பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 29, 2020

கவிதை வாசிப்பு - ஓர் அறிமுகம்




     மிக அற்புதமான வழி. ஆனால் குறுக்கு வழி. இதில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். எந்தத் துரும்பையும் பற்றிக்கொண்டு போரிடலாம். எத்தனை பெரிய இரும்பையும் தின்றுத்தீர்த்து சிரிக்கலாம். ஒரு வரியில் அழுதுவிடலாம். மறு வரியில் வாழ்வை புரிந்துக்கொள்ளலாம்.
   எங்கோ ஓர் மூலையில் நம்மை போலவே வலித்தவன் ஒருவன் இருக்கிறான். ஆதலால் நான் தனியல்ல என அரை வாய் புன்னகிக்கலாம்.

    நேரம் எடுத்து நாள் கணக்கில் வாசித்து முடித்து மனம் கொண்ட வெறுமைத் தீயை சில வரிகளில் வாழ்ந்து முடித்துவிடலாம்.

நிச்சயம். கவிதைகள் மனித உணர்வின் குறுக்குவழிதான்.

   ஆனால் அவை நம்மை அதிகம் பேசவிடாது. அங்கு கற்றது; நாம் பேசவும் கூடாது. மாபெரும் யுத்தத்தின் வழியனுப்புதலில் கையசைத்து சிரிக்கும் குழந்தையும் அதுதான். யோசிக்கையில் அந்த மாபெரும் யுத்தமும் அதுதான். பக்கங்களில் எஞ்சிய இடங்களில் கவிதை கொண்டு நிரப்பினாலும் அது காலம் கடந்து சிரஞ்சீவியாக நின்று நம்மை கொண்டாடும்.

    "உன் கவிதை புரியல" இன்னமும் கேட்கும் ஒரே கேள்வி. புரியாமல் நிற்பது கவிதையா?  புரிய முடியாமல் தவிப்பது மனமா ? என யோசிக்காதவரை கவிதை நம்மை நிற்கவைத்து கேலிப்பார்வை பார்க்கத்தான் செய்யும்.

  எது கவிதை எது கவிதை இல்லை என அடித்துக்கொள்கிறோம் கடித்துக் கொள்கிறோம். ஆனால் ஏன் கவிதை நம்மிடம் வந்து நிற்கிறது என யோசிப்பதில்லை. எப்படி அதனால் காலத்தைக் கடக்க முடிகிறது என நினைக்க நேரமில்லை. ஆனால் சொல்கிறோம் 'கவிதை புரியல'.

    முதலில் ஏன் கவிதை புரிய வேண்டும் என நினைக்கிறோம்? அதனை வென்றுவிட நினைக்கிறோமா? வந்து வந்து கால் தொட்டு செல்லும் அலைகளென்பதால் கடல் அறிந்தவர்களா நாம். அறியத்தான் முடியுமா நம்மால்.

   ஆனால் தொட்டுச் செல்லும் அவ்வலைகள் நம்மில் விட்டுச்செல்லும் நினைவுகள்தான் எத்தனையெத்தனை. அவைதான் நம்மை இயக்குகின்றன.

   வரைபடத்தைக் கொண்டு வழியின் அழகை காற்றின் குளிரை பறவைகளின் அழைப்பை மிருகங்களின் பசியை சொல்லிவிட முடியுமா என்ன?
   ஆனால் அவ்வழி ஆடு மேய்ப்பவன் போதுமே ஆட்டுக் கழுத்து மணி அசைப்புச்சத்தம்,  பசிக்கு புல் தின்னும் சத்தமா அல்லது ருசிக்க நரி வந்த சத்தமா என தெரியப்படுத்த.

   காலந்தோரும் கவிதைகள் தன்னை மானுட மனங்களில் ஏற்றிக்கொள்ளத்தான் போகின்றன. மனித நினைவுகளை தூண்டிவிடதான் போகின்றன. அழுத கண்ணீரை துடைத்துவிடதான் போகின்றன. நம்மை அழ வைக்கத்தான் போகின்றன.

  தன் தீரா துயரங்களில் இருந்தும் கலை படைப்பவந்தான் கலைஞனாக இருக்க முடியும் என நம்புகின்றவன் நான்.

   என் வழியெங்கும் வார்த்தைகளாய் பலரின் துக்க துயரங்களும் சந்தோஷ குவியல்களும் கொட்டிக்கிடக்கின்றன. ஏதோ ஒரு வார்த்தையின் வழி அதனை மீள்ப்பதிவு செய்யத் தவறுவதில்லை.

    அப்படியான குறுக்குவழியில் கவிதைகளைத் தேடிச்செல்லும் மேய்ப்பவனாய் என் காதில் கேட்கும் மணியோசை என்னவென்று பகிரும் முயற்சிதான் இந்த #கவிதை_வாசிப்பு   பயண தூரம் தெரியவில்லை. மடியில் சேர்த்துள்ள ரொட்டித்துண்டுகள் தீர்ந்ததும் ஆடுகளுடன் வீடு செல்வேன். ரொட்டித்துண்டுகளின் எண்ணிக்கைகள்; நான் நம்பி பயணிக்கும் பிரபஞ்சத்திற்கே வெளிச்சம்....



#தயாஜி

பிப்ரவரி 23, 2020

#கதைவாசிப்பு_2020_13 'இறகுகள்'



#கதைவாசிப்பு_2020_13 இறகுகள்
கதை – இறகுகள்
எழுத்து – ரேமண்ட் கார்வர் (தமிழில் ஜி.குப்புசாமி)
புத்தகம் – காலச்சுவடு பிப்ரவரு 2020


   ரேமண்ட் கார்வர். சிறுகதைகளை குறிப்பிடாதவர்களை காண்பது அரிது. அவரின் சிறுகதைகளை பலர் மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்.

 இம்முறை ரேமண்ட் கார்வரின் சிறுகதையை ஜி.குப்புசாமி 'இறகுகள்' என மொழிப்பெயர்த்துள்ளார். முதலில் ஜி.குப்புசாமி அவர்களுக்கு நன்றி. அவர் மூலம் பல மொழிப்பெயர்ப்பு படைப்புகள் அறிமுகமாகியுள்ளது. அவரின் மூலமே எழுத்தாளர் 'சிம்மண்டா என்கோசி அடிச்சி' அவர்கள் எனக்கு அறிமுகம். சிமமண்டோ எனது விருப்ப எழுத்தாளர் பட்டியலில் சேர்ந்துவிட்டார்.

    இக்கதை பிப்ரவரி 2020-ல் காலச்சுவடு இதழில் வெளிவந்திள்ளது. 'பட்' தன்னுடன் பணிபுரியும் நண்பர் 'ஜேக்-கை' தன் வீட்டு விருந்திற்கு அழைக்கிறார். ஜேக் தன் மனைவி பிரானுடன் அங்கு செல்கிறார். 

   பட்-டும் அவரது மனைவி ஓலாவும் அவர்களின் குழந்தையும் மட்டுமே அந்த வீட்டில் இருக்கிறார்கள். நகரத்தில் இருந்து பல மைல்களுக்கு அப்பால் அவர்களின் வீடு இருக்கிறது. ஒரு முறை கூட ஜேக் அங்கு வந்திருக்கவில்லை. பட் கொடுத்திருந்த வரைப்படத்தின் மூலம் பட்டின் வீட்டிற்கு வந்து சேர்கிறார்கள்.

  பட் வீட்டில் நடப்பது முதலில் , ஜேக்கிற்கும் அவர் மனைவி பிரானுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. வீட்டை சுற்றி இருக்கும் சூழல். அசூயையைக் ஏற்படுத்தும் மயிலின் குரல். தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் இருக்கும் அருவருப்பான பல் செட். வரும்போதும் கூட வெறுமனே எந்த பெரிய எதிர்ப்பார்ப்பும் இல்லை. ஆனால், போகப்போக தங்களைவிட அவர்களிடம் ஏதோ ஒன்று கூடுதலாக இருப்பதை உணர்கிறார்கள். இத்தனைக்கும் பட் , ஓலாவின் இரணாவது கணவன். அவர்களின் உரையாடலில் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்தது.

    கதை முழுக்க அந்த விருந்தில்தான் நடக்கிறது. விருந்திற்கு வந்திருந்தவர்கள் எதைதோ கண்டுபிடுக்க மனதிற்குள்ளாகவே முயல்கிறார்கள். சாதாரண விருந்து என்றாலும் அது சொல்லப்பட்டிருக்கும் விதம் நம்மையும் அருகில் அமரவைத்துவிடுகிறது.

   அவ்வீட்டில் இருக்கும் குழந்தைதான் அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என தவறாக புரிந்துக்கொள்கிறாள் ப்ரான். அவர்கள் இருக்கும் இடையில் இருக்கும் பரஸ்பர அன்பை இவர்கள் கவனிக்க தவறிவிட்டார்கள்.

   விருந்து முடிந்தது. புறப்படுகிறார்கள். அன்று இரவே இதுவரை தேவையில்லை என நினைத்திருந்த குழந்தைக்கு தங்களை தயார் செய்துக் கொள்கிறார்கள்.

   சில வருடங்கள் ஆகின்றன. ஜேக் பிரான் தம்பதிகளுக்கு குழந்தையும் பிறந்துவிட்டது. ஆனால் எதிர்ப்பார்த்த எதுவும் அவர்களின் வாழ்வில் நடக்கவில்லை. மாறாக நிலமை மேலும் மோசமாகியது. இன்னும் மோசமாகிக்கொண்டுதான் போகும். 

  கதையை முடிக்கையில் மனதில் குழப்பம் ஏற்படாமல் இல்லை. இரண்டாம் முறையாக வாசிக்க வேண்டியதாக இருந்தது. 

  கேள்விகளும் தேடல்களும் எனக்குள்ளே எழத்தொடங்கின. இக்கதையில் பட் தன் வீட்டிற்கு வந்து தன் குழந்தையுடன் விளையாட்டு காட்டும் மயிலைக் குறித்து இவ்வாறு சொல்வதாக வரும், "இந்த மயில் சரியான கிறுக்கு, இந்த முட்டாள் பறவைக்கு தான் ஒரு பறவை என்பதே தெரியவில்லை. அதனிடம் இருக்கும் பெரிய தொல்லை அதுதான்"

    இக்கேள்விதான் கதையின் ஆதாரம் என நினைக்க வைக்கிறது. நாம் யாராக இருக்கிறோமோ அதுவாகவே நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் நேசிக்காமல் ஏதோ ஒரு போலி பதில்கள் மீது கவனத்தை வைக்கிறோம்.
ஜேக் பிரான் தம்பதிகளுக்கு அதுதான் நடந்தது.

   தத்தம் உறவினை முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை, எதிர்ப்பார்ப்புகள் அற்ற அன்பை கொடுக்கவில்லை. ஆனால் போலியாக ஏதோ ஒன்றில் அதன் காரணத்தை வைத்து மென்மேலும் தங்கள் வாழும் நாட்களை  சூனியமாக்கிக் கொண்டார்கள்.

- தயாஜி

பிப்ரவரி 21, 2020

மனம் நிரம்ப நிறம் மாறும்


 யோசிக்கையில் மனம் எத்தனை விசித்திரமானது. வேண்டுதல் வேண்டாமை எல்லாவற்றையும் ஒரு சேர மனதில் வைத்து எப்படியெல்லாம் சமாளித்து வாழ்வை நகர்த்துகிறோம். 

    பதிமூன்று வயது. இடைநிலைப் பள்ளி பருவம். வீட்டிற்கு அதிக தூரமில்லை என்பதால் மிதிவண்டியிலேயே பள்ளிக்குச் செல்லலாம். போக்குவரத்து பேருந்து செலவு இல்லை. ஆனால் அதற்கு மிதிவண்டி வாங்க வேண்டுமே. இன்னும் சில தினங்களில் பள்ளிக்கு போக வேண்டும். அதற்குள் மிதிவண்டி வேண்டும். இப்போது போல் அல்ல, மிதிவண்டிக்கு கூட எங்காவது கடன் வாங்கக் கிடைக்குமா ? மாதாந்திர கட்டணத்தில் கிடைக்குமா என அப்பா தேடினார். எப்படியோ ஏற்பாடு செய்துவிட்டார். ஆனால் வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. அம்மாவைத் தவிர. அம்மாக்களை மீறி அப்பாக்களால் ரகசியங்களைக் காப்பாற்ற முடியுமா என்ன?  ஆனாலும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஜேம்ஸ் பாண்ட் அப்பாக்கள். அவர்களுக்குத் தெரியாது அம்மாக்களும் ஜேம்ஸ் பாண்டுகள்தான்.

  ஞாயிறு. வீட்டில் தடபுடலான சமையல். கோழிக்கறியும் முட்டைகோஸ் பிரட்டலும். அப்போதெல்லாம் சம்பள நாளில் வரும் முதல் ஞாயிறுதான் எங்கள் தோட்ட மக்களுக்கு மாதாந்திர தீபாவளி.

  சாப்பிட்டு தொலைக்காட்சி இரண்டில் பலமுறை போட்டுக் காட்டிய, ஏதோ ஒரு தமிழ்ப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பாவும் அம்மாவும் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டார்கள். வழக்கமாக அவர்கள் ரகசியம் பேசினால் எங்கள் காதுகளை மூடச் சொல்லுவார்கள். நாங்களும் மூடிக்கொள்வோம். ஆனால் அவர்கள் பேசுவது எங்களுக்கு விளங்கும். அது அவர்களுக்கும் தெரியும். இம்முறை ஏதோ தவறு. பொத்திப்பிடித்த காதுக்குள்ளே எந்த சத்தமும் கேட்கவில்லை. என்ன பேசினார்கள் எங்கே கிளம்புகிறார்கள் என கண்டுபிடிக்க முடியவில்லை.

  பேசி முடித்தவர்கள். மோட்டாரில் கிளம்பினார்கள். நானும் தங்கையும் ஆளுக்கு ஆள் பார்த்துக்கொண்டோம். கவனித்தேன் அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டாள். அவளுக்கு ஏதோ ஒன்று தெரிந்திருக்கிறது. ஆக அவளும் எங்கள் வீட்டில் ஒரு ஜேம்ஸ் பாண்ட் என்பதை அப்போதுதான் தெரிந்துக்கொண்டேன். அண்ணன் இருக்கும் அறையை எட்டிப்பார்த்தேன். ஏதோ புத்தகத்தை பிடித்துக்கொண்டு தூங்கிப்போனார். தூங்கியவரை எழுப்பி அல்ல, விழித்திருக்கும் போது கூட அவரிடம் கேட்டால் 'தெரியல' என சொல்லிவிடுவார்.

 அப்பா அம்மா வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். மாலை மணி ஐந்து. அப்பாவின் மோட்டார் சத்தம் கேட்டது. ஆர்வ மிகுதியால் வாசல் சாலை வரை ஓடினேன். அதிர்ச்சியானேன். அப்பாவின் மோட்டார்க்கு அருகில் மிதிவண்டி வந்துக்கொண்டிருந்தது. ஆனால் அதன் சக்கரங்கள் சுழலவில்லை. அவை தரையிலும் படவில்லை. ஒன்றும் புரியவில்லை. அரை நொடி குழம்பினேன். 

 பின் புரிந்தது. அப்பா மோட்டாரை ஓட்டிவர, பின்னால் அமர்ந்திருக்கும் அம்மா மிதிவண்டியை ஒரு கையில் தூக்கிப்பிடித்துக் கொண்டிருந்தார். கிராப்பிக்ஸில் குழந்தையைத் தாங்கிப்பிடித்த ராஜமாதாவை கொண்டாடத்தெரிந்த நமக்கு, நம் வீட்டு ராஜமாதாக்களை கொண்டாட தெரியாதது வருத்தம்தாம்.  அன்று மிதிவண்டியை தாங்கிப்பிடுத்த அம்மாதான் இன்றுவரை என்னையும் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

  நினைவில் அந்த ஊதா வண்ண மிதிவண்டி இன்னும் இருக்கிறது. இடைநிலைப்பள்ளி படித்து முடிக்கும் வரை அந்த மிதிவண்டி எனக்கு உற்ற துணையாக இருந்தது. ஒரு காலக்கட்டத்தில் நாம் பயன்படுத்திய பொருட்கள், நமக்கு உதவியாக இருந்தவைகள் என பலவற்றை நாம் நம் வாழ்நாள் முழுக்க உடன் கொண்டு வர முடியாது. ஆனால் அதற்கான, அதற்கே உரிய நன்றியையும் அன்பையும் மனம் முழுக்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சுமந்துச் செல்லலாம். 

 ஏதாவது ஒரு தனிமையில் அந்நினைவுகள் நம்மருகில் அமர்ந்துக்கொள்ளும். நம்மோடு உரையாடும். அந்நினைவுகளை சுமக்கும் நமக்கு நினைவுகள் சொல்லும் நன்றி அதுதான். 

 பொருள்களுக்கு மட்டுமல்ல, உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இது பொருந்தும். எங்குதான் ஏமாற்றுகள் இல்லை துரோகங்கள் இல்லை சுயநலங்கள் இல்லை. நாமும் செய்திருக்கிறோம்தானே. ஆனால் முடிந்தவரை குறைக்கத்தானே அரும்பாடு படுகிறோம். எத்தனை நாள் இப்படி பாடுபட போகிறோம். எதுவரை தோல்விகளையும் துரோகளையும் நினைத்து பயந்து நடுங்கப்போகிறோம். எல்லாவற்றிலும் இருந்து நம்மை ஒதுக்கிக் கொள்ளப்போகிறோம். 

  மனம் முழுக்க சுமந்துக் கொண்டிருக்கும் நினைவுகளில் நல்லவற்றை அதிகப்படுத்தி அதனையே அதிகமாய் கவர்ந்து இழுத்து வைத்துக்கொள்வோம். அழுக்கு நீர் நிரம்பிய பாட்டிலில் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தமான நீரை உற்றுவதால் விரைவில் பாட்டில் முழுவதும் தூய்மையான நீர் தன்னை நிருவிக்கொள்ளும். பல முறை துரோகம் செய்தவர் ஒரு முறை கூடவா நமக்கு நல்லது செய்திருக்க மாட்டார். பல முறை நம் முதுகில் குத்திய கைகள் ஒரு முறை கூடவா நம் முன்னேற்றத்திற்கு கைத்தட்டியிருக்காது.

  எல்லாவற்றிலும் கொஞ்ச கொஞ்சமாக இருக்கும் நல்லவற்றை நாம் நம் மனதில் எண்ணத்தில் புகுத்தி அதனை நிரப்பிக்கொள்வோம்.

  இவ்வேளை நான் எழுதிய கவிதையை நினைவுப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன்.

###########

ஒருவரின் எல்லா
துரோகங்களுக்கும்
ஏமாற்றுகளுக்கும்
கைக்கூப்பி 
வணங்கி 
மன்னித்து 
அமைதியாகி
விடைபெறுவதை விடவா
பெரிய தண்டனையைக் 
கொடுத்து விட முடியும்...

#தயாஜி

அத்தையின் வெங்காய சட்னி




   காலை. வழக்கம் போலவே அத்தையை கிண்டல் செய்துக் கொண்டிருந்தேன். வேலை வெட்டிக்கு போகாமல் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை அது குறைக்கிறது. இன்னுமா வேலைக்கு போகல ? என கேட்காதிங்க மறுபடியும் முதல்ல இருந்தான்னு கேட்பேன் !

    தினமும் அத்தை என்ன சமைக்கலாம் என கேட்டுக்கொள்வார். நானும் நன்றாக யோசித்துப் பசிக்க பசிக்க என்ன சமைக்கலாம் என சொல்லுவேன். சொல்லும் போதே என் நாவில் எச்சில் ஊறும். நான் சொல்வதற்கு நேர்மாறாகதான் சமைப்பார். அதற்கு ஏன் என்னை கேட்டார் என யோசிக்கும் போதுதான் காலையில் நான் செய்யும் கிண்டல்களுக்கு பதில் கிண்டல் இதுவென புரியும். ஆனால், சும்மா சொல்வதற்கில்லை அத்தையின் சமையல் ருசியாகவும் இருந்துவிடும்.

   ரசமும் மீன் சம்பலும் எனக்கு பிடிக்கும். இன்று அதையே சமைக்கலாம் என்றேன். நேற்றுதான் இரவு சந்தையில் அத்தை சொல்லிய சமையல் பொருட்களை வாங்கி வந்தோம். நான் கேட்டதற்கும் கூடுதலாகவே அத்தை சமைப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அத்தை மெல்ல காது கடித்தார். நேற்று, முக்கியமான ஒன்றை அத்தை சொல்ல மறந்துவிட்டார். ரசம் வைக்க புளி முடிந்துவிட்டது. ஆஹா.. இன்றும் நாம் கேட்டது கிடைக்காது என நினைத்தேன். புளி வாங்க ஐந்து மாடி இறங்கி மீண்டும் ஐந்து மாடி ஏறிவர வேண்டும். நாக்கு ருசியா கால் வலியா என ஆழ்ந்து யோசிக்கையில் கால்களுக்கு என் வாக்குகளைக் கொடுத்துவிட்டேன்.

 இன்று நான் பலியாடாவதற்கு விரும்பவில்லை. வேறொரு ஆடு சிக்கும் என சொல்லிவிட்டு இருவரும் சிரித்தோம். பின் ஆளுக்கு ஆள் அவர்கள் வேலையை செய்ய ஆரம்பித்தோம்.

  மாமாவும் அத்தை மகளும் சாப்பிட வருன் நேரம். சட்டென ஏதோ யோசனை வந்தவராய் அத்தை என்னை சமையல் அறைக்கு அழைத்தார். பேர் கூட தெரியாதவற்றை கொடுத்து மிக்ஸியில் அரைக்கச்சொன்னார். அப்படியே வெட்டி வைத்த காய்கறிகளை கழுவச் சொன்னார். சமையலில் அவர் கொஞ்சம் அலுவலாக இருந்தார். வீட்டில் சும்மா இருந்தது ஒரு குத்தமாயா?

  மாமாவும் மகளும் வீட்டுக் கதவை தட்டினார்கள். நான் சென்று கதவை திறந்தேன். திறந்த வாசலில் ஏதோ ஒன்று அவர்களை அடித்திருக்க வேண்டும். இருவரின் பீரங்கி மூக்கு பெரிதாகி சுருங்கியது.

  "என்ன சமையல்..?" என கேட்டுக்கொண்டே அத்தை மகள் சமையல் அறைக்குச் சென்றார். சத்தியமாக சொல்கிறேன். என் மூக்கிற்கு அப்போதுதான் உரைத்தது. வாசனை நன்றாகத்தான் இருந்து.

  எல்லோரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தோம். சோறு, தக்காளி ரசம், கடுகுக்கீறை பிரட்டியிருந்தார். கூடவே இன்றைய ஸ்பெஸலாக ஒன்று இருந்தது. வெங்காயம் தக்காளி பூண்டு  போன்றவற்றை சேர்த்து ஒன்றாக வாட்டு வதக்கி சம்பலாக ஏதோ செய்திருந்தார். அதற்கு வெங்காய சட்னி என்ற பெயரைச் சொன்னார்.

  சும்மா சொல்லக்கூடாது, வெங்காய சட்னி புது ருசியாகதான் இருந்தது.  மாமாவும் மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கை கழுவுவதற்கு சமையல் அறை சென்றேன். அத்தை சமையல் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். மெல்ல அவர் தோள் தட்டினேன். பார்த்தார்.

 "சொல்லாம கொள்ளாம எப்படி வெங்காய சட்னி வச்சீங்க...?"என கேட்டேன்.

  முதலில் ரசம் வைத்து மீன் சம்பல் வைக்கத்தான் நினைத்திருக்கிறார். ரசத்திற்கு தேவையான புளி இல்லாததால், இருப்பதைக் கொண்டு ஏதோ செய்திருக்கிறார். பரிமாறும் போது மாமா கேட்கவும், அப்போதுதான் அதற்கு  'வெங்காய சட்னி' என அத்தை பெயர் வைத்திருக்கிறார். 

  இருவரும் பெரிய சாதனை செய்து விட்டதாய் நினைத்துச் சிரிக்கலானோம். காரணம் மாமாவையும் மாமா மகளையும் ஏமாற்றுவது அத்தனை எளிதல்ல.

  சமயங்களில் நமக்கு நடக்கவேண்டிய நன்மைகள் நடக்காமல் போகலாம். கிடைக்கவேண்டியவை கிடைக்காமல் போகலாம். அந்த நேரத்தில் சோர்ந்து நிற்காமல் அடுத்து என்ன என யோசித்து செயல்படுவதுதான் முக்கியம். அப்படி செயல்பட தொடங்கும் போது நாமே அறிந்திடாத நம் திறன் வெளிப்படுகிறது. காத்திருப்பவர்கள் காத்திருக்கிறார்கள். அடுத்து என்ன என செயல்படுகிறவர்கள் சாதனை செய்கிறார்கள்.

  இன்றைய 'வெங்காய சட்னி' மூலம் அத்தை அதைத்தான் கற்றுக்கொண்டு கற்றுக்கொடுத்திருக்கிறார். நானும் ருசித்துக் கற்றுக்கொண்டேன்.

-தயாஜி

பிப்ரவரி 18, 2020

குற்றம் நடந்தது என்ன..?


     அன்று இதுதான் சமூக வலைத்தளங்களின் முக்கியச் செய்தி. வழிப்பறி திருடர்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் பாதிப்பால் காயங்கள் மட்டுமின்றி உடல் ஊனங்கள் வரை தன் வாழ் நாள் முழுக்க சுமந்துக்கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர். 

   அவ்வளவு ஏன் சமீபத்தில் கூட வழிப்பறிக் கொள்ளையில் மரணமடைந்த சிலரையாவது நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். அல்லது அதன் செய்தியாவது நமது வட்சப்பில் வந்து மணியை அடித்திருக்கும்.

     அப்படியான சூழலில்தான் இச்செய்தி வந்தது. ஒவ்வொருவரும் இப்படித்தான் இனி செய்ய வேண்டும் என தங்களின் சமூக வலைத்தளங்களில் எழுதி பகிர்ந்துக்கொண்டிருந்தார்கள். லைக்குகள் அள்ளியது அதைவிட இதயங்கள் அதற்கு வந்து குவிந்தன.

     செய்தி இதுதான், மூதாட்டியிடம் வழிப்பறி செய்து தப்பித்து ஓடியவனை பின்னால் வந்திருந்த காரில் துரத்தி மோதியுள்ளான் சமூக அக்கறையுள்ள ஒருவன். கீழே விழுந்தவன் காலிலும் முதுகிலும் காயப்பட்டு மயங்கிவிட்டான். காவல் நிலையத்திற்கு சம்பவத்தைச் சொல்லிவிட்டு, பாட்டிக்கு முதலுதவி செய்திருக்கிறான். நல்லவேளையாக பாட்டியின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. கொஞ்சம் தாமத்திருந்தாலும் நிலமை மோசமாகியிருக்கலாம்.

     இந்த வீர, பொறுப்பான செய்திதான் இன்று தலைப்பு செய்தி. தங்கள் கார் எப்படியெல்லாம் பயன்படும் என அந்த கார் நிருவணத்தினர் முகநூலில் போட்டார்கள். இதற்காகவே கார் வாங்க வேண்டும் என்கிற தனி குழுவும் கூட தொடங்கியிருந்தது. அதற்காக கடன் கொடுக்கப்படும் என சில வட்டிக்காரர்கள் விளம்பரமாக்கினார்கள். எல்லாம் சில மணி நேரத்திலேயே நடந்தன.

     சமூக ஊடகங்களில் இல்லாத சமூகத்தினர் தங்களில் செய்தி ஊடகமான தேநீர் கடைகளில் உற்சாகமாக பேசலானார்கள். 

     வழிப்பறிக்கொள்ளை குழுவில் அங்கத்தினராக இருக்கும் பலருக்கு இச்செய்தி பீதியைக்கொடுத்தது. பலரும் தங்களுக்கு பயமாக உள்ளதாக பகிர்ந்துக் கொண்டார்கள். சிலர் கொஞ்ச நாள் விடுமுறை எடுக்கவுள்ளதாக செய்தி அனுப்பினார்கள். எப்போதுமில்லாமல் அப்போதுதான் அந்த குழுவின் தலைமை அட்மினிடம் இருந்து ஒரு செய்தி வந்தது, ‘டொன்ட் வரி’. இதுதான் முதன் முறை அந்த அட்மினிடம் இருந்து பதில் வந்திருப்பது. அக்குழுவில் அதற்கு மேல் யாரும் பேசிக்கொள்ளவில்லை.

     மறுநாள் எல்லாவற்றையும் விட பரபரப்பான செய்தி, ‘சம்பவத்தில் அடிபட்டு கிழே விழுந்த நபர் மரணம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் காரோட்டிக்கு பத்தாண்டுகள் சிறை.’ அதற்கு மேல் யாரும் அதனை படிக்கவில்லை. சிலர் அதற்கான மாற்றுக் கருத்துகளை செய்தியின் கீழே எழுதி சிலருடன் சண்டைப் போட்டுக்கோண்டார்கள். ஆயிரம் இருந்தாலும் ஒரு உயிரை கொல்வதற்கு யார் உரிமையைக் கொடுத்தார் என்பதே அதன் சாரம்.

     முதல் நாள் செய்தியைப்பகிர்ந்து தாங்கள் தெரிவித்த வீரமான ஆதரவுகளை பலர் அழித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் தேநீர் கடைகளுக்கு விபரம் போய் சேரவில்லை.

      தன் உயிரைக் காப்பாற்றிய அந்த காரோட்டிக்கு நன்றி சொல்லி கடவுளிடம் அந்த பாட்டி பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தார். கடைசிவரை அந்த பாட்டி பற்றி யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.

#தயாஜி

பிப்ரவரி 11, 2020

அன்பின் பெயராலே…


பொம்மி நீ
பிடித்திருக்கும் கைக்கு எப்போது
மதிப்புண்டு தெரியுமா
நீ விட்ட பின்னும் உன்னை
புண்ணாக்காது புன்னகைக்கொண்டு
வழியனுப்பும் போதுதான்..
குழந்தையாக இருக்கும் போது
அவர்கள் விளையாட நீ வேண்டும்
கொஞ்சமாய் வளரும் நேரம்
அவர்களின் விளையாட்டாய் நீ வேண்டும்
இன்னும் கொஞ்சம் வளர்ந்த பின்
அவர்கள் சூழ்ச்சியின் பணைய பொருளாய் நீ
விளையாடியே ஆக வேண்டும்

இங்கு யார் சரி யார் பிழை
என்கிற பேதங்கள் மீது
எந்த முலாமையும் பூசிக்கொள்ளும்
திறமையாளர்கள் அதிகம்


உன் எதிரில் நிற்க வேண்டியவர்கள் யாரென
அவர்களே முடிவெடுப்பார்கள்
உன் எதிரி யாரென அவர்களே முடிவெடுப்பார்கள்
உன் எதிரி எதுவரையெனவும்
அவர்களால் முடிவெடுக்க முடியும்

திறமைசாலி
ஆனால் துர்பாக்கியசாலியும் கூட

கண்முன்னே உன் எதிர்காலம்
கேள்விக்குறியாகும்  போது
போர் தொடு போர் தொடு
என வீர முழக்கம் கொட்டுவார்கள்
அவர்களின் எதிர்காலம் என்றால்
தேர்விட்டு தேர்விட்டு
சமாதான இசை இசைப்பார்கள்

கவனமாக இரு
கவலையாக இராதே

எல்லா நியாயங்களுக்கு பின்னாலும்
ஒரு துரோகம்  இருக்கும்
எல்லா துரோகங்களுக்கு பின்னாலும்
ஒரு நியாயம் இருக்கும்

நீ யார் பக்கம் என்பதை நீயே
தீர்மானி
நீதானே பயணி

எப்போது யார் மௌனம்
யாருக்காக கலைகிறது
எப்போது யார் குரல்
யாருக்காக ஒலிக்கிறது
எல்லாமும் என்ன
காரியங்கள்தான்
காரண காரியங்கள்தான்

சரியான நேரத்தை பயன்படுத்து
இடைவெளியில் எதையாவது நிரப்பு

இதுவரை காணாமல் போனவர்கள்
யாருக்கானவர்கள்
இப்போதெல்லாம் வந்துக்கொண்டிருப்பவர்கள்
யாருக்கானவர்கள்

யோசி

எல்லாம்
எல்லாமே
ராஜாவிற்காகத்தான்

யார் அந்த ராஜா
எந்த தேசத்து ராஜா
எந்த தேசத்தின் ராஜா
எப்போதிருந்து ராஜா

சிப்பாய்களின் விசுவாசம்
மந்திரிகளின் ஆலோசனை
வீரர்களில் ஆயுதங்கள்
ஆனால் ராஜாக்களுக்குத் தேவை
போரும்
தன் புகழ் கூரும் ஊரும்

புது சிப்பாய்கள் வெகுளியானவர்கள்
மன்னிக்கலாம்
மந்திரிகள் புத்திசாலிகள்
மன்னிக்கலாம்
வீரர்கள் நம்பிக்கையானவர்கள்
மன்னிக்கலாம்
ராஜாக்கள் சூழ்ச்சியானவர்கள்
விலைபோகாதே

உன் விலையை அடுத்தவர் நிர்ணயிக்க
விட்டுவிடாதே

பிடித்திருக்கும் கைகள் விட்டுவிட்டாலும்
பேசிப்பழகிய வாய்கள் புறம் பேசினாலும்
பழகிய முகங்கள் போலி செய்தாலும்
ஏமாற்றங்களை உன் மீது ஏற்றி வைத்தாலும்
துரோகத்தை உன்னுள் புதைத்துப் போனாலும்

நில்
கவனி
மன்னித்து
கட

மன்னிப்பே உன் மருந்து
நம்பிக்கையே உன் வாழ்வு

ஆழம் காணா கடலல்ல
அடையாளமே கண்டறியாத
பிரபஞ்சமே உன் வழிகாட்டி

-       தயாஜி

பிப்ரவரி 10, 2020

சந்தேக (அப்)பிராணி




    அண்ணனும் அண்ணியும் அமர்ந்திருந்தார்கள். தங்கைக்கும் அவளின் கணவனுக்கும் பிரச்சனை. அப்பா அம்மாவை அழைப்பதை அண்ணனும் விரும்பவில்லை. ஆனால், தன் வீட்டில் தனக்காக அம்மா, அப்பா, தங்கை என குறுகிய படையொன்றை மாப்பிள்ளை ஏற்படுத்திருந்தார். 

    உரையாடல் ஆரம்பமானது, தன் மனைவி மீதான அனைத்து சந்தேகங்களையும் மப்பிள்ளை சொல்லி முடித்தார். அவள் எதற்கும் மறுப்புச் சொல்லாமல் அண்ணனையும் அண்ணியையும் கண்களில் ஜீவனின்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ஆதாரம் இல்லாமல் சிலவற்றை பேசுவது முறையாகாது என்று அண்ணன் பேச ஆரம்பித்தார். முதலில் முகத்தில் குத்துவிட்டுதான் பேசுவது அவருக்கு பழக்கம். இது தங்கையில் வாழ்க்கை என்பதால் பேசிவிட்டு பிறகு குத்திக்கொள்ளலாம் என்கிற முடிவில் முடிந்தவரை பிடித்தமாக இருந்தார். 

    “ஆதாரம் என்ன வேண்டி கிடக்கு ஆதாரம். அதான் பொழுதன்னிக்கும் போனும் கையுமாவே இருக்காளே…” என்று கைபேசியை எல்லோர் முன்னிலையிலும் வைத்தார் மாப்பிள்ளை. அதை எடுத்த அண்ணன், தங்கையை ஒரு முறைப்பார்த்தார். தங்கையால் அண்ணனின் கண்களை சில நொடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை. தலை குணிந்தாள். அண்ணன் அவளது கைபேசியில் ஒவ்வொன்றாக தேட ஆரம்பித்தார். தனது கைபேசியை எடுத்தார். தன் நண்பனுக்கு அழைத்தார்;

“சத்தீஸ் எனக்கு ஒரு உதவி வேணும்.. ஒரு நம்பர் அனுப்பியிருக்கேன். அந்த நம்பரில் இருந்து சந்தேகம் படும்படி யாருக்கெல்லாம் படமோ மெசேஜோ அனுப்பப்பட்டிருக்குன்னு தெரிஞ்சிக்கனும். கொஞ்சம் அவசரம்….. சரி… முதலில் சிலதை மட்டும் எனக்கு அனுப்பிடு…”

     மாப்பிள்ளைக்கு மேலும் ரோஷம் வரத்தொடங்கியது. தன் குடும்பத்தினரிடம், தனது வாழ்வை எப்படியெல்லாம் அவள் மோசம் செய்துக்கொண்டிருக்கிறாள் என புலம்பலானார். அண்ணனுக்கு தொடர்ந்து சில புலனச்செய்திகள் வந்துக்கொண்டிருந்தன. அதனை அப்படியே பொதுவில் வைத்தார்.

      பல காதல் வசனங்கள், அரைகுறை படங்களின் பறிமாற்றங்கள் என வந்துக்கொண்டே இருந்தன. குடும்பமே பேச்சற்றுப்போனது. தங்கை இப்போதுதான் அழத் தொடங்கினாள்.

    மாப்பிள்ளையின் எண்ணில் இருந்துதான் அந்த பறிமாற்றங்கள் சிலருடன் நடந்திருந்தன. தங்கையின் கைபேசியில் இருந்து மாப்பிள்ளையின்  பெர்சனல் கைபேசி எண்ணைத்தான் அண்ணன் எடுத்திருந்தார். அடுத்த நொடியில் மூக்கு உடைபட்டு மாப்பிள்ளை நிற்க அவர் இருந்த இடத்தில் குடும்பத்தினரின் ஆதரவுடன் தங்கை அமர்ந்து பேசலானாள்.


-       - தயாஜி


பிப்ரவரி 07, 2020

யாரோ விட்டுச்சென்ற நிழல்


என்னால் 
மிகச்சிறந்த ஓவியம் ஒன்றை
வரைய முடியவில்லை
யாரோ ஒருவரின் குரல்
தினம் தினம் என்னை 
ஓவியம் கேட்டு இம்சிக்கிறது
என்னை துரத்துக்கிறது
என்னை தூக்கி வீசுகிறது
என்னை ஏசுகிறது
என்னால் கணிக்கவும் முடியவில்லை
கவனிக்கவும் முடியவில்லை
தப்பிக்க முயற்சிக்கிறேன்

நீ கேட்கும் ஓவியத்தை
எப்படி வரைவது
எங்கிருந்து காண்பது
எதில் ஏற்றி வைப்பது
என்கிற எந்த கேள்விகளுக்கு
அக்குரல் பதில் கொடுப்ப்பதில்லை
திரும்பவும்
திரும்பத்திரும்பவும்
இடைவேளியின்றியும்
என்னை வரையச்சொல்லிக் 
கொண்டே கேட்கிறது

நான் மீளவேண்டும்
நான் மீண்டும் என் 
பழைய வாழ்க்கைக்குச் 
செல்லவேண்டும் என்றொரு 
மனுவை எனக்கு 
நானே கொடுத்துக் கொண்டேன்

என் கையெழுத்திடும் இடத்தில்
யாரோ என் பெயரில் எழுதியிருந்தார்கள்
அது என் கையெழுத்துதான்
ஆனால் நான் வைக்காதது
சின்ன வயதொன்றில்
அடிக்கு பயந்துஅப்பாவின் குருவிக்கூடு
கையொப்பத்தை வைத்து தப்பித்த
நொடியில் தொடங்கி
இன்றுவரை அது என் கையெழுத்தாக 
ஒட்டி வருகிறது
பலமுறை மாற்ற நினைத்தும்
குருவிக்கூட்டு புற்கள் மாறினதே அன்றி
கூட்டில் மாற்றமில்லை

இருந்தும்
இக்கூட்டை நான் கையொப்பமிடவில்லை
யாரோ என்னை பின் கடத்த காலத்தை
திருடிவிட்டார்கள் 
நிச்சயம் அது திருடாகத்தான் 
இருக்க முடியும்

என் பால்யம் 
யாருக்கெல்லாம் கேடு
என பட்டியல் போட முற்பட்டால்
கடவுளிடம் நடத்திவைத்த பேச்சு வார்த்தை 
மீட்டிவைத்தத் தப்புத்தாளங்களால்
என்னையன்றி யாருக்கும் 
பெரிதாக பாதிப்புகள் ஏற்படப்போவதில்லை

தூரிகைக்கான புள்ளிகள் எல்லாமே 
என் மூளைக்குள்ளே குதிக்க தொடங்கிட்டன 
இருக்கையிலும் என்னால் என் 
விரல்களுக்கு அதனை அனுப்பி 
வைக்க முடியவில்லை
என்னதான் என்னைத் 
தடுக்கிக்கொண்டிருக்கிறது என 
இன்னமும் எனக்கு பிடிபடவில்லை

என் இயல்பு வாழ்க்கையை 
நான் இழக்க விரும்பவில்லை
விட்டிப்போனதெல்லாம் போதும்
இழக்கவும்
இழந்துவிட்டதற்காக அழுவதற்கும்
யாரோ வந்து ஆறுதல் சொல்லுவார் 
என காத்திருப்பதற்கும்
தேடி அடையாளம் தெரிந்துக்கொள்வதற்கும்
போதவில்லை நேரம்

கைகள் ஊனப்படுத்துவற்கும் முன்னமே
ஒவ்வொரு புள்ளிகளாக 
பொட்டு வைக்கிறேன்
முதல் புள்ளியைப் பிரசுரிக்க மட்டுமே
எனது சுவாசப்பையில் ஏதோ கிழிந்து
அரைகுறை காற்றே 
என் வாழதலின்
அக்கறைக் கொண்டு உள் வந்து வெளி சென்றது

அடுத்தடுத்த புள்ளிகளில் என்ன 
மாயமோ காணவில்லை
ஓட்டைவிழுந்த மூச்சுப்பைகள் 
ஒன்றின் மீது ஒன்றாக ஒட்டிக்கொண்டன

சுவாசம் சீரானது
கைகள் வேகமானது
மூளை பதுக்கி வைத்திருந்த புள்ளிகளில் 
உள்ள வண்ணங்களையும் சேர்த்து
வெளிக்கொணந்தேன்

இது என் வேகமல்ல
இது என் விவேகமல்ல
இது என் பழக்கமல்ல
இது என் சிந்தனையல்ல
இது என் சுவாசம் அல்ல

ஆனால்
இயந்திரம் போல என்னை 
நானே இயக்கத்தொடங்கிட்டேன்

எல்லா புள்ளிகளையும் ஒன்றுச் சேர்ந்து
கூடு கட்டிப்பார்க்கும் தருணம்
காதில் சத்தமிட்ட
யாரோ ஒருவரின் குரல்
யாரோ ஒருவரின் தொந்தரவு
யாரோ ஒருவரின் அலட்சியம்
யாரோ ஒருவரின் அவமானம்
யாரோ ஒருவரின் தொல்லை
எல்லாம் மறைந்துவிட்டன

கூடி முடித்த 
புள்ளிகள் சேர்ந்த கண்ணாடியில்
ஓவியத்தை முழுமையாக் பார்க்கலானேன்

அது வேறு யாருமல்ல
நான் தான்
நானே தான்

சுயம் மறந்து
சுற்றியவனுக்கு 
தன் சுயமறிதல் என்பது
அறிந்துக்கொள்ளுவரை சாபம்தான்

கண்ணாடியில் சிரிக்கும் நான்
நிச்சயம் நானே தான்….

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்