்
- நரன் கவிதைகள்
- இந்தத் தொகுப்பின் வாசக அனுபவத்தை வாசகசாலை இணைய பக்கத்தில் எழுதியுள்ளேன்.

11. எனும் போது
- மலேசிய கவிஞர் யோகி கவிதைகள்
- இந்தத் தொகுப்பை மாதம் ஒரு மலேசிய புத்தக தொடரில் எழுதியுள்ளேன்.

12. கடலெனும் வசீகர மீன் தொட்டி
- சிங்கப்பூர் கவிஞர் சுபா செந்தில்குமார் கவிதைகள்.
- இந்தத் தொகுப்பின் வாசிப்பனுபவத்தை மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடரில் எழுதியுள்ளேன்.

13. நீராம்பல்
- சிங்கப்பூர் கவிஞர் கங்கா பாஸ்கரன் கவிதைகள்
-இந்தத் தொகுப்பின் வாசிப்பனுபவத்தை மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடரில் எழுதியுள்ளேன்.


👉கட்டுரைகள்/ இதர வாசிப்பு

14. சோதிமிகு நவகவிதை
- அப்துல் ரகுமானின் கவிதைகள் குறித்த கட்டுரைகள்.

15. துளிக்கனவு
- ஜெயமோகன்
- அனுபவக்கதைகள்

16. ரயிலேறிய கிராமம்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- 30க்கும் அதிகமான புத்தகங்கள் பற்றிய காட்டுரைகள் அடங்கிய தொகுப்பு

மார்ச் 31, 2026

- குடிகார குடும்பத்திற்கு ஒரு முட்டாள்த்தனமான யோசனை-


குடி கொண்டாட்டமாக மாறியபின், எல்லாமே திண்டாட்டங்கள் ஆகிவிட்டன. முன்பெல்லாம் 'நீங்க குடிப்பீங்களா?' என முகம் சுழித்து கொண்டு கேட்டார்கள். இப்போது, 'நீங்ககுடிக்க மாட்டீங்களா...' என ஏளனமாக கேட்கிறார்கள்.

குடித்தால் மட்டுமே அவனோ அவளோ வாழ்வை இரசிக்க தெரிந்த சுதந்திர மனிதர்கள் என்கிற எண்ணத்தை பலர் முழுதுமாய் நம்பி கொண்டிருக்கிறார்கள்.

'பரம்பரை குடிகாரன் கூட குடிச்சா நேரா வீட்டுக்குதான் வரான். ஆனா இந்த புது குடிகாரன்கள் குடிச்சிட்டு பண்ற அட்டாகாசங்களும் அருவருப்புகளும் இருக்கே தாங்கல...' என நாம்கூட குடியைத் தற்காத்துதான் பேச வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டோம்.

மத இன கலாச்சார கொண்டாட்டங்களின் குடியையும் ஓர் அங்கமாக சேர்த்ததில் இருந்து எல்லாமே தொடங்கிவிட்டது.

குடும்பத்தில் யாரும் குடித்திருந்தால் வீட்டின் பின்வாசல் வழியாக வீட்டிற்குள் வருவார்கள். இப்போது அந்த வீட்டில் யார் குடிக்கவில்லையே அவர்தான் வீட்டின் பின்வாசல் வழி வருகிறார். ஏனெனில் வீட்டில் வாசலில் அமர்ந்து ஒரு குடும்பமே குடித்து கொண்டு இருக்கிறது.

இதை படித்துவிட்டு "இவ்வளவு சொல்றியே நீ குடிப்பியா குடிக்கமாட்டியா?" என கேட்பார்களே தவிர தாங்கள் ஏன் குடிக்கிறோம் அதனால் எதையெல்லாம் மெல்ல மெல்ல இழக்கிறோம் என யோசிக்க மாட்டார்கள்.

குடிப்பதால் குடிக்கின்றவர்கள் செத்துப்போவதை விட அதற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாதவர்கள்தான் ஆங்காங்கே இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் துயரத்தின் உச்சம்.

ஒருவன் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுகிறான். சாலையில் விபத்து ஏற்படுகிறது. குடித்தவனுக்கு போதைகூட தெளியவில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் அந்த வழியாக பல கனவுகளுடன் வீட்டில் தனக்காக காத்திருக்கும் குழந்தைகளுடன் தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் குடும்பத்தின் எதிர்ப்பார்ப்புடன் வந்து கொண்டிருந்தவன் அந்த விபத்தில் இறக்கிறான். மருந்துக்கு கூட குடிக்காதவன். குடித்த ஒருவனால் விபத்துல் சிக்கி இறந்து போகிறான்.

அவ்வளவுதான் இறந்தவன் கதை முடிந்துவிட்டது. குடித்தவன் சட்டத்தின் முன் நிற்கிறான். சில சமயம் தண்டனை கிடைக்கிறது. சில சமயம் யாரும் எதிர்ப்பாராத தீர்ப்பும் கிடைக்க வாய்ப்புண்டு.

ஆனால் ஓர் உயிரை இழந்த அந்தக் குடும்பத்தின் நிலை? வாழ்நாள் முழுக்க துயர்தானே.

என்னிடம் ஒரு முட்டாள்த்தனமான யோசனை இருக்கிறது. சரி, வேண்டாம் இப்படி சொல்கிறேன் சினிமாத்தனமான ஒரு யோசனை இருக்கிறது.

இப்படி இறந்து போனவரால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பையும் குறிப்பிட்ட காலம் வரை அந்தக் குடும்பத்திற்கு தேவைப்படும் பிள்ளைகளுக்கான கல்வி செலவு, ஆரோக்கியத்திற்கான செலவு, காப்பீட்டு கட்டணம், வீட்டு வாடகை, வாகனத்திற்கான மாத கட்டணம் என அவற்றை கட்ட வேண்டிய முழு பொறுப்பையும் குடித்து வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவனின் குடும்பமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எவனோ குடித்து எவனையோ கொன்றதற்கு ஒரு குடும்பமே பொறுப்பு எடுக்க வேண்டும என கோவம் வருகிறது தானே. வரட்டும் அந்தக் கோவத்தை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். பயன்படும்.

தன் குடும்பத்திலேயே ஒரு மகனாக அண்ணனாக தம்பியாக அக்காவாக கணவனாக இப்படி பல ஆகக்களைச் சேர்த்து கொள்ளுங்கள்.

இப்படி குடித்து நாசமாய்ப் போவதைத் முதற்கட்டமாக தடுக்காதவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள்தானே. அப்படியிருக்க அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களும்தானே பொறுப்பெடுக்க வேண்டும்.

அல்லது ஒரு குடிகாரனை வீட்டில் வளர்க்காமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அளவு தெரிந்து குடிக்க பழக்கியிருக்க வேண்டும்.

இப்போது கூட பாருங்களேன். குடிப்பவனுக்கு அளவு தெரிய வேண்டும் எனதான் முடிக்கின்றேன். முற்றாக குடிக்காதே என சொல்ல முடியவில்லை. நிலமையை அப்படித்தான் உருவாக்கி இருக்கிறோம்.

மார்ச் 30, 2026

அப்படி என்னதான் எழுத வேண்டும்?


இன்னும் சிறுகதைகளைப் பற்றி எழுதவில்லை. அதற்குள் நான்கு பக்கங்கள் தாண்டிவிட்டன. என்னதான் எழுதுகிறேன். அப்படி என்னதான் எழுத வேண்டியுள்ளது.?

நடுகல்.காம் இணைய பக்கத்தில் ஏப்ரல் மாத 'மாதம் ஒரு மலேசிய புத்தகம் தொடர் 16-ல்' நீங்களும் வாசித்து தெரிந்து கொள்ளலாம்...

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மார்ச் 29, 2026

புத்தகச்சிறகுகள் - 6


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 6' வெளிவந்துள்ளது.
புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான டாக்டர் மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் குறித்து எழுதியுள்ளேன்.

இனி ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்த 'புத்தகச்சிறகுகள்' எனும் எனது தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.
வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.

வாசிப்போம்...
நேசிப்போம்...
வளர்வோம்...

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

வாசிப்பில்



'என்னதான் நான் ஏனைய பெண்களுக்கு பூக்களைக் கொடுத்துப் பழகியிருந்த போதிலும், அவளுக்காகத்தான் பூச்செடிகளை வளர்க்கவும் பழகினேன். அது எனக்கே வியப்பாக இருக்கிறது, இப்போதும்'
- ஆகம் நாவலிலிருந்து.

மார்ச மாத புத்தக வாசிப்பை நிறைவு செய்யும் நாவல்.

'ஆகம்'. எழுத்து மனுஷா ப்ரபானி திஸாநாயக்க.
சிங்கள நாவல். எம்.ரிஷான் ஷெரீப்பின் தமிழாக்கம்.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மார்ச் 28, 2026

- சும்மாவா -

நடுகல்.காமின் ஏப்ரல் மாத தொடர்களை எழுதி சரிபார்த்து கொண்டிருக்கும் போது 'ஹெண்ட் மேட் ஐஸ் கிரீமென' இதனை இல்லாள் கொடுத்துவிட்டு போனார்.

போனவர் சும்மா போகவில்லை. இந்த ஐஸ்கிரீமில் என்னென்ன சேர்த்திருக்கிறார் என சொல்ல வேண்டும் என்றார்.

ஒருமுறை ஆரஞ்சு போலவும், மறுமுறை மாங்காய்ப் போலவும் இன்னொரு முறை புளிப்பாகவும் இருக்கிறது. எதைச் சொன்னாலும் 'இதுகூட தெரியலயா...!?' என திட்டத்தான் போகிறார்.

"என்ன ருசியா இருந்தா என்ன... நீ சமைச்சா எல்லாமே ருசிதானே.." அப்படின்னு சொல்லி வழக்கம் போல சமாளிச்சாதான் உண்டு போல.

பின்ன, சும்மாவா நாங்கல்லாம் ஊருக்குள்ள எழுத்தாளர்களா இருக்கோம்....?

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


மார்ச் 22, 2026

- பெரிதாக ஒன்றுமில்லைதான் -


காலையிலேயே ஒரு சிட்டுக்குருவி வந்திருக்கிறது. தனியாக வந்திருக்கும் சிட்டுக்குருவியை பல நாட்கள் கழித்துதான் பார்க்கிறேன். கூட்டமாக பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டதுதான்.

எனக்கு அதை தெரியவில்லை. அதற்கும் என்னைத் தெரிந்திருக்கப் போவதில்லை.

கொஞ்ச நேரம், நாங்கள் இருவரும் தூரத்தில் இருந்தபடியே ஒருவரையொருவர் பார்த்து கொண்டே புரிந்து கொள்ள முயன்றதுபோல நான் கண்களைச் சுருக்கி அதைப் பார்க்கவும், சிட்டுக்குருவி தலையை அங்கும் இங்கும் ஆட்டியபடி அதன் முழு உடலும் அதிர்ந்தபடி என்னை பார்த்தபடியும் இருக்கிறது.

இதில் பெரிதாக ஒன்றுமில்லைதான்.

அந்தச் சிட்டுக்குருவி என்னை நலம் விசாரிக்க எங்கிருந்தோ பறந்து என் வீட்டிற்கு வந்ததாய் நான் நினைத்து என் உடல் அதிராதவரை, இதில் பெரிதாக ஒன்றுமில்லைதானே....



Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்