பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 23, 2023

சிறகுகளின் கதை நேரம் 3 – ஆதி.இராஜகுமாரனின் ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’

     



    சிறகுகளின் கதை நேரம்சிறுகதைக் கலந்துரையாடல் சந்திப்பில் மூன்றாவது சந்திப்பு சிறப்பாய் நடைபெற்றது. இம்முறை மலேசிய எழுத்து ஆளுமைகளில் முக்கியமானவரும் எங்களின் முன்னோடிகளில் ஒருவருமான ஆதி.இராஜகுமாரனின் இரவுகள் வெளிச்சமானவை அல்லஎன்னும் சிறுகதையைக் குறித்து கலந்துரையாடினோம்.

முதல் இரண்டு நிகழ்ச்சிகளைக் காட்டிலும் கூடுதலான வாசகர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். குறிப்பாக மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவானை சொல்லலாம். அதோடு எழுத்தாளரும் மருத்துவருமான இனிய நண்பன் ராஜேஸ், தொடர்ந்து பலருக்கு வழிகாட்டியாக இருந்துவரும் எழுத்தாளர்களான வாணிஜெயம், உமாதேவி வீராசாமி, சாந்தா காளியப்பன் ஆகியோரையும் சொல்ல வேண்டும்.

நம் நாட்டைப் பொறுத்தவரை நமது மூத்த எழுத்தாள்களை வாசிக்காதது ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் யார் என்றே தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனை குறையாக சொல்லவில்லை கலைய வேண்டிய குறைபாடாகவே இங்கு சொல்ல வேணடியிருக்கிறது.  அதே போல வெறுமனே வார மாத இதழ்களுக்காகவும் ஞாயிறு பதிப்பிற்காகவும் எழுதி குவித்தவர்களையும் குவிப்பவர்களையும் இந்த மூத்த எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்க்கலாமா என தெரியவில்லை. ஏனெனில் அவர்களின் எழுத்தில் அந்தந்த இதழ்களுக்கான தேவைகள் இருக்கின்றதே அன்றி வாசகர்களுக்கான எந்தத் திறப்புகளும் இருப்பதில்லை. இதில் ஒன்றிரண்டு மாறுபடலாம் மறுப்பதற்கில்லை. இதழ்களுக்கு எழுதாமல் நேரடியாக இணையத்தில் எழுதுகின்றவர்களும் தத்தம் சமூக ஊடங்களில் குறிப்பாக தனது வலைப்பூவில் (ப்ளாக்கில்) எழுதின்றவர்களும் புத்தகமாக தங்களின் படைப்புகளை வெளியிட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஆதி,இராஜகுமாரனின் சிறுகதைகள் தொகுப்பை வாசித்தேன். அதையொட்டிய என் வாசிப்பனுபவத்தை என் வலைப்பூவில் எழுதியிருந்தேன். அதிகமானவர்களின் பார்வைக்கு அது சென்றது. அதில் 16 சிறுகதைகள் இருந்ததன. ‘மழைச்சாரல்’ குழுவினர் அதனை சிரத்தையெடுத்து தொகுத்து வெளியீடு செய்திருந்தார்கள். இவ்வேளையில் அவர்களுக்கும் அக்குழுவின் நிறுவனர் கவிஞர் வாணிஜெயம் (மீராவாணி)க்கு இவ்வேளையில் என் நன்றி.

அத்தொகுப்பை வாசித்ததும் அதிலுள்ள பல கதைகள் வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டிருந்தன. சில புது முயற்சிகளும் அதில் இருந்தன. இன்னும் சொல்லப்போனால் 1984ஆம் ஆண்டு முதல் பிரசுரம் வெளிவந்தது. இத்துனை ஆண்டுகள் கழித்தும் வாசிப்பில் அவை புதுமையாக இருந்தன. அந்தத் தொகுப்பு குறித்து விரிவாகவே என் வலைப்பூவில் எழுதியிருந்தேன். அதன் லிங்க் https://tayagvellairoja.blogspot.com/2020/04/20209.html

அதில் ஒரு சிறுகதை; ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’. அதனை வாசித்து நான் எழுதியக் குறிப்பை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். ‘சில கதைகளை  மட்டுமே வாசித்த உடன் அருகில் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றும். இக்கதை அந்த வகையைச் சேர்ந்தது………’

மீண்டும் இக்கதையை எங்களில் ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதைக் கலந்துரையாடலில்  பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.

பங்கெடுக்கின்றவர்கள் ஒவ்வொருவரும் சிறுகதையை வாசித்துவிட்டு வரவேண்டும்; சிறுகதைக் குறித்து சில வார்த்தைகளாகவு பகிரவேண்டும் என்பதைத் தவிர வெறேந்த நிபந்தனைகளும் இல்லை.

இன்று அதிகமானவர்கள் கலந்து கொண்டது ஆதி.இராசகுமாரன் மீதான மரியாதை என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.

சங்கர் ஆரம்பித்தார். அவர் இக்கதையை உளவியல் ரீதியில் அனுகலாம் என்றார். இரு கதாப்பாத்திரங்களிலும் எது அதிக இரக்கத்தை காட்டுகிறது என மறைமுக போட்டி இருக்கிறது என்றார். அடுத்தவர்களுக்கு தங்களை நல்லவர்களாகக் காட்டுவதில்தான் மனிதர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்று கூறினார். இளம் தலைமுறையினரிடம் இப்படியா பார்வை வந்திருப்பது பாராட்டத்தக்கது.

அவரைத் தொடர்ந்து டரிஷன் பேசலானார். தலைப்பு அவருக்கு குழப்பத்தையும் அது ஏதோ ஒன்றை தனக்குள் மறைத்திருப்பதை சுட்டிக்காட்டினார். தாழ்வு மனப்பான்மை ஒரு மனிதனின் இயல்பு வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும் என கதையில் இருந்து எடுத்துச்சொன்னார்.

தொடர்ந்து; மூத்த படைப்பாளியான கோ.புண்ணியவான் பேசலானார். அவர் இக்கதையில் முழு குற்றத்தையும் ஆணில் மீதே உள்ளது என்றார். ஆணில் மனம் எப்படியெல்லாம் சந்தேகத்துக்கு ஆளாகும் என்றால் அவரின் பேச்சு பங்கேற்பாளர்களை கொஞ்சம் குழப்பமடையச் செய்தது.

ஏறக்குறைய அவரின் கருத்தோடு மருத்துவர் ராஜேஸும் ஒத்துப்போனார். இக்கதையின் ஏற்பட்ட திருப்பத்திற்கு இந்தச் சமூகம் முக்கிய காரணம் என்றார். இச்சிறுகதையின் மொழி தன்னைக் கவர்ந்ததாகவும் சொன்னார்.

இடையில் கோ.புண்ணியாவன்; ஆதி.இராஜகுமாரன் குறித்த சில சிறப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

அடுத்தவர் பிருத்வி. தலைப்பில் ஏதோ ஒன்று மறைந்திருப்பதை அவரும் சுட்டிக்காட்டினார். இக்கதையின் முடிவில் ஏற்படும் மரணத்தை கணக்கை யார் மீது எழுத வேண்டும்; நிச்சயம் அதற்கு குற்றவாளி இக்கதையில் வரும் இதர கதாப்பாத்திரங்கள்தான் என்றார். சூர்யா நடித்த பேரழகன் படத்திற்கும் இந்தக் கதைக்குமான ஒற்றுமை வேற்றுமைகளையும் விளக்கினார்.

அடுத்ததாக, உமாதேவி வீராசாமி பேசலானார். அவர் இக்கதை குறித்து பேசியவர்களின் கருத்தோடு ஒத்துப்போவதாகச் சொன்னார். ஆனால் கோ.புண்ணியவான் மற்றும் ராஜேஸ் ஆகியோருடனான கருத்தில் உடன்படவில்லை எனறும் எதைவைத்து நாயகன் மீது இவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள் என வினவினார்.

அது ஒரு விவாதத்தைத் தொடங்கியது. அவரவர் அவர்களின் பார்வையில் இருந்து சிலவற்றை பகிர்ந்து கொண்டார்கள்.

ஒரு சிறுகதை; அதனை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையைக் கொடுப்பது அதன் பலம். அதிலிருந்து ஒற்றைப்புள்ளியில் அச்சிறுகதையை வாசகர்கள் இணைக்க வேண்டியது வாசிப்பின் அவசியம் என்பதை வழியுறுத்தினேன்.

கவிஞர் வாணி ஜெயம், இக்கதை எழுதப்பட்ட பின் அன்றைய காலக்கட்டத்தில் ஆதி.இராஜகுமாரனுடன் நிகழ்ந்த உரையாடல் குறித்து பகிர்ந்து கொண்டார். ஓர் எழுத்தாளரின் கதையும் அவருடனான உரையாடலும் அவ்வளவு சீக்கிரத்தில் வாசகர்களால் மறக்க முடியாதுதான்.

   என் பார்வையில், இரவுகள் வெளிச்சமானவை அல்ல’. சில கதைகளை மட்டுமே வாசித்த உடன் அருகில் இருப்பவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளத்தோன்றும். இக்கதை அந்த வகையைச் சார்ந்ததுதான். நாம் பிறரின் நன்மைக்காக செய்யும் செயல் அவர்களுக்கு பெரும் தீமையைக் கொடுத்துவிடவும் கூடும் என்பதுதான் கதை. அவளுக்கு தன் உருவ அமைப்பால் திருமணம் தடுங்களாகிப் போகிறது. ஆனால் அவளுக்கு பார்வையற்ற ஒருவரை திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. முதலில் மனம் வலித்தாலும்  பின்னர் தன்னைத்தானே சமாதானம் செய்துக் கொண்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறாள். தனக்கு பார்த்திருக்கும் பெண் மிகவும் அழகானவள் என்பது போன்ற விபரங்கள் மாப்பிள்ளைக்குக் கிடைக்கிறது. பார்வையற்ற ஒருவனை திருமணம் செய்து அந்த பெண் அவள் வாழ்வை வீணாக்க வேண்டாம். அவளாவது நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என திருமணத்தை வேண்டாம் என்கிறார். ஒரு பார்வையற்றவருக்குக் கூட தனக்கு வாழ்க்கைத் தர முன்வரவில்லையே என அப்பெண் தற்கொலைச் செய்துக் கொள்கிறாள். சமயங்களில் பிறருக்கு நாம் செய்யும் நன்மைகள் நமக்கே பெருந்துயரத்தைக் கொடுத்துவிடுகின்றன.

நிச்சயம் வாசிக்கப்படவேண்டிய எழுத்தாளர்களின் பட்டியலில் ஆதி.இராஜகுமாரனின் பெயர் இருக்கிறது. இன்று நம்மிடையே அவர் இல்லாவிட்டாலும் அவரின் எழுத்துகள் வழி நாம் அவர்களோடு உரையாடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.

‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதைக் கலந்துரையாடலில் மலேசிய படைப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கின்றோம். உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் இணையம் வழி எங்களின் கலந்துரையாடலில் பங்கு கொண்டு உரையாடலாம்.

இவ்வாண்டின் நிறைவு நிகழ்ச்சி இதுதான்.

ஜனவரியில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு மணி எட்டுக்கு சிறகுகளின் கதை நேரம் இடம்பெறும். முறையே நம் இலக்கிய முன்னோடிகளின் சிறுகதை, மலேசிய எழுத்தாளர்களின் கதை, புதிய எழுத்தாளர்களின் கதை என திட்டமிட்டுள்ளோம். நாம் தொடர்ந்து உரையாடுவோம். ஏனெனின் சிறகுகளின் கதை நேரம் முழுக்க முழுக்க உரையாடுவதற்கான புதிய களம்.

அன்புடன் தயாஜி 

டிசம்பர் 18, 2023

இரட்சகன்; நடந்தது என்ன ? - 1

 

‘சார் நீங்க வரலையா?’, ‘ஐயா உங்களை சந்திக்க ஆவலாக வந்தோம்?’, ‘புத்தகத்தில் உங்கள் கையெழுத்து வேண்டும்?’, ‘நீங்கள் ஏன் மாணவர்களின் கதைகளுக்கு அறிமுக உரை எழுதவில்லை?’, ’மகன் உங்களுக்காக பரிசு கொண்டு வந்திருந்தார்’, ’உங்கள் உழைப்பு முக்கியமான ஒன்று’, ‘உங்களால்தான் மகன்/மகள் கதை எழுதவே ஆரம்பித்தார்’ போன்ற அழைப்புகளும் செய்திகளும் வந்தவண்ணம் இருந்தன. 

அதற்கு காரணம்; ‘இரட்சகன்’ மாணவர்களின் குறுங்கதைத் தொகுப்பு வெளியீட்டில் நான் இல்லாததுதான்.

இப்பதிவை நான் தொடர்ந்து எழுதுவதற்கு முன் ‘இரட்சகன்’ குறுங்கதைத் தொகுப்பில் கதைகள் எழுதிய மாணவர்களுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்கிறேன். இந்த யோசனை தொடங்கிய போது நான் வாசித்த, எனக்கு கிடைத்த அறுபதற்கும் அதிகமான கதைகளை எழுதிய  மாணவர்களுக்கும் என் வாழ்த்துகள். இரு தரப்பும் தொடர்ந்து எழுதுங்கள். அதுதான் அவசியம். இம்முறை உங்கள் கதைகள் தேர்வாகவில்லை என்றாலும் அடுத்த முறை நிச்சயம் உங்களால் முடியும் முயலுங்கள்; தொடர்ந்து எழுதுங்கள். 

அதோடு இம்மாணவர்களின் பெற்றோருக்கு; இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கும்  உங்கள் வீட்டிலும் ஓர் எழுத்தாளரை நீங்கள் உருவாக்க ஆசை கொண்டதற்கும் இன்னொரு எழுத்தாளர் என்கிற முறையும் என் அன்பும் நன்றியும்.

தங்கள் பிள்ளைகளை எழுதிய கதைகளை புத்த வடிவில் ஏந்தி மகிழ்ந்திருக்கும் பெற்றோரின் மகிழ்ச்சியை நான் சிதைக்க விரும்பவில்லை. அதற்காக ஒரு தவறான முன்னுதாரணத்தை வளரவிடக்கூடாது அல்லவா?

இதனை நான் எழுதுவதற்கு முன்பாக இக்குறுங்கதை பயிலரங்கில் இதுநாள்வரை நான் பயிற்றுவித்த அனைத்து மாணவர்களையும் ஒரு முறை நினைத்துப் பார்க்கிறேன். இதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பு வருவதையும் நான் விரும்பவில்லை. அந்த கவனத்துடந்தான் இதனை எழுதுகிறேன். 

ஏனெனில் நான் பயிற்றுவித்த இந்த ஒவ்வொரு மாணவர்களும் என் மாணவர்கள் என் நண்பர்கள் என் எழுத்தாளர்கள். அவர்களை அடைக்காப்பது என் நோக்கமல்ல; அவர்களை யாரும் தங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்ற அக்கறை இல்லாமலில்லை.

ஒரு புத்தகம் இலக்கிய படைப்பாக வந்திருக்கிறதா என்று கேட்பதற்கு முன் அடிப்படையில் அது புத்தகமாக தரமாக வந்திருக்கிறதா என பார்க்க வேண்டும். அதற்கு அடிப்படையில் நேர்மை வேண்டும்!

தொடக்கமாக சில கேள்விகளை மட்டும் இப்போதைக்கு கேட்க நினைக்கிறேன். 

முன்னேமே பேசியபடி; புத்தகத்தில் இருக்க வேண்டிய என் வாழ்த்துரையை ஏன் நிராகரித்தார்கள்? என் வாழ்த்துரையை வேண்டாம் என சொல்ல இவர்கள் யார்? அதன் பின்னணி என்ன?

தொடங்கிய நாளிலிருந்து மாணவர்களோடும் அவர்களின் கதைகளோடும் பயணித்த என்னை ஏன் அழைக்கவில்லை? குறைந்த பட்சம் புத்தக வெளியீட்டு அழைப்பிதழையாவது அனுப்பாதது ஏன்?

எத்தனைக் கதைகளை வாசித்திருப்பேன். எத்தனை முறை திருத்தியிருப்பேன். எத்தனை முறை மாணவர்களுடன் இணையம் வழியும் புலனம் வழியும் உரையாடியிருப்பேன். எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவர்களின் இந்தத் தேர்ந்தெடுத்த கதைகளை மீண்டும் ஒருமுறை செறிவாக்கம் செய்யவேண்டும் என சொல்லியிருந்தேன். ஏன் அதனை ஒரு பொருட்டாக சம்பந்தப்பட்டவர்கள் கருதவில்லை.? 

பிப்ரவரி 2022 முதல், தொடங்கிய ‘குறுங்கதை பயிலரங்கம்’ புலனக்குழுவில் 30 அக்டோபர் 2023-ல் “ஏன் வாக்களித்தபடி மாணவர்களின் குறுங்கதை தொகுப்பு இன்னும் தயாராகவில்லை’ என நான் கேட்ட பின்பு, ஒரு மாதத்திற்கும் குறைந்த அவகாசத்தில் அவசர அவசரமாக இந்தத் தொகுப்பை வெளியிட காரணம் என்ன?  

இன்னும் இருக்கின்றன. இப்போதைக்கு இது போதும். சம்பந்தப்பட்டவர்களுக்கும் யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேண்டுமல்லவா ? எடுத்துக்கொள்ளட்டும். 

நட்பையும் நெருக்கத்தையும் தாண்டிதான் நாம் இலக்கியம் பேச வேண்டியுள்ளது. அந்த மனநிலை இல்லாது ஆணவத்தின் அடுக்குகளில் இருந்தால்; அது எத்தனை நாள்கள்தான் தாங்கும்…..


மற்றவை பிறகு….

டிசம்பர் 13, 2023

சிறகுகளின் கதை நேரம் 2 – மா.அரங்கநாதனின் ‘சித்தி’


எங்களின் சிறகுகளின் கதை நேரம்’, சிறுகதைக் கலந்துரையாடலில் இம்முறை எழுத்த்தாளர் மா.அரங்கநாதன் எழுதிய சித்தி என்னும் சிறுகதையைக் குறித்து உரையாடினோம் .இம்முறை எங்களின் இணைய சந்திப்பில்; என்னுடன் சேர்த்து பத்துப்பேர் பங்கெடுத்தார்கள்.

    இரண்டாம் கலந்துரையாடலில் பங்கெடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ‘சித்தி’ சிறுகதைகளைக் குறித்த தத்தம் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில்ம் இச்சிறுகதையை அணுகினோம். ஆமாம்; அவரவர் அனுபவங்களுக்கும் அறிதலுக்கும் உட்பட்டுதானே சிறுகதைக் குறித்த பார்வை விரிவடைகின்றது.

    ஆச்சர்யம் என்னவெனில்; பல கோணங்களில் இச்சிறுகதை அணுகப்பட்டாலும் முடிவாக அதன் மையத்தை ஒவ்வொருவரும் தொட்டார்கள். அவ்விடத்தை அடைந்து அங்கிருந்து இச்சிறுகதையை இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்றார்கள்.

    தொடக்கமாக நான் எனது பார்வையைப் பகிர்ந்து கொண்டேன். தொடர்ந்து நண்பர் அருள் அவருடைய பார்வையை முன் வைத்தார். இதுவரை அருள் பேசி நான் கேட்டதில்லை. என்னதான் முகநூல் பழக்கம் என்றாலும்’ ஒரு சிறுகதைக் குறித்த கலந்துரையாடலில் அவர் பேசி நான் கேட்பது இதுதான் முதல் முறை.

    இச்சிறுகதை எழுதப்பட்ட விதமேகூட கவனிக்கத்தக்கதாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். திரைப்படக் காட்சியை அதனுடன் அவர் ஒப்பிட்டார். எதன் மீது கவனம் வைக்க வேண்டுமோ அதன் மீதே திரைப்பட காட்சி அமைக்கப்பட்டிருக்கும் அல்லவா? அதே போல இச்சிறுகதையும் வாசகன் எங்கே கவனம் வைக்க வேண்டுமோ அங்கேயே அதிக கவனத்தை எழுத்தாளரும் கொண்டுள்ளார் என்றார். இருவேறு மனிதர்களின் அணுகுமுறைகளை அவர் விளக்கினார். தான் விரும்பி செய்யும் செயலில் தனக்கு இருக்கும் மனத்திருப்தியும் அதன் மீது இன்னொருவருக்கு இருக்கு எதிர்ப்பார்ப்பையும் பேசினார்.

    அவரைத் தொடர்ந்து இளம் எழுத்தாளர் அகிபிரியா பேசினார். சிறுகதையை வாசித்தவுடன் அதனை எழுதிய எழுத்தாளர் மா.அரங்கநாதன் குறித்தும் அவர் தேடி வாசித்திருக்கின்றார்.  உண்மையில் இது பாராட்டத்தக்கது. ஒரு எழுத்தாளரின் ஒரு கதையோடு நின்றுவிடாமல், அவரின் அடுத்தடுத்த கதைகளையும் வாசிப்பது; குறைந்தபட்சம் அந்த எழுத்தாளர் குறித்து தெரிந்து கொள்வது அவசியமனா ஒன்று. நாயகன் வில்லனாக இருவேறு நிலைகளில் அவர் இச்சிறுகதையை அணுகியிருந்ததைப் பகிர்ந்தார்.

    அடுத்ததாக ஷங்கர் பேசினார். மா.அரங்கநாதனின் சிறுகதைகளில் ‘அட்டிகை’ சிறுகதையை முன்னமே அவர் வாசித்திருந்தார். ‘சித்தி’ சிறுகதையைப் பொருத்தவரை கதையில் தெளிவான பெயரோ, கதை நடக்கும் ஊர் பற்றிய தகவல்களோ இல்லாமல் இருப்பதைச் சொன்னவர் அதுவே பலமாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். ‘நீ ஜெயிச்சது நானே ஜெயிச்ச மாதிரி இருக்கு..’ என சொல்லி கேள்விப்பட்டிருக்கின்றோம். அந்த நிராசையின் பின்னால் இருக்கும் வலி இங்கு பலருக்கு தெரிவதில்லை என்றார்.

    எழுத்தாளர் உமாதேவி வீராசமியும் அவ்வாறே தன் பார்வையைப் பகிர்ந்து கொண்டார். பிடித்ததை பிரதிபலன் பாராமல் செய்வதற்கும் ஒரு செயலை பிரதிபலன் பார்த்து செய்வதற்கும் இடைபட்ட வித்தியாசங்களையும் ஏமாற்றங்களையும் விளக்கினார். கதையின் முடிவில் இருந்த வசனம் மீது அவருக்கு கேள்விகள் இருந்தன.

    அடுத்ததாய் ஆசிரியை இராஜலெட்சுமி பேசினார். சில முறை இணைய சிக்கலால் இணைய முடியாவிட்டாலும்’ ஒருவழியாக இணைந்து பேசிவிட்டார். கதையின் நாயகன்; அவன் எதில் முழு கவனம் வைத்திருக்கிறான் என்பதைப் பேசினார். குறிப்பாக வீட்டில் குத்துச்சண்டையைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகன் அங்கும் கூட வேறு எதையோ கவனித்து பயந்ததைப் பேசினார்.




   அவர்களை அடுத்து இச்சந்திப்பில் புதியவராக இணைந்திருந்த டரிஷ்ன் பேசினார். வெற்றி தோல்விகளுக்காக ஏற்படும் சிக்கல்களைக் கூறினார். வெற்றியை மட்டும் நோக்கமாக வைத்து பயிற்சிகள் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளையும் வெற்றி லாபகரமாக மாற்றப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

    அவர்களைத் தொடர்ந்து கவிஞர் செல்வம் பேசலானார். குழுவில் உள்ளவர்களின் மாறுபட்ட பார்வையை அவர் சிலாகித்தார். அவருக்கு இக்கதையின் மூலமே கூட வேறொன்றாக தெரிந்திருக்கிறது. நாங்கள் நாயகனாக நினைத்தவ கதாப்பாத்திரத்தை அவர் பெண்ணாகவும் பார்க்கலாமே என்றார். அதோடு இந்த சிறுகதைக்கு வைத்த தலைப்பில் இருந்தும் சில உதரணங்களைக் கூறி மா.அரங்கநாதன் வேறு ஏதோ ஒன்றை சொல்ல வருவதாகவும் யூகித்தார்.

    ஒவ்வொருவரின் கருத்தும் பார்வையும் அவரவர் வரையில் சரிதான். ஆனால் அதனையொட்டிய உரையாடல் மட்டும் நம் பார்வையை விசாலமாக்கும். அதற்காகவே நாம் உரையாடவுள்ளது.

    மா.அரங்கநாதனின் சிறுகதை எனக்கு பிடித்ததற்கு காரணம்; அது நான் உள்ளுக்குள் தேடிக்கொண்டிருந்ததற்கு பதிலாக அமைந்துவிட்டதுதான். இப்படியும் இருக்கலாம்தான் சிக்கல் இல்லை என என்னை நம்ப வைத்ததுதான்.

    இதனை வெறும் சிறுகதைதானே என என்னால் கடந்துவிட முடியவில்லை. யோசிக்கையில் இங்கு எது வெற்றி எது தோல்வி என குழப்பம் வருகின்றது. நாம் விரும்பி செய்யும் செயல் நமக்கு பேரும் புகழும் கொடுக்கத்தான் வேண்டுமா? எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமலேயே நம்மா நம் திருப்திக்காக ஒன்றை செய்ய முடியாதா என்ன?

    நான் ஒரு செயலைச் செய்கிறேன். காரணம் நான் அந்தச் செயலைச் செய்யவேண்டும் என ஆசைப்படுவதுதான் என இருப்பதில் என்ன தவறு இருந்துவிட முடியும். இந்த உலகம் அப்படியா யாரையும் செய்ய விடுவதில்லை. எல்லாவற்றுக்கு பின்னும் வெற்றி தோல்விகளை சுமத்துகின்றது. போதாக்குறைக்கு “இதனால எவ்வளோ சம்பாதிச்ச..?” என்கிற பொருளாதார தேவைகளையும் காட்டி நம்மை பயமுறுத்துகின்றது.

    செய்வதற்கு ஒரு வேலை இருக்கிறது.செய்கிறோம். பார்த்துக்கொள்ள ஒரு குடும்பம் இருக்கின்றது. பார்த்துக்கொள்கிறோம். பொருளாதார தேவைகள் இருக்கின்றன. அதனைச் சமாளிக்கின்றோம். இதற்கிடையில் நமக்கு பிடித்த ஒன்றை நாம் நேசிக்கும் ஒன்றை நம் திருப்திக்காக அதனை செய்ய வேண்டும் என்கிற பிரியத்தின் பொருட்டு அதனை செய்தால் என்ன அவ்வளவு குற்றமா?

இப்படி இருப்பவர்களை; வேண்டுமானால் பிழைக்கத்தெரியாதவர்கள் என சொல்லிக்கொள்ளுங்கள்; ஆனால் எங்களை வாழவே வக்கில்லாதவன் என சொல்லாதீர்கள்.

 

(ஒவ்வொரு திங்களும் இரவு மணி 8முதல் 9 வரை ‘சிறகுகளில் கதை  நேரம்’ சிறுகதைக் கலந்துரையாடல் இடம்பெறும். இஃது இணைய கலந்துரையாடலாக இடம்பெறுகின்றது விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம். வாசிப்போம்… நேசிப்போம்… வளர்வோம்…)

 

 

டிசம்பர் 09, 2023

உமாதேவி வீராசாமியின் ‘நாசி ஆயாம்’

ஆசிரியரும் எழுத்தாளருமான உமாதேவி வீராசாமியை சந்தித்தேன்.  எழுத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களை  சந்தித்து  உரையாடுவது எனக்கு விருப்பமானவற்றில்  ஒன்று. இம்முறை வேலை நிமித்தமாகச் சந்தித்தேன். அதுவும் கூட எழுத்து குறித்து அமைந்திருந்தது.

எழுத்தாளர் உமாதேவி இயல் குழுமம் நடத்திய வெண்பலகை கலந்துரையாடல் மூலம் எனக்கு அறிமுகமானவர். அக்குழுவில் இருந்து ஏறக்குறைய பத்து பதினைந்து சிறுகதைகளை வாசித்து அதுபற்றி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. (அங்கு நான் எதற்காக அழைக்கப்பட்டேன் என்பதும் அதனை நான் எப்படி மடைமாற்றினேன் என்பதும் அதன் பின் நடந்தவை பற்றியும் இன்னொருநாள் பேசலாம்). அதில் சிலரின் கதைகள் செறிவாக்கம் செய்தால் நல்லக்கதைகளாக மாறும் சாத்தியங்கள் இருந்தன. ஆனால் அடிப்படையாக நல்லதொரு கதைக்கருவை ஒவ்வொருவரும் எழுதியிருந்தார்கள்.  

உமாதேவியின் சிறுகதையை வாசித்ததும், அதிலிருக்கும் தனித்தன்மை என்னைக் கவர்ந்தது. அச்சிறுகதையைப் பற்றி விரிவாகப்பேசினேன். வழக்கமான குடும்ப பின்னணிதான் கதைக்கருவாக இருந்தாலும் கதையின் தொடக்கமும் கதையை அவர் கொண்டு சென்ற விதமும் சற்றே கவனிக்கத்தக்கதாக இருந்தது. அதிலிருந்து தொடர்ந்து  அவரை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தேன். அவரும் உற்சாகமாக எழுதத்தொடங்கினார். அவ்வாறு இன்னும் சிலரை சொல்லலாம்.

அக்குழு மூலம் எனக்கு அறிமுகமான பலர்  தொடக்கத்தில் இருந்த ‘எழுத வேண்டும்’ என்கிற பொறியை மெல்லமெல்ல மங்க வைத்துவிட்டார்கள். பின்னர் அந்தப் பொறி வேறொன்றாக மாறத்தொடங்கியது.  எழுத்தின் மீது உண்மையான ஆர்வம் உள்ளவர்களே தொடர்ந்து எழுதினார்கள்.  எழுதியதை குறித்து உரையாடினார்கள். அதுவே கலந்துரையாடலாக மாறி பலரும் பயனடையும் வகையில் அமைந்திருந்தது. நான் எதிர்ப்பார்த்த பல எழுத்தாளர்கள் குறிப்பாக பல இளம் தலைமுறை எழுத்தாளர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அங்கொன்றும் இங்கொன்றுமென சிதறிவிட்டார்கள். சரியான கட்டமைப்பு இருந்திருந்தால் இந்நேரம் அதிலிருந்த பலரின் படைப்புகள் பரவலாக பேசப்பட்டு அவர்களும் நம் நாட்டின் கவனிக்கத்தக்க எழுத்தாளர்கள் என பலரால் பேசப்பட்டிருப்பார்கள்.

தொடக்கமாக ஐந்து எழுத்தாளர்களின் புத்தகங்களை அக்குழு மூலம் வெளியிட்டார்கள். ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு சிறுகதைகளிலும் என் பங்கும் இருந்தது. அதில் சிலர் ரொம்பவும் முக்கியமான கதைகளை எழுதியிருந்தார்கள். அந்தப் புத்தகங்கள் குறித்தும் அந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் குறித்தும் இங்கு அதிகம் பேசப்படவேயில்லை. அதற்கு அப்புத்தகத்தை விமர்சிக்க நினைப்பவர்கள் அதனை வெளியிட்ட பதிப்பகத்திடம் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என சொல்லியிருந்ததுதான் முதல் காரணம் என நினைக்கிறேன்.

தொடர்ந்து நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்துவதில் அக்குழுவிற்கு இருந்த ஆர்வத்தை, தாங்கள் வெளியிட்ட ஐந்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் மீதான வாசிப்பிற்கும் கலந்துரையாடலுக்கும் பயன்படுத்தியிருக்கலாம். இதில் எனக்கும் ஒரு வருத்தம் இன்றளவுமே இருக்கின்றது. வெறுமனே புத்தகங்களை அச்சடிப்பதும் அதனை பள்ளிக்கூடங்களுக்கு ஏற்ற மாதிரி தயார் செய்வதும் அதனை மாணவர்களிடமும் பள்ளிக்கூடங்களிலும் விற்பனை   செய்வதும் வியாபார யுக்தி என பாரட்டலாமே தவிர; இலக்கியத்தில் நாம் எதிர்ப்பார்த்த  பயனைக் கொடுக்காது.

சிறு உதாரணம் சொல்கிறேன்.

ஐந்து எழுத்தாளர்கள். ஐந்து புத்தகங்கள். மூன்று சிறுகதைத் தொகுப்பு இரண்டு குறுங்கதைத் தொகுப்பு. எழுதியவர்களின் மூன்று பேர் ஆசிரியர்கள் ஒருவர் சமயப்பணிகளில் ஈடுபாடுள்ள அமைப்பை சார்ந்தவர். ஒருவர் இளம் ஆசிரியை.  அவர்களின் சிந்தனை  அவர்களின் எழுத்து எதை நோக்கி அமைந்திருக்கிறது என ஒரு கலந்துரையாடலை நடத்தியிருக்கலாம்.

அவை நல்ல கதைகளா அல்லது நமத்து போன கதைகளா என காலம்தான் சொல்ல வேண்டும் என்று நம்மால் ஒதுங்கிவிட முடியாது. அந்தக் காலத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். காலம் தாழ்த்தி விவாதிக்கப்படும் கதைகள் ஒரு பக்கம் இருந்தாலும் எழுத்தாளர்கள் இருக்கும் போதே அவர்களின் படைப்புகள் பேசப்படுவதும் அவசியம்தானே.

ஒருவேளை பல்வேறு இடங்களில் இந்த ஐந்து புத்தகங்களுக்கான கலந்துரையாடல் நடந்திருந்தால் நிச்சயம் அது இந்நாட்டின் இலக்கிய வளர்ச்சிக்கு பயனாக அமைந்திருக்கும். இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். நூல் வெளியீடு என்பதும் நான் சொல்லும் கலந்துரையாடல் என்பது வேவ்வேறு என மீண்டும் மீண்டும் தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. அதைவிட  முக்கியம்  புத்தகம் வெளியிடு  செய்வது மட்டுமே  இலக்கிய செயல்பாடும் ஆகிவிடாது.




இம்முறை எழுத்தாளர் உமாதேவி வீராசாமியை சந்தித்தது, அவரது அடுத்த புத்தகத்திற்கான முதற்கட்ட வேலைக்காக. விரைவில் இரண்டாம் புத்தகமாக சிறுகதைத் தொகுப்பினை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இந்தத் தடவை கதைகளை செறிவாக்கம் செய்யும் வேலையை நான் செய்கிறேன். பலமுறை பல புத்தகங்களுக்கு புனைவை செறிவாக்கும் வேலையை செய்திருந்தாலும் முறையாக கட்டணம் என வாங்கியதில்லை. பல சமயங்களில் அக்கறையில் பெயரிலும்  சில சமயங்களில் சிறு ‘டோக்கனை’ பெற்றுக்கொண்டும் செய்திருக்கிறேன்.

ஆனால் இப்போது அதனை எனக்கான வேலைகளில் ஒன்றாக மாற்றிவிட்டேன். எழுத்தாளர் சொல்ல வந்தக் கதைகள் அவர் என்னதான் சொல்லியிருக்கிறார் என்பதில்   தொடங்கி புனைவு ரீதியில் அவரின் படைப்பு எப்படி உள்ளது என கலந்துரையாடுகின்றேன். முடிந்தவரை எழுத்தாளர் எழுதியிருக்கும் மூலத்தைக் கலைக்காமல் அதனை மேலும் தீவிரமாக்குவதுதான் என் வேலை. ஆனாலும் இறுதி முடிவு எழுத்தாளர் கைகளில்தான் இருக்கின்றது. இம்முறை அதற்கான கட்டணத்துடன் இவ்வேலையைச் செய்கிறேன்.

பத்து சிறுகதைகளுடன் எழுத்தாளர் உமாதேவி சந்தித்தார். ஏறக்குறைய அரை நாளில் எங்களால் சில சிறுகதைகளையே செறிவாக்கம் செய்ய முடிந்தது. அவர் இந்தத் தொகுப்பிற்காகவே சில கதைகளையும் எழுதியிருந்தார். அதில் ‘நாசி ஆயாம்’ என்னும் சிறுகதை எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது.

அச்சிறுகதை அவருக்கு நல்ல பெயரை எடுத்து கொடுக்கும் எனவும் அதற்கான காரணங்களையும் அவருக்குச் சொன்னேன்.  அதோடு ஒரு சிறுகதைக்கான கருவை அவர் பகிர்ந்து கொண்டார்.  ஆனால் அக்கதைக்கருவை சிறுகதையாக முடிக்காமல் விரிவாக எழுதினால் குறுநாவலாக மாறும் தன்மை கொண்டிருந்தது. இன்றளவும் உழைப்பே    பிரதானமாக இருக்கும் அவரது தந்தையைப் பற்றிய அவரது சிறுவயது நினைவுகளை  சிறு சிறு பகுதிகளாக அடுக்கி மேலும் சிலவற்றை அவர் இணைத்தால் அது சாத்தியப்படும் என்றேன்.  அவர் கண்களில் அதற்காக ஆர்வம் தெரிந்தது.

இருந்தும் இச்சிறுகதைத் தொகுப்பை முடித்த பின்னரே அடுத்ததில் களம் இறங்கலாம் என்று முடிவெடுத்தோம்.

மீண்டும் ஒரு நாள் இணையம் வழி சந்தித்தோம். புத்தகத்திற்கான கதைகளையும் இன்ன பிற விபரங்களையும் பேசி முடிவெடுத்தோம்.

ஒட்டுமொத்தமாக குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதைகளே அவரிடம் அதிகம் இருந்தன. ஆனால் ஒன்று போல் மற்றொன்று இல்லை என்பது ஆச்சர்யம். புத்தகம் முழுமையடைந்து நம் கைகளுக்கு வந்த பின் அந்தப் புத்தகத்திற்கான கலந்துரையாடலை நாம் ஏற்பாடு செய்யலாம்.

ஆசிரியை, அனுபவசாலி, எழுத்தில் ஆர்வம் கொண்டவர். அவரின் படைப்புகள் அதற்கான கவனிப்பையும் அங்கிகாரத்தையும் விரைவில் அடையும் என எதிர்ப்பார்க்கிறேன்.

-தயாஜி

 

டிசம்பர் 07, 2023

சிறகுகளின் கதை நேரம் 1 - தி.ஜானகிராமனின் முள்முடி

 




டிசம்பரில் (2023) மீண்டும் சிறுகதைக் கலந்துரையாடலை தொடங்கினோம் . இம்முறை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு மணி 8 முதல் 9 வரை என திட்டமிட்டோம் . இணைய சந்திப்பு என்பதால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளலாம் என்பது எல்லோருக்கும் வசதி . அவ்வப்போது நேரடியாக சந்தித்து சிறுகதைகளைப் பற்றி உரையாடவும் செய்வோம் .

முதல் கலந்துரையாடலுக்கு தி.ஜானகிராமனின் முள்முடி சிறுகதையைத் தேர்வு செய்தோம். சில நாட்களுக்கு முன்னமே சிறுகதையினை ஆர்வம் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். நிச்சயம் வாசித்துவிட்டு கலந்துரையாடலுக்கு வரவேண்டும் என விண்ணப்பமும் கொடுத்தோம்.

சில காரணங்களால் இம்முறை வர இயலாது என சிலர் கூறினார்கள். இன்னும் சிலர் அடுத்த வாரத்தில் இருந்து வருகின்றோம் என்றார்கள். சிலர் உங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இன்னொருவரின் நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுக்கப்பட்டுவிடுவோம் எனவும் பயந்தார்கள். அவர்கள் நன்றியோடு இருக்க விரும்புபவர்கள்; இருக்கட்டும் ஆனால் அவர்களால் யார் பயனடைகிறார்கள் என அவர்கள்தான் யோசிக்க வேண்டும். சிலர் கதையை வாசிக்க நேரமில்லை ஆனால் கலந்துரையாடலுக்கு வருவோம் என்றார்கள்; நான் வேண்டாம் என்றுவிட்டேன். முடிந்தவரை கதையை வாசித்துவிட்டு சிறு கருத்தையாவது பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றேன்.

    தொடக்க கலந்துரையாடலுக்கு நான்கு பேர் கலந்து கொண்டு முள்முடியைக் குறித்து பேசினார்கள்.




    வழக்கமாய் ஒவ்வொரு இலக்கிய நிகழ்ச்சிக்கும் ஆர்வமாய் கலந்து கொள்ளும் எழுத்தாளர் காந்தி முருகன், நாங்கள் வழிநடத்தும் குறுங்கதை எழுதும் வகுப்பிலிருந்து புதிய எழுத்தாளர் அகிபிரியா, எனக்கே கூட புதிய அறிமுகமாய் தி.ஜாவின் பெயரைக் கேட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதியவர் சங்கர். நான்காவதாக ஒரு சிலிப்பிங்க் பாட்னர் வந்திருந்தார். அவர் யார் என்பது இப்போதைக்கு வேண்டாம்.

    முள்முடி தனக்கு ஏற்படுத்திய குழப்பத்தை எந்த ஒரு கூச்சமும் இன்றி பகிர்ந்து கொண்டார் அகிபிரியா. இப்படியானவர்களின் ஆரவம் எனக்கு எப்பவும் பிடிக்கும். தனக்கு எல்லாம் புரிந்த மாதிரி வெளியில் காட்டிக்கொள்ளாமல். எனக்கு இவ்வளவுதான் புரிந்தது; ஆனால் சில குழப்பங்கள் உள்ளன என தன் குழப்பத்தை பகிர்ந்தார்.

எழுத்தாளர் காந்தி முருகன் அவருக்கே உரிய பாணியில் முள்முடியைக் குறித்து பேசினார். தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வரும் காந்தி முருகனின் பார்வையும் பங்கேற்பாளர்களுக்கு பயனாக அமைந்தது.

    இக்கலந்துரையாடலில் எனக்கு மகிழ்ச்சியளித்த ஒன்று, சங்கர் என்னும் மாணவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தற்போது தி.ஜாவின் கதைகளை வாசித்து வருவதாகக் கூறினார். முள்முடியுடன் வன்முறை குறித்த பார்வையையும் பகிர்ந்து கொண்டார். 'அம்மா வந்தாள்' நாவலைக் குறித்து ஒருசில வார்த்தைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். வாசிப்பதில் ஆர்வம் உள்ளதோடு தொடர்ந்து வாசித்துவரும் இளம் தலைமுறையினரிடம் உரையாடுவதும் இரு தரப்பிற்கும் பயனாக அமையும் என நம்புகின்றவன் நான்.

    முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் பாலமா இலக்கியம் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். அவ்வழியே நாம் ஓர் உரையாடலை நடத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எங்களின் இந்த 'சிறகுகளின் கதை நேரம்' சிறுகதைக் கலந்துரையாடல் அதற்கு உதவும்.

    தனிப்பட்ட முறையில் முள்முடி எனக்கு ரொம்பவும் நெருக்கமான சிறுகதை. அச்சிறுகதையை வாசித்த பின் சில நாட்களாக பல சம்பவங்கள் என் மனதில் நிழலாடின. அந்தச் சிறுகதையின் வடிவம் கதாப்பாத்திரங்கள் கதைக்கரு என எல்லாமே எனக்கு முக்கியமாகப்பட்டது. எப்போதும் பேசவேண்டிய ஒரு கதைக்கருவாக அச்சிறுகதை அமைந்திருந்தது. என்னதான் நாம் நல்லவர்களாக இருந்து வந்தாலும் இருக்க பழகினாலும் ஏதோ ஒரு வகையில் நம்மால்; நம்மை அறியாமலேயே ஒருவர் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாதோ என்னவோ. ஆனால் அதற்கான குற்றவுணர்ச்சியை நாம் சுமக்க வேண்டுமா வேண்டாமா என்பதுதான் அவரவர் தெளிவு.

முள்முடி சிறுகதையை வாசித்தப்பின் எனக்கு தெரிந்த சிலரிடம் கதையை அனுப்பி வாசிக்க சொல்லியிருந்தேன். ஒவ்வொருவரும் அவர்கள் வாசித்த கதை குறித்து பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் ஒரு நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுகதை குறித்து உரையாட ஆரம்பித்தோம்.

தி.ஜாவின் முள்முடி முக்கியமான கதை எனதான் அவருக்கு சொல்லியிருந்தேன். அதில் அவருக்கு மாற்று கருத்து இருந்தது. அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது எனறார். நான் என் கருத்திற்கு வலு சேர்க்க மேலும் சிலவற்றை பகிர்ந்து கொண்டேன். நண்பரும் விடுவதாகச் சொன்னார். சரி, இந்தக் கதை திஜாவின் முக்கியமான கதையாக இல்லையென்றால் எது அவரின் முக்கியமான கதை என கேட்டேன். அப்போது அவர் சொன்னதுதான் சுவாரஷ்யம். அவர் இதுவரை தி.ஜானகிராமனின் எந்தப் படைப்பையும் வாசிக்கவில்லை. ஒருவேளை தி.ஜாவின் மற்ற கதைகளை வாசித்து அதிலிருந்து இது முக்கியமான கதை; இதைவிட அது முக்கியமான கதை என சொல்லியிருந்தால் கூட எங்கள் உரையாடல் தொடர்ந்திருக்கும். ஆனால் வாசித்த ஒரே கதையை எதை வைத்து ஒப்பிடுகின்றார் என தெரியவில்லை. அதோடு எங்கள் உரையாடலை வேறு பக்கம் திருப்பி கொண்டேன்.

இப்படியாக பலரை சந்திக்க முடிகின்றது. வாசிக்காமலேயே தன்னை சிறந்த வாசகர்களாய் நினைத்து கொண்டு மேடைகளில் பேசுகிறார்கள். இளம் படைப்பாளிகளுக்கு அறிவுரைகள் சொல்கிறார்கள். அதையெல்லாம் மாற்ற அவர்களும் முன்வர வேண்டும். அவ்வளவே.

நிறைவாக;

‘சிறுகுகளின்  கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் எங்களுக்கு திருப்தியைக் கொடுத்தது. அடுத்த திங்கள் கலந்துரையாடலில் மா.அரங்கநாதனின் ‘சித்தி’ சிறுகதையைக் குறித்து பேசவுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு கதையினை அனுப்பி வைக்கின்றோம். நிகழ்ச்சியன்று உங்களுக்கு கூகுள் இணைப்பையும் அனுப்பி வைக்கின்றோம்.

வாசிப்போம்… நேசிப்போம்… வளர்வோம்…\

அன்புடன் தயாஜி

நவம்பர் 30, 2023

வாசகனின் நன்றி

 



எழுத்தாளர் பிரியா மொழிபெயர்த்திருக்கும் 'ஒரு வசீகரமான கைம்பெண்ணின் முகம்' சிறுகதைத் தொகுப்பில் 'ஒரு திடீர் தெரிவு' என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ளது. இக்கதையை ஜூமா அல்ஃபைரூஸ் என்பவர் எழுதியுள்ளார்.

தொடக்கத்திலேயே இக்கதை ஈர்த்துவிட்டது. அடுத்தடுத்த பத்திகளில் நம்மையும் பதைபதைக்க வைக்கிறது. தலையும் புரியாமல் வாலும் புரியாமல்; ஆனால் அதன் வலியை மட்டும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கதையின் முடிவை நெருங்க நெருங்க சாதக் ஹசன் மண்டோவை ஏதோ ஒரு கதைபோல ஒரு பிம்பத்தைக் கொடுத்தாலும் , இக்கதை நம் மனதிற்கு நெருக்கமாகிவிடுகிறது.

ஏனெனில் அதிகார கரங்களில் சிக்குண்ட சாமாணிய மனிதர்களின் கதைகளை யார்தான் எழுதாமல் இருக்கிறோம். அந்தக் கதைகள் யாரைத்தான் கலங்கடிக்காமல் இருக்கின்றன.

விரைவில் இம்மொழிபெயர்ப்பு புத்தகம் குறித்த என் பார்வையை எழுதுகிறேன். அதுதான் இப்படியாக பல சிறுகதைகளை இத்தொகுப்பிற்காக மொழியாக்கம் செய்திருக்கும் எழுத்தாளர் பிரியாவிற்கு ஒரு வாசகனாய் என் நன்றி...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

விழித்திரு; விழிப்புணர்வாய் இரு

 



இலக்கியம் எந்த அளவு உன்னதமானது என நம்புகின்றோமோ.. சில சமயங்களில்; அதே அளவு அதனை எழுதும் கரங்கள் ரொம்பவும் கீழ்மையானது என நம்ப வைத்துவிடுகிறார்கள். 


இலக்கியம் உன்னதமானது என நம்மை நம்ப வைப்பவர்களேத்தான் அதனையும் எந்த ஒரு குற்றவுணர்ச்சி இன்றி செய்துவிட்டு "இலக்கியம் மனிதனை பக்குவப்படுத்துகிறது .." என பேசவும் செய்கிறார்கள்.


எழுத்தாளர்களே உங்களுக்கு ஒன்றை மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன். 


திடீரென ஒருநாள் உங்களுக்கு ஏதோ ஒரு பெண் முகநூல்வழி நட்பாகிறாள். அல்லது வட்சப்வழி மாணவியாகிறாள் என வைத்துக் கொள்வோம். உங்களின் உரையாடல் மெல்ல மெல்ல வளர்கிறது. முகம் பார்க்காமலேயே நீங்களும் அசடு வழிகிறீர்கள் எனவும் வைத்துக்கொள்வோம்.

அது உங்கள் எழுத்தின் மீதான மரியாதையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இனி நீங்கள் எழுதவும் கூடாது பேசவும் கூடாது என்பதற்காகவும் இருக்கலாம்.


ஒருவரின் பலவீனத்தைக் கண்டறிந்து. அதற்கு மேலும் மேலும் தீனி போட்டு, வளர்த்து, அது அந்த மனிதனையே தின்னும் அளவு மாறி, அந்த மனிதன் தன் நிலை மறக்கும் பொழுது அதனையே வீடியோக்களாக புகைப்படங்களாக ஸ்க்ரீன் ஷாட்டுகளாக எடுத்து அந்த மனிதனை பேச விடாமல் எழுத விடாமல் செயல்பட விடாமல் இன்னும் சொல்லப்போனால் இனி இலக்கிய உலகில் முகமே காட்ட முடியாத அளவுகூட செய்ய முடிகிறது எனில் அதனை வெறும் கீழ்மை என மட்டும் அழைக்க முடியாதுதானே.. 


சில ஆண்டுகளுக்கு முன் எனது முகநூலுக்கும் இஸ்தாகிராமிற்கும் அவ்வளவு ஏன் வட்சப்பின் கூட (வட்சப்பில் வந்தது பற்றி ஏற்கனவே பேசியுள்ளேன்) இதே மாதிரி ஒரு பெண் வந்தார் பேசினார் நானும் பேசினேன். பேச்சு அதன் எல்லையைக் கடந்ததும் எனக்கு சரியாகப்படவில்லை. அது என்னை யோசிக்க வைத்தது. நல்லவேளையாக யோசித்தேன். இல்லையென்றால் இப்போதே நானும் கூடத்தான் தலைமறைவாக வாழ வேண்டி வந்திருக்கும்.


அந்தப் பெண்ணின் போலி சமூகவலைத்தளத்தின் பின்னணியில் ஓர் ஆண் இருந்ததையும் . அதுவும் அந்த நபர் எனக்கு  அறிமுகமானவர் என்பதையும் கண்டுபிடித்து (எப்படி கண்டு பிடித்தேன் என்பது கூட சுவாரஷ்யமானதுதான்) சொன்னதும் உடனே அந்தப் பெண் காணாமல் போய்விட்டார்.


ஒவ்வொருவரையும் பேசவிடாமல் செய்ய ஏதோ ஒன்றை ஆயுதமாக எடுக்கின்றார்கள். அல்லது ஒன்றை உருவாக்குகிறார்கள். அவற்றில் இதுவும் ஒன்று.


ஆக.... வெளியுலகுக்கு வந்தால் குறிப்பாக நீங்கள் எழுத வேண்டும் என வந்தால் கூடுதல் விழிப்புணர்வோடு இருங்கள். 


இதனை நான் ரொம்பவும் வருத்தத்துடன்தான் எழுதுகிறேன். எவ்வளவு பெரிய நம்பிக்கையை உங்கள் ஆணவத்தின் பொருட்டு நீங்களே உடைத்துவிடுகிறீர்கள்!!!!

அக்டோபர் 29, 2023

குறுங்கதை எழுதும் வகுப்பு 1 - நிறைவடைகிறது

 


குறுங்கதை எழுதும் வகுப்பு 1 - நிறைவடைகிறது


  செப்டம்பரில் தொடங்கிய வகுப்பு அக்டோபரில் நிறைவடைந்தது. இரு மாத வகுப்பாக திட்டமிட்டு அதன்படி அதனை வழிநடத்தி முடித்தோம். பல புதியவர்கள் கலந்து கொண்டார்கள். கவனிக்கத்தக்க எழுத்தாளர்களும் கலந்து கொண்டது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

  குறுங்கதை எழுதுவதில் இருக்கும் சுதந்திரம் குறித்தும் அதிலிருந்து அடுத்த படைப்பாக்கத்திற்கு எப்படி நகர்வது எனவும் கலந்து பேசினோம். ஒவ்வொருவரும் அவர்களின் எழுதும் திறனை குறுங்கதை எழுதுவதில் இருந்து கண்டுகொண்டார்கள்.

 ஏற்கனவே நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களின் கருத்துகளும் அவர்களில் பகிர்தலும் வகுப்பிற்கு பயனாக அமைந்தது.

  தொடக்கமாக குறுங்கதைகள் குறித்த அறிமுகம் வழக்கப்பட்டது.  அதன் பின் பயிற்சிகளும் இடுபணிகளும் வழங்கப்பட்டன. பங்கெடுத்தவர்கள் தங்களின் திறமைகளைச் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

   கதைகளை எழுத கண்ணுக்கு எட்டிய காட்சிகள் கூட போதும்; அதிலிருந்து பல கதைகளுக்கான கருக்களை நாம் கண்டுகொள்ளலாம் என்பதை ஒவ்வொருவரும் நன்கு புரிந்து கொண்டார்கள்.

  இவ்வகுப்பில் கொடுக்கப்பட்ட இடுபணிகளில் இருந்து மொத்தமாக 20க்கும் அதிகமான குறுங்கதைகளைத் தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொரு கதையும்  நிச்சயம் கவனத்தை ஈர்க்கும் கதையாக அமைந்திருக்கின்றது.

    விரைவில் இக்கதைகளை குறுங்கதைத் தொகுப்பாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

   குடும்ப மாதுவின் சுதந்திரம் நோக்கிய குரலாய் ஒலிக்கும் கதைகள், திருவள்ளுவரின் கடைசி குறள் குறித்த கதை, அபலநகைச்சுவையை மையப்படுத்திய கதைகள், மக்களால் குற்றம் சுமத்தப்பட்டவரின் மறுபக்கம், பேய்கள் என்பவை இருக்கிறதா என நம்மையே கேட்க வைக்கும் கதை, சினிமாவின் தாக்கம் மாணவச்சமூகத்தில் எந்த விளைவுகளைக் கொடுக்கின்றன,  பூமியை தூய்மைப்படுத்த சொல்லி விண்வெளியை வீணாக்கும் அறிவியலில் கதை, கனவையும் நினைவையும் ஒரே மாதிரி அணுகும் கதை, மனமுறிவுகளால் மூன்றாம் தரப்பிற்கு ஏற்படும் பாதிப்பு என பலவேறுபட்ட கதைக்களன்களையும் ஓரளவிற்கு மாறுபட்ட கதைச்சொல்லும் யுக்தியையும் பயன்படுத்தி இக்கதைகளை இவர்கள் எழுதியிருந்தார்கள். 

     அவர்களின் அனுமதியுடன் அக்கதைகளை விரைவில் உங்களோடு பகிர்கிறேன்.

   இவ்வாறு எங்களின் முதல் குறுங்கதை எழுதும் வகுப்பு நிறைவடைந்தது. நவம்பரில் இரண்டாம் வகுப்பை தொடங்குகின்றோம். 

    உங்களுக்கும் குறுங்கதைகள் எழுத ஆர்வம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள். 

 குறுங்கதைகளைப் புரிந்து கொள்வதிலிருந்து உங்களுள் மறைந்திருக்கும் எழுத்தாற்றலை நீங்க கண்டுபிடித்து எழுதலாம்.


எழுதுவோம்… 

அதுதான் இரகசியம்…

அதுவேதான் தியானம்…


அன்புடன் தயாஜி 

அக்டோபர் 28, 2023

🙏எழுத்தாளர், ஆசிரியர் இராஜேஸ்கன்னி நினைவாக... 🙏

 


காலை, தம்பி பிருத்வி அழைத்திருந்தார். ஆசிரியை இராஜேஸ்கன்னி காலமாகிவிட்டதைக் கூறினார். இன்று என் முதல் தொலைபேசி அழைப்பு அதுதான். செய்தி கேட்டதிலிருந்து அதிக நேரம் என்னால் என் இயல்பு நாளுக்கு திரும்ப முடியவில்லை. பாராங்கல்லை சுமப்பது போல இதயம் கணக்கத்தொடங்கியது; அத்தனையும் ஆசிரியை இராஜேஸ்கன்னியின் நினைவுகள்தான்.

பல ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருப்பவர். நாளிதழ்கள் முதல் இதர ஊடகங்கள் வரை புனைப்பெயரிலும் தன் பெயரிலும் எழுதி வந்தவர். முகநூல் வழி அவருடன் எனது பழக்கும் இன்னும் நெருக்கமானது. என் கதைகளைக் குறித்து அவர் சொல்லும் கருத்துகளுக்கு நான் கொடுக்கும் பதில்கள் எங்கள் நட்பை இன்னும் அதிகமாக்கியது.

அதன் பின் ‘வெண்பலகை’ மூலம் எங்கள் பேச்சு இன்னும் ஆழமாகியது. இங்கும் அவர் ஆர்வமாக எழுதினார். கவிதைகள் மீது அவருக்குள்ள ஆர்வத்தை அறிந்த பின் சில கவிதைப்புத்தகங்களை அவருக்கு பரிந்துரைச் செய்தேன். அவரும் அவற்றை வாங்கி ஒவ்வொன்றையும் வாசிக்கும் போதெல்லாம் அது பற்றி என்னுடன் பேசலானார்.

‘வெண்பலகை’ சிறுகதை கலந்துரையாடலுக்கு அவர் அனுப்பிய சிறுகதைக் குறித்து பேசினேன். பின் தனிப்பட்ட முறையில் என்னை அழைத்து அச்சிறுகதையில் மேலும் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் என ஒரு மாணவி போல கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். அதன் பின் ‘வெப்பம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி எனக்கு வாசிக்கக் கொடுத்தார். அதிலும் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என சொன்னதும் உடனே என்னை அழைத்தார்.

அவருடனான உரையாடலில் மேலும் பலவற்றைப் பேசலானோம். விரைவில் தானும் புத்தகம பதிப்பிக்க ஆவல் கொண்டிருப்பதைச் சொன்னார். இப்படியான  ஆசைகள் பலருக்கும் இருக்கிறதுதான். பணம் இருந்தால் யாரும் புத்தகம் போடலாம் என்கிற நிலைக்கு மெல்ல மெல்ல தள்ளுப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இராஜேஸ்கன்னி அதற்காக உழைக்க தயாராய் இருந்தார்.

குறிப்பாக தனது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு ஏதும் ஆலோசனை உண்டா எனவும் கேட்டார்.
உண்மையில் இப்படி கேட்பவர்களை எனக்கு எப்பவும் பிடிக்கும். தான் செய்ய வேண்டிய செயல் அல்லது தான் எழுதவுள்ள படைப்பு எப்படி இருக்க வேண்டும் என மற்றவருடன் கலந்து ஆலோசிப்பது ரொம்பவும் முக்கியம். அதுதான் நம்மை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும்.

நீரலைகளும் நினைவலைகளும் என்ற தலைப்பில் கடலை களமாகக் கொண்ட சிறுகதையை எழுதினார். பின்  வெப்பம் என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினார். நிலம், காற்று, ஆகாயம் என்ற கதைக்களத்தில் அடுத்த மூன்று கதைகளை எழுதிவிட்டால் பஞ்சபூதங்கள் பற்றியக் கதைகளாக அவை அமைந்துவிடும் என்றேன். உடனே அவர், அடுத்த கதை காற்றைப் பற்றித்தான் பாதி எழுதியுள்ளதாகச் சொன்னார். அவர் இதனை யோசிக்கவில்லையென்றும் ஆனால் நல்ல யோசனை என்றும் குறித்து கொண்டார்.

அவருக்கு கவிதைகள் மீதும் ஆர்வம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் முகநூலில் தொடர்ந்து கவிதைகளையே அதிகம் எழுதி வந்தார்.

ரொம்பவும் சமீபத்தில் நாங்கள் ஆரம்பித்த ‘குறுங்கதை எழுதும் வகுப்பில்’ ஆர்வமாக பங்கெடுத்தார். முதல் வகுப்பு முடிந்ததும் அவர் எனக்கு அனுப்பிய கருத்துகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
குறுங்கதைகளையும் எழுத அவர் ஆர்வமாக இருந்தார்.

அவர் பல சமயங்களில் அவர் காணாமல் போய்விடுவது வழக்கமானது. அது பற்றி விசாரித்தேன். உடல் நிலை குறித்தும் அதற்கான மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் பேசினார். நானும் அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்கு ஆளாகும் ஆள் என்பதால் இரு நோயாளிகளும் நோய்களையும் எப்படியெல்லாம் அதனிடமிருந்து தப்பிக்கின்றோம் எனவும் பேசி சிரித்திருக்கிறோம்.

வெறும் பெயருக்காகவும்; தனிப்பட்ட லாபக்கணக்கிலும் தங்களை எழுத்தாளர்கள்  என சொல்லிக்கொள்பவர்கள் மத்தியில் உண்மையாக தன்னை எழுத்தாளராக நிலைநிறுத்த தொடர்ந்து முயன்றவர். முயன்றவர் என்பதை விடவும் தொடர்ந்து எழுதியவர் என்றே சொல்ல வேண்டும்.

இவ்வளவு சீக்கிரத்தில் அவரின் காலம் முடிந்திருக்க வேண்டாம். ஆனால் ஏதாவது ஒரு வகையில் அவரின் எழுத்துகள் இங்கு வாழும் என அவரின் படைப்புகளை வாசித்தவன் என்கிற முறையும் நான் நம்புகின்றேன்.

இந்நேரத்தை பயன்படுத்தி இன்னொன்றையும் இங்கு பதிவு செய்ய நினைக்கிறேன். இதில் ஏதும் தவறு இருப்பின் சுட்டுங்கள்; திருத்திக்கொள்கிறேன்.

ஆசிரியைக்கு இரங்கல் தெரிவிக்கும் சில பதாகைகளைப் பார்க்க நேர்ந்தது. அதிலொன்று சிறு நெருடலைக் கொடுத்தது. அதனால் அதனை இவ்விடத்தில் சொல்கிறேன்.

ஒரு பதாகையில், ‘இயல் எழுத்தாளர், ஆசிரியர் இராஜேஸ்கன்னி ஆறுமுகம்’ என குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

அவர் இயல் எழுத்தாளரா? இயல் குழும எழுத்தாளரா? எது சரி எது பொருந்தும் என உங்களுக்கு தெரியாதா?
இயல் என்னும் அமைப்பு எப்போது தொடங்கியது? இராஜேஸ்கன்னி எப்போதிலிருந்து எழுதுகிறார்? என்று கூடவாக யாருக்கும் யோசிக்க நேரமில்லை.

இறந்தவர் மீது அதுவரை அவருக்கு ஒன்றுமே செய்யாத கட்சியொன்று தன் கட்சி கொடியை அவரின் உடலில் போர்த்தும் சினிமா காட்சியை இச்செயல் நினைக்க வைக்கிறது.

இது இத்தனை ஆண்டுகாலமாக எழுதிவந்த ஓர் எழுத்தாளரை தன் குறுகிய வட்டத்தில் நிற்க வைத்து அவமானப்படுத்துவது போல் ஆகாதா?

உங்களிடம் வரும் ஒவ்வொருவர் மீதும் நீங்கள் உங்கள் பிராண்டுகளைக் குத்துவீர்கள் என்றால்; அவர்கள் உயிரோடு இருக்கும் போதே உங்கள் ப்ராண்டின் பெயர் அவர்கள் பெயர் முன்னால் குறிப்பாக அவர்களை எழுத்தாளர் என அழைக்கும் முன்னமே உங்கள் பிராண்டை சொல்ல வேண்டும் என சொல்லிவிடுங்கள்.

எழுத்தாளரே தன்னை எங்கிருந்து வந்தேன் என சொல்வதுதானே எந்த பிராண்டுக்கும் மரியாதை. பிராண்டாக சென்று மற்றவர் உழைப்பின் முன்னே அமர்ந்து கொள்வது எவ்வளவு அவலம்.
உங்களுடன் பயணிப்பவர்களிடமும் இதையே நானும் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் செய்யும் செயல்கள்தான் நம்மை விளம்பரப்படுத்தவேண்டுமே தவிர நாம் நம்மை விளம்பரப்படுத்துவதையே செயலாக செய்யக்கூடாது என்பது எல்லோருக்குமே பொருந்தும்.

உங்கள் பிராண்ட் தெரியவேண்டும் என்றால் எழுத்தாளர் இராஜேஸ்கன்னி அவர்களின் படைப்புகளை உரியவரிடம் தொடர்பு கொண்டு வாங்கி அதனை நல்ல முறையில் செறிவாக்கம் செய்து புத்தகமாக வெளியிடுவதுதான். அப்படி செய்தால் அல்லது அப்படி செய்ய முற்பட்டாலே போதும் நீங்கள் எதை விளம்பரப்படுத்த நினைக்கிறீர்களோ அது தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்கொள்ளும். ஏனெனில் நீங்கள்; செயலில் இறங்கிவிட்டீர்கள்.

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம்  இல்லாது இதனை எழுத முயன்றுள்ளேன்.

தவறு இருப்பின் நீங்கள் யாரும் தாராளமாக சுட்டுலாம்.

அதே போல என் கேள்விகளில் நியாயம் இருப்பின் உங்கள் செயலில் மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். அல்லது அடுத்தும் இப்படியே செய்யுங்கள்; என்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

#தயாஜி


அக்டோபர் 22, 2023

மனமுறிவு

 

 



அம்மா அப்படித்தான் சொல்லியிருந்தார். இனி இவர்தான் எனக்கு அப்பாவாம். ஆமாம் அப்பாவாம்.  அப்பாவா? எப்படி இவர் எனக்கு அப்பாவாக இருக்க முடியும். 

அப்பா இனிமேல் வீட்டிற்கு வரமாட்டாராம். வரக்கூடாதாம். வாரம் ஒரு முறை மட்டும் வருவாராம். இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அப்பா ஏன் இன்னமும் வரவில்லை.

அம்மா இருக்கும் போதெல்லாம் புது அப்பா ரொம்ப கண்டிப்பானவராக இருப்பார். ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது. சாக்லெட் சாப்பிடக்கூடாது. மழையில் நனையக்கூடாது. சத்தம் போட்டு சிரிக்க கூடாது. வீட்டில் ஓடி பிடித்து விளையாடக்கூடாது. சுவற்றில் கிறுக்க கூடாது என்று எப்பவும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். 

என் அப்பா எப்பவும் அப்படி சொல்ல மாட்டார். சொல்லவே மாட்டார். அவரும் என்னுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவார். மழையில் என்னுடன் ஓடி பிடித்து விளையாடுவார். கலர் பென்சில்களை வாங்கி கொடுத்துக்கொண்டே இருப்பார்.

அப்போது என் அப்பா செய்ததையெல்லாம் புது அப்பா இப்போது செய்யக் கூடாது என்கிறார். அப்போது என் அப்பா செய்யாததையெல்லாம் இப்போது புது அப்பா செய்கிறார்......

அக்டோபர் 21, 2023

எப்படித்தான் வாழ்கிறார்கள்

 


- எப்படித்தான் வாழ்கிறார்கள் -

சிறந்த தம்பதிக்கு விருது கொடுக்கும் விழா. அதற்கென்றே சில தம்பதியினர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அவர்களுக்கு தெரியாமலேயே ஒரு குழு ஒவ்வொரு தம்பதியையும் பின் தொடர்ந்தது.

தம்பதியரில் யார் சிறந்த தம்பதி என  அறிவித்தார்கள். பலரும் தங்களுக்கு அந்த இடம் கிடைக்காதது குறித்து வருத்தம் இருந்தது. எப்படி அவர்களால் இப்படி வாழ முடிகிறது என்று பொறாமையும் பட்டார்கள்.

ஐம்பதை நெருங்கிய மனமொத்த தம்பதியினர் விழா மேடையில் ஏறுகிறார்கள். பார்த்துக்கொண்டிருக்கும் பல தம்பதிகள் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள்.

பலரும் அவர்களை முன்னுதாரணமாக எடுத்தார்கள். எப்படி வாழ்கிறார்கள் பாரேன் என பேசவும் செய்தார்கள்.

மேடையில் கணவனிடம் கேள்வி கேட்கப்பட்டது. "ஐயா உங்க கல்யாண நாள் எப்போ?"

அவருக்கு பதில் நினைவில் இல்லை. கூட்டத்தில் ஏதோ சலசலப்பு. பின் மனைவியிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது. அவருக்கும் நினைவில் இல்லை.

இருவருக்குமே திருமண நாள் நினைவில் இல்லை இவர்கள் எப்படி மனமொத்த தம்பதிகளாக வாழ்வதாகச் சொல்கிறார்கள் என்று குழம்பினார்கள்.

சிலருக்கு மட்டும் அதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு நன்றாகத்தெரியும். எப்படித்தான் வாழ்கிறார்கள் என்ற கேள்விக்கு இப்படித்தான் வாழ்கிறோம் என்ற பதில்தான் அவர்களுடையதும்.


அக்டோபர் 18, 2023

தீவிரவாதி

 

அவனைக் கொல்வதற்கு முன்பாக விசாரித்தார்கள். விசாரிக்காமல் யாரையும் அதிகாரிகள் ஒருபோதும் கொல்வதில்லை. இல்லை இது கொலையில்லை. தண்டனை.

 அதிகாரிகள் விசாரிக்காமல் இதுவரை எவருக்கும் தண்டனை வழங்கியதில்லை.

அவன் முதலில் அழத்தொடங்கினான். அழுகிறான் அழுதுக்கொண்டே இருக்கிறான். இது அவனது நாடகமாகக்கூட இருக்கலாம். உடலில் உள்ள காயங்களும் முகத்திலிருக்கும் வீக்கமும் தலையிலிருந்து வழியும் இரத்தமும் அப்படியொன்றும்  வலிக்காது என அதிகாரிகளுக்கு தெரியும்.

வாயில் காய்ந்த ரொட்டியைத் திணித்தார்கள். அது தொண்டையில் சிக்காமலிருக்க எதையோ வாயில் ஊற்றினார்கள். அவனால் எதையும் விழுங்க முடியவில்லை. எதையும் சொல்லவும் முடியவில்லை. வாந்தி எடுத்தான். திணித்ததிலிருந்து திணிக்காததும் அவன் தின்னாததும் வெளியில் தெரித்தன. 

அவனை  சிறிது நேரம் ஓய்வெடுக்க வைத்தார்கள்.

மீண்டும் ஒரு முறை விசாரித்தார்கள்.  இம்முறை அழுகை குறைந்திருந்தது. மூச்சு மட்டும் அதிகப்படியாக ஏறியேறி இறங்குகிறது.

அவனிடமிருந்து எந்த விபரங்களையும் வாங்க முடியவில்லை. அப்படியொரு பயிற்சியை அவன் பெற்றிருக்கக் கூடும். 

 தாங்கள்  தாக்குதல் நடத்திய இடத்தில் மயங்கிய நிலையில் இவனை கண்டுபிடித்திருந்தார்கள். தெளிவாக இருந்தால் இவனும் ஓடியிருப்பான்.

அவனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காது என உறுதியானது. உண்மையைச் சொல்லாத குற்றத்திற்காகவும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத குற்றத்திற்காகவும் அதிகாரி முன் வாந்தி எடுத்த குற்றத்திற்காகவும் தாக்குதல் நடந்த இடத்தில் பிடிபட்ட குற்றத்திற்காகவும் இன்னும் சில இதுவரை கண்டுபிடிக்காத குற்றத்திற்காகவும் தீவிரவாதி என உறுதி செய்து அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இது இங்கு நடந்துகொண்டிருக்கும் போது, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சிலர் தங்களில் உறவினர்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். 

அதில் ஓர் அம்மா தேடுவது; எப்போதும் அழுதுக்கொண்டிருக்கும் தனது ஐந்து வயதான வாய்ப்பேச வராத குழந்தையை..... குழந்தையை...... குழந்தைகளை.... குழந்தைகளையும்.....

அக்டோபர் 17, 2023

ஈரம்

 

அந்த அதிகாரியின் மனதில் ஈரம் இருக்கத்தான் செய்கிறது. 

இந்த யுத்தம் யாருக்காக இருந்தாலும் எந்த மதத்திற்காக இருந்தாலும் யாருடைய ஆணவத்திற்காக இருந்தாலும் அங்கு குழந்தைகளும் பெண்களும்  வயதானவர்களும் நோயாளிகளும் பாதிக்கப்படக்கூடாது. கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்காத அப்படி எந்த தெரியாத எந்த மனிதனையும் கொல்வது தர்மமாகாது.

ஆனால் வேறு வழியில்லை. யுத்தம் அதன் கோரத்தாண்டவத்தை ஆடத் தொடங்கிவிட்டது. அதிகாரியின் அறையிலிருந்து ஊர் முழுக்க கேட்கும் ஒலிபெருக்கி அதிரத்தொடங்கியது.

"அப்பாவி மக்களை கொல்வது எங்கள் நோக்கமல்ல. ஆனால் இது யுத்தம் இரு தரப்புகளுக்குமே இழப்புகள் இருக்கும். உங்களுக்கு இன்னும் 6 மணிநேரம் அவகாசம் கொடுக்கிறோம். உடனே இவ்விட்டத்தைவிட்டு வெளியேறுங்கள்.   உங்கள் நிலைமை எங்களுக்கு தெரியும். இந்த யுத்தத்தில் நாங்கள் ஜெயித்த பின் உங்களுக்கான சிறந்த வாழ்வை நாங்களே உங்களுக்கு அமைப்போம். அதுவரை ஊர் எல்லையில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் நீங்கள் தஞ்சம் புகுங்கள். "

அறிவிப்பைக் கேட்ட மக்கள் மிச்சமிருந்த உயிரையும் மிச்சமே இல்லாத உடமைகளின் எச்சங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். ஊரே இப்போது மயானமாக இருந்தது. சின்ன வித்தியாசம் முன்பு நடமாடும் பிணங்கள் இருந்தார்கள். இப்போது நடமாடாத பிணங்கள் இருக்கின்றன.

சரியாக ஆறு மணிநேரம் முடிந்தது. அதிகாரி தன் அறையில் யாருடனோ பேசுகிறார்.

"உன்னிடம் இன்னும் எத்தனை குண்டுகள் மிச்சமுள்ளன..?"

"200"

"அதில்  180 குண்டுகளை நீ மிச்சப்படுத்து, மற்றதை பயன்படுத்து..... குண்டுகள் நமக்கு முக்கியம்.... வீணாக்காதே...."

பேசி முடித்ததும், மக்கள் நுழைந்த மருத்துவமனை வெடித்து மனித உடல் சிதறி விழுகின்றன.

அந்த அதிகாரியின் மனதில் ஈரம் இருக்கத்தான் செய்கிறது. அது முழுக்க முழுக்க அப்பாவி மக்களின் செங்குருதியினால் நனைந்திருந்தது...


- தயாஜி

அக்டோபர் 13, 2023

- வசுமதியின் சிறகுகள் - 2




தலைப்பு : சிறகுகள்
எழுத்து : அறிமுக எழுத்தாளர் வசுமதி 
வகை : குறுங்கதை 
(எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பின் பங்கேற்பாளர்)

 

                 என் உடம்பில் பொருத்தப்பட்ட ஒவ்வொரு கருவியின் பயன்பாடும் என்னவென்று  என் பயிற்றுவிப்பாளர், கிளி பிள்ளைக்குச் சொல்வதைப்போல் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தார். நேரம் நெருங்க நெருங்க என்னுடய இதயம் மின்னலின் வேகத்தை விட பன்மடங்கு வேகமாகத் துடித்தது, லப் டப் லப் டப்..... “லெட்சுமி, இட்ஸ் யுவர் டென் நாவ், லெட்ஸ் கோ!!”. என்னுடைய பயிற்றுவிப்பாளாரை பின்தொடர்ந்து ஒரு சிறிய விமானத்தில் ஏறினேன். சரியாக கடலின் மட்டத்திலிருந்து 15,000 அடி தூரத்தில் அந்த விமானம் பறந்து கொண்டிருக்கையில், விமானி பச்சை விளக்கை அழுத்தி, “இது உனக்கான நேரம், லெட்சுமி!” என்று “thumbs up” காட்டினார். விமானத்தின் நுழைவாயிலில் என்னுடைய பாதங்கள் பலமாக ஒட்டி கொண்டன. எட்டி பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒன்றுமே தெரியவில்லை. ஒன்று, இரண்டு, மூலெட்சுமி என்கிற நான், வானில் பறக்கத் தொடங்கினேன். 

            அடப்பாவி மனுசா!! 1,2,3 சொல்லிய பிறகு நாம் குதிப்போம் என்று கூறிவிட்டு, மூன்று சொல்வதற்கு முன்பே என்னை வானத்தில் தள்ளிவிட்ட என்னுடைய பயிற்றுவிப்பாளாரின் மீது கடுங்கோபம் வந்தது. ஆனால் அது ஒரு வினாடிக்கூட நிலைக்கவோ நீடிக்கவோயில்லை. நான் ஒரு பறவயைப்போல் பறக்க உதவி புரிந்த அந்த ஜீவனிடம் நான் எப்படி என்னுடய சீற்றத்தைக் காண்பிக்க முடியும்.

            5 வினாடிகள் “free fall”-க்கு (எந்தவொரு தடையுமின்றி வீழ்தல்) பிறகு என்னுடய பயிற்றுவிப்பாளர் பாராசூட் பட்டணைக் கிளிக் செய்தார். துப்பாக்கியின் தோட்டாவைப்போல் என்னுடைய உடம்பு சர்ரென மேலே இழுத்து செல்லப்பட, என் வயிற்றில் யாரோ ஓங்கி உதைத்தது போல் ஓர் உணர்வு. 

            மறுபடியும் அதே உதை, “அம்மா ஆஆஆஆ... என்று கத்தியபடியே திடுக்கிட்டு எழுந்தேன். அட! இவ்வளவு நேரம் என் மகள் தூக்கத்தில் உதைத்ததால் ஏற்பட்ட வலிதான் அது என்பதை உணர்ந்தேன். என்ன ஒரு அசாதாரணமான கனவு. நான் கண்ட கனவு நிச்சயமாக மெய்ப்படும் என்ற நம்பிகையோடு படுக்கையிலிருந்து எழுந்து என்னுடய அன்றைய வேலைகளைப் பார்க்கத் தாயரானேன்

            லெட்சுமியின் பல வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், அவளது மனம் முழுவதும் அவள் கண்ட கனவை ஆக்கிரமித்திருந்தது. லெட்சுமி அன்றைய இரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். இரவுகள் அவளுக்கு முக்கியமானவை. அவள் ஒரு சுதந்திர பறவையாக வாழ்வது அந்த இரவு நேர தூக்கத்திலும் அது கொடுக்கும் கனவுலகிலும்தான். நேற்றைய கனவில் ஸ்கை டைவிங் செய்தாள் ஆனால் தரையிறங்கும் முன்பே அவளின் கனவு கலைந்து விட்டது. 

            இன்றைய கனவில் எப்படியும் தரையிறங்காமல் அவள் உறக்கத்திலிருந்து விழிக்கப் போவதில்லை. 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்