பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 12, 2022

- மனம் ஒரு.... -


பத்துமலை கோவில். வண்ணமடித்த படிகளில் வெள்ளைக்காரர்கள் வேட்டி சட்டை , புடவையில் நடந்து கொண்டிருந்தார்கள். சிலர் நேர்த்திக்கடனுக்காக படியேறிக்கொண்டிருந்தார்கள். சிலர் தங்களின் பூர்த்திக்கடனுக்காக படியிறங்கிகொண்டிருந்தார்கள். இரண்டுக்கும் இடையில் சிலர் டிக்டாக்கில் ஆடி கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து படியோறங்களில் இருந்த குரங்குகளும் ஆட முயன்றன. அவை நன்றாகவும் ஆடின.

சுந்தரம் தனது பிரார்த்தனைகளை முடித்துவிட்டார். கையில் சில வாழைப்பழங்களுடன் படி இறங்குகிறார். வழக்கம் போல குரங்குகள் அவரையும் சூழ்ந்தன. அவரும் ஒவ்வொன்றுக்கும் ஒரு வாழைப்பழத்தைப் பாதிப்பாதியாகப் பிய்த்து கொடுத்துக் கொண்டே நடக்கலானார். 

படிகளின் நடுவில் நின்றார். ஒரு தட்டை தரையில் வைத்தார். அடுத்து அவர் செய்யப்போவதை குரங்குகள் ஆவலாய்ப் பார்த்தன. தன் பையில் இருந்த பெரிய பாட்டில் பசும்பாலைத் தட்டில் ஊற்றினார்.

ஆசையாய் குரங்குகள் கூடின. தட்டின் அகலத்தைவிடவும் குரங்குகள் கூட்டமாக இருந்ததால் சீக்கிரமே பாலை குடித்து முடித்தன. வள்ளல் பரம்பரைக்கான மிடுக்குடன் மீண்டும் தட்டில் பசும்பாலை ஊற்றினார். ஒரு குட்டிக்குரங்கு தவறுதலாகத் தட்டில், வாய்க்கு பதிலாக இரு கைகளையும் வைத்துவிட்டது. தட்டு அப்படியே கவிழ்ந்தும் விட்டது. பால் கீழே ஊற்றியது.

பசும்பால் இப்படி வீணானதால் கோவம் கொண்டார் சுந்தரம். அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. இந்தக் குரங்குகளே இப்படித்தான். கையில் இருந்த பெரிய பாட்டில் பசும்பாலை பக்கத்து பாறையில் வீசி உடைத்தார்.

 "ச்சீ அறிவுகெட்டதுங்க.." என்றார். யாரைச் சொல்கிறார் என அந்தக் குரங்குகளும் தேடின.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்