பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 13, 2020

மீசை...


   வலது பக்கத்தில் ஒரு கோடு. இடது பக்கத்தில் ஒரு கோடு. அழகாக அமைந்துவிட்டது. அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் இது போதுமா என தெரியவில்லை. அப்பாவின் முகத்தை நன்றாக நினைவுக் கூர்ந்தாள். கொஞ்சம் மொத்தமாக இருக்க வேண்டும். ஆக இந்த கோடுகள் போதவில்லை என்பதை உணர்ந்தாள்.

  மகள் என்னதான் செய்துக் கொண்டிருக்கிறாள் என்ற ஆர்வம், தன் முகத்தை அசைக்காமல் வைத்திருக்கச் செய்தது. மண்டியிட்டு மகளின் உயரத்திற்கு வந்து சிலை போல இருந்தார் அம்மா.

   அவள் நினைத்தது போல வந்துவிட்டது. தான் வரைந்த ஓவியத்தை அப்பாவும் பார்க்க வேண்டுமே. அம்மாவின் கையைப் பிடித்து அப்பாவிடம் கூட்டிச்சென்றாள். 

   வழக்கம் போல அப்பா தன் கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். தன் பக்கம் மகளும் மனைவியும் நிற்பதை உணர்ந்தவர். மெல்ல நிமிர்ந்துப் பார்த்தார். அவருக்கு சிரிப்பும் வந்துவிட்டது.

   "என்ன பாப்பா அம்மாவுக்கு போய் மீசை வரைஞ்சிருக்கே... ஏண்டி அதான் சின்ன பிள்ள உனக்கு இதெல்லாம் சொல்லத் தெரியாதா..?"

   "அப்பா..... அம்மாக்கும் மீசை வந்துரிச்சி.... இனிமேல அம்மாவை நீங்க திட்டக்கூடாது அடிக்கக்கூடாது சரியா.."

  அப்பாவிற்கு சுருக்கென்றது. அம்மாவின் கை மகளின் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டது. அவரின் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன.

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்