பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 26, 2020

இருட்டு அறையில்..

   சுட்டித்தனத்திற்கு ஒரு அளவு வேண்டாமா. தினமும் இதே தொல்லைதான். இன்றும் சித்தி கோவத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார். இறங்கி வரத் தெரியவில்லை. அவனோ கைக்குக் கிடைக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான்.

   எப்படியாவது அவனை பிடித்து, அடித்து, உதைத்து , துவைத்து, பிழிந்து, காயப் போட்டுவிட துடித்தார். கைக்கு பக்கத்தில் வந்தவன் வேண்டுமென்றே சித்தியின் கையில் படாமல் ஓடிக் கொண்டிருக்கிறான்.

   அம்மா இல்லாத வருத்தம் வரக் கூடாதென்பதால் அப்பா கூட்டி வந்த இன்னொரு அம்மா. அம்மாவா..? இல்லையில்லை அப்படிச் சொன்னால் அவனுக்குப் பிடிக்காது. அவனுக்கு இருப்பது ஒரே அம்மாதான். வேறு யாரையும் அவன் அம்மாவென்று அழைக்கமாட்டான்.

   அம்மா இல்லாததால் சித்தி வந்ததாக சொல்லிக்கொண்டாலும் அம்மா இல்லாமல் போனதே சித்தியால்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை.

   சீக்கிரமே சித்தியின் கொடுமைகள் அரங்கேறின. முதலில் கண்டித்தார். பிறகு அடித்தார். இப்போது அதுவெல்லாம் இல்லை. வீட்டில் இருக்கும் பழைய ஸ்டோர் அறையில் தள்ளி பூட்டிவிடுவார். இருட்டு அறையில் இருந்தாவது புத்தி வரும் என்பதுதான். பல மணி நேரம் அவன் உள்ளேயே கிடப்பான்.

     ஆனாலும் யாரிடமும் சொல்லி அழவோ, சித்தியின் கொடுமைகளைக் காட்டிக் கொடுக்கவோ மாட்டான். அவனது சேட்டைகளைத் தாங்காது தினமும் அவனை இருட்டு அறையில் அடைக்கத் தொடங்கிவிட்டார் சித்தி.

     கைக்கு பிடிபட்டுவிட்டான். இறுக்கமாக பிடித்துக் கொண்டார். முரண்டு பிடித்தான். காதை திருகினார். இழுத்துக் கொண்டு அந்த இருட்டு அறையில் தள்ளிவிட்டார். கதவை படாரித்தார்.

    அறை முழுக்க இருட்டு. அவன் அழுவதை நிறுத்தினான். கண்களைத் துடைத்துக் கொண்டான். சிரிக்கலானான்.

    "அம்மா நான் வந்துட்டேன்...." என்றதும், சுவர் மேலிருந்து ஏதோ ஒன்று மகனை பார்ப்பதற்கு நிழலிலிருந்து எழுந்து வந்துக் கொண்டிக்கிறது.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்