பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2019

மர்லின் 5




மர்லின்

நீதான் எத்தனை விதமானவள்
எத்தனை இதமானவள்...

எட்டி எடுக்க முடியாவிட்டாலும்
எக்கி எடுக்க முடிந்ததால்

புத்தகங்கள் கூட
இறகின்றி
உயரத்தில் உட்கார்ந்துக் கொள்கின்றன
உன்னை எதிர்ப்பார்த்து விழிக்கின்றன

மனிதன்
நான் என்ன செய்ய

மர்லின்...

கொஞ்சம்
இதழ் கொடேன்
இறுக்கிக்கொள்கிறேன்

இருக்கும் புத்தகங்கள்
பொறாமையில் பொசுங்கட்டும்

இனிமேல் புத்தகங்கள்
நம்மால் பிறக்கட்டும்

வரிகள் ஒவ்வொன்றிலும்
வாசனை தெளித்திடலாம்

படிப்பதில் போதை
கொடுத்திடலாம்

இன்னும் இன்னும்
உயரத்தில் அடுக்கிடலாம்
காதலை உதிரத்தில் கலந்திடலாம்...

வார்த்தைகளிலாவது
நாம்
வாழ்க்கை கொள்வோம்

வாசிக்கின்றவர்களின் வயதினை
கொல்வோம்


-தயாஜி-

Break me! Smash me!



Here i am...


Standing in front of this mirror....

Deep inside me I feel so weak and shattered....

The mirror reflects 'me'...


The 'me' with full of weaknesses...

The mirror said

"You are defeated"

The mirror said

"You are illiterate"

The mirror said

"You are a loser"

The mirror said

"You are lethargic"

The mirror said

"You are fearful"

The mirror said

"You are impecunious"

The mirror said

"You have no value"

The mirror said

"You are in pain"

The mirror said

"You are unattractive"

The mirror said

"You are empty"

The mirror said

"You are dispirited"

I hate what I'm seeing!!!

I closed my eyes & open it again...

Here I am...

Standing in front this mirror and looking at it sedulously...

Finally,

The mirror said

"Go ahead man... Break me! Smash me!"


By taya.G

மர்லின் 4




என்ன மர்லின்
என் கதையில்
எதனைத் தேடுகிறாய்

எப்போதோ தொலைந்த உன்னையா
எப்போதும் தொலையும் என்னையா

கவனமாக பார் மர்லின்
வார்த்தைகளின் இடுக்கில் கூட
நீ இருக்கக்கூடும்

எந்த பக்கம்
திறந்ததும்
உன் வாசனை கொடுக்கிறதோ
அதுதான் உனக்கான
துருப்புச் சீட்டு

வார்த்தைகளை நோக்கி
வாசனையோடு பின் தொடர்

உன்னை முன் தொடர்ந்த
என் கதையில்
எந்த பக்கத்தில் நீ
இருக்கிறாய் என்று
என்னாலும் நினைக்க முடியவில்லை

என்
எந்த பக்கமும் நீ
இருப்பதால் இந்த
குழப்பம்

முயற்சியை கைவிடாதே

இன்னும் கூட உன் தொடுதலுக்கு
ஏங்கி
வீங்கி
வரும் வார்த்தைகளைப் பாரேன்

பாவமில்லையா

#தயாஜி

ஊதா கண் தேவதை 2





நீ தந்துவிட்டவற்றில்
முத்தாய்ப்பானது
உன் முத்தத்தின் முதல் ஸ்பரிசம்
என்
உதடுகளை கடந்து
எச்சிலை தாண்டி
பல்லிடுக்கில் நுழைந்து
நாக்கினை நகர்த்தி
தொண்டைக்குழியில் குதித்து
நுரையீரல் காற்றை ஊதாவாக்கி
என் இதயத்தை உரசியதுதான்

உரசிவிட்டதில்
உள்ளிரிந்து ஒழிந்திருந்த நான்
ஒளிவிட்டது அப்போதுதான்

அப்போதிருந்த நொடியின்
நகர்முதல் நானாயிருந்த
எவனோ ஒருவனில் இருந்து அந்நியமானேன்
உன் கைப்பிடியில் அன்னியோன்யமானேன்.....

#தயாஜி
#ஊதா_கண்_தேவதை

ஊதா கண் தேவதை 1



எந்த ஒரு மாய எதார்த்தத்தாலும்
காட்டிவிட முடியாத தேவதை நீ
ஒற்றைவிழி பார்வையில் ஓராயிரம் வாசல்களை திறந்துவிடுகிறாய்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகங்களில் வாழ்வை காட்டி நிற்கிறது
சிங்கங்களிடம் சிரித்து
விளையாடுகிறாய்
முதலைகள் முதுகில்
படுத்துறங்குகிறாய்
மரங்களின் நுனியில்
நாட்டியம் செய்கிறாய்
பூச்சி புழுக்களுடன்
விருந்துண்ணுகிறாய்
காளான் செடி குடைகளில்
மழை தடுக்கிறாய்
புகைப்படங்களுள் புகுந்து
பேசுகிறாய்
இத்தனைக்குன் மேலாய்
மனிதன் என்மீது மனதார காதல் கொள்கிறாய்....

#தயாஜி
#ஊதா_கண்_தேவதை

தயாராய் இரு



வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல. 
ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பை 
அது கொடுத்தே வைத்திருக்கின்றது.
எத்தனை வயதாகியிருந்தாலும்,
எத்தனை இழந்திருந்தாலும்,
எத்தனை நொடித்திருந்தாலும்,
எத்தனை ஏமாந்திருந்தாலும்,
எத்தனை சிதைந்திருந்தாலும்,
எத்தனை அழுதிருந்தாலும்,
எத்தனை அவமானப்பட்டிருந்தாலும்,
எத்தனை துரோகம் கடந்திருந்தாலும்,
எத்தனை ஏமாளியாயிருந்தாலும்,
இப்படி பலப்பல எத்தனைகளுக்கு பின்னரும்
வாழ்க்கை நமக்கான இன்னொரு வாய்ப்பை கொடுக்கவும் தயாராய் இருக்கிறது....

கண்டுகொள்வோம். கரம் பற்றுவோம். அடித்து பட்டையை கிளப்புவோம்.

#second_chance
#தயாஜி

மர்லின் 3



தியானிக்க முயல்கிறேன்
தீயென பற்றிக்கொள்கிறாள்

மர்லின் 

அழைப்பேதுன்றி
அத்துமீறி
பிரவேசிக்கிறாள்

மர்லின் 

தேகமெல்லாம் வியர்க்க
விரல் வழி வழிகிறாள்

மர்லின் 

போதாதென காதில்
காற்றூதி கரைக்கிறாள்

மர்லின் 

இனியென்ன தியானம்
நீயே போதுமென
எழுந்தேன் தீயென
எதிரே
கண்மூடி
கால் மடக்கி
புத்தகம் ஒன்றில்
மூழ்கி
தியானிக்கிறாள்
சஞ்சலமின்றி

மர்லின் 2



மர்லின்
அப்படியே தூங்கிடு
இவ்வுலகு
நாம் வாழ்ந்த உலகல்ல

கிடைக்கும் நேரமே போதுமென்றுணர்
உறங்கும் தருணமே
உன்னால் மூச்சினை உணர முடியும்
இதர நேரமெல்லாம்
மேல் மூச்சு கீழ் மூச்சென
ஓடி ஓடியே உன்னை மறைத்திட வேண்டும்

பேச்சுகொடுக்க மரங்கள் இங்கில்லை
கடித்து காட்ட அணில்கள் இங்கில்லை
ஆற்றை கடக்க முதலைகள் இங்கில்லை
சக்கரை கொடுக்க எறும்புகள் இங்கில்லை
காலை கூப்பிட சேவல்கள் இங்கில்லை
சிரித்து பேசா பூக்கள் இங்கில்லை
வானில் அழைத்திட பறவைகள் இங்கில்லை
படித்து முடித்திட புத்தகங்கள் இங்கில்லை
ஒளியால் நடத்த விளக்குகள் இங்கில்லை

இங்கிருப்பதெல்லாம் ஒன்றுதான்
மனிதர்கள்
ஊர் கொன்று தான் தின்று
வளரும் மனிதர்கள்

நம் உலகு செல்ல
வழித்தடங்கள் இல்லை
எல்லோரும் சேர்த்து
அங்கு
பிணங்களை அடுக்கிட்டார்கள்
நீயோ நானோ
நாமோ அங்கு
போனால்
பிணமாவோம்
பிணவாடையில் ஒன்றாவோம்

உறங்கும் நேரம்தான் இங்கு
உனக்கான நேரம்

எப்போது விழிக்கிறாயோ
இருளை நீ சந்திப்பாய்

மர்லின்




மர்லின்
எந்த நூற்றாண்டிலோ
ஒருவருக்காக ஒருவர் வாழ்ந்திருக்கிறோம்

அதன் காரணமாய்
இன்னமும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்
வெறும் நினைவுகள் சுமந்த பிரேதங்களாய்
சிரித்துக்கொண்டிருக்கிறோம்

சதையினை கிழித்து
இதயத்தை பிழிகையில்
சொட்டென சிதறும் ரத்தம்
உன் பெயரையையே சொல்லி மரிக்கும்

மர்லின்

கோடான கோடியில் நீ
உன் கண் செய்யும் மாயையில் நான்

என் செய்வேன் சொல்
நீயாகவே வந்தென்னை கொல்

தேவதையென தெரிகிறாய் மர்லின்
தேவைநீ சொல்கிறேன் மர்லின்

எழுத முடியா எழுத்துகளால்
கூற முடியா சொற்களால்
காண முடியா காட்சிகளால்

உன்னை எழுதி
உன்னில் சொல்லி
உன்னையே காண்கிறேன்
மர்லின்...

'ச்சீ சிட்டுக்குருவி'



அன்று
என் வாழ்நாள் துயரம்
தன்னை தொடங்கியது

ஏதேதோ பாவங்களின்
வட்டி கணக்குகள் கண்முன்னே
கொட்டிக்கொண்டிருக்கின்றன

எத்தனையோ ஏமாற்றங்கள்
எத்தனையோ துரோகங்கள்
எத்தனையோ பொய்கள்
எத்தனையோ வெறுப்புகள்
எத்தனையோ பழிவாங்கள்கள்
எத்தனையோ ஒழிவுமறைவுகள்

எந்த உணர்வுமின்றி
பார்த்துக்கொண்டிருந்தேன்
சமயங்கள் சிரிக்கவும் செய்தேன்

ஒரு முறை மெல்லமாய் சிரித்தேன்
ஒரு முறை வாயோரத்தில் சிரித்தேன்
ஒரு முறை கண்மூடி சிரித்தேன்
ஒரு முறை கண்கலங்க சிரித்தேன்
ஒரு முறை சத்தமிட்டு சிரித்தேன்
ஒரு முறை வேண்டாவெறுப்பாக சிரித்தேன்

அப்போதுதான் தொடங்கியது
ஆரம்பப்புள்ளி அடையாளம் சொல்லிக்கொண்டது

சிட்டுக்குருவி
ஒரு சிட்டுக்குருவி
கேவலம் ஒரு சிட்டுக்குருவி
ச்சீ கேவலம் ஒரு சிட்டுகுருவி

மிகவும் சோர்ந்திருந்தது அதன் முகம்
எவ்வளவோ தூரம் பறக்க நினைத்த சிறகுகள் சுருங்கிக்கிடத்தன
கன்னங்கள் யாருக்காகவோ காத்திருந்த கருவளையம் சுழன்றுக்கொண்டிருந்தது

இத்தனைக்கும் மேலாக அதன் கண்களின் ஒளி
என் மீது பாய்கிறது
அதன் மென்மை இறகுகள் என் தலையை தடவுகின்றன
அதன் கன்னங்கள் என் கன்னத்தில் உரசுகிறது
அதன் சிரிப்பு என் காதுகளைக் கடந்து
இதய ஒட்டடைகளில் வாளர்ந்திருக்கும் சிலந்திகளை அணைத்து
நட்பு பாராட்டுகின்றன

அதன் ஒரு சொல்
ஒரே ஒரு 
ஒரு சொல்
என்னை மன்னித்தேன் என மறைகிறது

மன்னிப்பை எதிர்க்கொள்வதைவிடவா
இன்னொரு துயர் தொடக்கம் வேண்டும் மனிதனுக்கு...

#தயாஜி

தேடிக்காணும் நான்



இன்னும் தேடிக்கொண்டிருக்கிறாயா?
நேரம் உண்டு
தாராளம் கொண்டு
தேடு
எப்போது என் ஸ்பரிசத்தை உணர்வாயோ
கவனி
என் இரக்கமற்ற காதல்
உன்னை விழுங்கிவிட எத்தணிக்கும்
எட்டி நில்
காணாமல் போவேன்
மீண்டும் தேடி வா
உன் விளக்கின் சுடரொளி
என் இதய விட்டில்பூச்சியின் சிறகை
கருக்கிவிடட்டும்
நான் பறத்தலை மறந்து கோவம் கொள்கிறேன்
நீ காதல் திரவத்தில் என்னை முக்கி எடு
அப்போதும் காணாமல் போகிறேன்
வா
எல்லைகள் கடந்து
கண்டங்கள் தாண்டி
இந்த அரக்கனை ஆட்கொள்ள தேடு
இம்முறை என் முறை
உன் காதுகளில் காதலோசை கொட்டி
உன் மூளை நரம்பை வெடிக்க வைக்கிறேன்
உனக்கும் வாய்ப்பு உண்டு
உன் பற்களால் என் மேனி முழுக்க
கடித்து
சதையை பிய்த்து
நரம்பை அறுத்து
குடலை வெளியில் எடுக்கலாம்
அப்போதும் நான் காணாமல் போவேன்
நான் தான் நீ என
நீதான் நானென
இருவர் புரிந்து சிரிக்க தெரியாமல்
மீண்டும் மீண்டும்
நான் தொலைகிறேன்
நானே தேடி அலைகிறேன்
காதல் பெயரில்
எத்தனை முறையும்
செத்து செத்து விளையாடலாம்தான்..

#தயாஜி

அ-கவிதை




1.
என்னை முழுதாய்
தின்று செரிக்க முடிந்தவள்
நீயெனில்
அருகில் வா
மிச்சம் வைக்காதே

2.
என் உடல் சதைகளை நீக்கி
நரம்புகளைக் கோர்த்து
எலும்புகளைப் பிடுங்கி
உன்னால் இசைக்கவும்
துளையின்றி என்னை
வாசிக்கவும் முடியுமெனில்
உனக்கான இசைக்கருவி நான்

3.
கூரிய நகங்கள் கொண்டு
என் முதுகை ரணப்படுத்து
அதன் ரத்த வெள்ளத்தில்
நீச்சலடிக்க முடிந்தவள்
நீயெனில்
என்னை கட்டிப்பிடி

4
என்
இதழில் தொடங்கி
கொஞ்சம் கொஞ்சமாக
என்னை கடித்துத்தின்ன
தைரியமானவள் நீயெனில்
முத்தமிடு

5.
என் இரு காதுகளையும்
நாவால் கிழித்துத்தெடுக்க
முடிந்தவள் நீயெனில்
ஏதாவது ரகசியம் சொல்
உன் மடியில் படுக்கிறேன்

6.
உன் கொதிக்கும் பார்வையில்
என்னை அவித்து எடுக்கும்
சமையல்காரி நீயெனின்
என்னைச் சமைத்துக்கொடு

7.
என் கழுத்தை
தன் கருங்கூந்தலால்
இறுக்கி
அந்தரத்தில் தொங்கவிட்டு
ஊஞ்சலாட முடிந்தவள்
நீயெனில்
உனக்கான ஊஞ்சல் நானாகிறேன்

8.
பூஜாடிகள் அத்தனையும்
கொண்டு என் தலையில்
உடை
நீ விரும்பும்
ரத்த ரோஜாவாக
நான் மாறுகிறேன்

9.
ஆப்பிள்களை அழகாய் நறுக்க
என் கையில் இருந்து தொடங்க எண்ணுகிறாயா
சுண்டு விரலிலிருந்து நறுக்க ஆரம்பி

10.
என் முகம் முழுக்க
கண்ணாடித்துண்டுகளை சொருகு
பல கோணங்களின் தெரியும்
உன் முகத்தை உன் கண்களின் வழி
காட்டத்துணிந்தவள் நீயெனில்
உடைக்கவேண்டிய நிலைக்கண்ணாடி இதோ

11.
அழுக்கடைந்த என் நகங்களைச்
சுத்தம் செய்ய
ஒவ்வொன்றாகப் பிடிங்கி
அதன் அடிவேரை நீரில் கழுவும்
வேலைக்காரி நீயெனில்
விரல்கள்
இருபதோடு நின்றுவிட்டது
என் துரதிஷ்டம்

12.
உன் தோட்டத்து மண்ணை
தின்றுப்பார்த்து
அதன் வருங்கால பூக்களின் வண்ணங்களையுனக்கு
சொல்லவைக்கும் திட்டமுண்டெனில்
பசியோடு வருகிறேன்
மண் போடு

13.
பறவையைப் போல
என் பறத்தலையும் ரசிக்க
தூக்கி வீசும் முன் யோசி
பத்தாவது மாடியைவிட
நூறாவது மாடிதான்
உன் ரசனைக்கு ஏற்றது

14.
என் முகப்பருக்களை
இல்லாமலாக்க
அவ்விடங்கள்தோரும்
ஊதுபத்தி தீயினால்
ஒத்தடம் கொடுக்க
தயாரானவள் நீயெனில்
ஜவ்வாது ஊதுபத்தியை
பயன்படுத்து
மற்றது
உனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திடும்

15.
என்னை
கட்டியணைத்திடு
வெட்டி எறிந்திடு
பிய்த்து தின்றிடு
மிச்சமின்றி
உதிரம் குடி
அதற்கு முன்
கொஞ்சமேனும்
என்மீது
காமம் தெளி

16.
உன் பட்டாடை
மடிப்புகளற்று வடிவு பெற
இஸ்திரிச்சூட்டை
அதிகம் வைக்கவேண்டும்
நினைத்தது போலவே
என் முதுகில் முயற்சி செய்
எங்கேனும் தோல் கருகினால்
கொஞ்சம் தண்ணீர் மட்டும்
தெளிக்க மறக்காதே

17.
என் கண்ணில் கருவிழியில் ஊசியினை குத்திக்குத்தி
கற்றுக்கொள்ளலாம்
ஊசியில் நூல் கோர்க்கும் வித்தையை
என முடிவெடுக்கும்
தையல்க்காரி நீயெனில்
அரைகுறை வேண்டாம்
என் இருவிழிகளையும் எடுத்துக்கொள்

18.
தொண்டைக்குழியைக் கிழித்து
அமிலம் ஊற்றுவதுதான்
என் இருமலுக்கான
மருத்தெனக் கண்டறியும் மருத்துவச்சி நீயெனில்
முதலில் உன் சிங்கப்பல்லால் கடித்துத்துளையிட்டு
அதனிலிருந்து கிழிக்கத்தொடங்கு

19.
என் உதட்டினை
பிளேடு கொண்டு
சின்னச் சின்னதாய்க்
கோடு கிழி
இரத்தத் துளிகளோடு
உன்னிதழைப் பதித்து
முத்தச் சுவையைப்
பருகிட நினைப்புள்ளவள் நீயென்பதில் தவறில்லை
புதிய பிளேடுகளைக் கையிலெடு

20.
என் முதுகுத்தண்டில்
மெழுகுவர்த்தியைக் கவிழ்த்துச்
சொட்டுச்சொட்டாக
நீ விரும்பும் ஓவியத்தை உண்டாக்க
விரும்புகிறவள் நீயெனில்
கழுத்துக்கும் முதுகிற்கும் இடைப்பட்ட இடத்திலிருந்து ஓவியம் தொடங்கு

#

-தயாஜி

தனிமை



தனிமையின் கொடுமை
அத்தனை சுமையானது அல்ல
மருத்துவமனையின்
அடுத்த அழைப்பிற்கு
காத்திருக்கும் வரை

காத்திருத்தலின் நேரம் சுமையாவது காதலில் சாத்தியமாகலாம்
மருத்துவமனை முன்பதிவுக்கு தாமதமாகிவிடுவதை காட்டிலும்
பெரிதாக முடியாது

உறவுகள் கொடுக்கும் வலி
கொஞ்ச நேர உரையாடலில் தெளிந்துவிடலாம்
மருத்துவர் ஒருவர்
தன் நோய் குறித்து சொல்ல
" கூட வேற யாரும் வரலையா?"
என கேட்டு புருவம்
சுருக்கி கொடுக்கும் வலி
இதயத்தில் சிற்சில குண்டூசிகளை குத்திக்குத்தி பார்ப்பதை
அத்தனை எளிதில்
தெளிவுப்படுத்த முடியாது

அவளின் எலும்புகள்
கொடுக்கும் வேதனையை
புரிந்துக்கொள்ள
உட்கார்ந்து  அறிவியல் பேசுவதை விட
உடன் வந்து அவளை
தாங்கிப்பிடிப்பதுதான்
உத்தமமானது
உணர்வுப்பூர்வமானது

அவை எலும்புகள் அல்ல
யாரோ செய்துவிட்ட
பாவத்தில் பிரம்படியாகக்கூட
இருக்கலாம்
ஆனால்
ஏனே தானே சுமக்கும்படி சபிக்கப்பட்டிருக்கிறாள்

அடுத்தடுத்த தடுப்புகளில்
வந்து நிற்பவர்களில்
அவரவர்க்கான அன்பின்
பறிமாற்ற மொழிகள்
இவளின்
தனிமை தடுப்பில் மட்டும்
கூரம்புகளாய் புகுந்து
சிறிய காதுகளை
துளைக்காமல் விடுவதில்லை

அகல திறந்து கிடக்கும்
வார்டின் வாசல் கதவிற்கு வாயிருந்தால் சொல்லியிருக்கலாம்,
"நீ கொஞ்ச நேரமாச்சும் தூங்கு..
யாரும் வந்தா எழுப்பி விடறேன்"

உடல் பாரத்தைத் தாங்கும்
நவீன பட்டன் கட்டில் கூட
அவளின் மன பாரத்தை தாங்காது தவிக்கின்ற போது
அந்த வயது வந்த குழந்தை எப்படி தாங்கிக்கொள்ளும்

ஆயிரம் வேளைகளில்
அடுத்தவர் மீது அன்பு காட்ட
கொஞ்ச நேர இடைவெளி கிடைக்காதது
பணத்திற்கான தேடலென்றால்
இதுவரையில்
அப்படியொன்றும் சம்பாதிக்கவில்லை
வேலைக்கான தேடலென்றால்
இதுவரையில்
அப்படியொன்றும் செய்துவிடவில்லை
இயலாமைதான் காரணம் என்றால்
சரி ஒப்புக்கொள்ளலாம்
இது அன்பின் இயலாமை

அன்பிற்கே இயலாமையெனின்  உறவுகளின் ஆணிவேர் எங்கணம் சென்று நீர் தின்று உயிர் பிழைக்கும்

கொஞ்சமாய் புன்னகை
அதைவிட கொஞ்சமான விசாரிப்பு
அதைவிடவும் கொஞ்சமான அக்கறை
அதைவிடவும் கொஞ்சத்தின் கொஞ்சமான அன்பு

மருத்துவமனை தனிமைச் சோகங்களை மெல்ல மெல்ல துடைத்துவிடட்டும்
ஏனெனில்
நாளை
நம் நாக்கு மறுத்துப்போகலாம்
நம் கண்கள் பார்க்க மறக்கலாம்
காதுகள் ஏனோ வலிக்கலாம்
கால்களின் எலுப்பு
முறிந்துக்கொள்ளலாம்
கொஞ்சமாக இதயம் தன் இசையை நிறுத்திச்சிரிக்கலாம்

#தயாஜி

கதை_வாசிப்பு_2019 – 2 'கதிர்ச்சிதைவு'




கதை_வாசிப்பு_2019 – 2
கதை – கதிர்ச்சிதைவு
எழுத்து – அனோஜன் பாலகிருஷ்ணன்
இதழ் – காலச்சுவடு
திகதி – செப்டம்பர் 2019


கதிர்ச்சிதைவு. தலைப்பு ஒரு முறைக்கு இருமுறை சரியான சொல்லா அல்லது கதையில் வேறு பொருள் கொண்ட சொல்லா என நினைக்க வைத்தது. கதையின் நாயகன் ஒருமுறை தனது உரையாடலில் இவ்வாறு சொல்கிறான் “வானவில் என்பதே கதிர்ச்சிதைவின் மூலம் தென்படும் கானல் நீர்தான்.” முதலி வெறுமனே தலைப்பை சொல்லிக்காட்ட காரணம் என அவ்விடத்தை விட்டு நகர்ந்து கதைக்குள் செல்லலானேன்.

கதையினை வாசித்து முடித்ததும் ஏதோ ஒன்று மீண்டும் கதையை வாசிக்க அழைத்தது. ஏனெனின் உபயோகப்பட்டிர்ருகும் மொழி சட்டென எனக்கு நெருக்கமாகவும் அந்நியமாகவும் பூச்சி காட்டியது. சில இடங்களில் எங்கள் வட்டார வழக்கில் இருந்து இன்று மறந்து போயிருந்த சில வார்த்தைகள் இருந்தன. மீண்டும் கதிர்ச்சிதைவுக்கு கதாப்பாத்திரம் சொன்ன காரணம் மனதில் அலை மோதியது.

தனது பால்ய வயதில் நண்பனுக்கு செய்துவிட்ட துரோகத்தின் நிழல் மீண்டும் தன் மீது விழ அதிலிருந்து மீழ முடியாமல் திணறுகிறான் கதாநாயகன். அந்த சம்பவத்தை காதலியிடம் சொல்லும் போது நம்மாலும் அவ்விடத்தை ஜீரணிக்க முடியவில்லை.

மூன்று பிரிவுகளாக கதாநாயகன் தன் கதையைச் சொல்லிச்செல்கிறான். கடைசிவரை அவனது பெயர் நமக்கு தெரியவில்லை. அது ஒரு வகையில் நமக்து குற்றவுணர்ச்சியை துசி தட்டிவிடுகிறது.

‘வெற்றுத்தோட்டாக்களை சேமித்து விளையாடும் சிறுவர்களாக’ இருந்த தனது பால்யத்தையும் இராணுவ அதிகாரிகளீடம் சிக்கிக்கொண்டதும் சொல்லப்படும் போது மனதில் பாரம் தொற்றிக்கொள்கிறது.

போரைக்காட்டியும் போர்முடிந்த மௌனம் எத்தனை கொடூரமானது.
எல்லோரும் படிக்க வேண்டும் என மொழியில் சமரசம் வைக்காமல், தன்மொழியில் கதையினை நகர்த்தி வாசகனுக்குள்ளாக புதிய தேடலை இக்கதை தொடங்குகிறது.

தேக்கி வைத்திருக்கும் குற்றவுணர்ச்சி தன்னை வெளிகாட்டும் நேரம் நிச்சயம் பெரிய மனபாதிப்பை விட்டுச்செல்லும்.
கதையின் முடிவு முடிவற்று தொடர்கிறது. இங்கு யாருக்கும் யாரும் சமாதனம் சொல்லி எதனையும் தீர்த்து வைக்க முடியாது என்பதை இக்கதை நம்பவைக்கிறது.



- தயாஜி

கதை_வாசிப்பு_2019 – 1 'மழையின் சங்கீதம்'

கதை_வாசிப்பு_2019 – 1
சிறுகதை – மழையின் சங்கீதம்
எழுத்து – ந.பச்சைபாலன்

 ப.சிங்காரத்தின் கடலுக்கு  அப்பால் நாவலை படித்திருந்தேன். அது ஒரு துயர நாடகம் போல மனதை அலைக்கழித்தது. வரலாற்றில் ஆர்வமும் வரலாற்று அறிவும் அவ்வளாக இல்லாத எனக்கு, நாவலில் தொடக்க வாசிப்பு ஏனோ ஈர்க்கவில்லை. முதலில் என்னை பாதித்தது அதன் மொழிதான். பின்னர் நாவலில் பயணத்தில் நானும் ஒருவனாக மாறிவிட்டேன். நாயகனின்  தொல்வியிலும் அவனது கண்டடைதலிலும் நானும் கொஞ்ச நாட்களை கடத்தலாம் என்று நினைக்கிறேன். ஆக இனி வருவது  அந்நாவல் குறித்த பகிர்வு அல்ல.

அந்நாவலில் சிக்குண்டு கிடந்த மனதிற்கு மாற்றாய் கிடைத்த சிறுகதையைப்பற்றியது.

   சிலரின் கதைகளை என்னால் தைரியமாகப்  படித்து அது குறித்து பேசவோ எழுதுவோ முடியும். அவர்களால் என்னை புரிந்துக் கொள்ளவும் என் கருத்துக்கு மதிப்பளிக்கும் முடியும். அவ்வாறானவரின் ஒருவர்தான் ந.பச்சைபாலன். அதிகமாய் பாசம் பகிர்ந்துக் கொண்டு பழகி இல்லாவிட்டாலும், இருவருக்கும் இடையே மரியாதையும் அன்பும் இருக்கிறது.

   நாவலின் தாக்கத்தை தற்காலிகமாக மாற்றுவதற்கு ஏதும் தென்படுகிறதா எனத் தேடிக்கொண்டிருந்த சமயம் ந.பச்சைபாலனின் சிறுகதை கைபேசியில் பட்டு கண்ணுக்கு எட்டியது. இயல்பாகவே கவிஞர்களிடமிருந்து கதைகள் வருகிறதென்றால் அதில் எனக்கு தனித்த ஆர்வம் உண்டு. அதிலும் தற்சமயம் நான் இருக்கும் மழைச்சாரல் புலனக்குழுவில் ந.பச்சைபாலனின் கவிதைகளை குழுவின் நிர்வாகி வாணிஜெயம் தொடர்ந்து பகிர்ந்துக் கொண்டிருந்தார். ஆக சிறுகதை படிக்கும் ஆர்வம் மேலும் அதிகரித்தது.

‘மழையின் சங்கீதம்’ சிறுகதை.

   ந.பச்சைபாலனே அதில் நாயகனாக பாலன் என்ற பெயரில் வருவதாகவே வாசிக்கையில் தெரிந்தது. ஆனால் அந்த பல்கலைக்கழக காதல் காட்சிகளில் இன்றைய அவரின் தோற்றத்தையே என்னால் நினைத்துப்பார்க்க முடிந்தது என்னமோ துயரம்தான். இதனை போக்குவதற்காகவே அவரது இளமை ததுப்பும் பழைய படம் எதையாவது பார்த்து அந்த காதல் காட்சிகளில் இன்றைய பாலனை எடுத்துவிட்டு இளைய பாலனை புகுத்த வேண்டும். (இந்த வரிகளுக்கு ந.பச்சைபால் சிரிப்பார் மற்ற சிலர் எனக்கு ‘என்ன கொழுப்பு பார்’ என்பார். ரைட்டு விடுவோம்.)

கதை.

   ஞாயிறு பதிப்பில் துணை ஆசிரியராக இருக்கும் பாலன். எழுதிய பேய் கதைக்கு வாசகர்களிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கின்றன. அதில் ஒரு வாசகர் கடிதம் இவரை காதல் கதை எழுதச் சொல்லி கேட்கிறது. ஆசிரியர் பாலனை அழைத்து அது குறித்து பேசுகிறார். காதலே நமக்கு ஆகாது இதில் காதல் கதை வேறயா என்பது போல பாலன் தயங்கி இன்னொரு பேய்கதை எழுதுவதற்கு தயார் என்கிறார். அதனை மறுத்து ஆசிரியர் காதல் கதை எழுதுவது அவருக்கு விடப்பட்ட சவால் என தூண்டி விடுகிறார். பாலனும் வேண்டாம் வெறுப்பாக ஒப்புக்கொள்கிறார்.

  அப்போது மழை. மழையில் பாலனுக்கு பல்கலைக்கழக காதல் அனுபவம் நினைவுக்கு வருகிறது. அவரின் பால்யமும் அந்த பருவமும் நேர்த்தியாக சொல்லப்படுகிறது. நாயகி  பூரணி. ந.பார்த்தசாரதியில் குறிஞ்சி மலர் நாவலின் நாயகி. பாலனுக்கு அப்படித்தான் தோன்றுகிறது.  இருவருக்குமான நெருக்கம் தொடங்குகிறது . அங்கிருந்து காதலை நோக்கி நாம் பயணிக்கிறோம். அடடே நல்லதொரு காதல் கதைக்கு வாசகர்கள் தயாராகும் சமயத்தில் ஒரு திருப்பம். வழக்கமான காரணங்களின் பொருட்டு அது நடக்கிறது.

   மழை மனிதற்கு முதல் காதலை மட்டுமல்ல மறுகாதலையும்தான் நினைக்க வைத்துவிடுகிறது ! அப்படி இரண்டோடு நின்றுவிட்ட துர்பாக்கியசாலிகளில் பாலனும் சேர்ந்துக் கொள்கிறார். எனக்கெல்லாம் பெய்துக் கொண்டிருக்கும் மழை மட்டுமல்ல, மழைன்னு யாரும் சொன்னாலே காதலிகள் வரிசையா நின்றுக் கொள்வார்கள். யாரைத்தான் நினைக்காமல் இருக்க முடியும் சொல்லுங்கள் ?

   கதையில் அடுத்த பரிணாமம். பத்திரிகை துறையில் சேர்கிறார் பாலன். அங்கு வேலை சேர்வதற்கு வீட்டில் ஆதரவு இல்லை. தாத்தாவை போல பேரனும் இப்படி பத்திரிகை கதை கட்டுரை என வீணாய் போவதை அம்மா விரும்பவில்லை. இதனை படிக்கையில் இதே போன்ற வசனம் அம்மா சொல்வதாக ந.பச்சைபாலனின் இன்னொரு கதையில் படித்ததாய் தோன்றுகிறது. யார் சார் உங்க தாத்தா… எனக்கே அவரை பாக்கனும் போல இருக்கு…?

வேலை நிமித்தம் வெளியில் செல்லுகையில் நந்தினியை சந்திக்கின்றார். ஆமாம் அங்கொரு காதல் கதை ஆரம்பமாகிறது. ஆனால் பாவம் பாலனால் நந்தினியில் இன்னொரு உலகத்துக்கு நுழைய முடியவில்லை. நவீன உலகத்தை பொறுத்தவரை ஒவ்வொருவரும் இவ்வாறான இரண்டு உலகங்களில் வாழ தங்களை பழக்கிக்கொள்கிறார்கள். வேறு வழி இல்லை என்பது மாதிரியான சூழல் இங்கு அமைந்துவிடுகிறது. சரி தவறு என்பதை தாண்டி மக்கள் பயணித்து நாளாகிவிட்ட நிலையில் பாலன் போன்றவர்களும் இருக்கிறார்கள். நாம் எதிர்ப்பார்த்த காதல் கதையில் இன்னொரு திருப்பத்தை நமக்கு பாலன் தருகிறார்.

   தனது ஏமாற்றங்களை மிள் உருவாக்கம் செய்து அதனை காதல் கதையாக்கி அதிலாவது வெற்றி அடைவார் என வாசகர்கள் எதிர்ப்பார்க்கும்  சமயத்தில்;

   ‘ஆதலினால் கொலை செய்வீர்’ (இந்த தலைப்பில் சுஜாதாவின் நாவல் இருக்கிறதே !) இன்னொரு திகில் கதையை எழுதிக் கொடுக்கிறார். ஏமாற்றத்துடன் ஞாயிறு ஆசிரியர் காதல் கதை குறித்துக் கேட்கவும்.  அடுத்த கதை காதல் கதைதான் என சொல்லிவிட்டு செல்கிறார். நாமும் அந்த ஞாயிறு ஆசிரியர் போல  நம்பிகொண்டு இருக்கும் போது; தன் இடத்தில் வந்து அமர்கிறார். ஜன்னல் வழி வானம் பார்க்கிறார். அவருக்கு வானம் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல மழை வராது என்றும் கூட அவருக்கு தோன்றிவிடுகிறது. வராமல் போவது மழை மட்டுமல்ல அவரிடம் இருந்து காதல் கதையும்தான் என நாம் நினைத்துக் கொள்ளலாம். ஆனாலும் அவர் சொல்லாமல் செல்வது போல போக்கு காட்டிய இரண்டு இடங்களிலும் காதல் உண்டு அங்கு கதையும் உண்டு.

   படிப்பதற்கு சுவாரஷ்யமான கதை. நம்மை கொஞ்ச நேரம் பழைய காதலில் இளைப்பார வைக்கிறது. தங்குதடையின்றி கதைக்குள்ளே செல்ல முடிகிறது.

  ஓர் ரகசியம்; பாலனுக்கு முன்றாவது காதல் வரலாம். ஏனெனில் அவ்வபோது அவரது அலுவலகத்தில் தேநீர்  கொடுக்கும் பெண்ணின் பெயர் மாலினி.

மாலினி பெயர் நல்லாருக்குல்ல…

https://patchaibalan.blogspot.com/2019/05/blog-post_21.html?m=1
(சிறுகதையை வாசிக்க )

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்