பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 10, 2022

புத்தகவாசிப்பு_2022_6 'பா.வெங்கடேசன் கதையும் புனைவும்'

பா.வெங்கடேசன் கதையும் புனைவும்
தலைப்பு – பா.வெங்கடேசன் கதையும் புனைவும் (புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்)
எழுத்து – த.ராஜன், பா.வெங்கடேசன்
நேர்காணல் – த.ராஜன்
வகை – நேர்காணல்
வெளியீடு – எதிர் வெளியீடு
நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)


    புத்தகம் குறித்து பேசுவதற்கு முன்பாக சிலவற்றை தெளிவுபடுத்த வேண்டுமென நினைக்கிறேன். ஏனெனில் இந்த புத்தகத்தைப் பற்றியும் பா.வெங்கடேசன் பற்றியும் சிலருடன் பேசும் பொழுது வேள்பாரியை படித்தது குறித்து பேசினார்கள். எழுத்தாளரின் பெயரில் ஏற்பட்ட குழப்பமாக மட்டுமே இதனைப் பார்க்க முடியவில்லை. புத்தகங்களை வாசிக்காமல் யார்யாரோ சொல்வதை அரைகுறையாகக் கேட்டுப்பேசுவதால் ஏற்பட்ட சிக்கலாகவும் பார்க்கிறேன்.
 
    அதற்காகவேணும் பா.வெங்கடேசன் குறித்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
 
    பா.வெங்கடேசன், முக்கியமானத் தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை என்று பல தளங்களில் செயலாற்றுபவர். ‘ராஜன் மகள்’, ‘தாண்டவாரயன் கதை’, ‘பாகீரதியின் மதியம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
 
    ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள் இவரின் சிறுகதைத் தொகுப்பு. 1996-ஆம் ஆண்டுவாக்கில் வெளிவந்தது. பல ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இவ்வாண்டு (2022) அச்சில் வந்துள்ளது.
 
    இன்னும் சில வீடுகள், எட்டிப்பார்க்கும் கடவுள், நீளா ஆகியவை   இவரின் கவிதைத்தொகுப்புகள்.
 
    ராஜன் மகள், பகீரதியின் மதியம், வாரணாசி, தாண்டவராயன் கதை போன்றவை இவரின் புதினங்கள் ஆகும்.
 
    பா.வெங்கடேசனின் எழுத்து பற்றி சொல்லும் போது; தான் எடுத்துக்கொண்ட  புனைவுப் பரப்பைத் தன்னுடைய அசாத்தியமான கற்பனையாலும் தீவிரமான சொல்முறையாலும் பிரம்மாண்டமாக்கும் கதைசொல்லி.
இனி புத்தக பற்றிய வாசிப்பு அனுபத்திற்கு செல்வோம்.
 
    சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களில் என்னை சிரமத்தில் ஆழ்த்திய புத்தகம். எடுத்த வேகத்தில் வாசிக்க முயன்றும், பல இடங்களில் தடுமாறவே செய்தேன். தொடர்ந்து புனைவுகளை வாசித்தும் எழுதியும் பேசியும் வருவதால் அ-புனைவைச் சட்டென உள்வாங்க முடியவில்லை. ஆனால், மெல்ல மெல்ல இலக்கிய வாசிப்பு குறித்த வேறொரு பார்வையை இந்நூல் கொடுத்தது.
 
    கெட்டி அட்டையில் 150 பக்கங்களில் நேர்த்தியாக இந்நூலை எதிர் வெளியீடு , வெளியிட்டுள்ளார்கள். முழுக்கவும் பா.வெங்கடேசனின் நேர்காணல். மூன்று பகுதிகளாக நூலின் பகுதிகளைப் பிரித்திருக்கிறார்கள்.
 
    முதல் பகுதியை புனைவும் கற்பனையும் என்றும், இரண்டாவது பகுதியை புனைவாக்கச் செயல்பாடு என்றும் மூன்றாவது பகுதியை வாசிப்பும் அரசியலும் என்று பிரித்திருக்கிறார்கள்.
 
    த.ராஜன் எழுதியிருக்கும் முன்னுரையில் இப்புத்தகத்தின் அவசியமும் அதற்கான உழைப்பையும் தெரிந்து கொள்ள முடிகிறது. ‘சில வார்த்தைகள்’ என்ற தலைப்பில் நேர்காணலுக்கு முன்பாக பா.வெங்கடேசன் சிலவற்றை எழுதியுள்ளார். அவ்வுரை இப்புத்தகத்தை வாசிப்பதற்கு நம்மை தயார் செய்கிறது. ‘இங்கே உரையாடலுக்கு எடுத்துக்கொண்டிருப்பது புனைவாக்கத் தொழில்நுட்பத்தின் கருத்தாக்கரீதியான பின்புலத்தைப் புரிந்துகொள்ளும் சில வழிமுறைகளை மட்டும்தான்’ என்று அவர் கூறுவதிலிருந்து இதனை நாம் புரிந்துகொள்ளலாம்.
 
    பா.வெங்கடேசனின் எழுத்துகளை இதுவரையில் வாசிக்காததும் இந்நூலை வாசிப்பதில் எனக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு ஒரு வகையில் காரணம்தான். ஆனால் வாசிக்க வேண்டிய முக்கிய புனைவாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை என்பதே இந்த அ-புனைவு நமக்கு நினைவூட்டுகிறது.  
 
    த.ராஜனின் கேள்விகளுக்கு பா.வெங்கடேசன் கொடுக்கும் பதில்கள் சில இடங்களின் நமக்கு குழப்பத்தைத் தருகின்றன. எப்படி தெளிவு பெறலாம் என யோசித்து தொடர்ந்து வாசிக்கையில், அடுத்த கேள்வியை நம் ஐயத்தைப் பற்றியதாகத்தான் கேட்டிருக்கிறார் த.ராஜன். ஒரு வாசகனுக்கு எவ்விடத்தில் குழப்பம் ஏற்படும், எவ்விடத்தில் வாசகனுக்கு மேலதிக விளக்கம் வேண்டும் என்பதை நன்கு அறிந்து இந்த நேர்காணல் தொகுக்கப்பட்டிருக்கிறது.
 
    எது கற்பனை அது எப்படி புனைவாக மாறுகிறது என விளக்கும் பா.வெங்கடேசனின் பதில் நம்மையும் யோசிக்கத்தான் வைக்கிறது. அதனை சுருக்கமாக ‘ கதை நாம் எப்படி இருக்கிறோம் என்பதைச் சொல்கிறதென்றால் ஒரு ‘புனைவு’ நாம் எப்படியெல்லாம் இருக்க சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை உணரவைக்கிறது’ என்கிறார்.
 
    நாம் வாசிக்கும் பிரதியில், எழுத்தாளரின் பேனா மையில் யார் கதை சொல்கிறார் என்பதை கண்டறிவது அரசியல் வாசிப்பின் நோக்கம் என்கிறார். வாசிப்பும் அரசியலும் என்கிற மூன்றாவது பகுதியில் இது பற்றி விரிவாக உரையாடியுள்ளார்கள்.
 
    மேற்கொண்டு நாம் புரிந்து கொள்வதற்காக இதர படைப்பாளிகளின் படைப்புகளையும் நமக்கு அறிமுகம் செய்து தேடலை ஏற்படுத்துக்கிறார். குறிப்பாக, ஜெயகாந்தனின் சிறுகதையான  ‘அக்கினிப் பிரவேசம்’ பிற்பாடு விரிந்து அவரே எழுதிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவலாக எப்படி மாறியிருக்கிறது என சொல்லுமிடம் நமக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது.
 
    புனைவு குறித்த உங்களது அபிப்பராயங்களை மறுபரிசீலிக்கவும் ; உங்களது வாசிப்பையும் எழுத்தையும் மெருகூட்டவும் இந்தப் புத்தகம் கொஞ்சமேனும் உதவும் என்கிறார் நேர்காணல் கண்ட த.ராஜன். அவர் சொல்வது உண்மைதான் ஆனால் அது கொஞ்சமல்ல என்பது வாசித்து முடித்ததும் தோன்றுகிறது.
 
    ஒற்றை  வாசிப்பில் பெற்றதைவிட மீள் வாசிப்பில் இன்னும் பலவற்றை அறிந்து கொள்ளும் அனைத்து சாத்தியங்களைக் கொண்ட புத்தகமாக ‘பா.வெங்கடேசன் கதையும் புனைவும்’ புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்) என்பதில் சந்தேகமில்லை.
 
- தயாஜி
 
(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்