பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 03, 2020

வினோத ஜாலக்கண்ணாடி


   பழைய புத்தகக்கடையில் வாங்கியது. சாக்லெட் நிற கெட்டி அட்டை. மஞ்சள் படிந்த பக்கங்கள். 'வினோத ஜாலக்கண்ணாடி' என்னும் தலைப்பே அவனை வசீகரித்தது. வேறேதும் காரணம் சரியாக தெரிந்திருக்கவில்லை. ஏதோ ஈர்ப்பு இருந்திருக்க வேண்டும்.

   கட்டிலில் படுத்திருக்கிறான். பக்கத்தில் அந்த புத்தகம். அதனையே பார்த்துக் கொண்டிருக்கிறான். கடைக்காரருக்கே இந்த புத்தகம் பற்றி தெரியவில்லை. எப்போதோ யாரோ வந்து பழைய நாளிதழ்களுடன் எடைக்கு போட்டிருக்கிறார்கள். சமயங்களில் அங்கு சில அரிய வகை புத்தகங்கள் புகைப்படங்கள் கிடைக்கும் என்பதால் அவ்வழியே செல்லும் சமயத்தில் அக்கடைக்கு சென்று பார்வையிடுவது அவனுக்கு வழக்கம்.

   புத்தககத்தை எடுத்தான். முதல் பக்கத்தைத் திறந்தான். காலி. இரண்டாம் பக்கத்தைத் திறக்கிறான். காலி. இடையிடையே சில பக்கங்களைத் திறக்கிறான். காலி. காலி. காலி. மூடிவிட்டான். 

   அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடையில் புத்தகத்தை வாங்கும் போது , பக்கங்களைப் புரட்டினான். அதில் ஓவியங்களும் சில சமஸ்கிருத எழுத்துகளும் ஆங்காங்கு கையெழுத்தில் என குறிப்புகளும் தமிழில் எழுதப்பட்டிருந்தன.

  மீண்டும் புத்தகத்தைத் திறக்கிறான். ஆச்சர்யம். கடையில் பார்த்தது போல எழுத்துகள் இருந்தன. 

   அவன் திருந்திருந்த பக்கத்தில் உள்ள கையெழுத்து குறிப்புகளைப் படிக்க ஆரம்பித்தான். முன்னுக்கு பின் வாக்கியங்கள் முரணாக குழப்பம் கொடுப்பவையாக இருந்தன.

   கையில் சொடுக்கு போட்டுக்கொண்டே அந்த புரியாத வார்த்தைகளை வாசிக்கிறான். ஒரு சொடுக்கில் நிறுத்தினான். அவனால் நம்ப முடியவில்லை. அவன் கைக்கு நேராக இருந்த மீன் தொட்டியில் உள்ள மீன் அப்படியே சிலையாக நிற்கிறது. தண்ணீரில் அசைவில்லை. தொட்டியில் உள்ள நீர்க்குமிழிகளும் அப்படியே ஸ்தம்பித்துவிட்டன.

   தன் கையைப் பார்க்கிறான். மீண்டும் சொடுக்கு போட்டான். எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. மேலே சுற்றிக்கொண்டிருக்கும் காற்றாடியைப் பார்க்கிறான். சொடுக்கு போட நிற்கிறது. அடுத்த சொடுக்கில் சுற்றுகிறது.

   முழுதும் படிக்காமல் புத்தகத்தை மூடி வைத்தான். 

   கட்டிலில் இருந்து துள்ளி குதிக்கிறான். எதிரே இருந்த ஆள் உயர கண்ணாடியில் நிற்கிறான். அவன் கைகள் பரபரத்தன. எவ்வளவு பெரிய விடயம் இது. இனி தான் செய்யப்போகும் காரியங்கள் அவன் கண் முன்னே நின்றும் நடந்தும் காட்டின.

  சொடுக்கு போட்ட கைக்கு முத்தம் கொடுக்கிறான். உணர்ச்சிவசப்பட்டு கண்ணாடி முன் சொடுக்கு போட்டான்.

  அவ்வுருவம் அப்படியே நின்றுவிட்டது. இப்போது அவனால் அவன் கையை மட்டுமல்ல அவன் கண் விழியைக் கூட அசைக்க முடியவில்லை. மூடியப் போவதுமில்லை.

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்