பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 06, 2024

வண்ணநிலவனின் 'எஸ்தர்'

💙தினம் ஒரு கதை 6/30💙


   எந்த ஒரு தொடக்கத்திற்கும் ஒரு முடிவு அவசியம். நாம் ஏற்றுக்கொண்டாலும் சரி  ஏற்காவிட்டாலும் முடிவென்பது நிச்சயம் உண்டு. சமயங்களில் நம் கைகளே அந்த முடிவை எழுதும். நாம் எதிர்க்கொள்ளும் பயணத்தில் எல்லோரையும் உடன் அழைத்துச்செல்ல இயலாது.  தெரிந்தும் தெரியாமலும் பல இழப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த இழப்புகளுக்கு நாமே பிள்ளையார் சுழியும் போடுவோம்.

   சிறுகதைக்கு மட்டுமல்ல, நாம் வாழும் வாழ்க்கைக்கும் ஏதோ ஒரு முடிவு இருக்கவே செய்கிறது. முடிவென்பது முடிந்ததை மட்டும்தான் குறிக்கிறதா ? இல்லை இன்னொரு ஆரம்பத்தைக் குறிக்கிறதா ? என்பதெல்லாம் அவரவர் பாடு.

   வண்ணநிலவனின் ‘எஸ்தரை’ வாசித்து முடித்ததும், ஒரு நொடி கோவம் வந்துவிட்டது. அடுத்த நொடியே எஸ்தரால் வேறென்ன செய்திருக்க முடியும் என்கிற பரிதாபமும் வந்துவிட்டது. இதனை கருணை என கருதலாமா அல்லது இனியாவது நீ நிம்மதியாகு என எஸ்தர் கொடுத்த வரமாக கருதலாமா என்கிற பல்வேறு எண்ணங்களிலேயே சில நாட்கள் கடந்தன. இத்தனைக்கும் எஸ்தர் மீது பிரியம்தான் அதிகமாகியுள்ளது.

    இப்படியொரு சிறுகதையை நாம் எழுதிவிட மாட்டோமா என பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வறுமை கோடுகள் என சொல்கிறோமே,  அந்தக் கோடுகளை அழிக்கும் அழிப்பான்கள் முதலில் தன்னைத்தானே அழித்துக்கொள்வதின்; அழிக்கக் கொடுப்பதின் சுழற்சிதான் இந்த எஸ்தர்.

     முடிவெடுத்தல் என்பது என்ன? அது அத்தனை சுலபமானதா? என்ற கேள்வியை புரிந்து கொள்வதற்காவது நீங்கள் எஸ்தரை ஒருமுறை வாசிக்கத்தான் வேண்டும்.

#தினம்_ஒரு_கதை #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்