பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 21, 2022

- உப்பிட்டவரின் உள்ளளவு -

இரண்டாண்டுகளாக மருத்துவப்பரிசோதனைக்குச் சென்று வருகிறேன். ஆட்கள் மாறியிருக்கிறார்களே அன்றி, வியாதிக்காரர்கள் குறைந்த பாடில்லை. அவர்கள் கணவன் மனைவியாகத்தான் இருக்க வேண்டும். சர்க்கர நாற்காலியில் அவரை வைத்து என்னருகில் வந்து அமர்ந்தார்.

கணவன் ஏதோ முனகுவது கேட்டது. மனைவி சமாதானம் செய்துகொண்டிருந்தார். 'இதோ நமது எண்கள் வரப்போகின்றன. சீக்கிரம் மருத்துவரைப் பார்த்துவிடலாம்' என்பதே அதன் சாரம்.

அந்த அம்மாவின் முகத்திலும் காயம். கண்ணுக்குக் கீழ் கண்ணிப்போய் இருக்கிறது. இருவரும் ஏதோ விபத்தில் சிக்கியிருக்கக்கூடும் என, நலம் விசாரித்தேன்.

கணவருக்கு இனிப்பு நீர் வியாதியாம், இதயத்திலும் அடைப்பு வந்துவிட்டதாம். மேலும் அடுக்கிக்கொண்டே போகலானார். அவர் இன்னமும் சமாதானம் ஆகவில்லை. மனைவியை அருகில் அழைத்துத் திட்டவும் செய்தார்.

பாவம் அவர், அவரால் வலியைத் தாங்க முடியவில்லை. ரொம்பவும் கஷ்டப்படுகிறார் என்றார். வேறு எதுவும் பேசலாம் என நினைத்தேன்.

"முகத்தில் என்னம்மா காயம், விழுந்துட்டீங்களாம்மா" என்றேன்.

"இல்லப்பா.. நேத்து சாப்பாட்டில் உப்பு பத்தலைன்னு சொல்லி , அரைஞ்சிட்டாரு..."

" ஐயோ அப்பறம்..."

"அப்பறம் என்ன.. மூஞ்சியைக் கழுவிட்டு வந்து.. சாப்பாட்டில் உப்பு போட்டு, ஊட்டிவிட்டேன்."

"உங்களுக்கு வலிக்கலயாம்மா...?"

"வலி.. வலிதான் ஆனா அவருக்குப் பசிக்குதுல்ல...."

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்