பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 20, 2020

வெட்டுக்கிளிகள்


- வெட்டுக்கிளிகள் - 

       அம்மாவின் அறைக்குச் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன. அந்த மரணத்தை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அப்பாவிடம் முகம் கொடுத்துக்கூட பேசுவதில்லை. அவ்வபோது ஆறுதல் சொல்ல வரும் பெண்களிடம் அவன் பேசுவதில்லை. பணக்காரர்கள் எல்லாம் நிம்மதியானவர்கள் என்ற சொன்னவர்களை நினைத்துப்பார்க்கிறான்.
     
         பெரிய வீடு. தனக்காகவே ஒரு அறை. புத்தக அலமாரி. கணினி. வீடியோ கேம். கேட்பது எல்லாமே கிடைத்துவிடுவதிலும் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.  அப்போதெல்லாம் தினமும் அம்மாவின் அறைக்குச் செல்லாமல் அவனால் இருக்கவே முடியாது. ஒரே பிள்ளை. செல்லப்பிள்ளை. அம்மாவின் திடீர் மரணத்தை அவனால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. 
    
       அப்பா என்னதான் சமாதானம் செய்தாலும் அவன் உடன்படவில்லை. இப்படியே சில மாதங்கள் கழிந்தன.  இவனை சமாதானம் செய்யவே அப்பாவின் தோழியும் அடிக்கடி வீட்டிற்கு வர ஆரம்பித்தார். அவன் பிடி கொடுக்கவில்லை. அவனுக்கென  இருந்த ஒருவரும் இப்போது இல்லை. அவன் தன்னை அனாதையாகவும் பாதுகாப்பற்றவனாகும் உணர்ந்துக் கொண்டிருந்தான். 

        பல ஆண்டுகளாக அவன் வீட்டில் இருக்கும் வேலையாளிடம் மட்டுமே அவன் அவ்வபோது பேசினான். இரண்டாவது தலைமுறை முதலாளியம்மாவின் மரணம் அவரையும் பாதித்திருக்க வேண்டும். நாளுக்கு நாள் அவனது பயமும் பதட்டமும் அதிகமாகிக்கொண்டேப் போனது. அம்மாவின் அறையை மட்டுமல்ல அவ்வழியே நடந்துப் போவதையும்  தவிர்த்தான். 

          வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பல நாடுகளில் வரத்தொடங்கிய சமயம்.. அவற்றை அழிப்பதற்கு பலரும் பல ஆலோசனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இன்று வீட்டிலும் அது பற்றிய பேச்சு எழுந்தது. அவன் நாற்காலியில் அமர்ந்து சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தான் வேலையாள். பக்கத்து மேஜையில் அப்பாவும் அவரது தோழியும் ‘ரெட் வைன்’ குடித்துக்கொண்டு வெட்டுக்கிளிகள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களைப் பேசிக்கொண்டார்கள்.

       அப்பா, சட்டென வேலையாளிடம், "நீதான் விவசாயம் தெரிஞ்சவானாச்சே... எங்க அந்த  வெட்டுகிளிகளை எப்படி வெறட்டலாம்னு சொல்லு பாக்காலாம்"  என்றார்.  சிரித்தார். அவரைக் காட்டிலும் அவரது தோழி அதிகமே சிரிக்கிறாள். 

 வேலையாள்,  "கொஞ்ச வெட்டுக்கிளிகளை பிடிச்சி வந்து....." முடிப்பதற்குள்,

     "பிடிச்சி வந்து பொறிச்சி சாப்டனுமா...?"  என அப்பா முந்திக்கொண்டார். தோழியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. குடித்துக் கொண்டிருந்த ரெட் வைன், அவளது வாயிலிருந்து வழியக்கூடச் செய்தது. விட்ட இடத்தில் இருந்து வேலையாள் தொடர்ந்தான், 

      "பிடிச்சிட்டு வந்த வெட்டுக்கிளிங்களை பாத்திரத்தில் போடனும். அப்பறம் அது முழுக்க தண்ணி ஊத்தனும். அதுங்கல தண்ணீல போட்டு சாகடிச்சி, அந்த தண்ணிலயே ரெண்டு நாள் அதுங்கல ஊற வெச்சிடனும்..."

அப்பாவும் அவரின் தோழியும் கவனமானார்கள். 

     "ரெண்டு நாள் கழிச்சி.. அந்த தண்ணிய கொண்டு,  எங்கல்லாம் வெட்டுக்கிளிங்க வரக்கூடாதுன்னு நினைக்கறமோ அங்கல்லாம் அந்த தண்ணிய நல்லா ஊத்திவிடனும்.... "

"ஊத்திட்டா...?"

"அங்க வெட்டுக்கிளிங்க வராது...."

"என்ன  முட்டாள்தனமா இருக்கு.. எங்கயாச்சும் லாஜிக் இருக்கா....?"

      வேலையாளால் மேற்கொண்டு ஏதும் பேச முடியவில்லை. இதுவரை அமைதியாக இருந்த மகன் எழுந்தான், வேலையாள் தோல் மீது எக்கி கையை வைத்தான்.

      "எந்த உயிரும்,  கொல்லப்படும் போது, அதோட உடம்பிலிருந்து ஒரு கெமிக்கலை வெளியாக்கும். அது அந்த இடம் முழுக்க பரவும். செத்த வெட்டுக்கிளிங்களோட அந்த கெமிக்கல் அந்த தண்ணி முழுக்க கலந்திருக்கும். அந்த தண்ணிய எங்க ஊத்தறமோ அங்க அந்த இனம் வராது... ஏன்னா தன்னோட இனம் கொல்லப்பட்ட இடத்திற்குள் வந்தால் அதுங்களும் கொல்லப்படும்னு அதுங்களுக்குத் தெரியும்..."

      அப்பாவும் அவரது தோழியும் பேயறைந்தது போல ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். வேலையாள் தன்னையறியாமல் வழிந்தக் கண்ணீரைத் துடைக்கிறான். 
மகன் எழுந்து நடக்கலானான். அந்த வழி அவனது அம்மாவின் அறையை நோக்கியிருக்கிறது.

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்