பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 03, 2020

ஆயிரம் பொன்னைக் கொன்றீர்கள்...


நீ நம்பியிருக்கக் கூடாது
இந்த பாழாய்ப்போன
மனிதனை
நீ நம்பியிருக்கவேக் கூடாது

அவன் உன் பசிக்குக் கொடுக்கவில்லை
தன் தலைமுறைகளுக்கான பாவத்தைப் பெற்றுக்கொண்டான்

அன்னாசியில் வைத்த வெடியில்
வாய்க்கிழிந்துப் போனவளே
அடிவயிற்றுக் குழந்தைக்கு
உஷ்ணம் ஆகாது என்றோ
ஆற்றுக்குள் நுழைந்துக்கொண்டாய்

நீயும் உன் குட்டியும்
ஆகக்கடைசியாக 
என்ன பேசியிருப்பீர்கள்

"அம்மா நான் மனிதர்களைப் பார்க்க மாட்டேனா?"

"நீ அவர்களைப் பார்க்காததற்கு ஒருபோதும் வருந்த மாட்டாய் குழந்தாய்.."

அம்மா சொல்வதை நம்பு குட்டி
இங்கு மனிதன்
ரொம்பவும் மோசமானவன்
இங்கு மனிதன்
ரொம்பவும் ஆபத்தானவன்
இங்கு மனிதன்
ரொம்பவும் கொடுரமானவன்
இங்கு மனிதன்
ரொம்பவும் கேவலமானவன்

இப்போது கூட
ஆற்று நீர் அசுத்தமானதே என
குதிப்பானேத் தவிர
குருதியுடன் உனைக் கொன்ற
குற்றத்தை ஒருநாளும்
ஒப்புக்கொள்ள மாட்டான்

இனி நீ 
என்றென்றுமே
அம்மாவை இங்கு அழைத்து வராதே
யார்க்கேனும் கருவாகவும் தோன்றிவிடாதே

அன்னாசியில் வெடிவைத்த
கரங்களின்
ஆசனவாயிலில் வெடிவைத்து
தண்டிக்க 
இங்கேதும் சட்டங்கள் இல்லை

ஆனால்
எல்லா தண்டனைகளையும்
சட்டம் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கவுமில்லை

அழாதே
அமைதி கொள்
அம்மாவிற்கு ஆறுதல் சொல்

உன்னை 
பூமிக்கு அழைக்க முடியாத
அவளை
நீ சொர்க்கத்திற்கு கூட்டிசெல்
குழந்தாய்
இனி நீதான் அவளுக்குத் தாய்....


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்