பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 01, 2024

நான்ஃபிக்‌ஷன் எழுத்துப் பயிற்சி வகுப்பு



 எழுத்தே என் வாழ்க்கையாக அமையவேண்டும் என்பது என் விருப்பம். நான் எழுதுவது ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும் என்றால், யாரோ ஒருவரின் தோளைத் தட்டி ஆறுதல் கூறுமென்றால், மற்றொருவரை சிரிக்க வைத்துப் பார்க்குமென்றால் நான் எழுதவே விரும்புகிறேன். அதற்காக உழைக்கவும் என்னை எப்போதும் தயாராய் வைத்திருக்கிறேன்.

 ஒவ்வொருமுறையும் எழுத்திற்காக ஏதோ ஒன்றைத் தொடர்ந்து செய்துவருகிறேன் சில முன்னெடுப்புகளையும் எடுத்து வைக்கிறேன்.

 வழிகாட்டியாக என்னை நிறுவ நான் எப்போதும் நினைப்பதில்லை. ஒரு சக பயணியாகவே நான் பயணிக்கிறேன். என் இலக்கை அடைந்தால்; அடைந்த திருப்தியிலும் இல்லையென்றால் முயன்ற திருப்தியிலும் எனக்கான பயணத்தை நான் முடித்துக்கொள்வேன்.

 எழுத்திற்கும் எனக்குமான நெருக்கத்தை எப்போதும் ஏற்படுத்திக்கொண்டிருப்பது என் மனதை ஏதோ ஒரு வகையில் ஆசுவாசப்படுத்துகிறது. அதற்கான வாசிப்பிலும் பயற்சியிலும் தொடர்ந்து ஈடுபடுகின்றேன். அதுதான் நம்மை போலி அடையாளங்களின் இருந்து தனித்து வெளிக்கொணரும்.

 மார்ச்30,31(2024) ஆகிய நாட்களில் என்.சொக்கன் வழிநடத்திய ‘நான்ஃபிக்ஷன் எழுத்துப் பயிற்சி வகுப்பில்’ கலந்து கொண்டேன். ஐந்து மணிநேர வகுப்பாக அதனை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 கடந்த வகுப்பில் கலந்து கொள்ள முயன்றேன், பொருளாதார காரணங்களால் அதில் பங்கெடுக்க முடியவில்லை. அந்த வருத்தத்தை வீட்டில் இல்லாளிடம் பேசியிருந்தேன். இம்முறை மீண்டும் அந்த வகுப்பு குறித்த விளம்பரத்தை முகநூலில் இருந்து இல்லாள் எனக்கு அனுப்பிவைத்து ‘இம்முறை தவறவிடாதிங்க..’ என்றார். அதற்கு ஏற்றார் போலவே அவர்கள் கொடுத்திருந்த எண்ணுக்கு கூடுதல் விபரங்களுக்காக தொடர்பு கொண்டேன்.

 கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை கேட்டுக்கொண்டு, அதற்கான செயலில் இறங்கினேன்.

 கட்டணம் செலுத்தி நானும் ஒரு மாணவனாக இணைந்தேன். தொடர்ந்து என்.சொக்கனின் பின் தொடர்பவன் என்கிற முறையிலும் அவரது புனைவல்லாத புத்தகங்களை வாசித்துள்ளேன் என்பதாலும் வகுப்பில் கூடுதல் நம்பிக்கையோடு இணைந்தேன். எதிர்ப்பார்ப்புகளை அவர் சிறப்பாகவே பூர்த்தி செய்தார்.

 குறிப்புகள் எடுக்கும் பழக்கம் எனக்குண்டு. இரண்டு நாள்கள் வகுப்பில் முப்பது பக்கங்களுக்கு குறிப்புகளை எழுதினேன். ஆசிரியர் சிலவற்றை நாங்கள் இணைந்திருக்கும் புலனக்குழுவில் பின்னர் பகிர்வதாகச் சொன்னார். ஆனாலும் என் பழத்தை நான் தொடர்ந்தேன். இணைய வகுப்பு என்பதால் ஆசிரியர் பேச்சை கேட்டுக்கொண்டே குறிப்புகள் எழுதுவது எனக்கு மேலும் நன்றாக புரிய உதவியது.

 புனைவல்லாத எழுத்து என்றால் என்ன என்பதில் தொடங்கி, எப்படி அதனை புத்தகமாக்கி சந்தைப்படுத்தலாம் என்பதுவரையில் நீண்ட பயணத்தை வகுப்பில் அழகாகவும் ஆழமாகவும் விளக்கினார்.

 நடந்ததை நடந்தபடி சொல்வதுதான் புனைவில்லாத எழுத்து என்று அதன் அடிப்படையை நாம் புரிந்து கொண்டாலும் ஓர் எழுத்தாளராக இருந்து நான்ஃபிஷன் எழுதும் போது நாம் கவனிக்க வேண்டியதைப்பற்றி ஆசிரியர் விரிவாகப் பேசினார்.

 புனைவல்லாத எழுத்தைப் புரிந்து கொள்ள, அது எப்படி புனைவெழுத்தில் இருந்து  மாறுபடுகின்றது என்பதையும் கூறினார்.

 முழு வகுப்பையும் எட்டு படிகளில் வரிசையாய் அடுக்கி வழிநடத்தினார்.



1.   எதை எழுதலாம்?

2.   எத்தனை நாட்களில் எழுதலாம்?

3.   எதையெல்லாம் இணைக்கலாம்?

4.   எப்படி எழுதலாம்?

5.   என்ன எழுதலாம்?

6.   எப்படி செழுமையாக்கலாம்?

7.   எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்?

8.   எப்படி மேம்படுத்தலாம்?

 என்ற எட்டு தலைப்புகளில் வரிசையாக ஒன்றிலிருந்து மற்றொன்று எவ்வாறு தொடர்பு கொள்கிறது எனவும் பேசினார்.

     முதல் நாள் வகுப்பில் இடுபணியைக் கொடுத்து மறுநாள் வகுப்பில் சிலரின் பயிற்சிகளை வாசித்து அதனை எப்படியெல்லாம் செம்மைப்படுத்தலாம் என்பதைக் கூறியதோடு அப்படியான பயிற்சிக்கான காரணத்தையும் அது பிற்காலத்தில் கொடுக்கும் பலன்களையும் சுட்டிக்காட்டினார்.

     புனைவல்லாத எழுத்திற்கான களப்பணியை எப்படி மெற்கொள்வது என அவர் கூறியது பலருக்கும் உதவியாக அமைந்தது.

     ‘எழுத்து ஒழுக்கம்’ குறித்து எழுத்தாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியற்றை பேசினார். நான் பலமுறை என் நண்பர்களுடன் இதுபற்றி உரையாடியுள்ளேன். இனி அதிகமான தகவல்களுடன் உரையாடுவேன்.

     சில நாட்களாகவே என்னிடம் ஒரு குழப்பம் இருந்தது. அதற்கான பதில்கள் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. இன்று என்.சொக்கன் வழிநடத்திய நான்ஃபிக்‌ஷன் எழுதுவோம் வகுப்பில் அக்கேள்விக்கு அவரிடம் இருந்து ஒரு பதில் வந்தது. அது எனக்கு நம்பிக்கையையும் கொடுத்தது. அது என்ன குழப்பம் என்ன பதில் என்பது எனக்கு அந்தரங்கமானது; இப்போது வேண்டாம்.

     நிறைவான வகுப்பாக இரு நாள் வகுப்பை வழிநடத்தினார் ஆசிரியர். இனி வரும் காலங்களிலும் வாய்ப்பு இருப்பின் நான் அடுத்தடுத்த வகுப்புகளில் கலந்து கொள்வேன். உங்களுக்கும் புனைவல்லாத எழுத்தை எழுத விருப்பம் இருப்பின் தாராளமாக இந்த வகுப்பில் கலந்து கொள்ளலாம். நிச்சயம் உங்கள் நேர்மையான எழுத்திற்கு அது பயனாய் அமையும்.

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்