பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 09, 2022

உனக்கு 20 எனக்கு 20


ஒருத்தரிடமிருந்து 20 ரிங்கிட் கிடைத்தால் 100 பேரிடமிருந்து ஒரே நாளில் 2000.00 வெள்ளிவரை சம்பாதிக்கலாம் என்றார். 

கணக்கு சரிதான் ஆனால் எங்கிருந்து 100 பேர்களைத் தேடுவது?

"முதலில் நண்பர்கள், உறவினர்கள் என பட்டியல் போடுங்க... கைப்பேசி எதுக்கு இருக்கு அதிலிருந்து எடுங்க... முயற்சிதான் முக்கியம்.... சும்மா உட்கார்ந்துகிட்டு இருந்தா காசு சம்பாதிக்க முடியாதுங்க..."

அவரின் பேச்சு, இரண்டு நாட்களாக மண்டையைக் குடைந்து கொண்டே இருந்தது. கைப்பேசியை எடுத்தேன் ஒவ்வொருவருக்காக அழைத்தேன். என்னை நம்பாதவர்கள் எத்தனைப்பேர் என தெரிந்து கொண்டேன். 

இவர்களெல்லாம் எப்படி முன்னேறப்போகிறார்கள். பணத்தின் அருமை தெரியாதவர்கள். கண்ணுக்கு முன்னே அருமையான திட்டத்தைக் காட்டினாலும் முயற்சிக்கவே மாட்டார்கள். ஒரு நாள் ஒரே ஒரு நாள் இவர்களை அவரிடம் பேசவிட்டால் எல்லாம் சரியாகும். ஆனால் முழுமையாக என் உழைப்பு இருந்தால்தான் எனக்கு மரியாதை என்று சொல்லியுள்ளார். அவரின் ஆலோசனையைப் பின்பற்றினேன்.

கடைசியாக வீட்டில் உள்ளவர்களை முதலில் இணைத்துக்கொண்டேன். பிறகு நெருங்கிய நண்பர்களிடம் பேசிப்பேசி இணைத்தேன்.

ஒவ்வொருவரும் இணையும் போது என் வங்கியில் 20 ரிங்கிட் சேர்ந்தது. அதே போல அவர்களும் ஆட்களை இணைக்கும் போது 20 ரிங்கிட் சேரும். ஒரே நாளில் (உழைக்கும் வேகத்தைப் பொருத்து) இரண்டாயிரம் வெள்ளி சம்பாதிக்கலாம் என்றால் முதலீடு ஆயிரம் கொடுக்க யார்தான் தயங்குவார்.

ஒரே வாரத்தில் முதலீட்டை விட பல மடங்கு பணம் சேர்ந்தது. அவர் சொன்னது போலவே செய்தேன். எல்லாமே சரியாக நடந்தது. இன்று அவர் சொல்லாததும் நடந்தது. 

கடைசியில் என் வங்கி கணக்கில் 20.00 ரிங்கிட்தான் மிஞ்சும் என அவர் சொல்லவேயில்லை.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்