பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 24, 2020

கடவுள் VS சாத்தான்


    தான் விளையாடிக் கொண்டிருப்பது கடவுளிடமென்ற பயம் கொஞ்சம் இல்லை. அந்த சாத்தானின் மனம் முழுக்க ஆட்டத்திலேயே இருந்தது. அதிஸ்டவசமாக    அது வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தது.

     எல்லாம் அறிந்திருந்தார் கடவுள். ஆடுபவர்களை முதலில் ஆடவிட்டு பிறகு ஆட்டத்தை முடித்து வைப்பது கடவுளுக்கு புதிதா என்ன.

     திடீரென சாத்தானுக்கு ஓர் ஐயம். தான் நினைத்தது போலவே கடவுள் காய்களை தனக்கு சாதகமாக நகர்த்திக் கொண்டிருக்கிறார். உண்மையில் தான் விளையாடிக் கொண்டிருப்பது கடவுளிடம்தானா. இப்படியா விளையாடத் தெரியாமல் கடவுள் விளையாடுவார். ஒரு வேளை இது கடவுளில் சித்து விளையாட்டாக இருக்குமோ. இனிதான் தான் கவனமாக காய்களை நகர்த்த வேண்டும் என்று முடுவெடுத்தது.

   மெல்லிய புன்னகையை உதிர்த்தபடியே கடவுள் மீண்டும் தன் காய்களை வெட்டக் கொடுத்தார். சாத்தானுக்கு மேலும் சந்தேகம் தோன்றியது. இப்படியே போனால் தான் ஜெயித்து விடுவேன். ஆனால் கடவுள் தோற்றுவிடுவாரே. ஏன் அவர் இப்படியெல்லாம் செய்கிறார். ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. நாம் ஜெயித்துவிடக்கூடாது. சாத்தான் வேண்டுமென்றே தன் காய்களை நகர்த்தி கடவுளிடம் வெட்டக்கொடுத்தது.

    இருந்தும் கடவுள் எப்போதும் போல தோல்வி அடைந்துக் கொண்டே இருக்கிறார்.

    கடைசியில் ஆளுக்கு இரண்டு காய்கள் மட்டுமே எஞ்சின. இது கடவுளின் ஆட்டம். கொஞ்சமும் யோசிக்கவில்லை. பழையபடியே தனது காயை தவறாக நகர்த்திவிட்டார். 

    சாத்தானின் ஆட்டம். கடவுள் நகர்த்திய காயை சாத்தான் வெட்ட வேண்டும். ஆனால் அதன் கை நடுங்கத் தொடங்கியது. இந்த வெற்றிக்குப் பின்னால் கடவுள் ஏதோ சூழ்ச்சியை வைத்திருப்பதாக அதன் மனம் சொல்லியது. 

    சாத்தான் கடவுளிடமே கேட்டுவிட்டது.
கடவுள் தன் சூழ்ச்சியை ஒப்புக் கொண்டார். சாத்தானால் மேற்கொண்டு கடைசி காயை நகர்த்த முடியவில்லை. விளையாட்டில் இருந்து விலகிக் கொண்டது.

   கடவுள் சொன்னார், "நீ நினைப்பது போல எல்லாமும் நடக்க ஆரம்பித்து விட்டால் நீ உன்னையே கூட சந்தேகப்பட செய்வாய்... இதற்குத்தான் மனிதர்களிடம் அதிகம் பழகாதே என்கிறேன்..."

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்