பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 04, 2020

ஆகாயம் தொட்ட மரம்


    தங்களின் மூதாதையர்கள் அதில் வாழ்வதாக நம்புகிறார்கள். தினமும் அந்த மரத்தை வணங்குவதுதான் முதல் வேலை. தேவைக்கு ஏற்ற மழையும் தேவையான உணவும் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டே இருந்தன. அந்த மரம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

   வியாதிகள் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. அந்த இலைகளைத் தொட்டு வீசும் காற்று அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அந்த மரத்தைச் சுற்றிலும் வந்திருக்கும் செம்மண் வளையத்தில் வந்துவிட்ட எந்த மிருகத்தையும் அவர்கள் வேட்டையாடுவதில்லை. 

   அதைவிட அதிசயம் அங்கு நுழைந்து நிற்கும் எந்த மிருகமும் அங்கு நடமாடும் யாவரையும் சீண்டுவதில்லை. ஒரு முறை அங்கு நுழைந்துவிட்ட காண்டா மிருகம், ஒரு முயல் போல தன்னை நினைத்து சில மணி நேரம் அந்த செம்மண் வளையத்தில் உள்ள குழந்தைகளிடம் விளையாடிவிட்டுச் சென்றது.

   வான் தொடும் அந்த மரத்துடன் வாழ்வதை அவர்களின் வரமாக நினைத்தார்கள். அவர்களின் வாழ்வும் அதுதான். அவர்கள் வணங்கும் கடவுளும் அதுதான். 

    நாகரீகமும் சுகாதாரமும் இல்லாத அவர்கள் மீது அரசாங்கள் ஒரு நாள் அக்கறை காட்டியது. அவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டது. அவர்கள் வாழ்வில் முன்னேற பல திட்டங்களை வகுத்தது. 

இன்று,

    அந்த மரம் முளைத்திருந்த இடத்தில் ஒரு ரசாயண தொழிற்சாலை வந்திருக்கிறது. இதற்கு முன் அங்கு மனிதர்கள் வாழ்ந்த எந்த அடையாளத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

#தயாஜி



Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்