பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 04, 2022

- வாழ்வின் வலி நிவாரணி -

அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன். அது மிகவும் கேவலமானது. அருவருப்பானது. என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையும் அது அவமானப்படுத்தும்.

ஆனால், என் தலையின் பாரம் என்னைக் கொல்கிறது. மருந்துகளும் மருத்துவர்களும் இரண்டு நாட்களுக்குத்தான் பயன்படுகிறது/கிறார்கள். மூன்றாம் நாள் மீண்டும் தலை பாரமாகிவிடுகிறது. இன்னும் கூடுதல் வலி.

நடக்க முடியவில்லை. அன்றாடத் தேவைகளைக் கவனிக்க முடியவில்லை. சாப்பிடுவதெல்லாம் செரிமானம் ஆகாமல் வெளிவானம் பார்த்துவிடுகிறது. நினைவில் அடுக்குகள் கலைந்துவிட்டன. முன்னுக்கு பின்னும், பின்னுக்கு முன்னும் குழம்பி போயிருக்கிறேன். 

கோவமே முதன்மையாகிறது. எதிரில் யார் வந்தாலும் ஏதேதோ பேசிவிடுகிறேன். தலை வலிக்கிறது. உள்ளுக்குள் யார்யாரோ இருந்து, மூளையைக் கசக்குகிறார்கள். என்னால் தாங்க முடியவில்லை.

ஏதோ ஒன்று தலையை முழுவதுமாய் அழுத்துகிறது. கைகளும் கால்களும் நடுங்குகின்றன. என்னால் இனியும் அடக்க முடியாது. தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். அவமானத்தையும் அடைந்து கொள்கிறேன். கேவலத்தையும் எடுத்துக் கொள்கிறேன்.

இதோ, கண்களில் இருந்து அது வழியத்தொடங்கிவிட்டது. முதன் முறையாக நடக்கிறது. நான் அழுகிறேன். என் தலையின் பாரம் குறைகிறது. நினைவுகள் நேராகின்றன. ஆம் நான் குணமாகிக் கொண்டிருக்கிறேன்.

அழுகை என்பது ஆண்களுக்கும் உரியதுதான். அழுவது அசிங்கம் என்று சொல்லி எங்களை அழித்துவிடாதீர்கள்.

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 
#குறுங்கதை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்