பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 09, 2020

ஒத்திகை...


கைபேசி கேமராவை தயார் நிலையில் வைத்து விட்டான். எல்லோரையும் போல தானும் பிரபலமாக வேண்டும் என்பதுதான் சாமுவேலின் ஆசை.

சமீபத்தில் அதிகம் பிரபலமான ஒரு யூடியூப்பில் இருந்து அந்த ஐடியாவை எடுத்திருக்கலாம். மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்கிற சிந்தனையில் தன் முகநூல் நேரலையைத் திறந்திருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்பா வந்துவிடுவார். கோவக்கார மனிதர் அவர்.

அவர் வந்ததும், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், சில காரணங்களால் (ஒரே காரணம்தானே!!) அவள் கர்ப்பமாகிவிட்டாள் என்றும் சொல்ல வேண்டும். அம்மாவிடம்  அப்பாதான் இந்த விபரத்தைச் சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த திட்டம்.

எல்லாவற்றையும் முகநூலில் பேசிக்கொண்டிருந்தான். சரியாக பேசி முடித்த சில வினாடிகளில் அப்பா அவனது அறைக் கதவைத் தட்டினார். கட்டை விரலை கைபேசி முகநூலில் காட்டிவிட்டு ஓடிச்சென்று கதவைத் திறந்தான்.

"என்னமோ தனியா பேசனும்னு சொன்னியே என்னது..?" என்றார். அப்பாவின் குரல் கம்பீரமாக இருந்தது. 

சாமுவேல், தன் காதலி கர்ப்பாகிவிட்டாள் என்று கூறிக்கொண்டே அப்பாவின் காலில் விழுந்தான். அப்பாவின் கண்கள் சிவந்தன. உடல் அதிர்கின்றது.

"என்னடா சொல்ற...?!" அந்த குரலில் உள்ள கோவத்தை வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை. தவறு நடந்து விட்டதாகவும் , அவர்தான் அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்றும் கண்களில் நீர்க்கசிய கெஞ்சுகிறான். அம்மாவிடம் அப்பாதான் நாசூக்காக இதனை சொல்ல வேண்டும் என்று விசும்ப ஆரம்பித்தான்.. (இது உலக நடிப்புடா சாமி).

அப்பா, அவசரப்படவில்லை. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். சூழலைப் புரிந்துக்கொண்டார். எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பாக ஆழ்ந்து மூச்சினை இழுத்துவிட்டார். மகனின் தோளில் கையை வைத்து அழுத்தமாக பிடித்தார். சாமுவேலுக்கு இப்போதுதான் பயம் வரத்தொடங்கியது. அப்பாவின் இந்த சாந்தம் அவனை ஏதோ செய்தது. அப்பா வாய் திறந்தார்.

"டேய் சாமுவேல்..... என் காதலியும் எப்படியோ கர்ப்பமாகிட்டாடா.... நீதான் அம்மாகிட்ட நாசூக்கா இதை எடுத்து சொல்லனும்...." 

சாமுவேல் விழி பிதிங்கினான். அந்த முகநூல் நேரலையில், கடைசியில் அவனுக்கு பதில் அவனது அப்பா பிரபலமாகிவிட்டார்.


#தயாஜி

ஆகஸ்ட் 08, 2020

கடவுளே...!

எத்தனை கொடுமையான வாழ்க்கை இது!. அழுவதா சாவதா என்று தெரியவில்லை. கூடாது.. சாகக்கூடாது.. சாகடிக்க வேண்டும்...

என்பதுதான் அவனை இப்போது வழி நடத்திக் கொண்டிருக்கிறது. நிச்சயம் இன்று ஒரு கொலை உறுதி. சொல்ல முடியாது. இரண்டு கொலைகளாகவும் இருக்கலாம். ஆனால் அந்த குழந்தையைக் கொல்வதற்கு மனது வருமா என தெரியவில்லை. வரலாம். அவளில் துரோகத்திற்கான சம்பளம் அதுவாகத்தான் இருக்கும்.

கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் மருத்துவமனையில் இருந்து அழைத்திருந்தார்கள். சமீபத்திய உடல் பரிசோதனைக்கான விபரங்களை கேட்டிருந்தான். சில காரணங்களால் எல்லாவற்றையும் பரிசோதித்திருந்தார்கள். பலரை அழைக்கவேண்டியுள்ளதால் அவசரமாக விசயத்தை சொல்ல முயன்றுக் கொண்டிருந்தார். 

நர்ஸ் சொல்வதை முழுமையாகக்கூட அவனால் கேட்க முடியவில்லை. அதற்குள் கண்கள் இருட்டிவிட்டன. காதுகள் அடைத்துக் கொண்டன.  தொலைபேசியை பாதியிலேயே துண்டித்தான். 

மனைவியின் முகமும் தன் குழந்தையின் முகமும் கண் முன் வந்துப்போனது. இல்லை இனி அது அவனது குழந்தை இல்லை. அதைத்தான் நர்ஸ் சொல்லிக் கொண்டிருந்தார். அவனுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதை விடவும் தனக்கு ஒரு குழந்தை இருப்பதுதான் அவனை மெல்ல மெல்ல மிருகமாக்கிக் கொண்டிருக்கிறது.

மனிதனாக வெளியேறியவன் மிருகமாக வீட்டிற்குள் நுழைந்தான். நேராக சமையல் அறைக்குச் சென்றான். அங்குள்ள கத்தியை எடுத்தான். அந்த கத்தி அவனது கைக்கு நேர்த்தியாகப் பொருந்தியது.  அது கத்தியல்ல அவனது வலது கையாக மாறிவிட்டது.

படுக்கையறைக்குச் சென்றான். குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. அருகில் சென்றான். கட்டிக்கொண்டு ஏமாற்றியவளையா ? அல்லது பிறந்து இருக்கும் இந்த ஏமாற்றத்தையா ? யாரை முதலில் கொல்வது என முடிவெடுக்கத் தயாரானான்.

அறைக்குள் அப்போது நுழைந்த மனைவி, "ஏங்க நர்ஸ் கூப்டிருந்தாங்க.. உங்க போன் பாதியிலேயே கட் ஆச்சாம்.. கூப்டும்  கிடைக்கலையாம்... ஏதோ ரிப்போட் மாறிப்போச்சாம்... சோரி சொன்னாங்க.. நாளை ஆஸ்பிட்டல் வந்து ரிப்போர்ட் எடுத்துக்கச் சொன்னாங்க...."

அவனது கண்களில் இருந்த இருள் மறைந்தது. எச்சிலை விழுங்கிக் கொண்டான். கத்தியை மெல்ல மறைத்தான். அப்படியே கண்களை மூடி கடவுளே...! என்றான்.

அப்போது அவளும் கண்களை மூடி, கடவுளே..! என்கிறாள்.

#தயாஜி


ஆகஸ்ட் 07, 2020

பாம்பின் கால்கள்...

காதலைச் சொல்லி இரண்டு நாட்கள் ஆகின்றன. ஆனால் எந்த மிச்சமும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. எல்லாவற்றையும் பேசித் தீர்த்துவிட்டார்கள்.

பல ஆண்டுகளாக தேடி கிடைத்த தேவதை என அவனும், யாருக்கும் கிடைக்காத வரம் என்று அவளும் ஆளுக்கு ஆள் நினைத்துக் கொண்டார்கள். அது உண்மையும் கூட.

முகநூலில் முதன் முதலாகப் பார்த்த போதே இருவருக்கும் ஏதோ ஈர்ப்பு தோன்றியது. அன்றே நண்பர்களாகி நட்பாகி காதலாகி கசிந்து உருகிவிட்டார்கள்.

மூன்றாம் நாள் சந்திப்பு. இரவு. மெழுகுவர்த்தி வெளிச்சம். சூடான மேற்கத்திய உணவு. திறந்து கொடுக்கப்பட்ட வைன் பாட்டில். நாற்காலியைச் சுற்றிலும் வண்ண பலூன்கள். மத்தியில் அவனும் அவளும். கண்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன.

"நா..."
"நா.."

இருவரும் ஒரு சேர பேச ஆரம்பித்து, நிறுத்தி சிரித்துக் கொண்டார்கள்.

"நீங்..."
"நீங்..."

இப்போதும் அப்படியே நடந்தது. இனி பேசக்கூடாது என்று நினைத்தார்கள். கைபேசியை எடுத்தார்கள். டைப் செய்தார்கள் அவன் அவளுக்கு அவள் அவனுக்கும் அனுப்புனார்கள். ஒரே சமயத்தில் இருவரின் கைபேசியிலும் மணி ஒலித்தது.

ஆர்வம் பொங்கிய காதலுடன் எடுத்துப் பார்த்தார்கள். இருவருக்கும் அது அதிர்ச்சியைக் கொடுத்தது. இருவர் முகமும் இறுகியது. இது ஒத்துவராது என்று முடிவெடுத்தார்கள்.

ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் அவன் ஒரு பக்கமும் அவள் ஒரு பக்கமும் நடக்கலானார்கள். நடந்துக் கொண்டே இருவரும் கைபேசியை எடுத்து மீண்டும் பரிமாறிக்கொண்ட விடயத்தை பார்த்தார்கள்.

'முகநூலை டிலேட் செய்துடு. நாம கல்யாணம் செய்துக்கலாம்...' என இரண்டிலுமே இருந்தது.


#தயாஜி

ஆகஸ்ட் 06, 2020

ரிஸ்க்கும் ரஸ்க்கும்...


ரிஸ்க்கு என்றால் ரஸ்க்கு சாப்பிடுவது போலதான் குமாருக்கும். இன்றைய கூட்டணி தேவாவுடன் ஆரம்பமானது.
சவால் விட்டு சம்பாதிப்பதுதான் குமாரின் முழு நேர வேலை. மற்றபடி கைச்செலவிற்காக பகுதி நேரமாக ஏதேதோ வேலைகளை செய்து வருகிறான்.

சவால் தொகை பெரிது என்பதால் இன்றைய சவாலும் பெரிதாக இருந்தது பேயாகவும் இருந்தது. தூரத்தில் இருக்கும் பேய் வீட்டிற்குச் சென்று திரும்ப வேண்டும்.  வீட்டின் பின் வாசல் கதவில் கையில் கொண்டு போன சாயத்தைப் பூச வேண்டும்.

விடிந்ததும் அந்த சாயம் சரியாக பூசப்பட்டிருந்தால் குமாருக்கு இரு வாரத்திற்கான தொகை கிடைக்கும். தேவாவும் குமாரும் புறப்பட்டார்கள். எப்போதும் உடனிருக்கும் சில நண்பர்கள் சொல்லி வைத்தார் போல இன்று காணவில்லை. இரவு என்பதால் பயந்துவிட்டார்கள் போல.

இருவரும் தயாரானார்கள். தேவா மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டியதைச் சொன்னான். குமாருக்கு அவசரம் தாங்கவில்லை. கையில் புதிய சாமி கயிறும் கழுத்தில் பளபளக்கும் முருகன் டாலரும் இருந்தன. கையில் சாய டின்னை எடுத்துக் கொண்டு பேய் வீட்டிற்கு நுழைந்தான். 

உள்ளே சென்றவன் நேரமாகியும் வரவில்லை. தேவாவிற்கு பயம் வரத் தொடங்கியது. கூப்பிட்டுப் பார்த்தான் கத்திப் பார்த்தான் கல்லெடுத்து அடித்துப் பார்த்தான் எந்த பதிலுமே இல்லை.

அப்போது ஏதோ ஒன்று மரத்தின் பின்னால் இருந்து தேவாவை பார்க்கிறது. மெல்ல அவன் பின்னால் அது வந்த வண்ணம் இருக்கிறது. 

எதையோ உணர்ந்த தேவா திரும்பவும் அவன் முன்னே அந்த உருவம் நிற்கவும் சரியாக இருந்தது. தேவாவிற்கு உயிர் போய் வந்தது. இதுவெல்லாம் ஒரு விளையாட்டா என்று குமார் மீது கோவித்துக் கொண்டான்.

இத்தனை பயம் உள்ளவன் என்னிடம் மட்டும் எதற்கு இப்படி ஒரு சவாலை விடவேண்டும் என கேட்டு சிரிக்கலானான். அப்போது குமாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

"குமாரு எங்க இருக்க.. எவ்வளவு நேரம் கூப்டறது.. லைன் கிடைக்கவேயில்லை... தேவா அடிபட்டுட்டாண்டா.. பொழைக்க மாட்டான்னு சொல்லிட்டாங்க.. நாங்கலாம் ஆஸ்பிட்டல்லதான் இருக்கோம்.. நீயும் வந்துடுடா.........."

குமாரால் மேற்கொண்டு கேட்க முடியவில்லை. அவன் முன்னே நின்றுக்கொண்டிருந்த தேவா, உடல் முழுக்க சிவப்பு சாயத்தால் நனைந்திருந்தான்....


#தயாஜி

ஆகஸ்ட் 04, 2020

உணவு..



தூக்கம் வரவில்லை. எவ்வளவு நேரம் தான் அப்படியே படுத்துக் கிடப்பது. சுவரின் வலது மூலையில் இருக்கும் பல்லி இதுவரை பதினைந்து தடவை வாலை ஆட்டிவிட்டது. பத்து தடவைக்கு மேல் சத்தம் போட்டுவிட்டது.

காற்றே வராத காற்றாடி வாசிக்கும் இசை, இப்போதெல்லாம் இம்சிப்பதில்லை. குமாருக்கு எல்லாம் பழகிவிட்டது. அவ்வப்போது புரண்டு படுத்து கட்டில் கொடுக்கும் சத்தத்தையும் காற்றாடி கொடுக்கும் இசையையும் ஒருங்கிணைப்பது சமயங்களில் ஜாலியாக இருக்கும். ஆனாலும் கட்டில் உடைந்துவிடுமோ என்கிற எண்ணம் குமாரை பயப்படுத்தவே செய்கிறது. 

நான்கு சுவர்களுக்கு மத்தியில் அவனது வாழ்வு முடிந்துவிடுவதை அவன் விரும்புவதில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பான். ஆனால் ஏதுவும் செய்யத் தோன்றாது.

வாழ்க்கையின் மீது ஒட்டியிருந்த கொஞ்சநஞ்ச ஒட்டுதலும் ஒதுங்கிக் கொண்டதும். காரணம்? தெரியவில்லை. தெரிந்துக் கொள்ள விரும்புவதில்லை.

அந்த பல்லி மெல்ல முன்னேறுவதைப் பார்க்கிறான். அது செல்லும் இடத்தில் ஒரு ஈ ஏனோதானோவென்று அமர்ந்திருக்கிறது. ஈ தப்பிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டான். யாரிடம் வேண்டினான் என தெரியவில்லை. பல்லியைப் பார்க்கவும் பாவமாக இருக்கிறது. ரொம்பவும் சப்பையான பல்லி அது. அநேகமாக இவன் இந்த அறைக்கும் வந்தபோது வழி மாறி வந்திருக்கலாம். வெளியேறத் தெரியாமல், எப்போதாவது இவன் சாப்பிட்டு கீழே சிந்தும் சோற்றுப் பருக்கை அதற்கு கிடைக்கும்.

இன்று இங்கே வந்திருக்கும் ஈ, அவன் அறையின் விருந்தாளியாக நினைக்கிறான். எப்படி ஒரு விருந்தாளியை இன்னொரு விருந்தாளி சாப்பிட அனுமதிப்பது. ஆனால் எப்படி பழைய விருந்தாளியைப் பட்டினி போடுவது.

அவனுக்குள்ளாக பல கேள்விகள் எழுந்தன. 

யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு உணவாவதை யார்தான் தடுக்க முடியும் என்கிற ஞானம் அவனுக்கு தோன்றியது. கிழித்துப்போட்டிருந்த தனது நண்பர்களின் புகைப்படங்களை பொறுக்கி எடுத்தான். மேஜை மீது கொட்டினான்.  பழையபடி ஒட்டினான். மிகவும் சந்தோசமான நாட்கள் அவை. 

கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் அவற்றை கிழித்துப் போட்டான். இப்போது பல்லியும் சத்தமிடுகிறது. திரும்பிப் பார்த்தான். ஈ அங்கு இருக்கவில்லை.

அந்த பல்லி நேராக தன்னை நோக்கி வருவதை கவனித்தான். எத்தனை பேர்தான் என்னை சாப்பிட்டு சக்கையாக்குவார்களோ என்கிற கேள்வியோடு அந்த பல்லியிடம் தன் கைகளை நீட்டலானான்.
 

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்