பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 08, 2024

பிரபஞ்சனின் 'மரி என்னும் ஆட்டுக்குட்டி'

 தினம் ஒரு கதை 8/30

பிரபஞ்சன் எழுத்துகள் எனக்கு பிடித்தமானது. அவரின் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் வாசித்த அளவிற்கு அவரது நாவல்களை இன்னும் வாசிக்கவில்லை. விரைவில் அந்தக் குறையையும் கலையவேண்டும்.

'மரி என்கிற ஆட்டுக்குட்டி 'எனக்கு மிகவும் பிடித்தமான தலைப்புகளில் ஒன்று. திரும்பத்திரும்ப சொல்லிக்கொள்வேன். இந்தத் தலைப்பை புரிந்து கொள்ள எத்தணிக்கும் போதே நமக்கு பல்வேறு புரிதல்களைக் கொடுத்துவிடுகிறது.

அற்புத மரியை ஏன் ஆட்டுக்குட்டி என்கிறார் எழுத்தாளர்? வேறெந்த குட்டியையும் சொல்லியிருக்கலாம்தானே. ஏன் சொல்லவில்லை. ஆட்டுக்குட்டியிடம் அப்படி என்னதான் இருக்கிறது. அதைவிடவும் பூனைக்குட்டிகள் அழகாய் இருக்கின்றனவே? பிறகு எதற்காக, எழுத்தாளர் மரியை ஆட்டுக்குட்டியாகப் பார்க்கிறார்?

அது சரி, இது எந்த ஆட்டுக்குட்டி. கசாப்பு கடைக்காக தீனி போட்டு வளர்க்கப்படும் ஆட்டுக்குட்டியா? இல்லை இயேசுபிரானின் கைகளில் இருக்குமே அந்த வழி தவறிய ஆட்டுக்குட்டியா?

இது இயேசுவின் கைகளில் இருக்கும் ஆட்டுக்குட்டி என்றால், அந்தக் கைகளுக்கு சொந்தமான இயேசுதான் மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் ஒவ்வொரு ஆசிரியர்களும்.

சிறுகதையின் தொடக்கத்திலேயே அற்புத மரிக்கு டி.சி கொடுக்கச் சொல்கிறார்கள்.

விசித்திரமாக ஏதேதோ செய்யும்  மாணவியான அற்புத மரியை எல்லோரும் ஒதுக்கும் போது அவள் எதனால் இப்படி செய்கிறாள் என ஆசிரியர் அறிய முற்படுகின்றார். அவர்  அற்புத மரியைச் சந்திக்க மனைவியுடன் செல்கிறார். வீட்டில் அற்புத மரியை சந்தித்தபோது அவளின் மனவோட்டத்தையும் அவள் எதிர்நோக்கும் சிக்கல்களையும் ஆசிரியர் புரிந்து கொள்கிறார்.

ஓர் ஆசிரியருக்கும் மாணவிக்குமான உறவை ரொம்பவும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றிருப்பார் பிரபஞ்சன்.

அற்புத மரி, ஆசிரியரிடம் ஏன் அவர் தன்னை அடித்தோ திட்டியோ பள்ளிக்கூடத்திற்கு போகச்சொல்லவில்லை என கேட்கும் இடத்தில் நம்மை கலங்க செய்கிறாள்.

அதற்கு ஆசிரியர் கொடுக்கும் பதில், அற்புத மரிக்கு மட்டுமல்ல நாம் எல்லோருக்குமான ஒன்றுதான். அதனைத் தெரிந்து கொள்ள நீங்கள் 'மரி என்கிற ஆட்டுக்குட்டியை' வாசிக்க வேண்டும்.

#தினம்_ஒரு_கதை #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்