பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 31, 2021

அப்போதும் இப்போதும்

- அப்போதும் இப்போதும் -

அப்போது
அங்கு ஒரு குழந்தை
பால் குடித்துக் கொண்டிருந்தது

அப்போது
அங்கு ஒரு சிறுமி
படம் வரைந்துக் கொண்டிருந்தாள்

அப்போது
அங்கு ஒரு சிறுவன்
விளையாடிக் கொண்டிருந்தான்

அப்போது
அங்கு ஓர் அம்மா
சமைத்துக் கொண்டிருந்தார்

அப்போது
அங்கு ஓர் அப்பா
வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்

அப்போது
அங்கு ஒரு பள்ளிக்கூடம்
நடந்துக் கொண்டிருந்தது

அப்போது
அங்கு ஒர் ஓடை
ஓடிக் கொண்டிருந்தது

அப்போது
அங்குச் சில பாட்டிகள்
வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தார்கள்

அப்போது
அங்குச் சில தாத்தாக்கள்
கலந்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்

இப்போது
இங்கு ஒரேயொரு
நட்சத்திர நீச்சல் குளம்
இருக்கிறது
டிக்கட் உள்ளவர்களுக்கு
அனுமதியுடன்


#தயாஜி

ஜூலை 30, 2021

- முகவரியற்ற கடிதம் -

 - முகவரியற்ற கடிதம் -


ஏன் எழுதுகிறேன்
என்கிற கேள்வியின்
நுனியில் அமர்ந்துக் கொண்டே
எழுதவேண்டி உள்ளது

பதில் கிடைக்காத
எத்தனையோ கேள்விகள்
இதனையும் இணைத்துவிட
தோன்றவில்லை
விட்டு விலகவும்
முடியவில்லை

உலகின் ஏதோ ஒரு
மூலையில்
அழுபவனுக்கு அருகில்
நானும்தான் அழுதேன்
என ஆறுதல் செல்வதற்கு

பெயர் தெரியாத
மனிதனொருவனின்
சொல்ல முடியாத துயரில்
பங்கு கொள்வதற்கு

அழுது அழுது
ஆவப்போவது ஒன்றுமில்லை
என்கிற அனுபவத்தைச்
சொல்லிச் செல்வதற்காவது
ஒருவன் எழுத வேண்டாமா
சொல்லுங்கள்

#தயாஜி

- யாராக பிறக்கலாம் -


- யாராக பிறக்கலாம் -

நிசப்தத்தின் பேரிரைச்சலைத் 
தனிமையில்
கேட்பதென்பது
கண்களைக் கட்டி கடலில்
தள்ளிவிடுவது போலானது

உதவிக்கு அழைக்கவும் முடியாது
உடன்
குதித்தவர்கள் யாரென்றும் தெரியாது

மங்கிப்போன மின்விளக்கின்
கீழ்
அழுவது
வேறு யாரோ அல்ல
நிச்சயம் என் கனவுதான்

அதோ நிழலாக தன்னை
நினைத்துக் கொண்ட
நாயின் வாலொன்று
வெளிச்சம் வரும் வரை
அசைமாட்டேன் என்கிறது

நீ நிழலல்ல
நிஜமென
யார்தான் சென்று சொல்வது

எதிர்கால ஆசை
தலைப்பில் எழுதிவைத்த நேரத்தில்
எதையாவது பூசி
தோளை வெளுத்திருந்தால்
கறுப்பாக இல்லாமல்
கல்லூரியில் இடம் பெற்றிருப்பேன்

படித்ததை
எழுதி பெற்ற
மதிப்பெண்களைவிட
யார் வீட்டில் என்னவாக பிறந்தோம்
என்ற அடையாளமே
போதுமானதாக இருக்கும் போது
எதற்கு இத்தனைச் சிரமங்களில்
பரிட்சைக்கு பழகுகின்றோம்

ஆனால் ஒன்று
நாயாகக்கூட பிறக்கலாம்
நாடற்வனாக பிறக்கவே கூடாது

- நேசத்திற்குரிய இரவுகளே -

 - நேசத்திற்குரிய இரவுகளே -


இரவுகள் சுதந்திரமானவை
கண்ணைச் சூழ்ந்த
இருளில் திரையில்
யாரை வேண்டுமானாலும்
வரச்சொல்லி அழைக்கலாம்
எந்த வாசத்தையும்
முகர்ந்துக் காட்டலாம்
எந்த உணர்விலும்
வாழ்ந்துப் பார்க்கலாம்

எப்போதோ செய்த தவறுக்கு
வருந்தி அழலாம்
நண்பர்கள் செய்த துரோகத்தை
மீண்டும் காணலாம்

அமைதியின் பேரிரைச்சல்
காதுகளை கிழித்தாலும்
சிரித்துக் கொள்ளலாம்

இரவுகள் எப்போதும்
தெய்வீகமானவை
அதன் ஆழம் அறிய
இருளின் இருளாக
கரையவேண்டும்
நம் நிழலாக நாமே
பிறக்க வேண்டும்
ஒட்டிக் கொண்டிருக்கும் உடலை
ஒதுக்கி
சுவர்களில் பிரதிபலிக்க வேண்டும்
நிழலானப் பின்பும்
நிச்சயம் நினைவுகள்
வந்தேத்தீரும்
சமாளிக்க கொஞ்சம்
தைரியமும் கொஞ்சமேனும்
அழுகையும்
வேண்டும்...

- தயாஜி

- பகல்கள் விற்பனைக்கு -

 - பகல்கள் விற்பனைக்கு -

உங்கள் இரவுகளை
எனக்களிக்க இயலுமா
பதிலாக என் பல பகல்களைத்
தந்துவிடுகிறேன்
எனக்கு இரவுகள் போதும்
எல்லார்க்கும் உறக்கம்
உண்டானப்பின்னேதான்
ஏதோ கொஞ்சம்
அழ முடிகிறது
அழ அழ மட்டுமே
மனம் லேசாகிறது
அழுதப்பின்னே அதன்
பாரம் இரட்டிப்பாகிவிடுகிறது
எத்தனைக் கனவுகளுடன்
கால்தடம் வைத்தோம்
அத்தனையுமா அடைந்துவிடுகிறோம்
பித்தனைப் போல் அலையவும்
முடியவில்லை
புத்தனைப் போல் அமரவும்
இயலவில்லை
அழும் கண்ணீரோசையில்
காதுகள் கொஞ்சமேனும்
அடைத்துக் கொள்கின்றன
தேம்பித் தேம்பி அழவும்
விம்மி விம்மி ஆழவும்
காரணங்களா இல்லை
ஏதோ ஒன்று
காத்திருப்பதாக
நமக்கு நாமே சொல்லிக்
கொள்ளும் ஆறுதல்களுக்கு
பஞ்சமில்லாத பகல்களை
எடுத்துக் கொண்டு
நிசப்தமான இரவுகளை
கொடுத்து உதவுங்கள்
தூரத்து நட்ச்சத்திரங்களுடனாவது
பேசிவிட்டு வருகிறேன்
அவை போலியாய் புன்னகிக்க
கற்றுக்கொள்ளாதவை....

- அத்தையை நம்புவோம் -

 #குறுங்கதை 2021 - 23

- அத்தையை நம்புவோம் -

காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு வெளியேறினேன். வரவேற்பறையில் அத்தை அமர்ந்திருந்தார். வழக்கமான புன்னகை இருக்கவில்லை.

முகம் பீதியில் இருந்தது. என்னவென்று விசாரித்தேன்.

"அத்தை என்ன ஆச்சி..? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க.?"

"ஒன்னுமில்ல.."

"ஏதோ இருக்குன்னு தெரியிது அத்தை. சொல்லுங்க..."

"சொன்னாலும் நீங்க நம்பமாட்டீங்க.. விடுங்க.."

அத்தை இப்படி சொல்லிவிட்டால், அடுத்ததாய் நடந்ததைச் சொல்லப்போகிறார் என்று அர்த்தம். ஆரம்பித்தார்.

"விடியற்காலைல ஏதோ ஒன்னு என்னை அமுக்கிடுச்சி..!"

"அமுக்கிடிச்சா...?"

"ஆமா.. நல்லா தூங்கிட்டு இருந்தேன். கறுப்பா ஒன்னு முகம் கூட சரியா தெரியல.. என் காலை புடிச்சிருச்சி..."

"ஐயோ அப்பறம்!"

"என்னால கை காலை அசைக்க முடியல.. வாய்க்கு வந்த சாமிங்க பேரையெல்லாம் சொல்லிட்டு... காலை இழுத்துகிட்டேன்.."

"அப்பறம்....!"

"அப்பறம் என்ன அப்பறம்.. என்கிட்டயா விளையாடுதுனு சொல்லி.. இழுத்துகிட்ட காலிலேயே ஒரு எத்து விட்டேன்.. அப்படியே பறந்து போச்சி.. அப்பறம் காணல.."

சொல்லும் போதே அத்தையின் முகத்தில் ஏதேதோ தெரிந்தது. நம்புவதா வேண்டாமா என யோசிக்க முடியவில்லை.

அப்போதுதான் மாமா அறையை விட்டு வெளியில் வந்தார். முகம் வீங்கி இருந்தது. மூக்கு உடைந்து இரத்தம் காய்ந்திருந்தது. நடக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார்.

சந்தேகமே இல்லை. அத்தையை நம்பிவிட்டேன்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூலை 11, 2021

- கத்தும் கிளிகள் -

 #குறுங்கதை 2021 - 22



         
               - கத்தும் கிளிகள் -


"காப்பாத்துங்க.... காப்பாத்துங்க..."

முனகல் சத்தம் பக்கத்து வீட்டுக்காரரை பதறச்செய்தது. ஏதோ ஒரு பெண்ணின் குரல். உயிருக்கு பயந்து கெஞ்சும் பலவீனமானக் குரல். என்ன செய்யலாம். யோசிக்கலானார்.


தாமதமின்றி சிலரை அழைத்துக் கொண்டு பக்கத்து வீட்டு வாசலில் நிற்கலானார். வீட்டில் உள்ளவர்களை அழைக்கவும் செய்தார். 


உள்ளிருந்து வெளியில் வந்த குமாருக்கு ஒன்றும் புரியவில்லை. தான் மாட்டிக்கொண்டதாக நினைத்தார். எதையும் காட்டிக்கொள்ளவில்லை.


 'என்ன?' என்பதாக தலையை ஆட்டினார்.


"சார் உங்க வீட்டுல இருந்து ஒரு பொண்ணு அழற சத்தம் கேட்குது... என்ன நடக்குது...?, நீங்க இங்க வந்து ஒரு மாசம் கூட ஆகல... அதுக்குள்ள என்ன இதெல்லாம்...?"


"பொண்ணு அழற சத்தமா? என் வீட்டுல இருந்தா..?"


"பின்ன யார் வீடு?..யாரோ ஒரு பொண்ணு காப்பாத்துங்க.. காப்பாத்துங்கனு கத்தற சத்தம் கேட்குது.... யாருன்னு எங்களுக்குத் தெரியனும். இல்லைன்னா போலிஸை கூப்டுவோம்.."


"இப்ப என்ன உங்களுக்கு? அந்த பெண்ணை பாக்கனும் அவ்வளவுதான...?"

சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் சென்றார்.  கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்தார். அவருடன்  'காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..' என முனகிக்கொண்டே ஒரு கிளியும் கூண்டுடன் வந்தது. பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் பயம் காட்டுவதாகவும் அந்தக் கிளி இருந்தது.


"சார் இது இந்த கிளியோட சத்தம் சார்... கூண்டை திறந்துவிட சொல்லுது.. பத்து வருசமா வளர்த்துகிட்டு இருக்கேன்.."


வந்திருந்தவர்கள் சிரிப்பதா அழுவதா எனத் தெரியாமல் அசடு வழிய அங்கிருந்து ஒருவர் பின் ஒருவராக கிளம்பினார்கள்.


அவர்களை நினைத்து சிரித்துக் கொண்டே கிளியுடன் வீட்டிற்குள் சென்றார் குமார். கதவை பூட்டினார். கிளியை அதற்குரிய இடத்தில் வைத்தார். அதற்கு ஒரு வெள்ளை எலியை தின்னக்கொடுத்தார்.


சமையல் அறைக்குச் சென்றார். கத்தியை எடுத்துக் கொண்டார். மறைவாக இருக்கும் கதவை திறந்தார். நடந்துக் கொண்டே

"நாக்கு இருந்தாதான காப்பாத்துங்கன்னு கத்துவ.....??"


#தயாஜி

ஜூலை 09, 2021

வாசிப்பும் வாழ்த்தும்

வாசிப்பும் வாழ்த்தும்



  பாராட்டுகளும் பரிசுகளும் வெளியில் இருந்து மட்டும் கிடைப்பது அல்ல. நமக்கு நாமே கூட கொடுத்துக் கொள்ளலாம். நமது சிறு சிறு அடைவுகளுக்கும் நமக்கு நாம் கொடுக்கும் பாராட்டுகளும் பரிசுகளும் ஆழ்மனதில் இருந்து நமக்கான ஆற்றலை அதிகப்படுத்துகின்றன. தன்னை அறியாதவனால் எதனையும் சுலபத்தில் அறிய முடியாது என்பது போல தன்னை மதிக்காதவன் பிறரின் மதிப்புகளையும் புரிந்துக் கொள்ள முடியாதவன் ஆகிறான். 

   எனக்கு நானே பாராட்டி பரிசளிப்பது என் சிறுவயது பழக்கமாக இருந்தது. விளையாட யாரும் உடன் இல்லாத சமயங்களில் கூட நான்கு ஐந்து பொம்மைகளை வைத்து நான்கு பேராக நான் ஒருவனே பேசி , சண்டையிட்டு சமாதானம் செய்து விளையாடிக் கொள்வேன். அதிலிருந்து மிமிக்ரி எனப்படும் பலகுரலில் பேசவும் பழகிக்கொண்டேன். அப்பழக்கம் என் தனிமைக்கு ஒரு தீர்வாக அமைந்தது. அதிலிருந்து அடுத்த கட்டமாகத்தான் என் வாசிப்பை வளர்க்க ஆரம்பித்தேன். நண்பர்களுக்கு புத்தகங்களைப் பரிசளிக்கவும் எனக்கு நானே புத்தகங்களைப் பரிசளிக்கவும் செய்யத்தொடங்கினேன். எனது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை மூலமாகவும் வாசகர்களுக்கு புத்தகங்களைத் தொடர்ந்து பரிசுகளாகவும் கொடுத்து வருகின்றேன்.

   வாசித்த புத்தகங்கள் பற்றி முடிந்தவரை சிறு குறிப்பாவது எழுதிப்பகிரவும் செய்கிறேன். அப்படி சிறு குறிப்புகளாகத் தொடங்கி ஐந்து ஆறு பக்கங்கள் வரை எழுதும் படியும், வாசித்தது குறித்து மணி கணக்காக பேசும் படியும் வளர்ந்து  வந்திருக்கிறது.

   என் உடல் சார்ந்த மனம் சார்ந்த பல உபாதைகளுக்கு புத்தகங்கள் பெரும் துணையாக இருந்து வருகின்றது. ஒரு முறை மருத்துவமனை படுக்கையில் தூக்கம் வரமால் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மருத்துவர் அப்புத்தகம் பற்றி நேரம் எடுத்து என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். 

   இவ்வாண்டு தொடக்கம் வாசித்து முடித்த புத்தகங்கள் கலைந்தும் அடுக்கியும் என் மேஜையில் இருக்கின்றன. கொஞ்சம் பிரமிப்பு கொடுக்கவே செய்தது. இவ்வாண்டில் பாதியில் இருக்கின்றோம். ஆறாம் மாதம் வரைக்கும் வாசித்த புத்தகங்களை ஒரு பட்டியல் போட்டுப்பார்க்கலாம் என தோன்றுகிறது. 

ஜூன் 2021 வரை வாசித்து முடித்த புத்தகங்கள் :

நாவல்கள் 

1. ரசவாதி – பாலோ கொயலோ (மொழிபெயர்ப்பு)
2. வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி - நக்கீரன்
3. இடைவெளி – எஸ். சம்பத்
4. ரூஹ் – லஷ்மி சரவணகுமார்
5. ரப்பர் - ஜெயமோகன்
6. கானகன் – லஷ்மி சரவணகுமார்

சிறுகதைகள் 

7. இரண்டாம் லெப்ரினன்ட் – அகரமுதல்வன்
8. போக புத்தகம் – போகன் சங்கர்
9. கண்ணாடி – ஜி. முருகன்
10.  கறுப்பு நாய்க்குட்டி – ஜி. முருகன்
11. பெர்னுய்லியின் பேய்கள் – சித்துராஜ் பொன்ராஜ்
12.  தாஸ்தயொவ்ஸ்கி கதைகள் – எம்.ஏ.சுசீலா (மொழிபெயர்ப்பு)
13.  ஜார் ஒழிக – சாம்ராஜ்
14.  மாறிலிகள் – சித்துராஜ் பொன் ராஜ்

கவிதைகள்

15. வேட்டுவம் நூறு – மௌனன் யாத்ரிகா
16.  ஆரண்யம் – கயல்
17.  எழிலிக்கு வேரின் சாயல் – நெய்தல்
18.  பேனாவுக்குள் அலையாடும் கடல் – கலாப்ரியா
19.  தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி – கலாப்ரியா

கட்டுரைகள் 

20.  கதை சொல்லியின் 1001 இரவுகள் – சித்துராஜ் பொன்ராஜ்
21.  தன் மீட்சி – ஜெயமோகன்
22.  மலேசிய நாவல்கள் – ம.நவீன்
23.  தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி – சு.வேணுகோபால்
24.  சொற்களின் புதிர்பாதை – எஸ்.ராமகிருஷ்ணன்
25.  எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
26.  மேற்கின் குரல் - எஸ்.ராமகிருஷ்ணன்
27.  எழுத்தே வாழ்க்கை - எஸ்.ராமகிருஷ்ணன்
28.  வாசக பர்வம் - எஸ்.ராமகிருஷ்ணன்
29.  நாவலெனும் சிம்பொனி - எஸ்.ராமகிருஷ்ணன்
30.  இலைகளை வியக்கும் மரம் - எஸ்.ராமகிருஷ்ணன்
31.  கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்

  வாசித்து முடிந்த முப்பத்தியொரு புத்தகங்களில் இதுவரை 21 புத்தகங்கள் பற்றிய என் வாசிப்பு அனுபவத்தை எழுதிப் பகிர்ந்துள்ளேன். இன்னும் பத்து புத்தகங்கள் பற்றி இவ்வாண்டு எழுதவேண்டும் என முயல்வேன். அதற்கிடையில் அடுத்தடுத்த வாசிப்பிற்கு என்னை ஆயுத்தப்படுத்திக் கொண்டே செல்கிறேன்.

  மனம் விரும்பும் ஏதாவது ஒன்றை தொடர்ந்து செய்வதன் வழி கிடைக்கும் அனுகூலம் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். என் அனுகூலமாக நான் கருதுவது என் கசப்பான கடந்த காலத்தை மறக்கவும் எதிர்காலத்தை எதிர்க்கொள்ளவும் நிகழ்காலத்தில் வன்மம் இல்லாமலும் வாழவும் செய்கிறேன். 

  இதற்கிடையில் தொடர்ந்து குறுங்கதைகளை எழுதிக் கொண்டிருக்கின்றேன் அவ்வபோது கவிதைகளும் சிறுகதைகளையும் எழுதுகின்றேன். இவ்வாண்டு புத்தகம் வெளியிடும் எண்ணமும் உண்டு. 

   எழுதுவதும் வாசிப்பதும் என்னை இயக்கும் கச்சா பொருளாக பாவிப்பதால் அதைத் தவிர்த்து தேவையற்ற அரட்டைகளிலும் வன்மங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்த்தே வருகிறேன். உடன் பழகுகின்றவர்களுக்கும் வாசிப்பு குறித்து உரையாடவும் செய்கிறேன்.
வாசிப்பு கொண்டாட்டத்தை இரட்டிப்பாக மேலும் சில புத்தகங்களை எனக்கு நானே பரிசளித்துக் கொள்கிறேன்.

  இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். முகநூலில் இருக்கும் சில வாசிப்பு குறித்தான குழுக்கள் வாசிப்பின் வேகத்திற்கும் வாசிப்பிற்கு பிறகான  கருத்து பரிமாற்றங்களுக்கும் உதவுகின்றன. குறிப்பிட்டு சொல்வதென்றால் 'வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்', 'வாசிப்பை நேசிப்போம்', 'புக்ஸ் ரீடர்ஸ் தமிழ்' , 'புத்தகச்சிறகுகள் வாசிப்பாளர் குழு' போன்ற  குழுக்களை சொல்லலாம். குழு நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் அன்பும் நன்றியும்.


அன்புடன் #தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூலை 08, 2021

- உண்டியல் திருடன் -

 #குறுங்கதை 2021 - 21

- உண்டியல் திருடன் -

        அந்தக் கிழிந்தக் காகிதம் ஒரு பக்கம் விழுந்துக் கிடக்கின்றது. அதனுடன் எப்போதோ சாப்பிட்ட மிட்டாய் பைகள். இன்னும் சில ரொட்டித் துண்டுகளின் நெகிழிப்பைகளும் இருக்கின்றன.

        வாங்கிய அறையில் கன்னம் வீங்கியிருந்தது. மேலும் சிலரின் அடிகளால் முதுகும் கை கால்களும் வீங்கி சில இடங்களில் இரத்தம் கசியத்தொடங்கியது.

        "இவனை அடிக்கற அடில இனிமேல் எவனும் கோவில் உண்டியல்ல கை வைக்கக் கூடாது.."
என்றபடியே எட்டி மிதித்தார் அழகேசன்.

   மயக்கத்தில் கிடந்தவனின் கைப்பிடியில் பத்து வெள்ளி மட்டும் இருந்தது.

    "ஏண்டா டேய்... அல்பம் பத்து வெள்ளிக்குலாமா கோவில்ல வந்து திருடுவீங்க... " என்ற யாரோ ஒருவர் அவனது கழுத்தைப் பிடித்துத் தூக்கி வீசினார்.

    இப்படியேப் போனால் அந்த திருடன் இறந்துவிடக்கூடும் என்கிற அச்சம் சிலருக்கு வந்தது. அவனை அப்படியே இழுத்துக் கொண்டு கோவிலை விட்டு
வெளியேறினார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் காவல்துறையில் இருந்து ஆட்கள் வந்துவிடுவார்கள்.

கூட்டத்தைக் கலையச்சொல்லியபடி அந்தத் திருடனின் சட்டைப்பையில் இருந்து கீழே போட்ட குப்பைகளை சுத்தம் செய்யலானார் அழகேசன்.

அதில் ஒரு கசங்கியக் காகிதம் இருந்தது. எடுத்தவர் மௌனமானார்.

        'சாமி, நான் சாப்ட்டு ரெண்டு நாள் ஆகுது. பத்து வெள்ளிய கடனா எடுத்துக்கறேன். சீக்கிரமே கொடுத்துடுவேன். இதான் அதுக்கு சாட்சி'

என்று எழுதப்பட்டு கையெழுத்தும் போடப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் சில இடங்களில் பட்டிருந்த திருடனின் காயாத இரத்தம், அழகேசன் கையில் ஒட்டிக் கொண்டது.

- ஏமாற்றும் கலை -

 #குறுங்கதை 2021 - 20

- ஏமாற்றும் கலை -

        நிகழ்ச்சி பரபரப்பானது. நம்புகின்றவர்களும் நம்பாதவர்களும் ஆளுக்கு ஆள் பேசவும் சிலர் சத்தம் போடவும் செய்தனர்.

        நிலைமையை சமாளிக்க வேண்டும். இரு குழுவில் இருந்தும் ஒருவர் அழைக்கப்பட்டார்கள்.

        "நிகழ்ச்சியை நிறைவுக்கு கொண்டு வரப்போகிறோம். நீங்க ரெண்டு பேரும்தான் முடிவை சொல்லனும்." என்றார் அறிவிப்பாளர்.

நம்புகிறவர்; "சொல்லுங்க.. நீங்க யார்கிட்ட பேசனும்..."

நம்பாதவர்; "ம்... எங்க பாட்டிகிட்ட பேசனும்.."

நம்புகிறவர்; "சரி... "

        கண்களை மூடியவர். காற்றில் கைவிரல்களை அசைக்கலானார். முகம் வயதான தோற்றம் போல மெல்ல மாறியது. வயதான நடுங்கும் குரலில் பேசலானார்.

"அய்யா... அய்யா.. சாப்டியா.."

"பாட்டி.....!!!"

        பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பரவசமானார்கள். நம்புகின்றவர்களின் கண்கள் கலங்கின. நம்பாதவர்களின் கண்கள் ஆச்சர்யத்தில் பெரிதாகின.

        "மிஸ்டர் பாலன். இது உங்க பாட்டியின் குரலா...? அப்படின்னா ஆவிங்ககிட்ட பேசலாம்ன்றதை நீங்க நம்பறீங்களா..?"

"இன்னும் ஒரு கேள்வி... அப்பறமா பதில் சொல்றேன்.."

"கேளுங்க மிஸ்டர் பாலன்"

        பாலன் " நீங்க என் பாட்டினு ஒத்துக்க.. நீங்க எப்படி செத்திங்கன்னு சொல்லுங்க பாட்டி.". பேச்சில் நக்கல் இருந்தது.

கொஞ்சம் நேர அமைதிக்கு பிறகு, பாட்டியின் குரலில் அவர் பேசலானார்.
"பாத்ரூம்ல வழுக்கி விழுந்து செத்துட்டேன் அய்யா..."

பாலன் சிரிக்கலானார். மற்றவர் புரியாமல் பார்த்தனர்.
        " இத பாருங்க.. இவரு என் பாட்டியோட ஆவிகிட்ட பேசறாராம்.. என் பாட்டி உயிரோடதான் இருக்காங்க... இப்படி முகத்தை கோணிக்கிட்டு வயசானவங்க குரலில் யார் வேணும்னாலும் பேசி இப்படி நடிக்கலாம்."

        நம்பாதவர்கள் இப்போது ஆரவாரமாக கைத்தட்டினார்கள். நம்புகின்றவர்கள் செய்வதறியாது அமைதியானர்.

        பெரிய ஏமாற்று வேலையை கண்டுபிடித்த துள்ளலில் தன் இருக்கைக்குச் சென்றார் பாலன். அவர் கைபேசிக்கு குறுஞ்செய்தி வருகிறது. அதில்,

"பாட்டி காலையில் இறந்துட்டாங்க..... பாத் ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க....."


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்