பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 30, 2020

சர்க்கஸ் துப்பாக்கி


    உண்மையில் சாகசம்தான். நூறு மீட்டர் தூரத்தில் இருந்தாலும் குறி தப்பவில்லை. நின்றிருக்கும் வட்ட மேஜையில் அவள் சுழன்றுக் கொண்டிருந்தாள். மிகச் சரியாக  கைக்கு அருகில், காலுக்கு அருகில், கழுத்திற்கு அருகில் என, சுடும் துப்பாகி குண்டு சரியாகப் பட்டது.

   அந்த துப்பாக்கி சுடும் சாகச விளையாட்டைப் பார்த்து பலர் மெய் மறந்தார்கள். ஆரவாரம் செய்தார்கள். ஆனால் ஒருவன் மட்டும் அந்த துப்பாக்கியையே ஒரு சாகசமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இருந்த இடத்திலிருந்து துப்பாக்கி ஓரளவிற்கு தெரிந்தது. ஏனெனில் அதில்தான் அவனது எதிர்காலம் இருக்கிறது.

    அவன் புதிய கொள்ளைக்காரன். அப்படித்தான் அவன் தன்னைச் சொல்லிக் கொள்கிறான்.  திருடுகள் முடிந்து அடுத்த படிநிலைக்கான சமயம். ஆனால்  அதற்கு ஒரு துப்பாக்கி வேண்டும். அது சுடவும் வேண்டும். இப்போதைய பொருளாதார சூழலில் துப்பாக்கிக்கான குண்டைக்கூட வாங்க முடியாது. எங்கிருந்து துப்பாக்கி!! திருடர்கள் அதிகமாகிவிட்டதால் தொழில் போட்டியை சமாளிக்க வேண்டிய கட்டாயம்.

    அப்போதுதான் அந்த சர்க்கசின் சாகச விளையாட்டு பற்றி தெரிந்தது. பாதி கிழிந்திருந்த சுவர் விளம்பரத்தில் 'நூறு மீட்டர் தூரத்திலும் குறி தவறாமல் சுடும் சாகசம்!!!' என இருந்தது. இந்த விளம்பரம் தான் அவனுக்கு அந்த துப்பாக்கி மீது ஆர்வத்தைத் தூண்டியது. தனது கொள்ளையடிக்கும் திட்டத்திற்கு இந்த துப்பாக்கி போதுமானது. அதோடு, சிக்கல் இன்றி திருடிவிடலாம். அன்றே தயாரானான்.

    திட்டம் வெற்றி. திருடி விட்டான். தனது அடுத்த கொள்ளையடிக்கும் திட்டத்திற்கு ஏற்ற 'உ-சிவமயம்' போடப்பட்டது.

   சர்க்கஸ் கூடாரத்தில் இருந்து வெளியேறும் சமயம். கோமாளி ஒருவன் பார்த்து சத்தம் போட, பாதி கலைத்த ஒப்பனை முகங்களுடன் அவன் முன் கலைஞர்கள் வந்துவிட்டார்கள். தப்பிக்க வேண்டும். நல்லவேளையாக இவன் முகத்திலும் ஒப்பனை இருந்ததால் சரியாக அடையாளம் தெரியவில்லை. அவனுக்கு இப்போது சுடுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை. 

   யாரும் அவனுக்கு பயப்படவில்லை. ஒரிஜினல் முகத்தில் வந்திருந்தாலாவது கொஞ்சம் பயம் காட்டியிருக்கலாம். கோவம் வந்துவிட்டது . கொஞ்சமும் யோசிக்காமல் துப்பாக்கியை எடுத்து எதிரில் நிற்பவரை சுட்டான். 

    வெடி சத்தம் பெரிதாகக் கேட்டது. எதிரில் நின்றவருக்கு சிறிதாகக்கூட காயம் ஏற்படவில்லை. ஆனால் சுட்டவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுகிறான்.

    அங்கு, 'பின்னால் சுடும் துப்பாக்கி' என்று அந்த விளம்பரத்தில் இருப்பது இப்போதுதான் அவன் கண்களுக்கு முழுவதுமாகத் தெரிகிறது...


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்