பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 08, 2020

ஒரு கசமுசா கதை

   
   திரையரங்கம். சமீபத்தில் கொரிய படங்களுக்கு ரசிகைகள் அதிகமாகி விட்டார்கள். அதனால் மொழி விளங்கா விட்டாலும் பரவாயில்லை என ஒரு கொரியன் படத்திற்கு சென்றான். படத்திற்காக அல்ல பார்வையாளர்களுக்காக.

      முதல் அரை மணி நேரத்திற்கு யார் நாயகன் யார் நாயகி என கண்டு பிடிப்பதற்கே நாக்கு தள்ளிவிட்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் படம் முடிந்துவிடும். அதற்குள்ளாக தான் வந்திருந்த வேலையை செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்த கொரியன் படம் வரை தாங்காது.

     மேற்கொண்டு யார் யார் என தேடப் போவதில்லை. எல்லார் மூக்கும் ஒரே சப்பையாகத்தான் இருக்கிறது. அதை வைத்து எங்கிருந்து கண்டு பிடிப்பது. ஆனாலும்  ஆண்டவன் அவர்களுக்கு மூளையை கொஞ்சம் அதிகமாகத்தான் கொடுத்திட்டான் போல. என்னமா கதை சொல்கிறார்கள்.

     பக்கத்தில் இருந்தவளை பார்த்து சிரித்தான். அவளும் சிரித்தாள். ஆஹா நமக்கு அதிஷ்டம் அடித்துவிட்டதென நினைத்திக் கொண்டான். 

     ஏதோ ஒன்று மெல்ல அவனது வலது கையை உரசியது. அவளைப் பார்த்தான். மீண்டும் சிரித்தான். இவனும் இளித்தான். அந்த ஒன்று மீண்டும் அவன் கையை உரசியது. சட்டென அதனைப் பிடித்துக் கொண்டான். அவளிடமிருந்து மெல்லிய சத்தம் வந்தது. அவன் எதிர்ப் பார்த்ததுதான்.

     இருவர் முகங்களும் திரையைப் பார்க்க, கைகள் மட்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்துக் கொண்டன. தன் நாற்காலி இடுக்கில் இருந்த அவளின் கையை அவன் பற்றி பிசைந்தான். அது அத்தனை மிருதுவாக இருந்தது.  அவனுக்குள் என்னென்னமோ செய்தது. திரை வெளிச்சத்தில் தெரிந்த அவளது அழகிய முகத்தை வெளிச்சத்தில் பார்க்க ஏங்கினான். அவளது சப்பை மூக்கை தன் கூர் மூக்கால் உரசுவதாய் கற்பனைகள் எழுந்து அவனை குதூகலப்படுத்தியது.

பேச்சை ஆரம்பிக்க நினைத்தான். 
"ரொம்ப குளிருதா..?" என்றான். "இல்லையே" என்றாள்.
"பின் ஏன் கையுறை போட்டிருக்க...?"
"கையுறையா...? நான் போடலையே..."  என தன் இரு கைகளையும் எடுத்து அவன் முன் காட்டிவிட்டு மீண்டும் திரை பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    அப்படியென்றால் தான் இதுவரை பிடித்திருந்த கை யாருடையது என வலது பக்கம் திரும்பி ஆழ்ந்து பார்த்தான். அது கையல்ல பின்னால் அமர்ந்திருந்தவனின் கால். அவன் தன் 'சாக்ஸ்' போட்ட காலைதான் இவனுடைய நாற்காலி இடுக்கு வரை நீட்டியிருக்கிறான்.

    அந்த காலுக்கா இதுவரை மசாஜ் செய்தோம் என நினைத்தவன் வெளியேற எழுந்தான். பின்னால் அமர்ந்திருந்தவனும்  எழுந்து இவனை பின் தொடரத் தொடங்கிவிட்டான்.

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்