பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 30, 2026

- புத்தகங்களைப் பின்தொடரும் பயணம் -


நடுகல்.காம் இணைய பக்கத்திற்கு இரு தொடர்களை எழுதி வருகின்றேன். 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' என்ற தொடரில் மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த வாசிப்பனுபவத்தையும், 'மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம்' என்ற தொடரில் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த வாசிப்பு அனுபவத்தையும் எழுதும் தொடர் அது.

இந்த மே மாதம் வரை 17 மலேசிய புத்தகங்கள் குறித்தும், 5 சிங்கப்பூர் புத்தகங்கள் குறித்தும் எழுதியுள்ளேன். அதோடு மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பிலும் 'புத்தகச்சிறகுகள்' என்ற தலைப்பில் புத்தக அறிமுகத்தினை வாராந்திர தொடராக எழுதுகிறேன்.

இந்தத் தொடர்களின் வழி பல புதியவர்கள் எனக்கு அறிமுகம் ஆகின்றார்கள். பலரும் புத்தக பரிந்துரைகளை செய்கிறார்கள். புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு பிடித்த தொடராக இந்தத் தொடர்கள் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

புத்தகங்கள் மீதான எனது காதல்தான் 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை' எனும் இணைய புத்தகக் கடையையும் பல சிக்கல்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியுடன் என்னை நடத்த வைக்கிறது. என்னை வழிநடத்தியும் செல்கிறது.

இந்தத் தொடர், என்னைப் போலவே புத்தகங்களை நேசிக்கின்றவர்களை எனக்கருகில் கொண்டு வந்து சேர்க்கிறது என்றால் மிகையில்லை.

நான் புத்தக வியாபாரி மட்டுமல்ல புத்தகங்களை நேசிக்கும் ஒருவன் என தெரிந்தவர்கள் எனக்கு நண்பர்களாகவும் நமது புத்தகக்கடைக்கு வாடிக்கையாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் என் அன்பு.

இந்தத் தொடருக்காக சிங்கப்பூரில் இருந்து கவிஞர் பாண்டிதுரை 12 சிங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களை பெற்றுகொண்டு எனக்கு அனுப்பி வைத்துள்ளார். தனது புத்தகம் பேசினால் போதும் என ஒதுக்கி இல்லாமால் தனது நண்பர்களின் புத்தகங்களும் பேசப்படவேண்டும் என சிரத்தை எடுத்து புத்தகங்களைச் சேகரித்து எனக்கு அனுப்பிய நண்பருக்கு எனது அன்பும் நன்றியும்.

அதே போல மலேசிய மூத்த எழுத்தாளர்களின் ஒருவரான மனஹரன் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். மறைந்த எழுத்தாளர் கோ.முனியாண்டியின் 'சிறுகதை தொகுப்பை' எனக்கு அனுப்பி வைத்தார். அவருக்கும் எனது அன்பும் நன்றியும்.

வாசிப்பதும் எழுதுவதும் எனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதோ என்னுடைய தன்னறமாகவே இருப்பதாக நம்புகிறேன். அதற்காவே எழுதுகிறேன்.

புத்தகங்களைப் பின் தொடர்ந்து செல்கிறேன். இந்தப் பயணத்தில் நான் ஒருபோதும் தனியாக இல்லை. நீங்கள் எல்லோரும் என்னுடனே இருக்கிறீர்கள். வேறென்ன வேண்டும்.

தொடர்ந்து வாசிப்போம். தொடர்ந்து எழுதுவோம்.....

- சிரித்த முகம் -

சிரித்தால்
அழகாய்த் தெரியும்
மனிதர்களை நமக்கு
நன்றாக தெரியும்

ஏனோ அவர்களால் இப்போதெல்லாம்
சிரிக்கவே முடிவதில்லை
என்பது

அவர்களுக்கு
மட்டுமே தெரியும்...

ஏப்ரல் 29, 2026

- காதலே விடை -


காதலிக்காதவர்களால்
ஒருபோதும்
காதல் தோல்விகள்
ஏற்படுவதில்லை...

நேசிக்காத ஒன்றை
எப்படி ஒருவனால்
வெறுக்க முடியும்...

ஏப்ரல் 27, 2026

- பிரபஞ்ச சமையல் -


இன்று
என்ன சாப்பிடலாம்
என்பதும்

இன்று
என்ன சமைக்கலாம்
என்பதும்

ஒரே இலக்கை
அடையக்கூடிய
இருவேறு செயல்கள் அவ்வளவே

நாம் சாப்பிடுவதை
மட்டுமே
உயிர்வாழ உகந்ததாக
பார்த்து கொண்டிருக்கிறோம்

- வீழ்ச்சியின் எழுச்சி -

நீர்வீழ்ச்சியின்
நீள அகலத்தில்
என்ன இருக்கிறது

தள்ளி நிற்காமல்

சட்டென குதித்து
நனைந்து
குளிர்ச்சியைக் கொண்டாட
வேண்டாமா

குதிப்பதற்கும்
குளிர்வதற்கும்
பயம் கொண்டால்
நீர்வீழ்ச்சிகள் எதற்கு

வீட்டுக்குழாயே போதாதா
நனைந்து கொள்ள....

வாசிப்பில்


வாசிப்பில் 'கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்'
கவிஞர் மீராவின் கவிதைத் தொகுப்பு....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஏப்ரல் 26, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 9


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 9' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் வார தொடரில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆதி.இராஜகுமாரனின் 'ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள்' புத்தகத்தை குறித்து எழுதியுள்ளேன்.
கட்டுரையின் முதல் பகுதி இந்த வார தொடரில் வெளிவந்துள்ளது.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவரின் சிறுகதைகளைக் குறித்து பேசுகிறேன். எழுத வந்த புதிய எழுத்தாளர்களுக்கு அவர் கொடுத்த வாய்ப்பு இன்றியமையாதது. எனது பதின்ம வயதில் நானுமே அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டேன்.

மலேசிய இலக்கிய உலகில் முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக இருந்த, அமரர் ஆதி.இராஜகுமாரன் அவர்களை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கும் இருக்கிறதுதானே.

தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.

வாசிப்போம்..
நேசிப்போம்..
வளர்வோம்..

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

- எழுதுவேன் நான் -


என் கவிதைகள்
ஒருபோதும்
விற்பனைக்கல்ல

ஆனால்
அதனை எழுதியதற்காக
எனக்கு
ஒருவேளை உணவு
வாங்கி கொடுங்களேன்
போதும்

மீண்டும் பசியோடு
எழுதுவேன் நான்....

ஏப்ரல் 25, 2026

- முதல் பரிசு -


குழந்தைகளுக்கான
ஓவியப்போட்டியில்
விதிமுறைகளுக்கு உட்பட்டு
பெற்றோரின் கண்காணிப்பில்
வண்ணம் தீட்டிய
குழந்தைக்கு
முதல் பரிசு கிடைத்தது

தன்
கை போன
போக்கில்
வண்ணங்களை அலையவிட்டு
பரிசு நிராகரிக்கப்பட்ட
குழந்தையின்
ஓவியம்

அவள் வீட்டில்
அழகான சட்டகத்தில்
தேதி நாள் விபரங்கள்
அறிவித்தபடி
அந்தக் குழந்தையைப் போலவே
அங்கும் இங்கும்
குதித்து விளையாடி கொண்டிருக்கிறது

அது
அந்தக் குழந்தைக்கு
ஒவ்வொருநாளும்
பரிசு கொடுத்தபடி
இருக்கிறது...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஏப்ரல் 24, 2026

- கருணைக்கரம்-



ஆகக்கடைசியாக
என் மீது
கருணை கொண்ட
இரு கரங்களைச்
சந்தித்தேன்

இறுக்கமாய்ப் பற்றினேன்
அணைத்தேன்
ஆசுவாசம் கொண்டேன்

இத்தனை நாட்களாய்
அவை
எனது வலப்பக்கத்திலும்
இடப்பக்கத்திலுமே
இருந்திருக்கின்றன....

- அங்கும் இங்கும் எங்கும் -

நான்
அங்கில்லை என
அவர்கள் தெரிந்து கொள்ளும்
முன்னமே

நான்
எங்குமில்லை என
நானே புரிந்து கொண்டேன்
எண்ணமே...

ஏப்ரல் 22, 2026

- வலைக்குள் குழு -


சர்க்கஸ் வலை
அவிழ்ந்து விழுந்தது

சரி செய்வதற்குள்
உள்ளிருந்த
புலிகளில் ஒன்று
சட்டென தாவி
பார்வையாளர்கள் மத்தியில்
குதித்தது

யாருக்கும்
என்ன செய்வதென புரியவில்லை
அலறல் சத்தங்களுடன்
அங்கும் இங்கும்
ஓடத்தொடங்கினர்

எல்லோரும் தன்னைவிட்டு
ஓடுவதைப் பார்த்த
புலிக்கு மிகுந்த ஏமாற்றம்

அதற்கும்
அடுத்தென்ன என்பது
புரியவில்லை

சர்க்கஸ் வலைக்கே
திரும்பலாம் என்றது

வலைக்குள் இருந்த
புலிகளில் ஒன்று
அதன் பயிற்சியாளரைப்
பாதி தின்றுவிட்டிருந்தது

எங்கிருந்தோ வெடித்த
துப்பாக்கி தோட்டா
வலைக்கு வெளியில்
திகைத்து நின்ற புலியை
முதலில் துளைத்தது

வலைக்குள் குழுக்குள்ளும்
இருக்கும்வரை
எல்லோருக்குமே
பாதுகாப்புதான் போல...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

லேசும் தூசும்


லேசும் தூசும்

தூக்கி
சுமக்கும் அளவிற்கு
துயரங்கள்
லேசானவைதான்

நானோ
அதைவிடவும் தூசானவனாக
மாறிவிட்டேனே
என்ன செய்ய...

சங் கன்ச்சில்


வாசிப்பில் சிங்கை எழுத்தாளர் அழகுநிலாவின் சிறுகதைகள் 'சங் கன்ச்சில்'.

ஒருசிலரை மட்டும்தான் எந்தத் தயக்கமும் இன்றி, இயல்பாகவே 'அக்கா' என்று அன்புடன் அழைக்கிறேன். 
அப்படி நான் எப்போதும் அன்புடன் 'அக்கா' என்று அழைக்கும் எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு. 
இது அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஏப்ரல் 20, 2026

- விரல் முளைத்த இலை -


என்
உள்ளங்கை நிறம் கொண்ட
ஏதோ ஒரு
மரத்தின் இலையை
இன்று கண்டேன்

உதிர்ந்த இலையா
என் உஷ்ணத்தை
உணர்ந்த இலையா என
பிடிபடவில்லை

இந்த நெடுஞ்சாலையில்
இன்னும்
சூரியனே முழுதாய் விழிக்காத
நேரத்தில்
என்னிடம் ஏன் வந்ததென
தெரியவில்லை

அதற்கும்
விரல் முளைக்கும் ஆசை
வந்திருக்க வேண்டும்

உள்ளங்கையில் அது
என் விரல்களைக் கொஞ்சநேரம்
தனதாக்கி கொண்டது

விரலாசை இன்று
நிறைவேறிய பின்பு
அணில் குஞ்சு போல
வலிக்காது பிடித்து
மெல்ல மெல்ல நடந்து
அருகிலிருந்த
மரத்தின் அடியில்
இறக்கிவைத்தேன்

முத்த ஈரத்தை விரலிடுக்களில்
விட்டுவிட்டு
சட்டென துள்ளி குதித்து
மரத்தில் ஏறி
காய்ந்திருந்த கிளையில்
ஒட்டி
துளிர்க்கத் தொடங்கியது

தன் வாலை
மெல்ல அசைத்து
என்னையும் வழியனுப்பியது...

#தயாஜி
(நன்றி - புகைப்படம் குமரன்)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்