பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 29, 2021

- கோடிட்ட இடத்தை நிரப்புக -



"உங்களுக்காக எப்போதும் நாங்கள் இருக்கிறோம். கவலை வேண்டாம் எங்கள் மக்களே. உங்கள் ஒவ்வொருவர் ஓட்டுமே எங்களை உயர்த்தியுள்ளன. உங்கள் பிரதிநிதிகள் நாங்களே. "

"உண்மையில் இது மோசமான வெள்ளப்பேரிடர்தான். மறுக்கவே முடியாது. உங்களில் பலரும் கையறு நிலையில் இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். நாங்கள் உங்கள் சேவகர்கள் அல்லவா. வேறு யாரால் இதனை அறிய முடியும் சொல்லுங்கள்."

"எதற்கும் கவலை வேண்டாம். இழந்தவை பற்றி கவலை வேண்டாம். எல்லாவற்றுக்கும் மாற்று ஏற்பாடுகள், அவசரகால உதவிகள் , உணவுகள், உடைகள் என எல்லாமே தயார் நிலையில் உள்ளன. சிறு சிக்கல்."

"அந்தப் பாழாய்ப்போன பிரிண்டிங் கடைகள் எல்லாவற்றையும் மூடி வைத்திருக்கிறார்கள். அக்கடைகள் திறந்ததும் தயாராய் இருக்கும் உணவு பொட்டலத்தில் நம்ம கட்சி சின்னமும் ஒவ்வொரு பொருளிலும் நம்ம கட்சி ஸ்டீக்கரையும் மின்னல் வேகத்தில் ஒட்டி உங்களைச் சந்திக்க வருகிறோம். வந்துவிடுவோம். அதுவரை நீங்கள் எங்களுக்காகச் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்."

"நாங்கள் எப்படி, எங்கள் நிலையை உங்களிடம் பேசிப் புரிய வைக்கின்றோமோ அதே போல நீங்களும் நாங்கள் வரும்வரை அந்த வெள்ளத்திடம் பேசி புரிய வைப்பீர்கள் என பெரிதும் நம்பிக்கையோடு இருக்கிறோம். என்ன அவசரம் அந்த வெள்ளத்திற்கு. ஸ்டிக்கர் முக்கியமில்லையா..."

டிசம்பர் 28, 2021

- விடியும் எப்படியும் விடியும் -


எதிர்ப்பாராத இரவு வெள்ளத்தில் எல்லாம் அடித்துக் கொண்டு போனது. மிச்சமிருப்பது உயிர்தான் என்றான நிலையில் வட்டார மக்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள். 

இக்கட்டான நிலை. ஆடம்பர வீடுகளை விழுங்கிய வெள்ளம் வீட்டுக்கூரைகளை விழுங்க முயல்கின்றன. அக்கம்பக்க மலிவு விலை வீடுகள் எல்லாம் வெள்ளத்தின் வயிற்றில் புகுந்தே விட்டன. கூரை முழுக்க மனிதர்களாக அமர்ந்தும் நின்றும் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறார்கள்

விடிந்தும் கூட வற்றிடாத வெள்ளத்தை கேள்விபட்ட மந்திரிகள் அவசர கூட்டம் போட்டார்கள். வெள்ளம் நெருங்க முடியாத இடம் கண்டறியப்பட்டது. பிரியாணிக்கு ஆடர் கொடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் கூடினார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்கு புதிய திட்டத்தையும்  குழுவையும் உருவாக்கி அதற்காக கேக் வெட்டி திறப்பு விழா செய்தார்கள். 

அங்கிருந்து புறப்பட்டவர்கள் உடனடியாக மக்களுக்கு உதவும்படிக்கு சில படகுகளை ஏற்பாடு செய்யலானார்கள். படகுகளின் நான்கு பக்கங்களிலும் கட்சி கொடியை ஏற்றிவிட்டார்கள். கட்சி வண்ணத்தை படகுகள் முழுக்க பூசி, அதனை நன்றாக காய வைக்க படாத பாடு பட்டார்கள்.

படகுகள் எப்படி தனியாகப்போகும். அதற்காக ஒவ்வொரு படகிலும், அந்த படகின் தலைவர், அவரின் துணைத்தலைவர், யாருக்கு என்ன உதவி தேவை என கண்டறிந்து குறிப்பு எழுத இரண்டு செயலாளர்கள், இரண்டு கேமரா மேன்கள், துடுப்பு போடுவதற்கு நான்கு பேர், இவர்களின் பாதுகாப்பு கருதி நான்கு பேர், இவர்களுக்கு குடை பிடித்தவாறே நான்கு பேர் இருந்தார்கள்.

அப்படகில் மொத்தமே இருபது பேர்வரைதான் அமர முடியும் என்பதை அறிந்துகொண்டவர்கள், காலியாக இருக்கும் இடத்தில் எந்த பாதிக்கப்பட்டவர்களை ஏற்றலாம் என கண்டறிய மேலும் இரண்டு உதவியாளர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் போய் சேர்ந்து, உதவி செய்துவிடுவார்கள்.

டிசம்பர் 27, 2021

- உயர்திணையும் அஃறிணையும் -

   "நாய்ங்களுக்கு இடமில்ல......" என சொல்லிவிட்டார்கள். குமாருக்கும் அவனது அம்மாவிற்குமே இடம் போதுமானதாக இருப்பதாக சொன்னார்கள். அந்த நாயை தான் கையிலேயே பிடித்துக் கொள்வதாக குமார் கேட்டாலும்,  சொன்னாலும், கெஞ்சினாலும், கண்ணீர் மல்கினாலும் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.

    தன் வீட்டு நாயைத்தான் காப்பாற்ற முடியவில்லை. இந்த நாயையாவது காப்பாற்றலாம் என்கிற முயற்சியும் வீண். இந்த திடீர் வெள்ளம் பல எதிர்ப்பாராதவற்றை ஏற்படுத்திவிட்டது. எதை இழந்தோம் எதை மறந்தோம் என்கிற பிரக்ஞை இன்றியே உயிர் பயத்தில் பலரும் பலவாறு ஆகிப்போனார்கள். 


    வரலாறு காணாத வெள்ளம், வீட்டுக்கூரை வறை உயர்ந்து கொண்டுக்கிறது. அவசரகால உதவிகளை அரசாங்கத்தை எதிர்ப்பார்க்காமல் அரசியல்வாதிகள் தூங்கி விழிப்பதற்கு முன்னமே மக்கள் தாங்களாகவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 


       இரண்டாவது முறையாக வந்த படகில் சென்றுக்கொண்டிருக்கும் போதுதான் குமாருக்கு அந்த நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.  அது ஒரு பாவப்பட்ட குரலாக இனி என்னால் முடியவே முடியாது என்கிற ஒலியாக அது கேட்பதை குமார் மட்டுமே உணர்ந்தான்.


     உடல் முழுக்க வெள்ளத்தில் நனைந்த மனிதர்களின் வெறும் கைகளின் தங்களின் உயிரை பிடித்துக் கொண்ட இந்தப் பயணத்தில் அஃறிணைகளுக்கு இடமிருக்கவில்லை.


     தூரத்தில் அந்நாய் மெல்ல மெல்ல மூழ்கத்தொடங்குகிறது, அதன் அருகில் குழந்தையொன்று மெத்தையோடு மிதந்தவண்ணம் மெல்லியக்குரலில் கத்திக்கொண்டிருக்கிறது.


     எப்படியாவது அந்த உயர்திணையை  இந்த அஃறிணை காப்பாற்றியப் பிறகே  முழுவதுமாக மூழ்கும்; அதுவரை அது குரைத்துக்கொண்டுதானே இருக்கும். 

 

நவம்பர் 03, 2021

- தீபாவளி முதல் நாள் -

 



 விடியற்காலை வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். வழக்கத்திற்கு மாறாக இம்முறை 5 மணி நேரத்தில் இருந்து 7 மணி நேரம் வரை ஆனது. பழையபடி வாகனத்தை வேகமாக ஓட்ட முடியவில்லை. இடையிடையில் மழைத்தூறலும் பல நினைவுகளும் வந்து சென்றதில் பயணம் தாமதமாகிக் கொண்டே இருந்தது.

  அதிகாலை அரைத்தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பிவிட்டேன். அம்மா வயதானது போல் இருந்தார். அப்பா எப்போதுமே அப்படித்தான் தெரிவதால் அம்மா மீதுதான் கவனம் போனது.

 அம்மாவின் கையால் 'தேத்தண்ணி' குடித்து உறங்குவதற்கு முன் என்னை உற்சாகப்படுத்த நினைத்தேன். ஒன்றுக்கு பலமுறை குடிக்க என்ன கலக்கட்டுமென அம்மா கேட்கும் போதே சூதாரித்திருக்க வேண்டும்.

  குவலை நிறைய நெஸ்காபியை அம்மா கலக்கிக்கொண்டு வந்தார். நான்காண்டுகள் கழித்துதான் அம்மாவின் கையால் நெஸ்காபியைக் குடிக்க ஆயுத்தமானேன்.

  வெதுவெது சூட்டில் கிளாஸை இறுக்கப் பற்றிக்கொண்டேன். பல மணிநேர பயண களைப்பையும் குளிரில் உறையத் தயாரகிவிட்ட உள்ளங்கைக்கும் இதமாக இருந்தது.

  ஒரு மடக்கு குடித்ததுதான் உச்சி மண்டையில் மணி அடித்தது. சீனியில் நெஸ்காபியை கொஞ்சமாக போட்டிருந்தார் அம்மா.

  எத்தனை கரண்டி சீனி என்றேன். சீனி போட கரண்டியைப் பயன்படுத்து வதில்லை என்ற அம்மா, சின்னதாய் ஒரு மூடியை எடுத்து வந்து காட்டினார்.  அது நான் காபி குடித்த குவலையில் பாதி அளவிலாவது இருக்கும்.

  இனிப்போடு ஆரம்பிக்கலாம், இனிப்பே முடிவாகிவிடக்கூடாது என்று சொல்லி குடித்தவரை போதுமென்று மேலும் ஒரு குவலை சுடுதண்ணியைக் குடித்துக் கொண்டேன்.

  வேறு எதுவும் வேணுமாவென அம்மா கேட்டார். அம்மாவிற்கு இப்போது தூக்கம் அவசியம் என சொல்லி எல்லோரையும் உறங்க அனுப்பினேன்.

  எனக்கு தூக்கம் வரவில்லை. தாய் மண்ணில் இருந்து கோலாலும்பூருக்கு. சென்ற என்னை ஒரு முறை நினவுக்கூர்ந்தேன். அதில் ஒட்டிக் கொண்டிருப்பது உதட்டோர புன்னகை மட்டுமே என நினைக்கையில் சுருக்கென்றது. அதை எந்த சமயத்திலும் இழக்கக்கூடாது என்று நினைப்பிலேயே மெல்ல மெல்ல கரைந்து இரவுக்குள் என்னைத் தொலைக்கலானேன்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

ஆகஸ்ட் 02, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘சிறு கதை – சிறுகதைகள் குறித்த கட்டுரை’

புத்தகவாசிப்பு_2021 ‘சிறு கதை – சிறுகதைகள் குறித்த கட்டுரை’

தலைப்பு – ‘சிறு கதை – சிறுகதைகள் குறித்த கட்டுரை’

வகை – கட்டுரை தொகுப்பு

தொகுப்பு – எஸ்.செந்தில்குமார்

வெளியீடு – எழுத்து பிரசுரம்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற முழுமுதல் முடிவாக சிறுகதையை அணுகுவது இப்போது சாத்தியமில்லை. தொடர்ந்து புது முயற்சிகளை பலர் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒன்று மாதிரி இன்னொன்று இருப்பதில்லை. ஆனால் அதனுள் கதைக்கான தேவை என்பது இருக்கவே செய்கிறது. அத்தேவைதான் இன்னமும் சிறுகதைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

சிறுகதைகளை ஒட்டிய பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் புத்தகம். ஒரே கேள்விக்கு பலர் பதில் கொடுக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் சிறுகதைகளைப் பற்றிய தலைப்பு கொடுக்கப்பட்டு கட்டுரையாக வந்துள்ளது. பதினெட்டு படைப்பாளர்களின் கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளது. சில பக்கங்களில் முடியும் சிறுகதையின் தாக்கம் எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைகின்றது என்பதை இக்கட்டுரைகள் எடுத்துரைத்திருக்கிறார்கள். 

ஒவ்வொருவரும் சிறப்பாகவே எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து எனக்கு நெருக்கமான சில கட்டுரைகளை சுருங்கக் கூற நினைக்கின்றேன். 

‘தொடக்கக்கால தமிழ்ச்சிறுகதை’ என்ற தலைப்பில் சு.வேணுகோபால் நீண்ட கட்டுரையைக் கொடுத்துள்ளார். கட்டுரை எழுதுவதற்கு அதற்கான தரவுகள் எத்தணை அவசியம் என்பதனை இக்கட்டுரை வழி அறிய முடிகின்றது. இவற்றையெல்லாம் நினைவில் இருந்து சொல்கிறாரா? குறிப்புகளை வைத்திருக்கிறாரா என தெரியவில்லை. பிரமிப்பைக் கொடுக்கவே செய்கின்றது. சாமுவேல் பவுல் ஐயர் எனும் தமிழ்க் கிறித்துவப் பாதரியார் 1877-ம் ஆண்டு ‘நாற்போரம்’ என்ற  கிறித்தவ மத இதழில் ‘சரிகைக் தலைப்பாகை’ என்ற சிறுகதையை எழுதியிருப்பதைச் சொல்கிறார். அதோ அச்சிறுகதையின் கதைச்சுருக்கத்தையும் சொல்கிறார்.

அம்மணிஅம்மாள் ‘சங்கல்பமும் சம்பவமும்’ என்கிற சிறுகதையை  1913-ம் ஆண்டு எழுதியதாகச் சொல்லி அக்கதையின் சாதனையையும் சொல்கிறார். இதுவரை இந்த அம்மையாரின் பெயரை எங்கும் வாசித்ததாக நினைவில் இல்லை. இப்படி பல புதிய காலத்திற்கு ஏற்ற  தகவல்களை  இக்கட்டுரை  முழுக்கவும்  சொல்லிக்கொண்டே  செல்கிறார்.

‘நதிமூலம்’ என்ற தலைப்பில் ஜீ.முருகன் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். தனக்கும் தன் கதைகளுக்குமான அகவயமான புறவயமான காரணங்களைச் சொல்லியுள்ளார்.
எழுத்தாளன் என்பவன்; 'எவற்றை எழுதுகிறான்', 'எதற்காக எழுதுகிறான்', 'எப்படியெல்லாம் எழுதுகிறான்' என்று மூன்று அம்சங்களாக பிரித்து எழுதியுள்ளார்.   ஒரு கதையின் நதிமூலத்தை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கொஞ்ச நேரத்தில் அவரின் அக்கதை எனக்கு பொறி தட்டியது. அச்சிறுகதையை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்விற்கு கொஞ்சமும் குறைவில்லாத ஒன்றாக அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது உணர்ந்தேன்.
கட்டுரையின் கடைசியில்தான் அச்சிறுகதையின் தலைப்பை அவர் சொல்கிறார். ஆனால் அதற்கு முன்னமே அதனை நான் கண்டுபிடித்துவிட்டத் எழுத்தாளரின் வெற்றியா வாசகரின் வெற்றியா எனத் தெரியவில்லை. யோசிக்கையில் வென்றது 'ஆப்பிள்' என்ற அச்சிறுகதைதான் என புரிகிறது.

        இதுவரையில் ஜீ.முருகனின் இரு சிறுகதை தொகுப்புகளை வாசித்துள்ளேன். சிலரிடம் பேசியும் உள்ளேன். ஆனால் வாசிப்பு அனுபவம் குறித்த அனுபவத்தை இன்னும் எழுதவில்லை. நிச்சயம் எழுதவேண்டும்.

‘வலசை வெளியிடையில்’  என்ற தலைப்பில் யூமா வாசுகி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். இக்கட்டுரைக்கு 20 புத்தகங்களில் இருந்து பல குறிப்புகளை எடுத்தாண்டுள்ளார் ஆசிரியர். (கட்டுரையில் முடிவில் அப்புத்தகங்களின் தலைப்பு குறிப்பிடப்பட்டிருக்கும்). பண்நாட்டு நாடோடிக் கதைகளையும் அது எவ்வாறு இன்னொரு பிரதேசத்தில் சொல்லப்படிகின்றது என்பதை சுவாரஷ்யம் குறையாமல் சொல்லிச்செல்கிறார். குறிப்பாக ஜப்பான் நாடோடிக் கதைகளின் பின்னணி , துருக்கிக் கதைகளின் பின்னணி, லத்தீன் அமெரிக்க கதைகளின் தன்மை என வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தையும் தேடலையும் ஏற்படுத்துகின்றார்.

‘செவிமொழியும் மனமொழியும்’ என்ற தலைப்பில் யுவன் சந்திரசேகர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். வாய்மொழிக்கதைகளுக்கும் எழுத்து வடிவ கதைகளுக்குமான வித்தியாசங்களைப் பேசும் கட்டுரை. தன் சொந்த அனுபவத்தின் ஊடே கட்டுரையைக் கொண்டு செல்கிறார்.

‘மொழிபெயர்ப்புகளை ஏன் வாசிக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் எம்.கோபாலகிருஷ்ணன் ஒரு கட்டுரையைக் கொடுத்துள்ளார். மொழிபெயர்ப்புகள் மூலம் நமக்கு கிடைக்ககூடியவற்றை நேர்த்தியாக சொல்கிறார். மொழிபெயர்ப்புகள் மொழிக்கும் படைப்பாளர்களுக்கு புதிய சொற்களையும் புதிய வாசிப்பு அனுபவத்தையும் தருகின்றன. மொழிபெயர்ப்பின் மூலம் அறிந்த படைப்பாளர்களின் பட்டியலைக் கொடுக்கின்றார். தவறவிடக்கூடாத மொழியாக்கங்களை இக்கட்டுரையின் வழி கவனத்தில் கொள்ள முடிகிறது.

‘தமிழகத்திற்கு அப்பால் தமிழ் புனைவு வெளி’ என்ற தலைப்பில் சுனில் கிருஷ்ணன் ஒரு கட்டுரையைக் கொடுத்துள்ளார். தமிழகத்தைத் தாண்டியும் பிற நாடுகளின் படைப்பாளிகள் எவ்வளவு தங்கள் படைப்புகளை வெளியுலகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள் என பார்க்க முடிகின்றது. எது அப்படைப்பின் தனித்தன்மையாக அடையாளம் காட்டப்படுகின்றது என்பது முக்கியமான கேள்வி. குறிப்பாக இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளையும் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி எழுதியிருப்பது கவனிக்க வேண்டியது.

‘தமிழில் அறிவியல் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் கார்த்திக் பாலசுப்ரமணியம் ஒரு கட்டுரையைக் கொடுத்துள்ளார். என்னளவில் இப்போதைக்கு அதிகம் தேவைப்படும் ஒன்றாக இதனைப் பார்க்கிறேன். அறிவியல் சிறுகதைகள் எழுதுவதற்கு முன்பாக எது அறிவியல் எது தொழில்நுட்பம் என்கிற தெளிவு அவசியம். அதோடு வாசிக்க வேண்ட சில அறிவியல் சிறுகதைகளையும் கொடுத்துள்ளார். கொடுத்ததோடு நில்லாமல் அச்சிறுகதைகளின் குறைநிறைகளையும் கொடுக்கின்றார்.

நிச்சயம் வாசிக்க வேண்டிய தொகுப்பாக இத்தொகுப்பைச் சொல்லலாம். பல ஆளுமைகளின் பார்வையில் அவர்கள் எழுதியிருக்கும் இக்கட்டுரைகள் சிறுகதைகள் மீதான ஈர்ப்பையும் வாசிக்கும் நுட்பத்தையும் ஏற்படுத்தும். வாசிக்க வேண்டிய, தவறவிடக்கூடாத சிறுகதைகளை இங்கிருந்தும் நாம் வாசிக்க ஆரம்பிக்களாம்.

 

- தயாஜி

 


ஜூலை 31, 2021

அப்போதும் இப்போதும்

- அப்போதும் இப்போதும் -

அப்போது
அங்கு ஒரு குழந்தை
பால் குடித்துக் கொண்டிருந்தது

அப்போது
அங்கு ஒரு சிறுமி
படம் வரைந்துக் கொண்டிருந்தாள்

அப்போது
அங்கு ஒரு சிறுவன்
விளையாடிக் கொண்டிருந்தான்

அப்போது
அங்கு ஓர் அம்மா
சமைத்துக் கொண்டிருந்தார்

அப்போது
அங்கு ஓர் அப்பா
வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்

அப்போது
அங்கு ஒரு பள்ளிக்கூடம்
நடந்துக் கொண்டிருந்தது

அப்போது
அங்கு ஒர் ஓடை
ஓடிக் கொண்டிருந்தது

அப்போது
அங்குச் சில பாட்டிகள்
வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தார்கள்

அப்போது
அங்குச் சில தாத்தாக்கள்
கலந்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்

இப்போது
இங்கு ஒரேயொரு
நட்சத்திர நீச்சல் குளம்
இருக்கிறது
டிக்கட் உள்ளவர்களுக்கு
அனுமதியுடன்


#தயாஜி

ஜூலை 30, 2021

- முகவரியற்ற கடிதம் -

 - முகவரியற்ற கடிதம் -


ஏன் எழுதுகிறேன்
என்கிற கேள்வியின்
நுனியில் அமர்ந்துக் கொண்டே
எழுதவேண்டி உள்ளது

பதில் கிடைக்காத
எத்தனையோ கேள்விகள்
இதனையும் இணைத்துவிட
தோன்றவில்லை
விட்டு விலகவும்
முடியவில்லை

உலகின் ஏதோ ஒரு
மூலையில்
அழுபவனுக்கு அருகில்
நானும்தான் அழுதேன்
என ஆறுதல் செல்வதற்கு

பெயர் தெரியாத
மனிதனொருவனின்
சொல்ல முடியாத துயரில்
பங்கு கொள்வதற்கு

அழுது அழுது
ஆவப்போவது ஒன்றுமில்லை
என்கிற அனுபவத்தைச்
சொல்லிச் செல்வதற்காவது
ஒருவன் எழுத வேண்டாமா
சொல்லுங்கள்

#தயாஜி

- யாராக பிறக்கலாம் -


- யாராக பிறக்கலாம் -

நிசப்தத்தின் பேரிரைச்சலைத் 
தனிமையில்
கேட்பதென்பது
கண்களைக் கட்டி கடலில்
தள்ளிவிடுவது போலானது

உதவிக்கு அழைக்கவும் முடியாது
உடன்
குதித்தவர்கள் யாரென்றும் தெரியாது

மங்கிப்போன மின்விளக்கின்
கீழ்
அழுவது
வேறு யாரோ அல்ல
நிச்சயம் என் கனவுதான்

அதோ நிழலாக தன்னை
நினைத்துக் கொண்ட
நாயின் வாலொன்று
வெளிச்சம் வரும் வரை
அசைமாட்டேன் என்கிறது

நீ நிழலல்ல
நிஜமென
யார்தான் சென்று சொல்வது

எதிர்கால ஆசை
தலைப்பில் எழுதிவைத்த நேரத்தில்
எதையாவது பூசி
தோளை வெளுத்திருந்தால்
கறுப்பாக இல்லாமல்
கல்லூரியில் இடம் பெற்றிருப்பேன்

படித்ததை
எழுதி பெற்ற
மதிப்பெண்களைவிட
யார் வீட்டில் என்னவாக பிறந்தோம்
என்ற அடையாளமே
போதுமானதாக இருக்கும் போது
எதற்கு இத்தனைச் சிரமங்களில்
பரிட்சைக்கு பழகுகின்றோம்

ஆனால் ஒன்று
நாயாகக்கூட பிறக்கலாம்
நாடற்வனாக பிறக்கவே கூடாது

- நேசத்திற்குரிய இரவுகளே -

 - நேசத்திற்குரிய இரவுகளே -


இரவுகள் சுதந்திரமானவை
கண்ணைச் சூழ்ந்த
இருளில் திரையில்
யாரை வேண்டுமானாலும்
வரச்சொல்லி அழைக்கலாம்
எந்த வாசத்தையும்
முகர்ந்துக் காட்டலாம்
எந்த உணர்விலும்
வாழ்ந்துப் பார்க்கலாம்

எப்போதோ செய்த தவறுக்கு
வருந்தி அழலாம்
நண்பர்கள் செய்த துரோகத்தை
மீண்டும் காணலாம்

அமைதியின் பேரிரைச்சல்
காதுகளை கிழித்தாலும்
சிரித்துக் கொள்ளலாம்

இரவுகள் எப்போதும்
தெய்வீகமானவை
அதன் ஆழம் அறிய
இருளின் இருளாக
கரையவேண்டும்
நம் நிழலாக நாமே
பிறக்க வேண்டும்
ஒட்டிக் கொண்டிருக்கும் உடலை
ஒதுக்கி
சுவர்களில் பிரதிபலிக்க வேண்டும்
நிழலானப் பின்பும்
நிச்சயம் நினைவுகள்
வந்தேத்தீரும்
சமாளிக்க கொஞ்சம்
தைரியமும் கொஞ்சமேனும்
அழுகையும்
வேண்டும்...

- தயாஜி

- பகல்கள் விற்பனைக்கு -

 - பகல்கள் விற்பனைக்கு -

உங்கள் இரவுகளை
எனக்களிக்க இயலுமா
பதிலாக என் பல பகல்களைத்
தந்துவிடுகிறேன்
எனக்கு இரவுகள் போதும்
எல்லார்க்கும் உறக்கம்
உண்டானப்பின்னேதான்
ஏதோ கொஞ்சம்
அழ முடிகிறது
அழ அழ மட்டுமே
மனம் லேசாகிறது
அழுதப்பின்னே அதன்
பாரம் இரட்டிப்பாகிவிடுகிறது
எத்தனைக் கனவுகளுடன்
கால்தடம் வைத்தோம்
அத்தனையுமா அடைந்துவிடுகிறோம்
பித்தனைப் போல் அலையவும்
முடியவில்லை
புத்தனைப் போல் அமரவும்
இயலவில்லை
அழும் கண்ணீரோசையில்
காதுகள் கொஞ்சமேனும்
அடைத்துக் கொள்கின்றன
தேம்பித் தேம்பி அழவும்
விம்மி விம்மி ஆழவும்
காரணங்களா இல்லை
ஏதோ ஒன்று
காத்திருப்பதாக
நமக்கு நாமே சொல்லிக்
கொள்ளும் ஆறுதல்களுக்கு
பஞ்சமில்லாத பகல்களை
எடுத்துக் கொண்டு
நிசப்தமான இரவுகளை
கொடுத்து உதவுங்கள்
தூரத்து நட்ச்சத்திரங்களுடனாவது
பேசிவிட்டு வருகிறேன்
அவை போலியாய் புன்னகிக்க
கற்றுக்கொள்ளாதவை....

- அத்தையை நம்புவோம் -

 #குறுங்கதை 2021 - 23

- அத்தையை நம்புவோம் -

காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு வெளியேறினேன். வரவேற்பறையில் அத்தை அமர்ந்திருந்தார். வழக்கமான புன்னகை இருக்கவில்லை.

முகம் பீதியில் இருந்தது. என்னவென்று விசாரித்தேன்.

"அத்தை என்ன ஆச்சி..? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க.?"

"ஒன்னுமில்ல.."

"ஏதோ இருக்குன்னு தெரியிது அத்தை. சொல்லுங்க..."

"சொன்னாலும் நீங்க நம்பமாட்டீங்க.. விடுங்க.."

அத்தை இப்படி சொல்லிவிட்டால், அடுத்ததாய் நடந்ததைச் சொல்லப்போகிறார் என்று அர்த்தம். ஆரம்பித்தார்.

"விடியற்காலைல ஏதோ ஒன்னு என்னை அமுக்கிடுச்சி..!"

"அமுக்கிடிச்சா...?"

"ஆமா.. நல்லா தூங்கிட்டு இருந்தேன். கறுப்பா ஒன்னு முகம் கூட சரியா தெரியல.. என் காலை புடிச்சிருச்சி..."

"ஐயோ அப்பறம்!"

"என்னால கை காலை அசைக்க முடியல.. வாய்க்கு வந்த சாமிங்க பேரையெல்லாம் சொல்லிட்டு... காலை இழுத்துகிட்டேன்.."

"அப்பறம்....!"

"அப்பறம் என்ன அப்பறம்.. என்கிட்டயா விளையாடுதுனு சொல்லி.. இழுத்துகிட்ட காலிலேயே ஒரு எத்து விட்டேன்.. அப்படியே பறந்து போச்சி.. அப்பறம் காணல.."

சொல்லும் போதே அத்தையின் முகத்தில் ஏதேதோ தெரிந்தது. நம்புவதா வேண்டாமா என யோசிக்க முடியவில்லை.

அப்போதுதான் மாமா அறையை விட்டு வெளியில் வந்தார். முகம் வீங்கி இருந்தது. மூக்கு உடைந்து இரத்தம் காய்ந்திருந்தது. நடக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார்.

சந்தேகமே இல்லை. அத்தையை நம்பிவிட்டேன்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்