பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 16, 2020

உரையாடல்


   வீட்டிற்கு வந்தாள். கைபேசியை எடுத்து வைத்தாள். கையில் கொண்டு வந்திருந்த எதையோ மேஜையில் வைத்தாள். நாற்காலியில் அமர்ந்திருப்பவனுக்கு எதும் எந்த சலனத்தையும் கொடுக்கவில்லை. கைபேசியில் வேகவேகமாக எதையோ எழுதிக் கொண்டும் சத்தமின்றி சிரித்துக் கொண்டுமிருந்தான்.

 அவளும் அவனை சட்டை செய்யவில்லை. குளித்தாள். சாப்பிட்டாள். காலையில் சமைப்பதற்கான எல்லாவற்றையும் தயார் செய்தாள். துணிகளை துவைக்கப்போட்டாள். நேற்று காயப்போட்ட துணிகளை எடுத்தாள். மடித்தாள். அடுக்கினாள். இத்தனை நடந்தும் எந்த சத்தமும் வரவில்லை.

  அவ்வீடு முழுக்கவும் மௌனமே சூழ்ந்திருந்தது. அவளிடம் மட்டுமல்ல அவனிடமும். அப்போதுதான் அவனது கைபேசி அதிர்ந்தது.  எடுத்தான். பால்கணிக்கு சென்றான். மெல்லிய குரலில் பேசவும் செய்தான். பேசுவதற்கே காத்திருந்தவன் போல அவனது கண்களில் ஒளி தெரிந்தது. 

  அது கூட அவளுக்கு வாய்ப்பதில்லை. வீட்டிற்கு வந்ததும் அவள் செய்யும் முதல் வேலை கைபேசியை முடக்குவதுதான்.

   அமைதியின் இரைச்சலுக்கு மத்தியில் இருவரும் பேசி வந்த வார்த்தைகள் மெல்ல மெல்ல ஒலி மங்கி இப்போது இல்லாமலேயே போய்விட்டது. எண்களின் வரிசை போல ஒரு மாறாத வரிசையில் சிக்குண்டவர்கள் போல வீட்டில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.

   நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்தாள். முன்பு மேஜையில் வைத்த எதையோ எடுத்துப் பார்த்தார்.

 'கால் செண்டரில்' அதிக வாடிக்கையாளர்களிடம் பேசியதற்கும், இலக்கை அடைந்ததற்காகவும் உள்ள பரிசு,  மூன்றாவது முறையாக அவளுக்குக் கிடைத்திருக்கிறது.

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்