பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 10, 2020

ஊஞ்சலாட்டம்



   முதலில் அவள் நம்பவில்லை. அவன் அதை எதிர்ப்பார்க்கவும் இல்லை.  பள்ளியில் இந்த கதையைச் சொன்னபோது எல்லோரும்தான் சிரித்தார்கள். 

   கடைசியில் அவள் அதனை நம்பவும் செய்தாள். அது அவனுக்கு ஆனந்தத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. தன்னிடம் யாரும் விளையாடவில்லை என்கிற காரணத்தால் அவன் உருவாக்கிய கதை. இருந்தும் அவளை ஏமாற்ற அவன் விரும்பவில்லை.

   வானம் வரை செல்லும் ஊஞ்சல் எங்காவது உள்ளதா என அம்மாவையும் அப்பாவையும் கேட்டான். இவர்களும் அவனது வெகுளித்தனத்தைக் கண்டு சிரித்தார்கள். அவனைக் குறித்து இன்னுன் அறியாமல் இருக்கிறானே என்கிற வருத்தமும் வந்தது.

      அவனால் அவன் சொன்ன கதை போல, எந்த ஊஞ்சலும் வானம் வரை செல்லாது மேகத்தை உரசாது என தெரிந்துக் கொண்டான். சிரித்தவர்கள் மத்தியில் தன்னை நம்பியவளை ஏமாற்ற அவன் விரும்பவில்லை.

   அவன் சொன்னதில் இருந்த சுவாரஷ்யம் அவளுக்குப் பிடித்திருந்தது. எப்படியாவது அவளை ஊஞ்சலில் அமர வைத்து பலம் கொண்டு இழுத்து விட நினைத்தான். அப்படியாவது வானம் வரை அல்ல, பாதி வரையாவது செல்லுமே என நம்பிக்கொண்டான்.

   பள்ளி முடிந்தது. இருவரும் ஒன்றாக நடந்தார்கள். ஊஞ்சலில் ஏறி வானம் பார்க்க அவள் ஆவளாய் இருப்பது அவனுக்கு புரிந்தது. சிரிக்கிறாள். துள்ளி குதிக்கிறாள். கொஞ்சம் விட்டால் இப்போதே மேகம் தொட்டுவிடுவாளோ என்கிற பயம் அவனுக்கு வந்துவிட்டது.

   நல்ல வேளையாக வழியில் இரண்டு ஊஞ்சல்களைக் கண்டார்கள். இத்தனை நாள் எப்படி இந்த ஊஞ்சலை தவறவிட்டாள் என கேட்டுக்கொண்டாள். அது ரொம்ப நாளாவே இங்கதான் இருக்கு நமக்குத்தான் தெரியல என சமாளித்தான். அப்போதுதான் ஏதோ நடக்கப்போவதை அவள் உணர்ந்தாள். 

   இன்று வேண்டாம். இன்னொரு நாள் ஊஞ்சலில் வானம் தொடலாம் என்றாள். அவனுக்கு இந்த வாய்ப்பை தவறவிட மனதில்லை. அவளை பேசி சமாளிக்க வைத்தான்.

    முதலில், அவள் ஊஞ்சலில் அமர்ந்தாள். வேகமாக அவளை இழுத்துவிட்டான். சீக்கிரமே திரும்ப வந்துவிட்டாள். அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.

   ஏதேதோ பேசிக்கொண்டே தன் முழு பலம் கொண்டு அவளை இழுத்துவிட்டான். எந்த மாற்றமும் இல்லாத ஏமாற்றமே அவள் முகத்தில் தெரிந்தது. 

   மனதில் ஏதோ தோன்றியது போல அவனது உடல் ஒரு நொடி சிலிர்த்தது. கொஞ்ச நேரம் இருவருமே ஊஞ்சலில் ஆடலாம் என்றவன் பக்கத்து ஊஞ்சலில் அமர்ந்தான்.

   இருவரும் அமர்ந்தவாக்கிலேயே ஊஞ்சலுடன் பின்னோக்கி நகர்ந்தார்கள்.
கால் கட்டை விரல் மட்டுமே இப்போது பூமியில் பட்டது. இருவரும் வானம் தொட தயாரானார்கள். 

"ஓ" 

   என்ற உற்சாக குரலில் கால்களை முன்னே தூக்கி உடலை பின் சாய்த்தார்கள். எங்கிருந்து வந்த வேகமோ தெரியவில்லை. ஊஞ்சல் காற்றாக பறந்தது.

   மேலே சென்ற ஊஞ்சல்கள் கீழே வந்ததன. அவள் மட்டும் அமர்ந்திருந்தாள். இன்னொரு ஊஞ்சல் காலியாக இருந்தது. அதன் பிறகு அவள் ஆடவில்லை. ஊஞ்சலில் இருந்து இறங்கிக்கொண்டாள். இரண்டு ஊஞ்சல்களும் மெல்ல மறையத்தொடங்கின. 

   வானத்தைப் பார்த்து கை காட்டியப் படியே தன் பள்ளிப்பையை எடுத்துக் கொண்டு நடக்கின்றாள்.


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்