பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

மார்ச் 20, 2026

- வெண்ணிற சிறகுகள் -


அதிகாலை மணி 4.00. இரவு சாப்பிடவில்லை. அதிக தண்ணீர் குடித்திருந்தேன். தூக்கம் கலைந்தது அவசரமாக எழுந்து கழிவறைக்கு சென்றேன்.

செய்ய வேண்டியதை செய்து கொண்டிருக்கும் போது கண்களில் எல்லாம் மங்கலாகத் தெரியத் தொடங்கின. தலைக்குள் ஏதோ வேகமாக ஒடுவது போல தோன்றியது. உடல் அதிர்ந்தது. எனக்கு முன்பமே இப்படி நடந்திருப்பதால், சமாளித்துவிடலாம் என அலட்சியமாக உடலை அசைத்தேன். 

அங்குதான் தவறு நடந்திருக்க வேண்டும்.

சுற்றிலும் இருள் சூழ்ந்துவிட்டது. தூரத்தில் மட்டும் ஒரு புள்ளி வெளிச்சம் தெரிந்தது. ஏதோ ஒன்று என்னை பிடித்து இழுத்தது. யாரோ ஒருவரின் கால் பாதம் தெரிகிறது. சிறுவயதில் கடலில் குளித்து மூச்சு திணறியது நினைவுக்கு வந்தது. மூச்சுவிட சிரமமானது.

வானொலி அறிவிப்பு அறையில் ஒவ்வொரு பாடல்களாக ஒலியேற்றி கொண்டிருக்கிறேன். நேயர் ஒருவரும் நானும் சிரிக்கின்றோம். 

அம்மாவிடம் திட்டு வாங்கி அப்பாவிடம் ஓடுகிறேன். என்னை அடித்துவிட்டு அண்ணன் சிரிக்கிறான். தங்கை அவள் கடித்த கொய்யா பழத்தை எனக்கும் கொடுக்கின்றாள். 

முதன் முதலில் கோலாலும்பூர்க்கு தனியாக வந்து இறங்குகிறேன். யாரோ என்னை சத்தமாக கூப்பிடுகிறார்கள். 

நான்கு பேர் என்னை வழிமறித்து தாக்குகிறார்கள். என் சங்கிலி எனது பணப்பை எல்லாவற்றையும் பறித்து தலைக்கவசத்தால் என்னை அடிக்கிறார்கள்.

பெரிய லாரி என்னை மோதி தள்ளுகிறது. நான் மீண்டும் எழுந்து நிற்கிறேன். என் முதுகில் இறக்கை முளைக்கிறது.

சொல்ல முடியாத வேதனையில் சுருண்டு விழுகிறேன். 

எனது வீவா காரில் தனியே அமர்ந்து கத்தியபடி அழுகிறேன்.

என் நானே பார்க்கிறேன். என்னை விட்டு மெல்ல மெல்ல மிதந்தபடி நகர்கிறேன். பழக்கமான குரல் தூரத்தில் கேட்கிறது.

தூரத்தில் தெரிந்த ஒளி இப்போது எனக்கருகில் வந்துவிட்டது. அவ்வொளி என் மீது படவும் என் வெள்ளைநிற இறக்கைகள் ஜொலிக்கத் தொடங்குகிறது.

தெரியாத முகங்கள், புரியாத அனுபவங்கள், தெரியாத வலிகள் என எல்லாமே என்னைச் சுற்றுவதாக தோன்றுகிறது. எல்லாமும் சுழலாக என்னை சுற்றியபடி மெல்ல மெல்ல என்னை கரைக்கிறது.

அந்தச் சத்தம் தூரத்தில் இருந்து கேட்டபடி இருக்கிறது.

பொம்மியிடம் மடியில் படுத்திருக்கிறேன். என் தலையில் உள்ள வெள்ளைமுடியை ஒவ்வொன்றாக பிடுங்குகிறாள். அருகில் யார்யாரோ அமர்ந்து கேலி செய்கிறார்கள்.

என் அலமாரி முழுக்க புத்தகங்கள். புதிய முகங்களில் சில ஒவ்வொரு புத்தகமாக எடுத்து பார்க்கிறார்கள்.

தொலைக்காட்சியில் என்னை பார்த்ததும் எல்லோரும் உற்சாகமாகிறார்கள்.

நான் ரொம்பவும் மகிழ்ச்சியடைகிறேன். இதுவரை இப்படியொரு அனுபவம் எனக்கு நேர்ந்ததில்லை. 

அந்த ஒளி என்னை முழுக்கவும் நனைத்தது. இறக்கையை விரிக்கலானேன். கால் அந்தரத்தில் மிதக்கிறது. இரு கைகளையும் யாரையோ அணைப்பது போல விரிக்கின்றேன்.

பழக்கமான குரல் என்னை மெல்ல மெல்ல அழைத்து என்னருகில் வருகிறது.
 
இதுவரை இல்லாத இன்பம். சிரிக்கின்றேன். ஏதோவொரு சுகம் என்னை ஆட்கொள்கிறது. உடல் லேசாகிறது. ஒளி என் கண்களைக் கூச செய்கிறது. ரொம்பம் ரம்மியமான ஓர் உன்னத அனுபவம் மெல்ல மெல்ல அரங்கேறுகிறது.

பழக்கமான குரல் மிகவும் சத்தமாக அழைக்கிறது. தூரத்திலிருந்து கேட்டுகொண்டே அருகில் வந்துவிட்டது. அந்தக் குரல் கேட்க கேட்க என் முதுகில் முளைத்திருந்த இறகுகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. என் மேல் படர்ந்து ஒளியும் மெல்ல மெல்ல மறைகிறது.

கண்களை விழித்து பார்த்தேன். கத்திகதறியபடி இல்லாள் என் முன் நின்றிருந்தாள். 

முகமெல்லாம் பதட்டமாய் கண்முழுக்க கண்ணீராய் பதறியபடி இருந்தாள்.

"நீ இங்க என்னம்மா பண்ற...? ஏன் அழுவுற....!!?" என்றுதான் பேச தொடங்கினேன். 

ஏனெனில் எனக்கு அங்கு நடந்த எதுவுமே புரியவில்லை. கழிவறைக் கதவின் தாழ்பாளும் உடைந்து கிடந்தது.

என் ஒருபக்க உடல் முழுக்க ஈரமாக இருக்கிறது. நின்று கொண்டிருக்கும் என் ஒரு பக்க தலையிலும் கன்னத்திலும் தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

நடந்தது என்னவென்று நடுங்கியபடி இல்லாள் சொல்ல தொடங்கினாள்.

கழிவறைக்கு சென்ற நான், அங்கேயே மயங்கி விழுந்துவிட்டேனாம். நான் விழுந்த சத்தம் கேட்டு அவரும் தூக்கத்தில் இருந்து விழித்து வந்திருக்கிறார். கதவை திறக்க முடியாதபடி உள்ளே வாசலில் விழுந்து கிடந்திருக்கிறேன்.

ரொம்பவும் சிரமப்பட்டு கதவை பலம் கொண்டு தள்ளித்தள்ளி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்திருக்கிறார். 
 
 மயங்கி கிடந்த என்ன அவர்தான் தொடர்ந்து கத்தி அழைத்திருக்கிறார்.  சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து நின்றிருக்கிறேன்.

 
கழிவறைக்குள்ளே வந்ததும், இப்போது நிற்பதும் மட்டுமே எனக்கு நினைவில் இருக்கிறது. 

இதற்கிடையில் எங்கெங்கோ போயிருக்கிறேன் எதுவுமே எனக்கு புரியவில்லை.

இது மூன்றாவது முறை. இப்படி மயங்கி விழுந்தது. கடந்த முறை விழுந்த போது ஏற்பட்ட அனுபவத்தை விட இன்று வேறாக இருந்தது.

அறை விளக்கை தட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்தோம். பொம்மி தூங்குகிறாளாலா என இருவரும் பார்த்து கொண்டோம்.

இல்லாள் இன்னமும் அழுதபடிதான் இருக்கிறார். எனக்கு சட்டென ஒரு பயம். தலையில் இருந்து கால்வரை உள்ள ஈரத்தை துடைத்தேன். கையில் எல்லா இடத்தையும் தடவியபடி காயம் ஏதும் இருக்கிறதா என பார்க்கலானேன். 

நல்லவேளையாக காயங்கள் எதுவும் வெளியில் தெரியவில்லை. கழிவறை கதவை தள்ளி திறக்கும்போது கீழே படுத்திருந்த என் முதுகில் பட்ட சிறிய சிராய்ப்பு மட்டும் தகதகவென எரிச்சலாய் இருந்தது .

நின்றபடி நெடுஞ்சான்கிடையாக தொப்பென விழுந்த எனக்கு பெரிய காயம் எதுவும் இல்லை என்பது ஆச்சயமாக இருந்தது. 

திரும்பத்திரும்ப காயங்கள் உள்ளதாவென தடவித்தடவி பார்த்தபடி இல்லாளை சமாதானம் செய்தேன்.

அவர்தான் ரொம்பவும் பயந்துவிட்டார். நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்பதை அவரிடம் நிரூபிக்க அதிகம் நேரம் எடுத்தது.

ஆனால் நான் சொல்ல வந்தது இதுவல்ல.!

இவ்வளவுக்கு மத்தியிலும் ஏதோ ஒன்று நம்மை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறது என்றால் நமக்கன செய்யவேண்டிய  காரியங்கள் ஏதோவொன்று இருப்பதாகவே தோன்றுகிறது.

இத்தனைக்கும் சில நாட்களாக நான் ரொம்பவும் உடைந்து போயிருந்தேன். சுற்றி நடக்கும் சிலவற்றை பார்க்கும் போது அவற்றை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என் யோசனையை நான் தனிப்பட்ட முறையில் செய்வதையெல்லாம் சிலர் அவர்களிடம் இருக்கும் ஊடகங்களில் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நான் தெரிவதில்லை. 

அவரவர்க்கு வாய்ப்பதுதானே வாய்ப்பு என என்னை சமாதானம் செய்து கொண்டேன்.

இன்று நடந்த இந்தச் சம்பவம், இவற்றைவிட பெரிய காரியம் ஒன்றுக்கு என்னை தயார் செய்வதாகவே தோன்றுகிறது.

நமக்கு என்ன நடக்கிறது என்பதைவிட நாம் என்ன செய்கிறோம்; நம் செயல்களை எவ்வளவு ஆழமாக நாம்  நம்புகின்றோம் என்பதுதான் முக்கியம்.

தூரத்தில் தெரியும் வெளிச்சத்தை, என் வெண்ணிற சிறகு கொண்டு பறந்தபடி அடைய இன்னும் காலம் இருக்கிறது. அதுவரையுமே நான் வாழும் காலம் இருக்கிறது என்று நம்பியபடி நானுமே என் கண்ணீரைத் துடைத்து கொள்கிறேன்.

இங்கு காரண காரியம் இன்றி எதுவுமே நடப்பதில்லைதான். நம்புவோம் நமக்கான காரியங்களை நடத்துவோம்..


மார்ச் 16, 2026

நாவல் வாசிப்பு 2026-1

இந்த ஆண்டு தொடங்கி வாசித்து முடித்த முதல் நாவல்,  எஸ்.ராமகிருஷ்ணனின் 'உப பாண்டவம்'.

"சூதின் முன் அமர்ந்த எவரும் சமமானவரே. அது பேதம் அறிவதில்லை. அது சாவின் முற்றம். அங்கே முன்விதிகள் எதையும் தீர்மானிப்பதில்லை."
(நாவலில் இருந்து)

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மார்ச் 15, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 5


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 5' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான அரு.சு.ஜீவானந்தனின் சிறுகதைகள் குறித்து எழுதியுள்ளேன். 
கட்டுரையின் நிறைவு பகுதி இது.

அடுத்து வாரம் இன்னொரு மலேசிய எழுத்தாளரின் புத்தகத்தைப் பற்றிய வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன்.

இனி ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்த 'புத்தகச்சிறகுகள்' எனும் எனது தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும். 

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.

வாசிப்போம்... 
நேசிப்போம்... 
வளர்வோம்...
அன்புடன் 
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மார்ச் 08, 2026

புத்தகச்சிறகுகள் - 4


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 4' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான அரு.சு.ஜீவானந்தனின் சிறுகதைகள் குறித்து எழுதியுள்ளேன்.

கட்டுரையின் இரண்டாம் பகுதி இத்தொடரில் வெளிவந்துள்ளது.

இனி ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்த 'புத்தகச்சிறகுகள்' எனும் எனது தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.

வாசிப்போம்...
நேசிப்போம்...
வளர்வோம்...

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மார்ச் 03, 2026

- ஆகக்கடைசியாய் ஓர் அதிசயம் -


எது அதிசயம் ?
கடலை பிளந்து நடப்பதா
தூணை உடைத்து தோன்றுவதா
அசரீரியாய் அழைப்பதா

இல்லை
எதுவும் இல்லை

குழந்தைகளைச் சுடாத
துப்பாக்கிகளும்
குழந்தைகளை கொல்லாத
வெடிகுண்டுகளுமே

இவ்வுலகில்
தோன்ற வேண்டிய
ஒரேயொரு
அதிசயம்

எந்தக் கடவுளாலும்
நிகழ்த்த முடியாத
ஆகக்கடைசியான
அதிசயம்
இது ஒன்றுதான்....

#தயாஜி

- உலகின் ஓயாத ஒப்பாரி -


இவ்வளவு
சின்னச்சின்ன குழிகளைத்
தோண்டுவதற்கு
ஏன் 
இத்தனை இத்தனை
துயரை 
நாம் சுமக்க வேண்டியுள்ளது

வெடித்து சிதறியது
அவர்களின் சின்னஞ்சிறு
உடல்கள்தானே
என 
கடந்துவிடுகிறார்கள்
அதிகாரங்களை ஆள்கிறவர்கள்
 
இந்த உலகை
தன் தூய 
அன்பின் குதூகலத்தில்
பார்த்தக் குழந்தைகளின்
கனவுகள் 
எவ்வளவு பெரியது
எதுவரை பறந்தது

ஒருபோதும் 
ஓயாத இந்த ஒப்பாரிகள் 
ஏன் 
நம் காதுகளுக்கு மட்டுமே 
கேட்கிறது

#தயாஜி

- வண்ணம் மாறாத இரத்தம் -


அந்தப் 
பள்ளிக்கூட வாசலில்
ஏதோ ஒரு குழந்தையின்
புத்தகப்பை மட்டும்
தனித்திருக்கிறது
பல நாட்களாக

தனித்திருக்கும்
அந்தப் புத்தகப்பையில்
வழிந்து 
பின் காய்ந்து போயிருப்பது
 
தன் சக நண்பர்களின்  
பெயர் கூட 
இன்னும் 
முழுதாய் மனப்பாடம் ஆகாத 
குழந்தைகளின்

என்றுமே வண்ணம்
மாறாத இரத்தம்

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்