பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 22, 2020

அந்த கண்கள் விற்பனைக்கல்ல...

   பல பெண்களை கடந்துவிட்டான். அவர்களின் பல கண்களை கடந்துவிட்டான். ஆனாலும் எந்த கண்களும் அவனுக்கு கொடுக்காததை இந்த கண்கள் கொடுத்தன.

   கண்கள் என்ற பெயரில் காந்தத்தை வைத்திருந்தாள். முதல் பார்வையிலேயே முழுவதும் ஈர்க்கப்பட்டான். இன்றுவரை அப்படியே. கொஞ்சமும் மாற்றமில்லை.

  கண்களுக்கென்றெ உள்ளது பிரித்தியேக மொழி. சத்தமில்லாத மொழி. காதுகளுக்கு கேட்காத மொழி. கண்களில் இறங்கி இதயத்துடன் பேசும் விசித்திர மொழி.

   அவனுக்கு தூக்கம் வரவில்லை. அந்த கண்கள் மீண்டும் மீண்டும் அவனை ஈர்த்தன. சில நாட்களிலேயே அவை இம்சையாக மாறின. தன் நிலை மறந்தான். தன் செயல் மறந்தான். தன் ஆழ்மனத்துடன் சண்டையிடவும் செய்தான்.

   சில நாட்களாக வேலைக்கும் செல்லவில்லை.  எதை எடுத்தாலும் நடுங்கும் கைகளைக் கொண்டு என்னதான் செய்துவிட முடியும்.

   அந்த கண்களைத் தவிர அவனது கண்கள் வேறெதையும் அவனுக்குக் காட்டுவதாயில்லை. வெண்மையும் மெல்லிய சாக்லேட் நிறமும் மையத்தில் வகைப்படுத்த முடியாத நிறமும் கொண்டிருந்த கண்களைக் கொண்டவள் தேவதையாகக் கூட இருக்கலாம்.

   தினமும் காலை அந்த கண்களே அவனுக்கு ஆகாரம். அதுவே அவனது வாழ்வின் ஆதாரம்.

    இப்போது கூட அந்த கண்களைத்தான் பார்க்கிறான். தான் எத்தனைப் பெண்களை கொன்றிருந்தாலும், இந்த கண்களை மட்டும் அவனால் ஏதும் செய்ய முடியவில்லை.

   அந்த விசித்திர கண்கள் இரண்டும் கண்ணாடி பாட்டிலில் பத்திரமாக மிதந்துக்கொண்டிருக்கின்றன.

#தயாஜி


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்