பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 02, 2020

போர் வீரனின் பரிசு


     இன்று பொம்மிக்கு பிறந்தநாள். ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. பிரிவு என்பது எத்தனை சிறிய சொல். ஆனால் எத்தனை அடர்த்தி நிறைந்தது. பொம்மிக்கு இன்றோடு பத்து வயது பூர்த்தியாகிறது.

     இப்போது அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என எனக்கு தெரியவில்லை. அவள் முகம் எப்படி மாறியிருக்கும்? அவ்வபோது அவள் எப்படித்தான் இருப்பாள் என யோசித்துக் கொள்வேன்.

    குண்டு கண்கள். குழிவிழும் கன்னங்கள். சிவந்த உதடு. சீவக்கலையும் தலை முடி. மெலிதான அழுகை. ரசிக்க வைக்கும் சிரிப்பு. இன்னும் எத்தனையோ கற்பனைத் திரையில் பார்த்துக் கொண்டேன்.

     அன்றும் இதே நாளில்தான் அவளுக்கு பிறந்த நாள் பரிசு வாங்க சென்றிருந்தேன்.   பள்ளிக்கு போவதில் ஆர்வம் காட்டியதால், பள்ளிப்பை ஒன்றை வாங்கிக் கொண்டேன். சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, சட்டென ஆளுக்கு ஆள் பரபரப்பாக ஓடத்தொடங்கினார்கள்.

    யுத்தம் வரலாம் என்கிற தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை இன்னொருவருக்குச் சொல்லிக் கொள்ளக் கூட நேரம் வாய்க்கவில்லை. சாலையில் பெரிய லாரிகள் வந்தன. கண்ணில் படுகின்ற ஆண்கள் எல்லாரையும் பிடித்துக் கொண்டார்கள். லாரி மூழுக்க எங்களை நிரப்பினார்கள். ஒரே நாள் எங்கள் இயல்பு வாழ்வு இல்லாமல் போனது.

   தொடர்ந்து ஐந்து ஆண்டுகள். வெளியுலக தொடர்பே இல்லை. அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்தோம். எங்களை,  யுத்தங்களுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். புதுப்புது பயிற்சிகள் கொடுத்தார்கள். நவீன இயந்திர துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கொடுத்தார்கள். வெடிகுண்டுகள், கன்னிவெடிகள் போன்றவற்றை  பரிசோதிக்கச் சொன்னார்கள்.

    யுத்தத்திற்கான தயார் நிலையிலேயே நாங்கள் நிலைகுத்திப் போனோம். எங்களில் சிலர் பயிற்சியின் கடினம் தாங்காது இறந்தும் போனார்கள். கடைசிவரை யுத்தம் வரவேயில்லை. யுத்தம் வரலாம் என சந்தேகித்த எதிரி நாட்டு அதிபரின் நட்பு கிடைத்து விட்டதால் நாங்கள் தப்பித்தோம். அப்போது புதிதாக பதவி ஏற்றவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எங்களில் சிலருக்கு சில நாட்களுக்கு விடுப்பு கொடுத்தார். 

    அவர்களே எங்களை லாரியில் அனுப்பி வைத்தார்கள். பணமும் கொடுத்தார்கள். 
ஐந்து ஆண்டுகளாக பாதுகாத்து வைத்த பொம்மிக்கு வாங்கியிருந்த பள்ளிப்பையுடன் சாலையில் நடந்துக் கொண்டிருந்தேன். என் தோளில் மாட்டியிருந்த புத்தகப்பை , பொம்மியை சுமந்திருப்பது போல இருந்தது. என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. 

    அதோ என் வீடு தெரிகிறது. ஐயோ என்ன இது இப்படி சிதைந்துப் போயிருக்கிறதே. இப்போதுதான் என்னால் சூழலை கவனிக்க முடிந்தது. எங்கும் மரண ஓலத்தின் எதிரொலி. வீடுகளே இல்லை. எல்லாம் வெறும் சுவர்களாகக் கிடக்கின்றன. எல்லாமோ அலங்கோலமாக இருந்தன. நான் ஸ்தம்பித்தேன். 

    எதிரே சில கார்கள் வரிசையாய் வருகின்றன. அதற்கு முன் ஒரு லாரி செல்கிறது. அதிலிருந்த ஒலி பெருக்கியில் எதையோ சொல்கிறார்கள்.
'யுத்தம் நடந்த இடத்தை இரு நாட்டு அதிபர்களும் பார்வையிட வருகிறார்கள். இனி யுத்தம் பற்றிய பயம் நமக்கு இல்லை..'

     கடைசி காரில் இரு நபர்கள் வெள்ளைக் கொடியைக் காட்டிக் கொண்டு சிரிக்கிறார்கள்.


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்